Friday, December 31, 2010

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?



மனித உரிமை ஆர்வலரான பினாயக் சென்னுக்கு இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது (இந்த இணைப்பில் அது தொடர்பான் செய்தியினைக் காணலாம்.). இந்தத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டமைக்கான காரணம் ராஜத்துரோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் பினாயக் சென் மீது சாட்டப்பட்டிருக்கும் இக்குற்றச்சாட்டுக்குறித்து விரிவாக தனது இந்திய மக்களாகிய நாம் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரராஜன். இவர் முன்னாள் பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைப் பதிவின் முக்கியத்துவம் கருதி, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், அவரது பதிவினை எமது வாசகர்களுக்காக முழுமையாக இங்கு மீள் பிரசுரம் செய்கின்றோம்.

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?

ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம். 24-12-2010, வெள்ளிக்கிழமை. குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கும் நபரிடம் நீதிபதி சொல்கிறார்: "உங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-பி இன்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது!"
குற்றவாளிக்கூண்டில் நிற்கும் அந்த நபர் கேட்கிறார்: "124-பி என்றால்..?"
நீதிபதி பதில் அளித்தார்: "ராஜத்துரோகம்!"
---
வங்கமொழியில் பினாயக் சென் என்று அழைக்கப்படும் இவரை நாம் விநாயக் சென் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்! இவரைப் பற்றி தெரியாதவர்கள் இந்தப்பக்கத்தை பார்க்கலாம்:



வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் வென்ற டாக்டர் விநாயக் சென், சிறிது காலம் டெல்லியில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த பணியில் திருப்தி அடையாத அவர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளுக்கு மருத்துவச் சேவை ஆற்ற ஆரம்பித்தார்.
குழந்தை மருத்துவ நிபுணரான அவர், அப்பகுதியில் ஊட்டச்சத்துணவு இல்லாத காரணத்தால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார். மேலும் சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பு அரசின் ஆதரவுடன் சுரங்க அதிபர்களால் சுரண்டப்படுவது குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்காக சுரங்க அதிபர்கள் “சல்வா ஜுடும்” என்ற ஆயுதம் தாங்கிய கூலிப்படையை உருவாக்கி அப்பகுதி பூர்வகுடி மக்களை சித்ரவதை செய்வதையும் அம்பலப்படுத்த தொடங்கினார். மத்திய – மாநில அரசுப்படைகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தி வருவதையும் எதிர்த்து அவர் குரல் எழுப்பி வந்தார்.
மேலும் பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வு முடிவுகள் காட்டும் அவல நிலையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டார். மேலும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நாராயண சன்யால் (வயது 70) என்பவருக்கும், பியுஷ் குஹா என்ற தொழில் அதிபருக்கும் இடையே இணைப்புப்பாலமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் விநாயக் சென் கடந்த 14-5-2007 அன்று சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருக்கும் நாராயண் சன்யாலை, சிறை அதிகாரிகளின் வேண்டுகோள்படி சிகிச்சை அளிப்பதற்காகவே டாக்டர் விநாயக் சென் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளின் கண் முன்பே நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்புகளின்போதுதான் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யாலுக்கும், தொழில் அதிபர் பியுஷ் குஹாவுக்கும் இடையே இணைப்புப் பாலமாக விநாயக் சென் செயல்பட்டு கடித பரிவர்த்தனை செய்தார் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எழுந்த குரல்களை அடுத்து கடந்த 2009 மே 25ம் தேதி அவருக்கு பிணை அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர் பிணையில் வந்த நிலையில் இவர் மீதான வழக்கு ராய்ப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெகுவிரைவாக நடத்தப்பட்டது. அரசுத் தரப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ”க்கும் டாக்டர் விநாயக் சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக “திடுக்கிடும்” தகவலை வெளியிட்டார். விநாயக் சென் தரப்பில் இந்த ஐஎஸ்ஐ டெல்லியில் இருக்கும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் அமைப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அரசுத் தரப்பு சான்றுகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்படவில்லை. அரசுத்தரப்பு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
எனினும், டாக்டர் விநாயக் சென் மீதான ராஜத்துரோக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து ராய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
---
இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பாக இருக்கலாம். ஆனால் சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், இந்திய நீதித்துறையை கவனித்து வருபவர்களுக்கும் இந்த தீர்ப்பு எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.



ஏனெனில் இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும், இந்தியா பிரிட்டனுக்கு அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆதிக்க நாடான இங்கிலாந்து, அடிமைகளான இந்தியர்களை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட சட்டங்களே தொடர்ந்து அமலில் இருந்து வரும் சூழலில் இந்த தீர்ப்பு வராவிட்டால்தான் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டும்.
இந்திய நீதித்துறையின் இந்த அவல நிலை குறித்து பின்னர் தனியாக பார்ப்போம்.
---

நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு ராகுல் காந்தி போகும் இடமெல்லாம், “இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன!” என்று கூறி வருகிறார். அதாவது ஒன்று சிறுபான்மையான வளமையான இந்தியாவாம்.. மற்றொன்று பெரும்பான்மையான வறுமையான இந்தியாவாம்! உண்மைதான்!!
சுதந்திர இந்தியாவை மிக அதிக காலம் ஆட்சி செய்த ராகுலின் கொள்ளுத் தாத்தாவும், பாட்டியும், தந்தையும், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியபடி இந்தியாவை இரண்டு இந்தியாக்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்த இரண்டில் சிறுபான்மையான வளமையான இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் விசுவாசிகளாக உள்ளனர். உதாரணமாக ப.சிதம்பரத்தைக் கூறலாம். பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்கு மத்திய அமைச்சராக இருக்கும்போது இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பார். அதை எதிர்த்து மக்கள் போராடினால் பசுமை வேட்டையை ஏவுவார். ஆட்சியில் இல்லாதபோது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு இயக்குனராகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவார். ஆக மொத்தத்தில் ராகுல் காந்தி கூறிய இரண்டு இந்தியாக்களில் ஒரு (வளமையான) இந்தியாவின் தேச பக்தர். மற்றவர்களுக்கும் இதேபோல் விளக்கவுரை எழுதலாம். நேரம் காரணமாக நிறுத்திக் கொள்வோம்.
மற்றொரு இந்தியாவோ ராகுல் காந்தியே குறிப்பிடுவதுபோல வறுமையில் வாழும் பெரும்பான்மை கொண்ட மக்களைக் கொண்ட இந்தியா! ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தாவும், பாட்டியும். தந்தையும், தற்போதைய காங்கிரஸ் காரர்களும் செய்த துரோகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா! இந்த மக்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் எத்தனையோ பேரில் டாக்டர் விநாயக் சென்னும் ஒருவர்.
ஏழை இந்தியா மீது டாக்டர் விநாயக் சென் அன்பு காட்டுவதும், அக்கறை செலுத்துவதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வளமையான இந்தியாவிற்கு தேசத்துரோகமாக தெரிகிறது.
இந்தியாவில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்று ஒருவர் இருந்தார். “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. அதைக் கேட்ட மோகன்தாஸுக்கு மார்பு வலி வரவில்லை. அவர் கூறினார்: “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக அது தோன்றுகிறது!” மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்றைக்கும் இந்தியாவில் அதே சட்டம்தான் அமலில் உள்ளது. அன்று மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட அதே சட்டப்பிரிவின் கீழ் இன்று டாக்டர் விநாயக் சென் மீது அதே தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வர்ணித்தபடி, "எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் விசுவாசமாக இருந்தார்? எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் துரோகம் செய்தார்!" என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.

- இப் பதிவின் தாயகம்
http://ww5.4tamilmedia.com/index.php/special/republish/2008-2010-12-27-13-48-29

Wednesday, December 29, 2010

தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?

ராசீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி ஈரோடை நாம் தமிழர் கட்சியினர் “தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?” என்ற துண்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.




பேரறிவாளன் மடல் :-

மரணதண்டனை கூடாது எனக்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி :-

அ.ஞா. பேரறிவாளன்

மரண தண்டனைச்

சிறைவாசி த.சி.எண். ௧௩௯௦௬

நடுவண் சிறை, வேலூர் – 2

அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

கைது செய்யப்பட்டதன் பின்னணி

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

சட்டவிரோதக் காவல்

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.

எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.

இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.

இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் – 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை. மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.

இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.

முதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல்

இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.

இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்

இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம். ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.

பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

மூன்றாவது நீதிமன்ற ஆஜர் படுத்தல் மற்றும் வாக்குமூலத்தில் கையயாப்பம் பெற்ற முறை

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.

அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையயழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.

வாக்குமூலம் பற்றிய எனது முறையீடுகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையும்

அன்றே நானும், ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.

சிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது. எனவே சிபிஐ-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.

இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள் பற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப. மனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற்றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன். அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992ஆம் தேதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய வியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல்,

“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

என்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார். உண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம். கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.

சிறைத் துன்பங்கள்

1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.

எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.

உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு. எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.

என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.

இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.

1993ஆம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர், எக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது.

சிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற சிறை வாசிகளைப் போல வீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள், மருத்துவ பரிசோதனை என்பவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம் வீதிகளை, மக்களைப் பார்த்துள்ளேன்.

பூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால் போர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில் காலங்களில் சொல்லொன்னா வேதனைகளுக்கு உள்ளானேன். தூக்கத்தை இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில் கேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி இதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான் உயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிசனுக்கு முறையிட்டுள்ளேன். 1996ல் திரு.சர்மா என்ற கமிசன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிறம்பாத (பிறந்த நாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐயிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர்கள் மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கனிணிவியல் பொறியாளர் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.

ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மை

ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டமல்ல, என்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றிற்கு காரணம் என்ன? ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்தி பெற்ற கையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.

இன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இளைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூரச் சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம் செல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.

இன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக்கூறப்பட்ட இச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை, உயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை, போலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள் இழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்?

இருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில் கணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே பொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன்.

இந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன் நம்பகத்தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991 அன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய நாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது? இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு நாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ / எஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது? (நீதியரசர் தாமஸ் பக்கம் 35)

இந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த சாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர் தொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் நடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை பற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி 52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன். இவ்வாதத்தை நான் எனது 313. குற்றவியல் நடைமுறைச் சட்டம். பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட் பயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது என்றும் கூறுகிறார்.

ஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக சாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.

இதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இயந்திரத்தனமாக சாட்சியமளித்துள்ளது தெரிகிறது.

4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின் இறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது. என்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா?

5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான் சென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பரின் சாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக உள்ளது.

6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள் கொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும், சாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம். வாக்குமூலப்படி சுபாசுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில் ஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில் என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி?

7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட் மின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம் முதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர் வாத்வா பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர் சாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.

8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான சாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர் சாட்சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத் தெரியாது என சாட்சியமளித்துள்ளார்.

10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288 இரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று காணப்படுகிறது.

11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது தொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக உள்ளது. ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு முகவரியை அறிவதற்காக சுபாசுந்தரத்திடம் சென்றதாக உள்ளது.மேற்சொன்னவை சில உதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால் முரண்பட வாய்ப்பில்லை.

வாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில உண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த வாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சாதகமாய்ப் பேசும் ஆவணக் குறிப்புகள்

எமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும் கூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான சங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் எல்.டி.டி.ஈ.க்காக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். பல எல்.டி.டி.ஈ. உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும், சிவராசன் ஒரு சீனியர் எல்.டி.டி.ஈ. ஆள் என்பதால் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக் கொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.

2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி சிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற உள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாக்குமூலப்படி நான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம் தெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.

3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது பாக்கியநாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. உண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக இருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க முடியுமா?(சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி அறிந்ததாக வாக்குமூலத்தில் உள்ளது.)

4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை நளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான் பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி இடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது. எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன். சிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று இடம் மாறுவதாக உள்ளது.

5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார் பேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில் காணப்படுகிறது. நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு இருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே சென்றிருப்பேன்.

6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி எந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும் குறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது குறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை என்ன?

இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான புலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21, சூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது 313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

மேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்.

எனது வேண்டுதல்

அன்புக்குரியீர், மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில் எடுத்துரைத்திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந்திருப்பார்களே என்று எம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும். உண்மை என்னவெனில் இதைவிடக் கூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார். எமது குற்றமற்ற தன்மையை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில் மறுசீராய்வு மனுவில் சமப்பித்தோம். ஆயினும் கூட நீதி மறுக்கப்பட்டு விட்டது.

கொடுமை வென்னவெனில், மறு சீராய்வு மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் வாத்வா.

(“Mr. Natarajan, who appeared for the convict review peritioners, submitted that he convict was not challenging the finding of guilt of the peritioners and was confining the review petitions only on question of award of death sentence)

தண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்றும் மரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை கட்டப்படுத்திக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.

என்று குறிப்பிட்டுள்ளார். எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக்கான மனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் மிக மோசமான முறையில் ஏமாற்றமடைந்தேன். தயவுகூர்ந்து இதை நீதித்துறை மீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

குறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப் போராளிகளிடமாவது உண்மையை நிலைநாட்டி விட வேண்டும் எனத் துடிக்கிறேன். என்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் இயல முடியவில்லையானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக் கணத்திலாவது உணர்வீர்களேயானால் அதுவே எனது விடுதலைக்கான வெற்றி என்பதை உறுதியோடு சொல்வேன்.

என் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும் நீதியரசர்கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன். படித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தடா எனும் ஆள்தூக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான காரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 15 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு என்பதையும் நன்கறீவீர்கள்.

இந்தக் கொடூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்றும் தடா சட்டம் இவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை மட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும். 12,15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர் விலையாக்கப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது, உலகத்தின் மிகக் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இரு தரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான் வருத்தத்தோடு எண்ணிப்பார்த்தேன்.

சட்டப்படி நான் எந்தக் குற்றமும் செய்தவனல்ல. நியாயப்படியும் குற்றமற்றவனே. என்றாலும் எமதுத் தரப்பு நியாயங்களைவிட மறைந்தவர் உயர் பதவி வகித்தவர் என்பதுதான் முன் நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்து விட்டது.

தனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பல நேரங்களில் பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்தகால சான்றுகள் பலவுண்டு. அன்று கேகர் சிங் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்ட போது யாரும் குரல் கொடுத்துவிடவில்லை. ஆனால் இன்று எமக்கான நிலைமை அவ்வாறில்லை என்பதை உணர்ந்துள்ளேன். அதையிட்டு நான் மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும் அந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.

எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.

சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.

எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.

வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக் கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.

இறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோடு நீதிக்கான இம்முறையீட்டை முடிக்கிறேன்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதி வெல்லட்டும்!

இப்படிக்கு
அ.ஞா. பேரறிவாளன்

http://meenakam.com/2010/12/29/17362.html

Sunday, December 26, 2010

கல்விக்கான நேரடிப் பகிர்வு..




அன்புடையீர் வணக்கம்

thamizham - கல்விக்கான நேரடிப் பகிர்வு

http://www.livestream.com/thamizham

மேற்காணும் இணைப்பின் வழியாக நேரடியாக தமிழ்க் கல்வி பற்றிய
செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு காரிக் கிழமையும் இந்தப் பகிர்வை நிகழ்த்த விரும்புகிறேன்.

தமிழ்க் கல்வி தொடர்பாக உங்களின் வினாக்கள்
உங்கள் தமிழ்ப் பள்ளிக்குத் தேவையான கருவிகள், பாடத்திட்டங்கள்
மாணவர்களுக்கான பிரச்சனைகள் அதைச் சரி செய்ய கருததுருக்கள்
மாணவர்கள் ஆற்றலோடு எழுவதற்கான படிநிலைகள்

இன்றைய பாடத்திட்டம் - அதன் குறைகள் எப்படி சரிசெய்து
நிறைவாக்கி எதிர்கால நாற்றுகளான மாணவர்களை எப்படி
வளர்த்தெடுப்பது என்பதற்கான வழி முறைகள்

இதுபோன்ற கல்வி தொடர்பான செய்திகளை வரிசைப் படுத்தி
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேரம் தமிழக நேரப்படி இரவு 7.30 முதல் 8.00 வரை
ஒவ்வொரு காரிக் கிழமைகளிலும் (சனிக்கிழமைகளிலும்)
நிகழ்த்த விரும்புகிறேன். முதல் பகிர்வினை
04- 01 - 2011 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் கற்பிக்கும் பள்ளிகள்
இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்

உங்களுக்கான பிரச்சனைகளை மின் அஞ்சல் வழி அனுப்பி
வைத்தால் அதற்கான தீர்வும், அணுகுமுறையும் இந்த நேரத்தில்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இந்த நிகழ்வு பற்றிய உங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும்
மின் அஞ்சல் செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன்
ம.நடேசன்,., க.மு., அறி.மு., கல்வி.மு., தொ.தூ,க.,
மின் அஞ்சல் - pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com
-

Saturday, December 25, 2010

புலி மௌனித்தாலும் விடமாட்டேனெங்கிறது இந்தியா



கடந்த முப்பதாண்டு கால ஆயுதப்போரில் ஈழத்தமிழர் பட்ட இன்னல்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சிங்கள இராணுவத்திடம் மட்டுமா ஈழத்தமிழர்கள் போரிட்டார்கள்...ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் ஈழத்தில் மூன்றாண்டுகளாக செய்த கொடுமைகளைத்தான் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா...
தமிழர்களை அழிக்க உலக நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளை சிங்கள காடையர்களுக்கு அள்ளிக்கொடுத்தது. ஏதோ ஜனநாயக வழிமுறையில் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கலாம் என்றுதானோ என்னவோ புலிகள் தமது ஆயுதங்களை மே 17, 2009-ல் மௌனிப்பதாக அறிவித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தோட்டாவாவது சிறிலங்காவில் வெடித்ததுண்டா? அப்படியாக ஒரு தோட்டாவும் வெடிக்கவில்லை. பகைவர்கள் துணிச்சலுடன் உயிருடன் வலம்வருவதுடன், தமிழர்களை ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியிருக்க கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்சியாளர்கள் புலனாய்வுத்துறையூடாக புலி நாட்டுக்குள் வந்துவிட்டதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.

ருசிகண்ட பூனை சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கேற்ப, இந்திய அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் புலியைச்சாட்டி அரசியல் செய்துவந்தார்கள். மே 2009-லிருந்து புலியின் வரவே இல்லாததையறிந்து இந்தியா கவலை கொண்டுள்ளதைத்தான் புலிகளைப் பற்றிய எச்சரிக்கை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில்தான் மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கைகள் வருகிறது என்பது மட்டும் உண்மை. புலிகளைக் காரணம்காட்டி 2011-ல் இடம்பெற இருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலை சந்திப்பது உட்பட கருணாநிதியின் அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் பல ஊழல் புகார்களிலிருந்தும் எப்படியேனும் தப்பித்துவிடலாமென்று மனப்பால் குடிக்கின்றார் கலைஞர் போலும்.

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீட்டில் கலைஞர் செய்த ஊழல், தி.மு.கவின் ராசா உட்பட பல மந்திரிகள் செய்த ஊழல்களென பல நூறு ஊழல் சம்பவங்கள் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மன்னிக்கவும்...இந்தியா என்கிற இறைமையுள்ள நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்களைப்பற்றியோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளைப் பற்றியோ நாம் விமர்சிப்பது அரசியல் நாகரிகமில்லை. இருப்பினும் அவர்கள் இன்னொரு நாட்டில் வாழும் மக்களைப்பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவப்பெயரை உண்டுபண்ண விளையும்போது அவற்றை எதிர்கொள்ள நாமும் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் தப்பில்லையென்றே கருதுகிறோம்.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வெற்றி தோல்விகளில் கடந்த முப்பதாண்டுகாலமாக ஈழத்தமிழரின் போராட்டம் இடம்பிடித்திருந்தது என்பது உண்மை. ராஜீவ் படுகொலைக்கு முன்னர் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் ஈழத்தமிழ் போராளிக்குழுக்களை தமது பக்கம் வைத்துக்கொண்டு அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். புலிகளின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சார வண்டிகளில் ஏற்றப்பட்டு பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். போராளிக்குழுக்களுக்கென போட்டி போட்டு பணத்தை வசூலித்தார்கள்;. ராஜீவ் மரணத்திற்கு பின்னர் புலிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வாக்குகளை தமதாக்கும்வண்ணம் பிரதான கட்சிகள் பிரச்சாரங்களை செய்தன. இன்றும் இதே கதை தொடர்கதையாகவே இருக்கிறது.

தமிழகத்தின் மற்றக்கட்சிகள் புலிகளைப்பற்றியோ அல்லது ஈழத்தமிழர் பற்றியோ தமது கொள்கைகளை அறிவிக்குமுன்னரே, எப்படியேனும் முந்திவிட வேண்டும் என எண்ணியே கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய உளவுத்துறையின் மூலமாக புலிகள் பற்றிய புதுக்கதைகளை கட்டவிழ்த்தி விட்டிருக்கிறது. தொடர்ந்து துன்பங்களை அனுபவிப்பவனே மீண்டும் மீண்டும் வரும் சோதனைகளை சந்திப்பான் என்பதற்கிணங்க, ஈழத்தமிழரும் மென்மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க இப்படியான அறிக்கைகள் வளி அமைத்துக்கொடுக்கும்.
தமிழர்கள் ஒருபோதும் விடியலைக் காணக்கூடாது என்று கருதும் தமிழின விரோதிகளின் சூழ்ச்சி தொடர்கதையாகவே உள்ளது. தமிழர்கள் இருட்டறைக்குள் இருக்கும்வரை அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று கங்கணம்கட்டி ஆட்சி செய்யும் நயவஞ்சகர்களின் தலைமையில் தமிழ்நாடு இருப்பதுவே தமிழர்களின் சாபக்கேடு.

எதிரியுடன் கைகோர்க்கும் நாட்டுடன் தோழமை

ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.

அரசியல் மற்றும் ராஜதந்திரிகளின் கூற்றுப்படி ஏதோ இந்தியா சிறிலங்கா விடயத்தில் சில கொள்கை மாற்றங்களை செய்யும் என்று கூறினார்கள். இவர்களின் கூற்று பொய்த்துப் போய்விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது. இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவை பேணிவருகிறது.

சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவை பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது. இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாழ இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகிவிட்டதைப் போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி தமிழ்நாட்டுத் தமிழர்களை அச்சுறுத்தி அவர்களை ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்து விடாமல் வாயடைக்கச் செய்யவே இப்படியான சதி நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.

பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராட்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகிவருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியாவின் மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதன் பரம எதிரியான சீனா என்கிற மாபெரும் வல்லரசுடன் உறவைப்பேணும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து நிற்கும் இந்தியாவுக்கு, நாற்பது லட்சமுள்ள ஈழத்தமிழர்களுக்காக போராடும் புலிகள் மட்டும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக தெரிகிறதா?

உண்மையான குற்றவாளிகள் யாரென்று தெரிவதற்கு முன்னரே புலிகளின் மீது குற்றத்தைப் போட்டுவிட்டு குற்றவாளிகளை காப்பாற்றும் இந்திய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சிறிலங்காவில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் புலிகள் மீது பழியைப்போட்டுவிடுவதே தொடர்கதையாகவுள்ளது. புலி மௌனித்தாலும் இந்தியாவும் சிறிலங்காவும் விட்டுவைப்பதாற்போல் இல்லை.

மத்திய புலனாய்வுத்துறையின் பொய்ப்பிரச்சாரங்கள்

ஈழத்தில் சண்டை ஓய்ந்து சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 2010-இல் இந்தியாவின் உளவுப்பிரிவு ஒரு அறிக்கையை விட்டது. புலம்பெயர் நாடுகளில் வதியும் ஈழத்தமிழர் சிலர் இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கெதிராக செயற்படுகிறார்கள் என்றும் இப்புலம்பெயர் தமிழர்கள் இணையத்தளங்களினூடாக இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என ஒரு குண்டையே போட்டது இந்திய மத்திய புலனாய்வுத்துறை. சிறிலங்காவை எதிரி நாடாகவும், இந்தியாவை துரோக நாடாகவுமே இப்புலம்பெயர் தமிழர்கள் பார்க்கிறார்கள் என கூறியது இப்புலனாய்வுத்துறையின் அறிக்கை. விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை மேலும் இரண்டாண்டுகள் நீடிக்க தேவைப்பட்ட காரணத்திற்காகவேதான் இவ்வறிக்கையை புலனாய்வுத்துறை வெளியிட்டதென பின்னர் அறியப்பட்டது.

திடீரென இன்னுமொரு அறிக்கையை கடந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை வெளியிட்டது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் சில தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை சென்னையில் ஜனவரி 3, 2011 அன்று இடம்பெற இருக்கும் நிகழ்ச்சியில் வைத்து கொலைசெய்ய விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்காவினால் போடப்பட்ட அணுகுண்டைவிட பலமான அணுகுண்டையே போட்டது இந்திய மத்திய உளவுத்துறை. மே 2009-ல் முடிவுற்ற ஈழப்போரில் தப்பி இந்தியாவிற்குள் நுழைந்துள்ள விடுதலைப்புலி போராளிகளினால் குறிப்பிட்ட இத்தலைவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என புலனாய்வுத்துறை அறிக்கை தெரிவித்தது. இதனைச் சாட்டாக வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியும் தமிழக காவல்துறையினரை உசார்ப்படுத்தியுள்ளாராம்.

சிறிலங்காவின் கொடிய இனவெறி அரசு தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளைக் கண்டித்து மனிதநேயமுள்ள நாடுகளும் அமைப்புக்களும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள இக்காலப்பகுதியில் ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிக்க நடாத்தப்படும் நாடகமாகவேத்தான் இவ்வறிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. ஜனனாயக வழியிலான தமிழீழ மக்களின் எழுச்சியின் பலனாக ஈழப்போராட்டத்துக்கு அனைத்துலக ரீதியில் எழுந்துவரும் ஆதரவையும் தமிழ் மக்களது அரசியல் – இராஜதந்திர நகர்வுகளையும் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் மட்டுமே நாட்டங்கொண்டது என்பதைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசு பல சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பல்லாயிரம் தமிழர்கள் ஒன்றுகூடி மகிந்தா மற்றும் அவரின் 40-பேர் அடங்கிய தூதுக்குழுவையே இங்கிலாந்திலிருந்து துரத்தியடித்த சம்பவம் சிறிலங்காவின் அரச தலைவர்களை ஆத்திரமூட்டியது. இச்செயல் இந்தியாவையும் கவலையடையச் செய்துள்ளது போலும். தீய எண்ணங்கொண்ட சிங்கள அரசின் அணுகுமுறைக்குத் துணைபோகிறார்கள் இந்தியாவின் நடுவண் மற்றும் தமிழக அரசுகள்.

இன்னுமொரு பலமான குண்டையே இந்த வாரம் மத்திய புலனாய்வுத்துறை போட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் நவீன ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள் என கூறுகிறது இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கை. தாவூத் இப்ராஹிம் என்கிற கொடிய பயங்கரவாதிகள்தான் விடுதலைப்புலிகளுக்கு நான்காம் ஈழப்போரின் இறுதிக்காலம் வரையில் ஆயுத விநியோகத்தை மேற்கொண்டார்கள் எனவும் கூறுகிறது இவ்வறிக்கை. தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க்கிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன கூறுகிறது இப்புலனாய்வு அறிக்கை.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் பிடிபட்ட இப்பயங்கரவாத முக்கிய புள்ளியுனூடாக உறிதிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்புலனாய்வுத்துறை அறிக்கை கூறுகிறது. மிர்சா பெய்க்கிடமிருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. விடுதலைப்புலிகளின் வலையமைப்பு தொடர்பாக பிடிபட்ட குறித்த நபர் பல விடயங்கள் கூறியிருந்தாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறுகிறது மத்திய புலனாய்வுத்துறை.

யாரை திருப்திப்படுத்த முனைகிறது இந்தியா?

ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு உலகளவில் கிடைக்கும் ஆதரவை இந்தியா மூலமாக செய்ய முயற்சிக்கிறது சிறிலங்கா அரசு. இந்தியாவும் புலிகளைப் பற்றிய செய்திகளை பரப்புவதனூடாக, தமிழ்நாட்டில் உருவாகும் ஈழத்தமிழ் மீதான அனுதாப அலையை எப்படியேனும் நசுக்கி விடலாமென்று நினைக்கிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இப்படியான செய்தி தேவைப்பட்டதொன்றே. இவரின் கட்சிக்கெதிராக வந்துகொண்டிருக்கும் ஊழல் புகார்களை மறைப்பதற்காகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இப்படியான அறிக்கைகள் உதவுமென்று கருதுகிறார் கலைஞர்.

கலைஞரிடத்திலோ அல்லது கலைஞரின் பிள்ளைகளிடத்திலோ சில நூறு கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்தால் போதும் மத்திய மந்திரிப்பதவி பெற என்கிற பேச்சு அடிபடுகிறது தமிழகத்தில். இப்படியாக பல நூறு கோடி ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், தனது நிர்வாக சாணக்கியத்தால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்கிற நினைப்பில் இருப்பவர்தான் கலைஞர். பாவம் கலைஞருக்கு இப்போது அறளை பிறந்துவிட்டது. அதன் காரணமாகத்தானோ என்னவோ பல லட்சம் கோடி ஊழல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒரு படத்தை எடுத்து பணக்காரனானதாக சொல்லிவரும் கலைஞர், இன்று தனது குடும்பமே பல சினிமா படங்களை எடுக்கிறது. இது போதாதா கலைஞருக்கு பல லட்சம் கோடி ஊழல் புகார்களை மறைக்க? 86-வயது நிரம்பிய கலைஞரினால் சிந்தித்து செயலாற்றும் திறன் இப்போ மங்கிப்போய்விட்டது போலும்.

ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழி கலைஞருக்கு பொருந்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. புலி என்கிற ஆயுதத்தை எடுத்தால் போதும் இந்திய மக்களை ஏமாற்ற. நடந்த அனைத்துச் சம்பவங்களையும் அவர்கள் மறந்துவிடுவார்கள். இப்படியான ஆயுதத்தை பாவிப்பதனாலேயோ என்னவோ அடிமட்ட தொண்டர்களாக, பணப்பலமற்றவர்களாக இருப்பவர்கள் இன்று இந்தியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருந்தால் போதும் இந்தியா நூறு வருடம் கடந்தாலும் மக்களின் முக்கிய தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கும் பசி மற்றும் நோய் தீர்க்கப்படாமல் நீடிக்க.

இந்திய அரசியல்வாதிகளின் கணிப்பின்படி மக்களை ஓன்றும் தெரியாதவர்களாக, இருட்டறைக்குள் வைத்திருக்கும் வரையில்தான் தாம் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வெளிச்சத்தில் இருக்கும் மக்களையும் ஏமாற்றவே மௌனித்துள்ள புலியை வம்புக்கு இழுப்பது.

வெள்ளைக்காரர்களிடமிருந்து அமைதிவளியில் சுதந்திரம் பெற்ற இந்திய பெருநாடு, சிறிலங்காவில் மூன்று தசாப்தங்களாக அமைதிவழியிலும், பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய உயிர் அர்ப்பணிப்புடனும் விடுதலைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதற்காக பேரினவாத சிறிலங்கா அரசிற்கு அனைத்துவகையிலான உதவிகளையும் வழங்குவதுடன், புலம்பெயந்து வாழும் ஈழத்தமிழரையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இந்தியாவும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் இப்படியான தமிழர் விரோதப் போக்கு எந்தவகையில் நியாயமென்பதை இந்தியா ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களினால் வழங்கப்படும் ஆலோசனையை கேட்பதைத் தவிர்த்து, தமிழர்களின் உண்மையான அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தி நீதியை இந்தியா பெற்றுத்தர வேண்டுமென்பதே தமிழர்களின் அவா. அதைச் செய்யத்தவறினாலும் பரவாயில்லை ஈழத் தமிழரின் நலன்களுக்கெதிராக எந்தவொரு நாசகார வேலையையும் செய்யாமலாவது இந்தியா இருந்தால் போதும்.

சிங்களவர்களை சாந்தப்படுத்தவும், இந்திய மக்களை திசைதிருப்பி வர இருக்கும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி மென்மேலும் நாட்டை குட்டிச்சுவராக்க எண்ணும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுக்காக நாட்டையே பாதுகாக்கும் உன்னத அமைப்பான புலனாய்வுத்துறையினரால் விடப்படும் புலிக்கெதிரான அறிக்கைகள் இந்திய நாட்டுக்கே அவப்பெயரைத் தேடித்தரும். மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்திய அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து தூக்கு போட்டு மரணித்திருப்பார். விடுதலைக்காக போராடும் மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல்வாதிகளை யார்தான் திருத்துவார்களோ?

அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com

--

Monday, December 20, 2010

சீமான் நேர்காணல்

சீமானுக்கு பிரபாகரன் அறிவுரை... கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

சென்னை: முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி போன்ற தலைவர்களை தாக்கிப் பேசி வருத்தம் கொள்ள வைக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

இதுகுறித்து, ஜூனியர் விகடன் புலனாய்வு இதழில் சீமான் எழுதியிருப்பதாவது:

"கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.

''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு. அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!

''பேச்சும் ஒரு ராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், ராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். ராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே ராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்க வைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்...

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக் கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார்.

அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன் போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

கோழைகளை புலிகள் கொல்வதில்லை!

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

-இவ்வாறு சீமான் எழுதியுள்ளார்.

Read more: http://www.livingextra.com/2010/12/blog-post_4554.html#ixzz18eK77R00

Saturday, December 18, 2010

தொடர்ந்து கொலைவெறியில் நடைவண்டி கருணாநிதியும்




இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் தவிர்க்க முடியாமல் ஈழத்தமிழர்களுடன் பிணைந்த ஒன்றாகவே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எந்த லாபமில்லாவிட்டாலும் தமிழகத்து அரசியல் கட்சிகள் ஈழத்துப்பிரச்சினையை தேர்தல்களை சந்திக்கும் காலங்களில் தமது தோளில் தூக்கி வைத்துக்கொள்ளுவதுண்டு.



எப்பொழுதும் தமது உள்நாட்டுப்பிரச்சினை மற்றும் ஊழல்களை மூடிமறைப்பதற்கான வடிகாலாக ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களுக்கு பேருதவியாக இருந்துவருகிறது. சுயநலத்திற்காக ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து தாம் தான் ஈழத்தமிழர்களின் மேய்ப்பர்களென்று ஆளாளுக்கு பேரணி உண்ணாவிரதம் போன்றவற்றை போட்டிபோட்டு தம்பாட்டுக்கு நடத்தி தம்பட்டமடிப்பது தமிழகத்து அரசியலில் வாடிக்கையான வேடிக்கை ஒன்று.

ஆனால் இன்றுவரை தமிழக அரசியல்வாதிகளால் ஏற்பட்ட நன்மைகளைவிட ஈழமக்களுக்கு அழிவுகளும் அவலங்களும் உபத்திரவங்களுமே அதிகம். வாழ வழியத்து கடல்வழியாக சென்று அகதியாக தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் கூட, தமிழ்த் தலைவன் தான் என கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழ்நாட்டில் கைதிகள் போலவும், எஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுபவர்களாகவும், தீக்குளித்து உயிரைப் போக்கிக்கொள்ளுபவர்களாகவும், பெண்கள் தமிழக பொலிஸாரால் கற்பழிக்கப்படுபவர்களாகவும், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு அனுமதியற்றவர்களாகவும், சொந்தமாக ஒரு பொருளும் வாங்கி அனுபவிக்க அருகதையற்றவர்களாகவும் நாயிற்கடையராக அலைந்துதிரிகின்றனர்.

2009 ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைவன் கருணாநிதியின் முழு உடன்பாட்டுடன் வஞ்சகமாக ஈழத்தில் இன அழிப்புசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் முடிந்துவிட்டன, அங்கு யுத்தம் தொடருவதற்கான எந்த ஒரு அடையாளமும் இதுவரை காணப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமைச்சின் செயலரும் மற்றும் கருணாநிதியின் அரசியல்க்கட்சி பிரதிநிதிகளும், சினிமா நடிக நடிகைகளும், இலங்கைக்கு சென்று விருந்துண்டு மகிழ்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தி சொந்தமாக சொத்துக்கள் வாங்கி, தொழில் தொடங்கிவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

மறுபக்கம் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் தமிழ் சிங்கள கட்சியினரும் பரசுபரம் பயணங்கள் தொடருகின்றன. தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஒப்பந்தங்களும் ஏதேதோ செய்வதாக கூறப்படுகிறது. செயல்முறையில் மீள் குடியேற்ற்வாசிகளுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் ஒன்று நாட்டியது தவிர எதையும் காணமுடியவில்லை.

இந்தநிலையில் புதிய புரளி ஒன்று இந்தியாவால் கிளப்பப்பட்டிருக்கிறது. நகைப்புக்கிடமான இந்தப்புரளி சுயநலன் சார்ந்து இந்தியாவால் புலிகளின் மீது வலிந்து சுமத்தப்படுவது புலிகள் இயக்கமும் ஈழத்தமிழரும் கணக்கில் கொள்ளாவிட்டாலும், சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்தப்பிரச்சாரம் தோற்றுவிக்கக்கூடும் என்ற கவலையும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் அந்நாட்டு அரசியல்வாதிகளும் தமது அரசியலின் குறை நிவர்த்தி செய்வதற்காகவும், மாபெரும் ஊழல்க்குற்றச்சாட்டுக்களை கழுவுவதற்காகவும் தேவையற்ற ஒரு பொய்யை மீண்டும் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் வலிந்து சுமத்தியிருக்கின்றனர்.

இன்னும் ஒருசிலவருடங்களில் இயற்கையெய்திவிடக்கூடிய வயதிலிருக்கும், கடும் முதியவர்களான பிரதமர் மன்மோகன்சிங், ,மற்றும் எழுந்து நிற்கமுடியாத சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும் கருணாநிதி, உட்பட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டமொன்று விடுதலைப் புலிகளால் வகுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின், புலிகளில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, இந்தியப் புலனாய்வுத்துறை புதிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்தச்செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

"ஈழத்தமிழர்களின் உச்ச வெறுப்புக்குள்ளானவர்கள் இந்த நான்குபேரும் என்பது ஈழத்தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த பால்குடிக்கும் குழந்தைக்கும் தெரியும்". ஆனால் இன்று போராட்டம் தற்காலிகமாக ஈழத்தில்வாழும் தமிழ் மகனின்கையில் இல்லை .புலம்பெயர் தேசங்களில்த்தான் சட்டத்துக்குட்பட்ட வகையில் நீதிகேட்டு இனப்படுகொலைக் குற்றவாளிகளை இனங்காட்டும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அத்துடன் எவரையும் கொலைசெய்யும் தேவை புலிகளுக்கிருப்பதாகவும் நம்பமுடியாது.

இந்தியா என்ற நாடு அறிந்திருக்காத மனுதர்மத்துடன் ஜனநாயக வழியில் சர்வதேச அரங்குக்கு போராட்டத்தை கொண்டுசென்று புலம்பெயர் தமிழர்கள் நியாயம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த எழுச்சி இந்தியாவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கலாம். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, கருணாநிதி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் படியும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக பொலிஸ் டி.ஜி.பி லத்திகா சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லத்திகா சரண் சர்ச்சைக்குரிய ஒரு பொலிஸ் அதிகாரி. அவர் டிஜிபி யாக பதவி வகிக்க தகுதியில்லாதவரென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தகுதியானவர் பதவியில் அமரும்வரை லத்திகாவை தற்காலிகமாக தொடரும்படி பணித்திருக்கிறது. கருணாநிதி தனது வசதிக்காக லத்திகாவை விட சிரேஸ்ட்ட அதிகாரியை இருட்டடிப்புச்செய்து தனது சுயலாபம் கருதி லத்திகாவை பணியில் அமர்த்தியிருக்கிறார். நன்றிக்கடனைத்தீர்க்க லத்திகா எதுவேண்டுமானாலும் செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

2011 ஆண்டு மே தமிழ் நாட்டுக்கான சட்டசபைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்தநேரத்தில் தொலைதொடர்புத்துறை 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல் பூதாகரமாக 176,000,00,00,000, லட்சம் கோடி குற்றச்சாட்டு திமுக மீதும். கூட்டாளி காங்கிரஸின் மீதும் வீழ்ந்திருக்கிறது. இச்செய்தி உலகப்பிரசித்தி பெற்றதென்பதால் அதுபற்றி விபரிக்கத்தேவையில்லை. ஆனாலும் முதல்க்குற்றவாளிகள் (திருடர்கள்) 1, ஆண்டிமுத்து ராசா.திமுக மத்திய மந்திரி தொலைத்தொடர்புத்துறை, 2, கருணாநிதியின் மூன்றாம் தாரத்து மனைவி ராசாத்தியம்மாளின் மகள் கனிமொழி. 3, திமுக ஆதரவு புலனாய்வுப்பத்திரிகை நக்கீரனின் இணை ஆசிரியர் அ. காமராஜ். 4, சென்னையில் கனிமொழியுடன் இணைந்து தொண்டு அமைப்பு என்கிறபேரில் தமிழ் மையம், என்கிற அமைப்பை நடத்திவரும் முன்னாள் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றி புலிகள் இயக்கத்தையும் தேசியத்தலைவரையும் ஏமாற்றிய போலிப்பாதிரி ஜெகத் கஸ்பர்ராஜ், இன்னும் நிறைய கருணாநிதியின் பினாமிகள் மாட்டியிருக்கின்றனர். இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் ஏதாவது பலமான திசைதிருப்பல் திமுக, காங்கிரஸுக்கு உடனடித்தேவை.

அதற்கு பலியிட்டிருக்கும் ஒரு வீண் பழிதான், மேற்சொன்ன முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளால் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையை உலகமும் இந்தியாவிலுள்ள மக்களும் நம்புகிறார்களோ இல்லையோ அரசியல் மட்டத்தில் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஸ்பெக்ரம் பிரச்சினையை திசைதிருப்பி காலதாமதப்படுத்தி வரப்போகும் தேர்தலுக்கு பங்கமில்லாமல் தப்பிக்கவேண்டும் என்பது கருணாநிதி மற்றும் காங்கிரசின் நோக்கமாகும்.

ஸ்பெக்ரம் ஊழலின்பின் காங்கிரஸுக்கு திமுக மீது அதிக கோபமும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. ஆனால் அவற்றை வெளிக்காட்டமுடியாத சங்கடமும் காங்கிரஸுக்கு உண்டு. பிரதமரின் மந்தமான நடைமுறைதான் ஊழலுக்கு வித்திட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றன. ஊழலில் அதிக இலாபம் பெற்றவர்கள் திமுகவினர் என்பதும் உண்மை. ஆனால் அவைகளை முன்னிறுத்தி ஊழலை ஒப்புக்கொண்டுவிட முடியாத சிக்கல் காங்கிரசுக்கு உண்டு, ஊழல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் அபாயம் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஏற்படுத்தப்பட்ட பூச்சாண்டிதான் மேற்சொன்ன படுகொலை என்கிற கட்டுக்கதைத்திட்டம்.

இரண்டாவது:, ஈழத்தின் போர்க்குற்றங்களை பிரித்தானிய சனல் 4, கொல்லப்பட்டவர்களை இனங்கண்டு ஒளிப்படங்களாகவும் வீடியோவாகவும் சர்வதேச அரங்கத்திற்கும் அம்பலப்படுத்திவிட்டது. ராஜபக்க்ஷ உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்படுகிறாரோ இல்லையோ சில இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாக அறியப்பட்டுவிட்டனர். போர்க்குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை விசாரணைக்குட்படுத்தும் பட்சத்தில் ஈழப்படுகொலையில் இந்தியா எந்த அளவுக்கு ஈடுபட்டது என்ற உண்மை வெளிவருவதற்கு நிறைய சந்தற்பங்களுண்டு.

பிற ஆதாரங்களாக விக்கிலீக்ஸ்ஸின் ஆவணங்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் சவுக்கு இணையத்தளம் மற்றும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ், அவர்கள் வெளியிட்டதாகக்கூறப்படும் சந்தேகம். மலேசிய பினாங்க் துணை முதல்வர் பி ராமசாமி அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் ஐநாவுக்கும் அனுப்பிய போர்க்குற்றச்சாட்டு. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய அரசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக பல சங்கடங்களை தோற்றுவிக்கும்,

இதை அறிந்த இந்தியத்தரப்பு, புலிகள் தமக்கு எப்போதும் எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர், இப்போதும் இந்தியத் தலைவர்களை குறி வைத்து கொலைசெய்யும் சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் அதனால்த்தான் இறுதி யுத்தத்தின் போதும் நாங்கள் சிங்கள அரசுடன் இணைந்து எம்மை காப்பதற்காக புலிகளை கட்டுப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு உதவினோம், என்று தப்பிப்பதற்கான முற்கூட்டிய தயாரிப்புத்தான் புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் புலிகளின் படுகொலை திட்டம் என்கிற கதை. இதனுடன் 1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், புலிகள் பற்றிய புலனாய்வில் தாம் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் தற்போதய இரகசியம் தமக்கு உடனடியாக கிடைக்கப்பெற்றதாக பரப்புகின்றனர்.

சமீபத்தில் இந்திய அரசின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இரண்டு ஆண்டுகள் நீ‌ட்டித்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசு பிறப்பித்த அந்த உத்தரவை உறுதி செய்வதற்காக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின் போது, இலங்கையில் இருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஒன்றிணைய முயன்று வருகிறார்கள். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாகும்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டது.

அங்கு கூறப்பட்ட நியாயம் நீதிபதியை திருப்திப்படுத்தவில்லை. அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று அவர் கேள்வியெழுப்பினார். இது உளவுத் தகவல் என்று அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, இப்படி யார் வேண்டுமானாலும் கூறலாம், என்று தனது சந்தேகத்தை எழுப்பினார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக இப்படியொரு கட்டுக்கதை புனையப்பட்டிருக்கிறது என்றே நம்பலாம்.

தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார், அது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதை குழப்புவதற்கான சூழ்ச்சியாகவும் இந்த திட்டம் அரசு உதவியுடன் புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முதலில் பயங்கரவாத இயக்கம் என்றது இந்திய அரசு. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த பிறகு, சட்டத்திற்குப் புறம்பான இயக்கம் என்று கூறியே தொடர்ந்து தடையை நீ‌டித்து வருகிறது. அதற்கான காரணம் எதுவும் கிடைக்காத நிலையில்தான், இப்படி ‘தமிழ்நாட்டில் ஒன்றிணைகிறார்கள்’, ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’, ‘தலைவர்களின் உயிருக்கு ஆபத்து’ என்றெல்லாம் தொடர்ந்து கதைகட்டுகின்றனர். இது இன்னுமொருவகையில் சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டு தமிழர்களை இல்லாமல் அழிக்கும் திட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம். இந்தியா தொடர்ந்து இப்படியான கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதற்கு கருணாநிதியின் கொள்கைவகுப்பே காரணமாகித் தொடர்கின்றது.

எவ்வளவு தமிழர்களை கடலில் வைத்து சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றாலும் காங்கிரஸை எதிர்த்து பதவியை பறிகொடுக்க விரும்பாத கருணாநிதி புலிகளை காரணங்காட்டி ராஜபக்க்ஷவை நியாயப்படுத்தும் எச்செயலையும் செய்யத்தயங்கமாட்டார் என்பது பல இடங்களில் உறுதியாகியிருக்கிறது.

கருணாநிதியை எதிர்க்கும் பெரும் சக்தியாக தமிழக மீனவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பு உரக்க குரல்கொடுத்து வளர்ந்துவருவதும் கருணாநிதிக்கு வயிற்றை கலக்கும் செயல்ப்பாடாகியிருக்கிறது. புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்கப்பட்டுவிட்டால் சீமானின் புலிகளின் ஆதரவு கொள்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவிடும், என்பதால் கருணாநிதி சாகும்வரை புலி உருவத்திலான பொம்மைக்குக்கூட இந்தியாவில் தடைநீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக புலிப்பூச்சாண்டி கருணாநிதியைப் பொறுத்தவரை தொடர்ந்து உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

ஆரம்பத்தில் சீமானின் பிரவேசம் இவ்வளவு பூதாகரமாக தன்னை எதிர்க்குமென கருணாநிதி நம்பவில்லை சீமானின் ஈழ ஆதரவுக்கொள்கை கருணாநிதிக்கு பயத்தை அதிகரித்து அடுத்தடுத்து சீமானை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் தூக்கி உள்ளேபோட்டார். ஆனால் உயர்நீதிமன்றமே அது செல்லாது என்றுகூறி சீமானை விடுவித்திருக்கிறது. கருணாநிதியின் இப்பேற்பட்ட கீழ்த்தரமான அடக்குமுறைகள் மக்களை இன்னும் சீமான் தலைமையில் அணிதிரள வைத்திருப்பதும் கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்யவேண்டிய கட்டாயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டால் வைகோ நெடுமாறன் போன்றோருடன் பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் சீமான் தலைமையில் தமிழ்நாட்டை பறிகொடுக்கவேண்டுமென்ற பயம் அவரை ஒரு நடைவண்டி ஹிட்லராக மாற்றியிருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,,
கனகதரன்

Friday, December 17, 2010

இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்! - பழ. நெடுமாறன்



தமிழ்நாட்டில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத் திலும் அறியாமையிலும் இந்தியா உலகத் தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வரு மானம் பெறுகின்றன. சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைக ளாகும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத் தைப் பெருக்குவதற்கான வழிவகை களை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெய ரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச் சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டி ருக்கிறது.

இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங் களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? - என் பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.

கல்வி

காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. நல்ல குடிமக்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. அரசு நடத்தும் பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படா மல் உள்ளன. அரசு நடத்தும் 69 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் 42 கல்லூரிகளில் முதல்வர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

பிறமாநிலங்களில் மெட்ரிக் குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.

400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்ட மைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.

புற்றீசல் போல தனியார் பள்ளி களும், பொறியியல் மற்றும் கல்லூரி களும் பெருகக் காரணம் என்ன? குறிப் பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப் பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகள், கல்லூரி கள் ஆகியவற்றிலும் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், மாணவர் களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்

1972ஆம் ஆண்டில் மின்கட்ட ணத்தில் யூனிட்டுக்கு அரை பைசா குறைக்கும்படி போராடிய விவசாயிகளின் மீது கடும் அடக்குமுறையை கருணாநிதி அரசு ஏவிவிட்டது. 21 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு கருணாநிதி மீண்டும் பதவிக்கு 1990ஆம் ஆண்டில் வந்தார். வந்தவுடன் விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற் காக அவர்களே கேட்காத சலுகையை அளித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட் பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின் திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டு களுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது தான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப் படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித் துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.

மின்மோட்டார்களை வாங்குவதற் காக அரசு அறிவித்துள்ள டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பம்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பகுதிவாரியாகப் பிரித்து 500 பம்புசெட்டு கள் வீதம் டெண்டர் விடவேண்டும். இதன் மூலம் பல உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டு மென்று உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.

இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப் பட்டதில் பெறப்பட்ட கமிசன் எவ்வளவு?

சுமார் 2500 ரூபாய் பெறுமான தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொடுத்தால் பெறுபவர்களுக்கு பய னில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பிய வற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத் தைச் செயல்படவிடாமல் முடக்கி விட்டார்கள்.

ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாக வேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங் களுக்கு போகிறது. மக்கள் வரிப் பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவச மாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைவது முதலமைச்சரின் குடும்ப மாகும். இதைவிடப் பன்படங்கு அதிக மான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது.

இலவச கேஸ் அடுப்பு

11 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 220 கோடி ரூபாய் செல வில் இலவசக் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதற்குரிய கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் ஏற்கனவே உள்ள பயனாளிகளும் இதனால் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். திட்டமிடுவதைச் சரியாகச் செய்யாததால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.

இலவச மருத்துவக் காப்பீடு

தமிழக அரசின் இந்தத் திட்டத் திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்து வமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி களோடு இணைந்த பெரிய மருத்துவ மனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன் படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் கள். இந்த தனியார் மருத்துவமனை களுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண் டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளி

லிருந்து அது கிடைக்காது.

கடந்த ஆண்டு 1.53 இலட்சம் பேர் இந்த இலவச மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் விளைவாக பயன் பெற்றிருக்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்குச் சிகிச்சை தர எல்லாவிதமான வசதிகள் இருந்தும். அவைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கையாளும் முறையில் திருப்தியில்லை என மக்களும் கருதுகிறார்கள்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப் பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதி யம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட் டத்தின் நோக்கமாகும். ஆனால் விவ சாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழை களுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக் கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறை யாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் என்ற பெயரில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு விளை நிலங்கள் எடுக்கப் படுகின்றன. 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மண்டலத்தில் தொடங்கப்படும் தொழில் களுக்கு இறக்குமதி ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியி லிருந்து விலக்கு, விற்பனைவரியிலிருந்து விலக்கு, ஈட்டும் லாபத்தின் மீது 15 ஆண்டுகளுக்கு வரிகிடையாது என்பது போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படு கின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் இந்த சிறப்புப் பொருளாதார நிறுவனங்களை அமைத்து அதில் உள்ள இடங்களைத் தொழில் நிறுவனங் களுக்கு விற்கலாம்; குத்தகைக்குக் கொடுக்கலாம், அதுமட்டுமல்ல, இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட சிறு நகரங்களை அமைத்துக்கொள்ளலாம்.

விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அரசினால் பறித்தெடுக்கப் படுகிற விளைநிலங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. பிற்காலத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விற்பனைசெய்யலாம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தனியாரைக் கொழுக்கச் செய்வதற்காக விவசாயி களை வயிற்றில் அடிக்கும் வேலையை அரசு செய்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனுமதிப்பிற்கான பரிசீலனையில் உள்ளன. இவ்வளவு மண்டலங்களுக்கும் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த ஆரம் பித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். உணவு உற்பத்தி குறையும், விவசாயிகள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் படுவார்கள்.

தமிழகத்தில் விவசாயம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 1994-1995ஆம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராக விளைநிலங்களின் பரப்பளவு தமிழகத் தில் இருந்தது. ஆனால் 10 ஆண்டு களில் அதாவது 2005-2006இல் 50.6 இலட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 7 இலட்சம் ஹெக்டேர் அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள விளை நிலம் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி போன்ற மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத் தால் அந்த மாவட்டங்களும் மக்களும் வளர்ச்சியடைவார்கள். அந்த மாவட்டங் களில் பெரும்பாலும் தரிசு நிலங்கள்தான் அதிகம். ஆனால் தொழிலதிபர்கள் அங்கு தொழில்நடத்த விரும்பவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பு கிறார்கள். அதற்குத் தமிழக அரசு ஒத்துழைக்கிறது.

எடுத்துக்காட்டாக கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் 8 அனல் மின்நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதற் காக இந்தப் பகுதியில் கடற்கரை யோரத்தில் பல்லாயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்களின் தேவைக்கு அதிக மாக பன்மடங்கு நிலங்கள் விவசாயி களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்கள் அமைக்கப் பட்டதுபோக மீதமுள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

மது மயக்கம்

1967ஆம் ஆண்டுக்கு முன் முழு மையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி யில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போனார்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாழும் பதின்வயது மாண வர்களில் 3ல் ஒரு பங்கினர். பள்ளிப் பருவத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தி னர் மதுகுடிப்பதாகவும் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாணவரும் மதுகுடிப்பதற்காக ஆண்டுக்கு 3,500

லிருந்து 4,500 வரை செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கள் கணவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மையங் களுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வருகிற கொடுமையும் நடைபெறுகிறது.

கிராமப்பகுதிகளிலும் மதுக்கலாச் சாரம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியுடன் சேர்த்து குவார்ட்டர் கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளில் உருவாகி யுள்ளது. தமிழக அரசு திறந்துள்ள 6000க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடை களின் மூலம் ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மது உற்பத்திச் சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 36,000 கோடி

லிட்டர் மது உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் மது விற்பனை ரூ.90 கோடி யாகவும், அந்த வாரத்தில் ரூபாய் 400 கோடி விற்பனையானதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசுக்கு மது விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசின் மொத்த வருவாயில் இது 25சதவீதம் ஆகவும் இருக்கலாம். இந்தப் பணம் யாரிடமிருந்து கிடைக்கிறது? மக்களின் மடியிலிருந்து இந்தப் பணம் திருடப்படுகிறது. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை குடிப்ப தற்காகச் செலவழிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங் கள் பட்டினியாலும் வறுமையாலும் வாடுகின்றன. இன்னும் பலவகைகளிலும் குடிப்பழக்கம் சமூகத்தைச் சீரழிக்கிறது. ஏராளமான தற்கொலைகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. எய்ட்ஸ் நோய், காசநோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் நிறையத் தொடர்புண்டு, சாலை விபத்து சாவுகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடும்ப சச்சரவுகளுக்கும் சிலவேளைகளில் கொலைகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடிப்பழக்கத் தால் வேலை இழப்பு, உற்பத்திப் பாதிப்பு, உயிரிழப்பு, பொருள் இழப்பு மூலம் ஏற்படும் நட்டம் அதிகம். மொத்தத்தில் சமூக அமைதியை மது கெடுக்கிறது.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் இலவசங்களை தமிழக அரசு வாரித் தருகிறது. ஆனால் அதே வேளையில் மக்கள் மடியிலிருக் கிற பணத்தை அரசு சூறையாடுகிறது என்பதுதான் உண்மையாகும்.

சுமங்கலித் திட்டம்

திருமணமாகாத இளம் பெண் களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப் பட்ட திட்டம்தான் சுமங்கலித் திட்ட மாகும். தொழிற்சாலைகளில் 3 ஆண்டு கள் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும். முடிவில் இவர் களுக்கு ஒரு பெருந்தொகை அளிக்கப் படும். இவர்களின் திருமணத்திற்கு அது உதவும் எனக் கவர்ச்சிகரமான திட்டமாக இது வர்ணிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறை என்ன? கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது ரூ.20 ஊதியமாகத் தரப்படும். சாப்பாடு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ.10 கழித்துக்கொள்ளப்படும். 3 வருடங்களில் 1 நாள் விடுமுறை எடுத்தால்கூட இவர் கள் கூடுதலாக ஒரு மாதம் உழைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 3ஆம் ஆண்டின் முடிவில் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிற கொடுமையும் நடைபெறுகிறது. தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் துன் பங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் குறித்து புகார் செய்தாலும் அவர்கள் வேலைபறிபோகும். எனவே கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை.

வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

2002ஆம் ஆண்டு முதல் தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களி னால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயி களுக்கு நட்டஈடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு அளிக்கிறது.

ஆனால் நடைமுறையில் இத்திட் டத்தினால் பயன்பெறும் விவசாயிகள் மிகமிகக் குறைவாகும். இத்திட்டம் வட் டம், குறுவட்டம் அளவில் செயல்படுத் தப்படுகிறது. ஒரு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கை உற்பாதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அந்த வட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் பாதிப்பில்லை என்று சொன்னால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது. எனவே வட்டம், குறுவட்டம் என்ற அளவில் இத்திட்டம் செயற்படுத்தப் படுவதற்குப் பதில் கிராம அளவில் செயற்படுத்தப்பட்டால் ஒழிய இத்திட் டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிபெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?

பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ கத்தில் பல தொழில்களைத் தொடங்கி நமது வளங்களையும் நமது தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி யைத் தமிழகத்தின் வளர்ச்சியாக ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டுவது - மக்களை மேலும் மேலும் வறியவர்களாக ஆக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இலவசத் திட்டங்களின் விளை வாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்தி ருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக இலவசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது அரசு. இதனால் மக்களில் ஒருபகுதியினர் பயன்பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அரசின் நிதிநிலைமை சீர்கேடடைந் திருக்கிறது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.1,00,876 கோடி யாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

தொலைநோக்குத் திட்டங் களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப் படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாக வும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளி விடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய் கிற வகையில் திட்டங்கள் தீட்டப் படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறை வேற்றினால் அவர்கள் சுய சார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச் சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்ச மும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாகத் தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங் களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர் களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.

இலவசம் என்ற பெயரில் வகுக் கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்ற பொருட்களை உற் பத்தி செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றன. எடுத் துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புபவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.

ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி 8-12-10