சாதியும் இருக்கும்
மதமும் இருக்கும்
சாத்திரம் மக்களை...
வேறெனப் பிரிக்கும்!
மோதலும் இருக்கும்
முதலாளி இருப்பான்
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!
குந்தியே தின்பான்
ஒருவன் மற்றவன்
குடல்வற்றிச் சாவான்
இவற்றிடை யாவரும்
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சம்மென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்
கொடுமைகள் செய்வான்
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!
முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
-பாவலரேறு பெருஞ்சித்திரனார் -