Saturday, December 25, 2010

புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா



கடந்த முப்பதாண்டு கால ஆயுதப்போரில் ஈழத்தமிழர் பட்ட இன்னல்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சிங்கள இராணுவத்திடம் மட்டுமா ஈழத்தமிழர்கள் போரிட்டார்கள்...ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் ஈழத்தில் மூன்றாண்டுகளாக செய்த கொடுமைகளைத்தான் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா...
தமிழர்களை அழிக்க உலக நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளை சிங்கள காடையர்களுக்கு அள்ளிக்கொடுத்தது. ஏதோ ஜனநாயக வழிமுறையில் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கலாம் என்றுதானோ என்னவோ புலிகள் தமது ஆயுதங்களை மே 17, 2009-ல் மௌனிப்பதாக அறிவித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தோட்டாவாவது சிறிலங்காவில் வெடித்ததுண்டா? அப்படியாக ஒரு தோட்டாவும் வெடிக்கவில்லை. பகைவர்கள் துணிச்சலுடன் உயிருடன் வலம்வருவதுடன், தமிழர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்சியாளர்கள் புலனாய்வுத்துறையூடாக புலி நாட்டுக்குள் வந்துவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

ருசிகண்ட பூனை சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கேற்ப, இந்திய அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் புலியைச்சாட்டி அரசியல் செய்துவந்தார்கள். மே 2009-லிருந்து புலியின் வரவே இல்லாததையறிந்து இந்தியா கவலை கொண்டுள்ளதைத்தான் புலிகளைப் பற்றிய எச்சரிக்கை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில்தான் மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கைகள் வருகிறது என்பது மட்டும் உண்மை. புலிகளைக் காரணம்காட்டி 2011-ல் இடம்பெற இருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலை சந்திப்பது உட்பட கருணாநிதியின் அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் பல ஊழல் புகார்களிலிருந்தும் எப்படியேனும் தப்பித்துவிடலாமென்று மனப்பால் குடிக்கின்றார் கலைஞர் போலும்.

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீட்டில் கலைஞர் செய்த ஊழல், தி.மு.கவின் ராசா உட்பட பல மந்திரிகள் செய்த ஊழல்களென பல நூறு ஊழல் சம்பவங்கள் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மன்னிக்கவும்...இந்தியா என்கிற இறைமையுள்ள நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்களைப்பற்றியோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளைப் பற்றியோ நாம் விமர்சிப்பது அரசியல் நாகரிகமில்லை. இருப்பினும் அவர்கள் இன்னொரு நாட்டில் வாழும் மக்களைப்பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவப்பெயரை உண்டுபண்ண விளையும்போது அவற்றை எதிர்கொள்ள நாமும் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் தப்பில்லையென்றே கருதுகிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வெற்றி தோல்விகளில் கடந்த முப்பதாண்டுகாலமாக ஈழத்தமிழரின் போராட்டம் இடம்பிடித்திருந்தது என்பது உண்மை. ராஜீவ் படுகொலைக்கு முன்னர் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் ஈழத்தமிழ் போராளிக்குழுக்களை தமது பக்கம் வைத்துக்கொண்டு அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சார வண்டிகளில் ஏற்றப்பட்டு பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். போராளிக்குழுக்களுக்கென போட்டி போட்டு பணத்தை வசூலித்தார்கள்;. ராஜீவ் மரணத்திற்கு பின்னர் புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வாக்குகளை தமதாக்கும்வண்ணம் பிரதான கட்சிகள் பிரச்சாரங்களை செய்தன. இன்றும் இதே கதை தொடர்கதையாகவே இருக்கிறது.

தமிழகத்தின் மற்றக்கட்சிகள் புலிகளைப்பற்றியோ அல்லது ஈழத்தமிழர் பற்றியோ தமது கொள்கைகளை அறிவிக்குமுன்னரே, எப்படியேனும் முந்திவிட வேண்டும் என எண்ணியே கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய உளவுத்துறையின் மூலமாக புலிகள் பற்றிய புதுக்கதைகளை கட்டவிழ்த்தி விட்டிருக்கிறது. தொடர்ந்து துன்பங்களை அனுபவிப்பவனே மீண்டும் மீண்டும் வரும் சோதனைகளை சந்திப்பான் என்பதற்கிணங்க, ஈழத்தமிழரும் மென்மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க இப்படியான அறிக்கைகள் வளி அமைத்துக்கொடுக்கும்.
தமிழர்கள் ஒருபோதும் விடியலைக் காணக்கூடாது என்று கருதும் தமிழின விரோதிகளின் சூழ்ச்சி தொடர்கதையாகவே உள்ளது. தமிழர்கள் இருட்டறைக்குள் இருக்கும்வரை அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று கங்கணம்கட்டி ஆட்சி செய்யும் நயவஞ்சகர்களின் தலைமையில் தமிழ்நாடு இருப்பதுவே தமிழர்களின் சாபக்கேடு.

எதிரியுடன் கைகோர்க்கும் நாட்டுடன் தோழமை

ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.

அரசியல் மற்றும் ராஜதந்திரிகளின் கூற்றுப்படி ஏதோ இந்தியா சிறிலங்கா விடயத்தில் சில கொள்கை மாற்றங்களை செய்யும் என்று கூறினார்கள். இவர்களின் கூற்று பொய்த்துப் போய்விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது. இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவை பேணிவருகிறது.

சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவை பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாழ இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகிவிட்டதைப் போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களை ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்து விடாமல் வாயடைக்கச் செய்யவே இப்படியான சதி நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராட்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகிவருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதன் பரம எதிரியான சீனா என்கிற மாபெரும் வல்லரசுடன் உறவைப்பேணும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து நிற்கும் இந்தியாவுக்கு, நாற்பது லட்சமுள்ள ஈழத்தமிழர்களுக்காக போராடும் புலிகள் மட்டும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக தெரிகிறதா?

உண்மையான குற்றவாளிகள் யாரென்று தெரிவதற்கு முன்னரே புலிகளின் மீது குற்றத்தைப் போட்டுவிட்டு குற்றவாளிகளை காப்பாற்றும் இந்திய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சிறிலங்காவில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் புலிகள் மீது பழியைப்போட்டுவிடுவதே தொடர்கதையாகவுள்ளது. புலி மௌனித்தாலும் இந்தியாவும் சிறிலங்காவும் விட்டுவைப்பதாற்போல் இல்லை.

மத்திய புலனாய்வுத்துறையின் பொய்ப்பிரச்சாரங்கள்

ஈழத்தில் சண்டை ஓய்ந்து சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 2010-இல் இந்தியாவின் உளவுப்பிரிவு ஒரு அறிக்கையை விட்டது. புலம்பெயர் நாடுகளில் வதியும் ஈழத்தமிழர் சிலர் இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக செயற்படுகிறார்கள் என்றும் இப்புலம்பெயர் தமிழர்கள் இணையத்தளங்களினூடாக இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என ஒரு குண்டையே போட்டது இந்திய மத்திய புலனாய்வுத்துறை. சிறிலங்காவை எதிரி நாடாகவும், இந்தியாவை துரோக நாடாகவுமே இப்புலம்பெயர் தமிழர்கள் பார்க்கிறார்கள் என கூறியது இப்புலனாய்வுத்துறையின் அறிக்கை. விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை மேலும் இரண்டாண்டுகள் நீடிக்க தேவைப்பட்ட காரணத்திற்காகவேதான் இவ்வறிக்கையை புலனாய்வுத்துறை வெளியிட்டதென பின்னர் அறியப்பட்டது.

திடீரென இன்னுமொரு அறிக்கையை கடந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை வெளியிட்டது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் சில தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை சென்னையில் ஜனவரி 3, 2011 அன்று இடம்பெற இருக்கும் நிகழ்ச்சியில் வைத்து கொலைசெய்ய விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்காவினால் போடப்பட்ட அணுகுண்டைவிட பலமான அணுகுண்டையே போட்டது இந்திய மத்திய உளவுத்துறை. மே 2009-ல் முடிவுற்ற ஈழப்போரில் தப்பி இந்தியாவிற்குள் நுழைந்துள்ள விடுதலைப்புலி போராளிகளினால் குறிப்பிட்ட இத்தலைவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என புலனாய்வுத்துறை அறிக்கை தெரிவித்தது. இதனைச் சாட்டாக வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியும் தமிழக காவல்துறையினரை உசார்ப்படுத்தியுள்ளாராம்.

சிறிலங்காவின் கொடிய இனவெறி அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள இக்காலப்பகுதியில் ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்க நடாத்தப்படும் நாடகமாகவேத்தான் இவ்வறிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. ஜனனாயக வழியிலான தமிழீழ மக்களின் எழுச்சியின் பலனாக ஈழப்போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் – இராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பல்லாயிரம் தமிழர்கள் ஒன்றுகூடி மகிந்தா மற்றும் அவரின் 40-பேர் அடங்கிய தூதுக்குழுவையே இங்கிலாந்திலிருந்து துரத்தியடித்த சம்பவம் சிறிலங்காவின் அரச தலைவர்களை ஆத்திரமூட்டியது. இச்செயல் இந்தியாவையும் கவலையடையச் செய்துள்ளது போலும். தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணைபோகிறார்கள் இந்தியாவின் நடுவண் மற்றும் தமிழக அரசுகள்.

இன்னுமொரு பலமான குண்டையே இந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை போட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் நவீன ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள் என கூறுகிறது இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கை. தாவூத் இப்ராஹிம் என்கிற கொடிய பயங்கரவாதிகள்தான் விடுதலைப்புலிகளுக்கு நான்காம் ஈழப்போரின் இறுதிக்காலம் வரையில் ஆயுத விநியோகத்தை மேற்கொண்டார்கள் எனவும் கூறுகிறது இவ்வறிக்கை. தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க்கிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன கூறுகிறது இப்புலனாய்வு அறிக்கை.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் பிடிபட்ட இப்பயங்கரவாத முக்கிய புள்ளியுனூடாக உறிதிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்புலனாய்வுத்துறை அறிக்கை கூறுகிறது. மிர்சா பெய்க்கிடமிருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. விடுதலைப்புலிகளின் வலையமைப்பு தொடர்பாக பிடிபட்ட குறித்த நபர் பல விடயங்கள் கூறியிருந்தாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறுகிறது மத்திய புலனாய்வுத்துறை.

யாரை திருப்திப்படுத்த முனைகிறது இந்தியா?

ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு உலகளவில் கிடைக்கும் ஆதரவை இந்தியா மூலமாக செய்ய முயற்சிக்கிறது சிறிலங்கா அரசு. இந்தியாவும் புலிகளைப் பற்றிய செய்திகளை பரப்புவதனூடாக, தமிழ்நாட்டில் உருவாகும் ஈழத்தமிழ் மீதான அனுதாப அலையை எப்படியேனும் நசுக்கி விடலாமென்று நினைக்கிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இப்படியான செய்தி தேவைப்பட்டதொன்றே. இவரின் கட்சிக்கெதிராக வந்துகொண்டிருக்கும் ஊழல் புகார்களை மறைப்பதற்காகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இப்படியான அறிக்கைகள் உதவுமென்று கருதுகிறார் கலைஞர்.

கலைஞரிடத்திலோ அல்லது கலைஞரின் பிள்ளைகளிடத்திலோ சில நூறு கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்தால் போதும் மத்திய மந்திரிப்பதவி பெற என்கிற பேச்சு அடிபடுகிறது தமிழகத்தில். இப்படியாக பல நூறு கோடி ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், தனது நிர்வாக சாணக்கியத்தால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்கிற நினைப்பில் இருப்பவர்தான் கலைஞர். பாவம் கலைஞருக்கு இப்போது அறளை பிறந்துவிட்டது. அதன் காரணமாகத்தானோ என்னவோ பல லட்சம் கோடி ஊழல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒரு படத்தை எடுத்து பணக்காரனானதாக சொல்லிவரும் கலைஞர், இன்று தனது குடும்பமே பல சினிமா படங்களை எடுக்கிறது. இது போதாதா கலைஞருக்கு பல லட்சம் கோடி ஊழல் புகார்களை மறைக்க? 86-வயது நிரம்பிய கலைஞரினால் சிந்தித்து செயலாற்றும் திறன் இப்போ மங்கிப்போய்விட்டது போலும்.

ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழி கலைஞருக்கு பொருந்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. புலி என்கிற ஆயுதத்தை எடுத்தால் போதும் இந்திய மக்களை ஏமாற்ற. நடந்த அனைத்துச் சம்பவங்களையும் அவர்கள் மறந்துவிடுவார்கள். இப்படியான ஆயுதத்தை பாவிப்பதனாலேயோ என்னவோ அடிமட்ட தொண்டர்களாக, பணப்பலமற்றவர்களாக இருப்பவர்கள் இன்று இந்தியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருந்தால் போதும் இந்தியா நூறு வருடம் கடந்தாலும் மக்களின் முக்கிய தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கும் பசி மற்றும் நோய் தீர்க்கப்படாமல் நீடிக்க.

இந்திய அரசியல்வாதிகளின் கணிப்பின்படி மக்களை ஓன்றும் தெரியாதவர்களாக, இருட்டறைக்குள் வைத்திருக்கும் வரையில்தான் தாம் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளிச்சத்தில் இருக்கும் மக்களையும் ஏமாற்றவே மௌனித்துள்ள புலியை வம்புக்கு இழுப்பது.

வெள்ளைக்காரர்களிடமிருந்து அமைதிவளியில் சுதந்திரம் பெற்ற இந்திய பெருநாடு, சிறிலங்காவில் மூன்று தசாப்தங்களாக அமைதிவழியிலும், பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய உயிர் அர்ப்பணிப்புடனும் விடுதலைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதற்காக பேரினவாத சிறிலங்கா அரசிற்கு அனைத்துவகையிலான உதவிகளையும் வழங்குவதுடன், புலம்பெயந்து வாழும் ஈழத்தமிழரையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இந்தியாவும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் இப்படியான தமிழர் விரோதப் போக்கு எந்தவகையில் நியாயமென்பதை இந்தியா ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களினால் வழங்கப்படும் ஆலோசனையை கேட்பதைத் தவிர்த்து, தமிழர்களின் உண்மையான அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தி நீதியை இந்தியா பெற்றுத்தர வேண்டுமென்பதே தமிழர்களின் அவா. அதைச் செய்யத்தவறினாலும் பரவாயில்லை ஈழத் தமிழரின் நலன்களுக்கெதிராக எந்தவொரு நாசகார வேலையையும் செய்யாமலாவது இந்தியா இருந்தால் போதும்.

சிங்களவர்களை சாந்தப்படுத்தவும், இந்திய மக்களை திசைதிருப்பி வர இருக்கும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி மென்மேலும் நாட்டை குட்டிச்சுவராக்க எண்ணும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுக்காக நாட்டையே பாதுகாக்கும் உன்னத அமைப்பான புலனாய்வுத்துறையினரால் விடப்படும் புலிக்கெதிரான அறிக்கைகள் இந்திய நாட்டுக்கே அவப்பெயரைத் தேடித்தரும். மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்திய அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து தூக்கு போட்டு மரணித்திருப்பார். விடுதலைக்காக போராடும் மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல்வாதிகளை யார்தான் திருத்துவார்களோ?

அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com

--

Monday, December 20, 2010

சீமான் நேர்காணல்

சீமானுக்கு பிரபாகரன் அறிவுரை... கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

சென்னை: முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி போன்ற தலைவர்களை தாக்கிப் பேசி வருத்தம் கொள்ள வைக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

இதுகுறித்து, ஜூனியர் விகடன் புலனாய்வு இதழில் சீமான் எழுதியிருப்பதாவது:

"கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.

''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு. அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!

''பேச்சும் ஒரு ராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், ராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். ராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே ராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்க வைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்...

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக் கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார்.

அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன் போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

கோழைகளை புலிகள் கொல்வதில்லை!

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

-இவ்வாறு சீமான் எழுதியுள்ளார்.

Read more: http://www.livingextra.com/2010/12/blog-post_4554.html#ixzz18eK77R00

Saturday, December 18, 2010

தொடர்ந்து கொலைவெறியில் நடைவண்டி கருணாநிதியும்




இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் தவிர்க்க முடியாமல் ஈழத்தமிழர்களுடன் பிணைந்த ஒன்றாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எந்த லாபமில்லாவிட்டாலும் தமிழகத்து அரசியல் கட்சிகள் ஈழத்துப்பிரச்சினையை தேர்தல்களை சந்திக்கும் காலங்களில் தமது தோளில் தூக்கி வைத்துக்கொள்ளுவதுண்டு.



எப்பொழுதும் தமது உள்நாட்டுப்பிரச்சினை மற்றும் ஊழல்களை மூடிமறைப்பதற்கான வடிகாலாக ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களுக்கு பேருதவியாக இருந்துவருகிறது. சுயநலத்திற்காக ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து தாம் தான் ஈழத்தமிழர்களின் மேய்ப்பர்களென்று ஆளாளுக்கு பேரணி உண்ணாவிரதம் போன்றவற்றை போட்டிபோட்டு தம்பாட்டுக்கு நடத்தி தம்பட்டமடிப்பது தமிழகத்து அரசியலில் வாடிக்கையான வேடிக்கை ஒன்று.

ஆனால் இன்றுவரை தமிழக அரசியல்வாதிகளால் ஏற்பட்ட நன்மைகளைவிட ஈழமக்களுக்கு அழிவுகளும் அவலங்களும் உபத்திரவங்களுமே அதிகம். வாழ வழியத்து கடல்வழியாக சென்று அகதியாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் கூட, தமிழ்த் தலைவன் தான் என கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் கைதிகள் போலவும், எஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுபவர்களாகவும், தீக்குளித்து உயிரைப் போக்கிக்கொள்ளுபவர்களாகவும், பெண்கள் தமிழக பொலிஸாரால் கற்பழிக்கப்படுபவர்களாகவும், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு அனுமதியற்றவர்களாகவும், சொந்தமாக ஒரு பொருளும் வாங்கி அனுபவிக்க அருகதையற்றவர்களாகவும் நாயிற்கடையராக அலைந்துதிரிகின்றனர்.

2009 ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைவன் கருணாநிதியின் முழு உடன்பாட்டுடன் வஞ்சகமாக ஈழத்தில் இன அழிப்புசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் முடிந்துவிட்டன, அங்கு யுத்தம் தொடருவதற்கான எந்த ஒரு அடையாளமும் இதுவரை காணப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைச்சின் செயலரும் மற்றும் கருணாநிதியின் அரசியல்க்கட்சி பிரதிநிதிகளும், சினிமா நடிக நடிகைகளும், இலங்கைக்கு சென்று விருந்துண்டு மகிழ்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தி சொந்தமாக சொத்துக்கள் வாங்கி, தொழில் தொடங்கிவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

மறுபக்கம் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் தமிழ் சிங்கள கட்சியினரும் பரசுபரம் பயணங்கள் தொடருகின்றன. தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஒப்பந்தங்களும் ஏதேதோ செய்வதாக கூறப்படுகிறது. செயல்முறையில் மீள் குடியேற்ற்வாசிகளுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் ஒன்று நாட்டியது தவிர எதையும் காணமுடியவில்லை.

இந்தநிலையில் புதிய புரளி ஒன்று இந்தியாவால் கிளப்பப்பட்டிருக்கிறது. நகைப்புக்கிடமான இந்தப்புரளி சுயநலன் சார்ந்து இந்தியாவால் புலிகளின் மீது வலிந்து சுமத்தப்படுவது புலிகள் இயக்கமும் ஈழத்தமிழரும் கணக்கில் கொள்ளாவிட்டாலும், சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்தப்பிரச்சாரம் தோற்றுவிக்கக்கூடும் என்ற கவலையும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் தமது அரசியலின் குறை நிவர்த்தி செய்வதற்காகவும், மாபெரும் ஊழல்க்குற்றச்சாட்டுக்களை கழுவுவதற்காகவும் தேவையற்ற ஒரு பொய்யை மீண்டும் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் வலிந்து சுமத்தியிருக்கின்றனர்.

இன்னும் ஒருசிலவருடங்களில் இயற்கையெய்திவிடக்கூடிய வயதிலிருக்கும், கடும் முதியவர்களான பிரதமர் மன்மோகன்சிங், ,மற்றும் எழுந்து நிற்கமுடியாத சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும் கருணாநிதி, உட்பட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டமொன்று விடுதலைப் புலிகளால் வகுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின், புலிகளில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, இந்தியப் புலனாய்வுத்துறை புதிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்தச்செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

"ஈழத்தமிழர்களின் உச்ச வெறுப்புக்குள்ளானவர்கள் இந்த நான்குபேரும் என்பது ஈழத்தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த பால்குடிக்கும் குழந்தைக்கும் தெரியும்". ஆனால் இன்று போராட்டம் தற்காலிகமாக ஈழத்தில்வாழும் தமிழ் மகனின்கையில் இல்லை .புலம்பெயர் தேசங்களில்த்தான் சட்டத்துக்குட்பட்ட வகையில் நீதிகேட்டு இனப்படுகொலைக் குற்றவாளிகளை இனங்காட்டும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அத்துடன் எவரையும் கொலைசெய்யும் தேவை புலிகளுக்கிருப்பதாகவும் நம்பமுடியாது.

இந்தியா என்ற நாடு அறிந்திருக்காத மனுதர்மத்துடன் ஜனநாயக வழியில் சர்வதேச அரங்குக்கு போராட்டத்தை கொண்டுசென்று புலம்பெயர் தமிழர்கள் நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த எழுச்சி இந்தியாவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கலாம். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, கருணாநிதி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் படியும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக பொலிஸ் டி.ஜி.பி லத்திகா சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லத்திகா சரண் சர்ச்சைக்குரிய ஒரு பொலிஸ் அதிகாரி. அவர் டிஜிபி யாக பதவி வகிக்க தகுதியில்லாதவரென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தகுதியானவர் பதவியில் அமரும்வரை லத்திகாவை தற்காலிகமாக தொடரும்படி பணித்திருக்கிறது. கருணாநிதி தனது வசதிக்காக லத்திகாவை விட சிரேஸ்ட்ட அதிகாரியை இருட்டடிப்புச்செய்து தனது சுயலாபம் கருதி லத்திகாவை பணியில் அமர்த்தியிருக்கிறார். நன்றிக்கடனைத்தீர்க்க லத்திகா எதுவேண்டுமானாலும் செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

2011 ஆண்டு மே தமிழ் நாட்டுக்கான சட்டசபைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்தநேரத்தில் தொலைதொடர்புத்துறை 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல் பூதாகரமாக 176,000,00,00,000, லட்சம் கோடி குற்றச்சாட்டு திமுக மீதும். கூட்டாளி காங்கிரஸின் மீதும் வீழ்ந்திருக்கிறது. இச்செய்தி உலகப்பிரசித்தி பெற்றதென்பதால் அதுபற்றி விபரிக்கத்தேவையில்லை. ஆனாலும் முதல்க்குற்றவாளிகள் (திருடர்கள்) 1, ஆண்டிமுத்து ராசா.திமுக மத்திய மந்திரி தொலைத்தொடர்புத்துறை, 2, கருணாநிதியின் மூன்றாம் தாரத்து மனைவி ராசாத்தியம்மாளின் மகள் கனிமொழி. 3, திமுக ஆதரவு புலனாய்வுப்பத்திரிகை நக்கீரனின் இணை ஆசிரியர் அ. காமராஜ். 4, சென்னையில் கனிமொழியுடன் இணைந்து தொண்டு அமைப்பு என்கிறபேரில் தமிழ் மையம், என்கிற அமைப்பை நடத்திவரும் முன்னாள் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றி புலிகள் இயக்கத்தையும் தேசியத்தலைவரையும் ஏமாற்றிய போலிப்பாதிரி ஜெகத் கஸ்பர்ராஜ், இன்னும் நிறைய கருணாநிதியின் பினாமிகள் மாட்டியிருக்கின்றனர். இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் ஏதாவது பலமான திசைதிருப்பல் திமுக, காங்கிரஸுக்கு உடனடித்தேவை.

அதற்கு பலியிட்டிருக்கும் ஒரு வீண் பழிதான், மேற்சொன்ன முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளால் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையை உலகமும் இந்தியாவிலுள்ள மக்களும் நம்புகிறார்களோ இல்லையோ அரசியல் மட்டத்தில் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஸ்பெக்ரம் பிரச்சினையை திசைதிருப்பி காலதாமதப்படுத்தி வரப்போகும் தேர்தலுக்கு பங்கமில்லாமல் தப்பிக்கவேண்டும் என்பது கருணாநிதி மற்றும் காங்கிரசின் நோக்கமாகும்.

ஸ்பெக்ரம் ஊழலின்பின் காங்கிரஸுக்கு திமுக மீது அதிக கோபமும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. ஆனால் அவற்றை வெளிக்காட்டமுடியாத சங்கடமும் காங்கிரஸுக்கு உண்டு. பிரதமரின் மந்தமான நடைமுறைதான் ஊழலுக்கு வித்திட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றன. ஊழலில் அதிக இலாபம் பெற்றவர்கள் திமுகவினர் என்பதும் உண்மை. ஆனால் அவைகளை முன்னிறுத்தி ஊழலை ஒப்புக்கொண்டுவிட முடியாத சிக்கல் காங்கிரசுக்கு உண்டு, ஊழல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் அபாயம் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட பூச்சாண்டிதான் மேற்சொன்ன படுகொலை என்கிற கட்டுக்கதைத்திட்டம்.

இரண்டாவது:, ஈழத்தின் போர்க்குற்றங்களை பிரித்தானிய சனல் 4, கொல்லப்பட்டவர்களை இனங்கண்டு ஒளிப்படங்களாகவும் வீடியோவாகவும் சர்வதேச அரங்கத்திற்கும் அம்பலப்படுத்திவிட்டது. ராஜபக்க்ஷ உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்படுகிறாரோ இல்லையோ சில இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாக அறியப்பட்டுவிட்டனர். போர்க்குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை விசாரணைக்குட்படுத்தும் பட்சத்தில் ஈழப்படுகொலையில் இந்தியா எந்த அளவுக்கு ஈடுபட்டது என்ற உண்மை வெளிவருவதற்கு நிறைய சந்தற்பங்களுண்டு.

பிற ஆதாரங்களாக விக்கிலீக்ஸ்ஸின் ஆவணங்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் சவுக்கு இணையத்தளம் மற்றும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ், அவர்கள் வெளியிட்டதாகக்கூறப்படும் சந்தேகம். மலேசிய பினாங்க் துணை முதல்வர் பி ராமசாமி அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய போர்க்குற்றச்சாட்டு. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய அரசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக பல சங்கடங்களை தோற்றுவிக்கும்,

இதை அறிந்த இந்தியத்தரப்பு, புலிகள் தமக்கு எப்போதும் எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர், இப்போதும் இந்தியத் தலைவர்களை குறி வைத்து கொலைசெய்யும் சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் அதனால்த்தான் இறுதி யுத்தத்தின் போதும் நாங்கள் சிங்கள அரசுடன் இணைந்து எம்மை காப்பதற்காக புலிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு உதவினோம், என்று தப்பிப்பதற்கான முற்கூட்டிய தயாரிப்புத்தான் புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் புலிகளின் படுகொலை திட்டம் என்கிற கதை. இதனுடன் 1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், புலிகள் பற்றிய புலனாய்வில் தாம் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் தற்போதய இரகசியம் தமக்கு உடனடியாக கிடைக்கப்பெற்றதாக பரப்புகின்றனர்.

சமீபத்தில் இந்திய அரசின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இரண்டு ஆண்டுகள் நீ‌ட்டித்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசு பிறப்பித்த அந்த உத்தரவை உறுதி செய்வதற்காக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின் போது, இலங்கையில் இருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஒன்றிணைய முயன்று வருகிறார்கள். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகும்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டது.

அங்கு கூறப்பட்ட நியாயம் நீதிபதியை திருப்திப்படுத்தவில்லை. அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று அவர் கேள்வியெழுப்பினார். இது உளவுத் தகவல் என்று அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, இப்படி யார் வேண்டுமானாலும் கூறலாம், என்று தனது சந்தேகத்தை எழுப்பினார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக இப்படியொரு கட்டுக்கதை புனையப்பட்டிருக்கிறது என்றே நம்பலாம்.

தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார், அது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை குழப்புவதற்கான சூழ்ச்சியாகவும் இந்த திட்டம் அரசு உதவியுடன் புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதலில் பயங்கரவாத இயக்கம் என்றது இந்திய அரசு. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த பிறகு, சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று கூறியே தொடர்ந்து தடையை நீ‌டித்து வருகிறது. அதற்கான காரணம் எதுவும் கிடைக்காத நிலையில்தான், இப்படி ‘தமிழ்நாட்டில் ஒன்றிணைகிறார்கள்’, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’, ‘தலைவர்களின் உயிருக்கு ஆபத்து’ என்றெல்லாம் தொடர்ந்து கதைகட்டுகின்றனர். இது இன்னுமொருவகையில் சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டு தமிழர்களை இல்லாமல் அழிக்கும் திட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம். இந்தியா தொடர்ந்து இப்படியான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதற்கு கருணாநிதியின் கொள்கைவகுப்பே காரணமாகித் தொடர்கின்றது.

எவ்வளவு தமிழர்களை கடலில் வைத்து சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றாலும் காங்கிரஸை எதிர்த்து பதவியை பறிகொடுக்க விரும்பாத கருணாநிதி புலிகளை காரணங்காட்டி ராஜபக்க்ஷவை நியாயப்படுத்தும் எச்செயலையும் செய்யத்தயங்கமாட்டார் என்பது பல இடங்களில் உறுதியாகியிருக்கிறது.

கருணாநிதியை எதிர்க்கும் பெரும் சக்தியாக தமிழக மீனவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு உரக்க குரல்கொடுத்து வளர்ந்துவருவதும் கருணாநிதிக்கு வயிற்றை கலக்கும் செயல்ப்பாடாகியிருக்கிறது. புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்கப்பட்டுவிட்டால் சீமானின் புலிகளின் ஆதரவு கொள்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவிடும், என்பதால் கருணாநிதி சாகும்வரை புலி உருவத்திலான பொம்மைக்குக்கூட இந்தியாவில் தடைநீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக புலிப்பூச்சாண்டி கருணாநிதியைப் பொறுத்தவரை தொடர்ந்து உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

ஆரம்பத்தில் சீமானின் பிரவேசம் இவ்வளவு பூதாகரமாக தன்னை எதிர்க்குமென கருணாநிதி நம்பவில்லை சீமானின் ஈழ ஆதரவுக்கொள்கை கருணாநிதிக்கு பயத்தை அதிகரித்து அடுத்தடுத்து சீமானை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் தூக்கி உள்ளேபோட்டார். ஆனால் உயர்நீதிமன்றமே அது செல்லாது என்றுகூறி சீமானை விடுவித்திருக்கிறது. கருணாநிதியின் இப்பேற்பட்ட கீழ்த்தரமான அடக்குமுறைகள் மக்களை இன்னும் சீமான் தலைமையில் அணிதிரள வைத்திருப்பதும் கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்யவேண்டிய கட்டாயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டால் வைகோ நெடுமாறன் போன்றோருடன் பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் சீமான் தலைமையில் தமிழ்நாட்டை பறிகொடுக்கவேண்டுமென்ற பயம் அவரை ஒரு நடைவண்டி ஹிட்லராக மாற்றியிருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,,
கனகதரன்

Friday, December 17, 2010

இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்! - பழ. நெடுமாறன்



தமிழ்நாட்டில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத் திலும் அறியாமையிலும் இந்தியா உலகத் தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வரு மானம் பெறுகின்றன. சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைக ளாகும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத் தைப் பெருக்குவதற்கான வழிவகை களை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெய ரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச் சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டி ருக்கிறது.

இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங் களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? - என் பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.

கல்வி

காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. நல்ல குடிமக்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. அரசு நடத்தும் பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படா மல் உள்ளன. அரசு நடத்தும் 69 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் 42 கல்லூரிகளில் முதல்வர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

பிறமாநிலங்களில் மெட்ரிக் குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.

400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்ட மைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.

புற்றீசல் போல தனியார் பள்ளி களும், பொறியியல் மற்றும் கல்லூரி களும் பெருகக் காரணம் என்ன? குறிப் பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப் பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகள், கல்லூரி கள் ஆகியவற்றிலும் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், மாணவர் களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்

1972ஆம் ஆண்டில் மின்கட்ட ணத்தில் யூனிட்டுக்கு அரை பைசா குறைக்கும்படி போராடிய விவசாயிகளின் மீது கடும் அடக்குமுறையை கருணாநிதி அரசு ஏவிவிட்டது. 21 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு கருணாநிதி மீண்டும் பதவிக்கு 1990ஆம் ஆண்டில் வந்தார். வந்தவுடன் விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற் காக அவர்களே கேட்காத சலுகையை அளித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட் பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின் திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டு களுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது தான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப் படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித் துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.

மின்மோட்டார்களை வாங்குவதற் காக அரசு அறிவித்துள்ள டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பம்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பகுதிவாரியாகப் பிரித்து 500 பம்புசெட்டு கள் வீதம் டெண்டர் விடவேண்டும். இதன் மூலம் பல உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டு மென்று உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.

இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப் பட்டதில் பெறப்பட்ட கமிசன் எவ்வளவு?

சுமார் 2500 ரூபாய் பெறுமான தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொடுத்தால் பெறுபவர்களுக்கு பய னில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பிய வற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத் தைச் செயல்படவிடாமல் முடக்கி விட்டார்கள்.

ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாக வேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங் களுக்கு போகிறது. மக்கள் வரிப் பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவச மாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைவது முதலமைச்சரின் குடும்ப மாகும். இதைவிடப் பன்படங்கு அதிக மான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது.

இலவச கேஸ் அடுப்பு

11 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 220 கோடி ரூபாய் செல வில் இலவசக் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதற்குரிய கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் ஏற்கனவே உள்ள பயனாளிகளும் இதனால் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். திட்டமிடுவதைச் சரியாகச் செய்யாததால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.

இலவச மருத்துவக் காப்பீடு

தமிழக அரசின் இந்தத் திட்டத் திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்து வமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி களோடு இணைந்த பெரிய மருத்துவ மனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன் படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் கள். இந்த தனியார் மருத்துவமனை களுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண் டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளி

லிருந்து அது கிடைக்காது.

கடந்த ஆண்டு 1.53 இலட்சம் பேர் இந்த இலவச மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் விளைவாக பயன் பெற்றிருக்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்குச் சிகிச்சை தர எல்லாவிதமான வசதிகள் இருந்தும். அவைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கையாளும் முறையில் திருப்தியில்லை என மக்களும் கருதுகிறார்கள்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப் பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதி யம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட் டத்தின் நோக்கமாகும். ஆனால் விவ சாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழை களுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக் கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறை யாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் என்ற பெயரில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு விளை நிலங்கள் எடுக்கப் படுகின்றன. 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மண்டலத்தில் தொடங்கப்படும் தொழில் களுக்கு இறக்குமதி ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியி லிருந்து விலக்கு, விற்பனைவரியிலிருந்து விலக்கு, ஈட்டும் லாபத்தின் மீது 15 ஆண்டுகளுக்கு வரிகிடையாது என்பது போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படு கின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் இந்த சிறப்புப் பொருளாதார நிறுவனங்களை அமைத்து அதில் உள்ள இடங்களைத் தொழில் நிறுவனங் களுக்கு விற்கலாம்; குத்தகைக்குக் கொடுக்கலாம், அதுமட்டுமல்ல, இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட சிறு நகரங்களை அமைத்துக்கொள்ளலாம்.

விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அரசினால் பறித்தெடுக்கப் படுகிற விளைநிலங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. பிற்காலத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விற்பனைசெய்யலாம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தனியாரைக் கொழுக்கச் செய்வதற்காக விவசாயி களை வயிற்றில் அடிக்கும் வேலையை அரசு செய்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனுமதிப்பிற்கான பரிசீலனையில் உள்ளன. இவ்வளவு மண்டலங்களுக்கும் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த ஆரம் பித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். உணவு உற்பத்தி குறையும், விவசாயிகள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் படுவார்கள்.

தமிழகத்தில் விவசாயம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 1994-1995ஆம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராக விளைநிலங்களின் பரப்பளவு தமிழகத் தில் இருந்தது. ஆனால் 10 ஆண்டு களில் அதாவது 2005-2006இல் 50.6 இலட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 7 இலட்சம் ஹெக்டேர் அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள விளை நிலம் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி போன்ற மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத் தால் அந்த மாவட்டங்களும் மக்களும் வளர்ச்சியடைவார்கள். அந்த மாவட்டங் களில் பெரும்பாலும் தரிசு நிலங்கள்தான் அதிகம். ஆனால் தொழிலதிபர்கள் அங்கு தொழில்நடத்த விரும்பவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பு கிறார்கள். அதற்குத் தமிழக அரசு ஒத்துழைக்கிறது.

எடுத்துக்காட்டாக கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் 8 அனல் மின்நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதற் காக இந்தப் பகுதியில் கடற்கரை யோரத்தில் பல்லாயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்களின் தேவைக்கு அதிக மாக பன்மடங்கு நிலங்கள் விவசாயி களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்கள் அமைக்கப் பட்டதுபோக மீதமுள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

மது மயக்கம்

1967ஆம் ஆண்டுக்கு முன் முழு மையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி யில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போனார்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாழும் பதின்வயது மாண வர்களில் 3ல் ஒரு பங்கினர். பள்ளிப் பருவத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தி னர் மதுகுடிப்பதாகவும் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாணவரும் மதுகுடிப்பதற்காக ஆண்டுக்கு 3,500

லிருந்து 4,500 வரை செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கள் கணவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மையங் களுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வருகிற கொடுமையும் நடைபெறுகிறது.

கிராமப்பகுதிகளிலும் மதுக்கலாச் சாரம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியுடன் சேர்த்து குவார்ட்டர் கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளில் உருவாகி யுள்ளது. தமிழக அரசு திறந்துள்ள 6000க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடை களின் மூலம் ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மது உற்பத்திச் சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 36,000 கோடி

லிட்டர் மது உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் மது விற்பனை ரூ.90 கோடி யாகவும், அந்த வாரத்தில் ரூபாய் 400 கோடி விற்பனையானதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசுக்கு மது விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசின் மொத்த வருவாயில் இது 25சதவீதம் ஆகவும் இருக்கலாம். இந்தப் பணம் யாரிடமிருந்து கிடைக்கிறது? மக்களின் மடியிலிருந்து இந்தப் பணம் திருடப்படுகிறது. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை குடிப்ப தற்காகச் செலவழிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங் கள் பட்டினியாலும் வறுமையாலும் வாடுகின்றன. இன்னும் பலவகைகளிலும் குடிப்பழக்கம் சமூகத்தைச் சீரழிக்கிறது. ஏராளமான தற்கொலைகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. எய்ட்ஸ் நோய், காசநோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் நிறையத் தொடர்புண்டு, சாலை விபத்து சாவுகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடும்ப சச்சரவுகளுக்கும் சிலவேளைகளில் கொலைகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடிப்பழக்கத் தால் வேலை இழப்பு, உற்பத்திப் பாதிப்பு, உயிரிழப்பு, பொருள் இழப்பு மூலம் ஏற்படும் நட்டம் அதிகம். மொத்தத்தில் சமூக அமைதியை மது கெடுக்கிறது.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் இலவசங்களை தமிழக அரசு வாரித் தருகிறது. ஆனால் அதே வேளையில் மக்கள் மடியிலிருக் கிற பணத்தை அரசு சூறையாடுகிறது என்பதுதான் உண்மையாகும்.

சுமங்கலித் திட்டம்

திருமணமாகாத இளம் பெண் களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப் பட்ட திட்டம்தான் சுமங்கலித் திட்ட மாகும். தொழிற்சாலைகளில் 3 ஆண்டு கள் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும். முடிவில் இவர் களுக்கு ஒரு பெருந்தொகை அளிக்கப் படும். இவர்களின் திருமணத்திற்கு அது உதவும் எனக் கவர்ச்சிகரமான திட்டமாக இது வர்ணிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறை என்ன? கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது ரூ.20 ஊதியமாகத் தரப்படும். சாப்பாடு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ.10 கழித்துக்கொள்ளப்படும். 3 வருடங்களில் 1 நாள் விடுமுறை எடுத்தால்கூட இவர் கள் கூடுதலாக ஒரு மாதம் உழைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 3ஆம் ஆண்டின் முடிவில் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிற கொடுமையும் நடைபெறுகிறது. தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் துன் பங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் குறித்து புகார் செய்தாலும் அவர்கள் வேலைபறிபோகும். எனவே கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை.

வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

2002ஆம் ஆண்டு முதல் தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களி னால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயி களுக்கு நட்டஈடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு அளிக்கிறது.

ஆனால் நடைமுறையில் இத்திட் டத்தினால் பயன்பெறும் விவசாயிகள் மிகமிகக் குறைவாகும். இத்திட்டம் வட் டம், குறுவட்டம் அளவில் செயல்படுத் தப்படுகிறது. ஒரு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கை உற்பாதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அந்த வட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் பாதிப்பில்லை என்று சொன்னால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது. எனவே வட்டம், குறுவட்டம் என்ற அளவில் இத்திட்டம் செயற்படுத்தப் படுவதற்குப் பதில் கிராம அளவில் செயற்படுத்தப்பட்டால் ஒழிய இத்திட் டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிபெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?

பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ கத்தில் பல தொழில்களைத் தொடங்கி நமது வளங்களையும் நமது தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி யைத் தமிழகத்தின் வளர்ச்சியாக ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டுவது - மக்களை மேலும் மேலும் வறியவர்களாக ஆக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இலவசத் திட்டங்களின் விளை வாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்தி ருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக இலவசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது அரசு. இதனால் மக்களில் ஒருபகுதியினர் பயன்பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அரசின் நிதிநிலைமை சீர்கேடடைந் திருக்கிறது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.1,00,876 கோடி யாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

தொலைநோக்குத் திட்டங் களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப் படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாக வும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளி விடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய் கிற வகையில் திட்டங்கள் தீட்டப் படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறை வேற்றினால் அவர்கள் சுய சார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச் சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்ச மும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாகத் தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங் களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர் களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.

இலவசம் என்ற பெயரில் வகுக் கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்ற பொருட்களை உற் பத்தி செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றன. எடுத் துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புபவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.

ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி 8-12-10

Wednesday, December 15, 2010

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்.



எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.

தொடரின் முதலாவது பாகம்:

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,

ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?

என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.

இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!

சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.

சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!

அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!

ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?

ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?

ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?

அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!

கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?

சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.

எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...

''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''

ஓயாது அலை..........

நன்றி: ஜூனியர் விகடன்

Tuesday, December 14, 2010

மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன்!



“பிரதமர் நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்திருக்கிறார் அன்னை சோனியா.

நாற்காலி என்ற அஃறிணைப் பொருளுக்கு கவுரவம் ஏது என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.

“வி வாண்ட் ஜே.பி.சி” “வி வாண்ட் ஜே.பி.சி” என்று கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அலைகடலாகக் குமுறிக் கொந்தளிப்பதையும், ஆழ்கடலின் அமைதியும் புன்னகை மாறாத முகமும் கொண்ட அவைத்தலைவர் மீரா குமார், அமைதி அமைதி என்று 4 முறையும், இருக்கைக்கு செல்லுமாறு 2 முறையும் மென்மையாக கையசைத்து விட்டு, பிறகு அவையை ஒத்தி வைப்பதாக கூறி ஒரு முறை கைகூப்பி வணக்கம் சொல்வதுடன் படம் முடிவதை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அரங்கம் நிறைந்த காட்சியாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து, .. நேற்றோடு படம் தூக்கப்பட்டுவிட்டது.

நடந்து முடிந்த இந்தக் களேபரத்தை ஆடாமல் அசையாமல், அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டவை நாடாளுமன்றத்தில் இருந்த இரண்டு பொருட்கள் மட்டுமே. முதலாவது நாடாளுமன்ற நாற்காலி. இரண்டாவது மன்மோகன்சிங்.

எனவே, “நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று அன்னை இரு பொருள்படவே கூறியிருக்க வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது நமது நோக்கமல்ல. தனது கூற்றை சோனியாவே தெளிவு படுத்தியிருக்கிறார். ”Ms.Gandhi complimented the Prime minister on ‘his wise leadership’, on his ‘remaining calm amidst the storm” என்று சோனியா சொன்னதாக எழுதியிருக்கிறது இந்து பத்திரிகை. “பிரதமருடைய இந்த ‘முயற்சி‘ யில் காங்கிரசு கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்” என்றும் அன்னை சோனியா அறிவித்திருக்கிறார்.

இன்று நாம் காணும் நாடாளுமன்றக் காட்சிகளைப் போன்ற காட்சிகளை முன்னர் தமிழக சட்டமன்றத்திலும் நாம் கண்டிருக்கிறோம். ஊழல் வழக்குகளின் காரணமாக அன்னை ஜெயலலிதாவால் அமர முடியாத முதல்வர் நாற்காலியில், ஒரு ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒண்டிக் கொண்டிருந்தபோது தமிழக சட்டமன்றத்திலும் இதுதான் நடந்தது.

முதல்வர் நாற்காலியாக இருந்தாலென்ன, பிரதமர் நாற்காலியாக இருந்தாலென்ன, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. அதே நேரத்தில் அவற்றில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங்கும் பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

பன்னீர் அமைச்சராவதற்கு முன் டீக்கடை முதலாளி. மன்மோகன் சிங்கோ உலக வங்கி அதிகாரி. பன்னீருக்கு விவரம் பத்தாது என்பதால் பேசுவதில்லை. மன்மோகன் சிங் ரொம்ப விவரமறிந்தவர் என்பதால் பேசுவதில்லை. மவுனமாக இருப்பதனால் முட்டாளும் அறிவாளியும் சமமாகி விட முடியாதில்லையா? அதனால்தான் ‘அறிவார்ந்த தலைமை’ என்று அன்னை சோனியா அழுத்திக் கூறியிருக்கிறார்.

”நம்முடைய அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை” என்றிருக்கிறார் சோனியா. உண்மைதானே. தேசிய நெடுஞ்சாலைகளின் கப்பிக்கல் முதல் கான்கிரீட் தூண்கள் வரை அனைத்திலும் கமல்நாத்துக்கு கழிவுத்தொகை 15 சதவீதம் என்பது வெளிவந்து விட்டது. முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட 91,000 கோடி வரிச்சலுகை ரகசியம் வெளிவந்து விட்டது. ராஜா மட்டுமல்ல, கமல்நாத், ஆனந்த் சர்மா, பிரபுல் படேல் முதலான அமைச்சர்கள் யார் யாருடைய சிபாரிசின் பேரில் பதவியைப் பெற்றார்கள் என்பது ராடியா டேப்பில் வெளிவந்துவிட்டது. மற்ற அமைச்சர் பெருமக்களின் நியமனம் குறித்த ரகசியங்கள் பாக்கி உள்ள டேப்புகள் ஒலிபரப்பாகும்போது தெரியவரக் கூடும்.

அமைச்சர்களை நியமிப்பவர் பிரதமர். டேப்புகளில் பேசியிருக்கும் பிரமுகர்கள் எல்லோரும் “மேலிடத்தில் பேசிவிட்டேன்” என்று சொல்லும்போது, பிரதமரிடம் பேசிவிட்டதாகத்தான் அதற்கு நாம் பொருள் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக ராஜாவை நியமிக்க பிரதமரிடம் சிபாரிசு செய்த டாடா மாட்டிக் கொண்டு விட்டார். சிபாரிசை அமல்படுத்திய மன்மோகன் மவுனம் சாதிக்கிறார். லாபியிங் செய்த ராடியா மீது விசாரணை. விசாரணையை நடத்துவது லாபியிங்குக்கு இடம் கொடுத்து மடமும் கொடுத்த மன்மோகன் சிங் அரசு. இந்தக் கேலிக்கூத்தை எங்கே போய் சொல்ல?

எந்த மந்திரிக்கு எந்த கார்ப்பரேட் சிபாரிசு என்று இப்போது தெரிந்து விட்டது. பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கை நியமிக்க யார் யாருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள்? மேற்படி உண்மை ராடியா டேப்பில் வருமா என்று சொல்ல முடியாது. அது ஒருவேளை விக்கி லீக்ஸில் வெளிவரக்கூடும். ஏனென்றால், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை சிபாரிசு செய்தவர்கள் உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளுமாயிற்றே.

அந்த ரகசியம் வெளியில் வந்துவிட்டாலும் மன்மோகன் சிங் பேசமாட்டார். அன்னை சோனியா சொல்லியிருப்பது போல காங்கிரசு கட்சியும் அதற்கெல்லாம் பயந்து விடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சிகளின் அம்மணப் படங்களும்தான் ராடியா டேப்பில் ஓடுகின்றன. யாரைப் பார்த்து யாரும் கூச்சப்படுவதற்கோ தலை குனிவதற்கோ என்ன இருக்கிறது? “இன்று நீ நாளை நான்” என்று டவுசர் கழட்டப்பட்டவர்களும், கழட்டப்பட இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துணர்வுடன் புன்னகை பூத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். பயப்படுவதற்கு வேறெதுவும் இல்லை.

இந்த இரைச்சல்கள் கூச்சல்களெல்லாம் சிறுபிள்ளைத் தனமானவை என்பதை மன்மோகன்சிங் அறிவார். அதனால்தான் நாடாளுமன்ற அமளி துமளிகளைக் கண்டு அவர் அதிரவில்லை. மவுனமாகப் புன்னகை பூக்கிறார். இது முற்றும் உணர்ந்தவரின் மவுனம். அறிவார்ந்த மவுனம்.

இதற்கு முன் எத்தனை ராடியா டேப்பை அவர் பார்த்திருக்கிறார்?

1994 இல் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவைத்தார் மன்மோகன் சிங். அன்றைக்கும் நாடாளுமன்றம் சலசலக்கத்தான் செய்தது. அறிவாளி மன்மோகன் சிங் அசைந்து கொடுக்கவில்லை.

2005 இல் அமெரிக்காவுக்கு கிளம்பிய மன்மோகனிடம், “ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்கள் இடதுசாரிகள். “இல்லவே இல்லை” என்று சாதித்தார் மன்மோகன். வாஷிங்டனிலிருந்து வெளிவந்த பிரணாப்-ரம்ஸ்ஃபீல்டு, மன்மோகன்-புஷ் கூட்டறிக்கைகள் இந்தப் பொய்யை அம்பலமாக்கின. இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இறுதியாக்கப்பட்டிருந்தன.

பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் வந்தது. “ஹைட் சட்டமா, நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றார் பிரதமர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குட்டை உடைத்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல். அன்றும் மவுனமாய் இருந்தே சாதித்தார் மன்மோகன்சிங்.
இன்று ஐயப்பன் பஜனையைப் போல அரசியல் முச்சந்திகள் தோறும் அலறுகிறது ராடியா டேப். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ராடியாவுடன் தொடர்பு கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் “டேப்பில் என்னுடைய குரலை மட்டும் அழித்து விடு இறைவா” என்று மனதுக்குள் மன்றாடுகின்றனர். கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட் கனவான்கள் ” நீ 50,000 கோடி, நீ 10,000 கோடி” என்று ரோட்டில் கட்டி உருளுகின்றனர். அரசியல் வாதிகளை டிவியில் உரித்தெடுக்கும் ஊடக நட்சத்திரங்களெல்லாம் உளறுகின்றனர். ஊரே அமர்க்களப்படுகிறது.

உத்தமர் மன்மோகன்சிங் மட்டும் மவுனம் சாதிக்கிறார். இந்த மவுனத்தின் பொருள்தான் என்ன? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று. வாய் திறந்து பேசினால் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். மவுனமோ இரவைப் போன்றது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் பொழிப்புரைகள்.

“நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் மவுனமாக இருக்கிறார்.”
“அவர் ஊழல் என்ற சொல்லைக்கூட உச்சரித்து அறியாத உத்தமர். தன்னைச் சுற்றி இத்தனை ஊழலா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்.”
“பதவியே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள் என்று சோனியாவிடம் விக்கி விக்கி அழுதும் பயனில்லாததால் விக்கித்து நிற்கிறார்.”
- மன்மோகனின் மவுனத்துக்குத்தான் எத்தனை விளக்கங்கள்!
மற்றவர்களையெல்லாம் விடுங்கள். “பிரதமரைப் பேசச் சொல்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிசனே போட்டார் ஒரு ஆசாமி. அந்த சு.சாமியே சொல்கிறார்: பிரதமர் நல்லவர்.

நல்லவருக்கு அடையாளம்தான் என்ன?

அடிஅடின்னு அடிச்சாலும், டமாரம் வச்சி அடிச்சாலும் கல்லுளி மங்கனாட்டம் கம்முன்னு இருக்காரே, அதிலேர்ந்தே தெரியல, அவரு ரெம்ப ..நல்லவரு.

ஓ. பன்னீரை விட, வடிவேலுவை விட, ரெம்ப….ரெம்ப நல்லவரு!
http://www.vinavu.com/2010/12/15/manmohan/