Friday, November 8, 2013

தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம், அமைப்பாளர், தமிழ்க்கூட்டமைப்புகள் இந்து நிறுவனத்தார் தமிழ் முறைக்கு மாறான முறையில் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் நாளிதழ் நடத்துகின்றனர். இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியல்ல; தமிழ்வாசகர்கள் மூலம் பணம் பெருக்குவதே! ஆனால், அதே நேரம் தமிழ் வாசகர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுவருவதுதான் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது. ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழில் பல்துறைக் கட்டுரைகள் வெளிவந்தாலும், அவற்றின் நடை தமிழைச் சிதைப்பாகவே உள்ளன. இவ்வாறு தான் நடத்தும் ஆங்கில இதழில் ஆங்கில நடையைச் சிதைத்து எழுத முன்வருமா இவ்விதழ்? வராது! அங்கே, நல்ல ஆங்கிலத்தில் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் காவலராக விளங்குவதிலேயே பெருமை கொள்கிறது. இதே அளவுகோலைப் பயன்படுத்தித் தமிழ்க்காவலராகவும் விளங்கலாமே! ஏன், அவ்வாறு விளங்காமல் தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது? மக்களால் விரட்டியடிக்கப்படும்வரை மோதிப்பார்ப்போம் என்கிறதா? இத்தகைய இதன் தமிழ் அழிப்புப் பணிகளில் ஒன்றுதான் தமிழறிவற்ற கதையாளர் ஒருவரைக் கொண்டு, “ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என வந்துள்ள கட்டுரை. கட்டுரைப் பிதற்றலில் உள்ள சில வரிகள் பற்றிப் பார்ப்போம்! “தாய்மொழியைத் தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். . . . கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்” என்கிறார் இவர். தாய்மொழி மட்டுமல்ல, எல்லாப் பாடங்களுமே தேர்வு நோக்கில் கற்கும் வகையில்தான் நம் கல்விமுறை உள்ளது. மாற்ற வேண்டியது கல்வி முறையைத்தான். தாய்மொழிக்கல்வியை அல்ல! தமிழ்வழியில் அனைத்துக் கல்வியும் அமைந்தால் தமிழ் நிலைக்கத்தானே செய்யும்! “மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். . . . . குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன” என்பது மற்றோர் உளறல். இந்த மனப்பயிற்சி என்பது ஆங்கிலத்திற்கும் பொருந்தும் அல்லவா? அயல் மொழியில் மேற்கொள்ள வேண்டிய கடினமான பயிற்சியைவிடத் தாய்மொழியில் எளிதில் பயிற்சி மேற்கொண்டால் போதுமல்லவா? “மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது” எனக் கதை சொல்வது மிகவும் தவறான வாதம். மலாய் மக்களில் பொது இடங்களில் பணியாற்றுபவர்களுக்குக்கூடப் பேருந்து எண்கள், நேரங்கள், கட்டண விவரங்கள், உணவுப் பொருள்கள் விலைகள், பிற பொருள்களின் விலைகள், முதலான பயணத்திற்குத் தேவையான எவ்விவரத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. (ஆங்கிலம் தெரிந்திருந்தால்தானே இவற்றைப் புரியவும் சொல்லவும் முடியும்.) எனவே, ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம் மொழியையும் அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமையே! “இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்” எனச் சரடு விடுகிறார். வரிவடிம்தான் மொழியின் அடையாளம். அவ்வாறிருக்க ஆங்கில எழுத்துரு எனச் சொல்லப்படும் உரோமன் எழுத்தில் படிக்கும் பொழுது, எந்த மொழி என எவ்வாறு அறிய இயலும்? மேய்ச்சலைக்குறிக்கும் ‘மேய்’ என்பதை ஆங்கில எழுத்தில் எழுதினால், அதனை மே மாதம் என்றாவது ஆங்கிலத்தில் உள்ள துணை வினை என்றாவது அறிவார்களே தவிர, தமிழ்ச்சொல் என எங்ஙனம் உணர்வார்கள்? தமிழே தெரியாமல் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் படித்தால் எங்ஙனம் தமிழ் எனப் புரிந்து கொள்வார்கள்? தமிழ் எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ - த, ‘எம்’, ‘ஐ’ - மி, ‘இசட்’, ‘எச்’ - ழ் > தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்து வாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா? “மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரி வடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால், மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழி, புதிய புதிய வரி வடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக் கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச்சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ்நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை.” (எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!- பக்கம் 6) “எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல” என்று வரிவடிவ அழிப்பிற்குச் சப்பைக்கட்டு கட்டுகின்றார். இதற்குப் பின் வரும் குறிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். “கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான் “எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7) என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார். எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. (எழுத்தைக் காப்போம் - இலக்குவனார் திருவள்ளுவன், நட்பு இதழ்) 1950 இல் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள் முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம் முயற்சியில் 'இந்து' இதழ் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா? எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே! மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே! இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே! என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களை ஏற்று நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்கப் பெரும்திரளாய்த் தமிழன்பர்கள் உள்ளனர். எனவே, தமிழ் இந்துவே, மொழிக் கொலையை நிறுத்திக்கொள்! தமிழ் அழிப்பு முயற்சிக்கான கட்டுரையை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துவிடு! தமிழால் பெட்டியை நிரப்பும் இந்துவே! தமிழைக்காக்காவிட்டாலும் தமிழ் அழிப்பு முயற்சியில் ஈடுபடாதே! அல்லது உன் தமிழ்ப்பதிப்பை நிறுத்திவிடு! நிறுத்திவிடு! நிறுத்திவிடு! மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச் சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச் செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால் தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல்வேண்டா (- பாவேந்தர் பாரதிதாசன்)

Monday, November 4, 2013

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியா

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் ஆரிய திராவிட அரசிற்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள்! தமிழக அரசு ஈழ மக்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அவர்களுக்காக போராடும் தமிழின போராளிகள் மீது முதன் முறை யாக “தேசியப் பாதுகாப்பு சட்டம்” என்ற கடுமையான போக்கை கையாண்டு தனது இரட்டை நிலையை வெளிப் படுத்தியுள்ளது. ''தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன்சிங்கே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே...சட்டமன்ற தீர்மானத்தை இழிவுப்படுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு. மத்திய அரசே... தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து, இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே''.. என்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டரிக்கைளை பரவ லாக கொடுத்து அதன் அடிப்படையில் மயிலாப்பூர் மற்றும் சேலம் அஞ்சல் நிலையத்தின் மீது “திராவிடர் விடுதலை கழகம்” தமிழர்கள் 4 பேர் தாக்குதல் நடத் தியதற்காக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், மற்றும் அவர்களை தூண்டியதாக அண்ணன் கொளத் தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கு முன் இதே தோழர்கள் அயோத்திய மண்டப தாக்குதல், காவிரி சிக்கலில் ஆளுநர் மாளிகை உணவக தாக்குல், 2009ல் ஈழ ஆதரவு சிடிக்களை பரப்பியது, புத்த மடாலய தாகுதல், தினமலர் தாக்குதல், எ.ஸ்.வீ. சேகர் இல்ல தாக்குதல், காஷ்மீர் சிக்கலுக்காக போராடி யதற்காகவும் காவல் துறையின் அடக்குமுறையினால் சிறை பட்டிருக்கிறார்கள். மேலும் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் அவர்களும் தேடப்படும் குற்றவாளியாக இதில் சேர்க்கப் பட்டுள்ளார். இன்று சிறைப்பட்டிருக்கும் தோழர்கள் நால்வரும் தங்களின் முகம் காட்டாமல் உழைத்த சாமானிய உழைப்பாளிகள். கூலித் தொழிலாளிகள், நாள்தோறும் தங்களின் உழைப்பால் ஈட்டும் கூலியால் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியவர்கள், சொந்த வீடு இல்லாமல் சாலையோர வீடுகளில் வாழ்பவர்கள் . எதிர் வினையா ற்றினால் என்ன சேதாரங்களை சந்திப்போம் என்று உணர்ந்து செயலாற்றியவர்கள்.. அவர்களுக்கு துணை நிற்போம்.. பொருளாதார முறையிலான உதவிகளை செய்திட விழைவோம். திராவிட இயக்க எதிர்ப்பு என்பது நம்மிடையே பரவி இருந்தாலும் தமிழின சிந்தனை அடிப்படையில் இப் போராளிகளுக்கு உதவுவது ஒவ்வொரு தமிழ் தேசிய வாதிகளின் கடமையாக கருதுவோம். தமிழ்போராளிகளை ீவிரவாதிகளாக,பயங்கரவாதியாக காண்பிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள் . முகநூல் தொகுப்பு

Wednesday, October 23, 2013

சுப. உதயகுமார் - அறியாத தகவல்கள்

அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், அவை அத்தனையும் உண்மை என்றே தெரிய வருகிறது. நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான். அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல. அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில். அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது. அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது. அவன் குடும்பம் இந்துக் குடும்பம். ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார். அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை. நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான். அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான். அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது. மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி. யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான். அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை. எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்குள்ளாக்கியது. யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது. நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல். அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான். எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு. அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது. அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான். எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான். அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது. அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான். இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால், இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது. பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில் இந்து ராம், கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது. அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான். 2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம். அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்விலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கயிருந்தானென்றால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான். வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு, விவசாயம், இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான். அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர். (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை. வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ? அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும். ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது ...!!! கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன. இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது. அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது. அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர். அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாட்டி என்றால் உயிர். அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார். அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது. அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது. அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது. எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான். அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன. அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான். தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான். அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான். 2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான். 20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. 1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி. இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது. முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது. கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர். இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன. 1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன. அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. 1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது. இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன. 2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன். 2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான். ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர். 2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள். அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை. அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள். 2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர். அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ? கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது. விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள். அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள். ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும். வேகமாக மூச்சு விடக் கூடாது. இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும். 30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது. அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயக்குமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது. அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று. இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்… இப்படித்தான்.. புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள். ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ? இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள். 2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..? ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான். வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான். ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ? அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ? இறங்கினான் களத்தில். அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது. மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது. அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது. நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு. அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள். அது பலிக்கவில்லை. அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது. அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன். கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான். அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை. அவன்தான் பேரத்திற்கு படியவில்லை. அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது. அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர். அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது. அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை. அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான். கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன. அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி. உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர். ஆர்ப்பரித்தனர். அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார். அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார். காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது. அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார். அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார். அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது. தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். . அது மட்டுமா… ? அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர். சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர். மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ? சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது. அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார். அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர். அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர். அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன. ஆனால் அவன் கலங்கவில்லை. தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது. பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர். அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள். அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான். அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர். எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ். அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ். காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது. அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார். ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும். அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான். தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின. ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ? எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர். சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார். கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்… போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார். காத்திருந்த காவல்துறையை ஏவினார். மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். தடியால் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர். ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை. அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான். போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர். அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது. தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான். ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை. நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான். போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள். அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள். அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. நான் அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன். நீங்கள்... .. ? நன்றி சவுக்கு

Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு

வைகோவை பார்த்தால் பல நேரங்களில் ஆச்சரியமாகத்தான் உள்ளது. பத்தாயிரம் பேர் உள்ள பொது கூட்டத்திலும் பேசுகிறார் அடுத்த நாளே நூறு பேர் உள்ள தெருமுனை கூட்டத்திலும் பேசுகிறார் அதே உணர்வுடன் லக்ஷம் பேர் திரளும் மாநாட்டு கூட்டத்திலும் பேசுகிறார். ஏரலில் ஆரம்பித்த,மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு என்று ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர வீதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நான் இப்போதுள்ள ஊடக கருவிகளை சரியாக பயன்படுத்தாமல் இப்படி நேரடியாக செல்வது சரியில்லை என்று ஒரு நண்பரிடம் விமர்சனம் செய்து இருந்தேன். அதே போல பல இடங்களில் எந்தவித முன் திட்டமிடலும் இன்றியும் கூட்டங்கள் இருக்க கூடாது , அப்படி நடக்கும் கூட்டத்திற்கு முன்பு வந்தவர்களே வருவார்கள் புதிதாக, கட்சியை சாராத பொது மக்களை அரசியல் கூட்டத்திற்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்றும் பேசி கொண்டு இருந்தோம். ஆனால் வைகோ எதைபற்றியும் கவலை கொண்டவராக தெரியவில்லை. அவரை பொறுத்தளவில் நூறு பேர், ஆயிரம் பேர், லக்ஷம் பேர் எல்லாவற்றிற்கும் எண்ணிக்கை வித்தியாசத்தை மனதில் கொண்டவராக தெரியவில்லை.

Tuesday, September 17, 2013

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்!


இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர். பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள். இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி. நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ? மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம். விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். நேரடி எண் 044-22564395. அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள். —

Saturday, May 25, 2013

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு