Monday, December 29, 2008

புத்தாண்டு -2009


புல‌ர்ந்து கிட‌க்கிற‌து
புத்தாண்டு ஒரு ப‌க்க‌த்தில்
இற‌ந்து போய்க்கிட‌க்கிற‌து
ச‌ந்தோச‌ம் இத‌ய‌த்தில்...
இரண்டாயிர‌த்து எட்டின்
சிற‌கை உடைத்து
இரண்டாயிர‌த்து ஒன்ப‌தின்
சிற‌கைக் க‌ட்டி
ப‌ற‌க்க‌ வ‌ந்து இருக்கும்
ஆண்டு புத்த‌க‌மே...
நீ எழுத‌ப் போவ‌து
எந்த‌ அத்தியாய‌ங்க‌ளோ?
வ‌றுமையும் போருமே
உன் க‌ருவானால்
தெருவெங்கும் வீசும்
பிண‌வாடைக‌ள் தான்
உன‌க்கும் சுவாசிக்க‌ கிடைக்கும்...
ஓயாத‌ யுத்த‌ம் , காயாத‌ இர‌த்த‌ம்
த‌மிழ் ஈழ‌த்தில்
இவைக‌ளை
ஒழிக்க‌ச் சொல்லி
க‌ட‌ந்த‌ புத்தாண்டுக‌ளில்
என் ஆத்மாக்க‌ள்
அலுத்துவிட்ட‌ன‌...
வ‌றுமை நீங்கி
ஜாதி,ம‌த‌ங்க‌ள் ஒழிந்தும்
வெடிக்கும் போர் ஓய்ந்து
என்றைக்கு அமைதியாகுமோ
அன்றைக்குப் பின் வ‌ரும்
புத்தாண்டுக‌ளே
ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ஆண்டுக‌ள்
அதுவ‌ரை
புத்தாண்டெல்லாம்
புத்தெழுச்சியில்லா
ஆண்டுக‌ள்தான்...
- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

ந‌ன்றி : அதிகாலை.கொம்

Friday, December 26, 2008

ஈழ‌ப்பிர‌ச்ச‌னையில் சில‌ ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ச்சை துரோக‌ம்

இவ்வுல‌க‌த்தில் பேனாமுனைக்கு உள்ள‌ வ‌லிமை வேறெதுவுக்குமில்லை.அவ்வ‌லிமையினால் சாதித்த‌வ‌ர்க‌ள், சாதித்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌பேர். இச்சூழ்நிலையில் ப‌ண‌த்துக்காக‌ எழுதுவ‌தும்,ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தும் ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ளுக்கும் ப‌த்திரிக்கைக‌ளுக்கும் த‌லைகுனிவையே ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

சென்னை அம்பேத்கர் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தில் த‌டுக்க‌ தைரிய‌மில்லாத‌ நீங்க‌ள் உயிரை காப்பாற்றிக்கொள்ள‌ த‌ட்டு தடுமாறிக்கொண்டு போகும் ஒருவ‌ரை போட்டி போட்டுக்கொண்டு புகைப்ப‌ட‌ம் எடுத்து த‌லையங்க‌த்தில் நேற்று ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தை நேரில் க‌ண்ட‌ ந‌ம‌து நிருப‌ரின் பேட்டி என‌ ப‌ல‌ கோண‌ங்க‌ளில் புகைப்ப‌டத்துட‌ன் போட்டு, இந்தியாவில் அமைதி பூங்காவாய் இருக்கும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை பீதிக்குள்ளாக்கினீர்க‌ள். இச்சூழ்நிலையில் தொப்புள்கொடி உற‌வுள்ள‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையில் த‌மிழ்நாட்டிலுள்ள‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் கொதித்தெழுந்து ப‌ல‌ முனை போர‌ட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர்.உங்க‌ளுக்கு நாங்க‌ள் துணையாக‌ இருப்போம் என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர்.நாளையும் ந‌ட‌க்கும்.த‌மிழீழ‌ம் கிடைக்கும் வ‌ரை ந‌ட‌ந்து கொண்டேயிருக்கும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்தில்லை. நாங்க‌ள் த‌டாவையும் பொடாவையும் க‌ண்டு பய‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ள்.இற‌ப்ப‌து ஒருமுறைதான் எப்ப‌டி இற‌ந்தோம் என்ப‌தை விட‌ எத‌ற்காக‌ இற‌ந்தோம் என்ப‌தை இந்நாடே நாளைய‌ வ‌ர‌லாற்றில் சொல்லும‌ள‌வுக்கு போராட்ட‌ம் தீவிர‌ம‌டைந்துள்ள‌து. இன‌த்துக்கு துரோக‌ம் செய்யும் சில‌ பேரின் த‌மிழீழ போராட்ட‌துக்கு எதிரான‌ பேட்டியை ம‌ட்டும் கொட்டை எழுத்தில் போட்டு அவ‌ருட‌ன் சேர்ந்து நீங்க‌ளும் கொக்க‌றிப்ப‌தை நிறுத்தி கொள்ளுங்க‌ள்.

இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து த‌மிழின‌ மீட்பு போராட்ட‌ம் அங்கே சிர‌ம‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்காக‌ உயிரையும் துச்ச‌மென‌ நினைத்து போராடிக்கொண்டிருக்கும் விடுத‌லைபுலிக‌ளுக்கு ஆத‌ரவாக‌ எழுத‌ சொல்லவில்லை.அங்கே ந‌ட‌க்கின்ற‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தெரிந்தால் எழுதுங்க‌ள் இல்ல‌விட்டால் அதை ப‌ற்றி எழுதாமல் விட்டுவிடுங்க‌ள். ஒன்று ம‌ட்டும் ந‌ன்றாக‌ புரிந்து கொள்ளுங்க‌ள் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌ப்போரில் வீர‌ம‌ர‌ண‌ம‌டையும் புலிவீர‌ர்க‌ளின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட‌வில்லை.அம்ம‌ண்ணில் விதைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். ஒரு விதை விதைக்க‌ப்ப‌ட்டால் நாளை அது ப‌ல‌ம‌ர‌ங்க‌ளை உருவாக்குகின்ற‌ பாட‌ம் ப‌டித்திருப்பீர்க‌ள். ஒரு நாட்டு இராணுவ‌த்தையே த‌லைகுனிய‌ வைத்த‌ வீர‌த்தியாகிக‌ள் அவ‌ர்க‌ள்.இழ‌ப்ப‌த‌ற்கு இனி இவ‌ர்க‌ளிட‌ம் ஒன்றும் இல்லை என்று ஆன‌பின்புதான் அவ‌ர்க‌ள் ஆயுத‌மேந்தி போராடுகிறார்க‌ள்.இவ‌ர்க‌ள் கேட்ப‌து எல்லாம் சுத‌ந்திர‌மாய் த‌மிழ‌ன் த‌மிழ‌னாய் த‌லைநிமிர்ந்து வாழ‌வேண்டும் என்ப‌துதான்.

30ஆண்டுக‌ளில் பல‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தேறின‌ அவ‌ர்க‌ள் இழ‌ந்த‌து ஏராள‌ம்.த‌மிழீழ‌ம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றது. சில‌ குள்ள‌ந‌ரிக‌ளின் சுய‌ந‌ல‌ பேச்சை கேட்டு ஒன்றை பத்தாய் திரித்து எழுதி ஈழ‌ மக்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளை சிறையில் அடைத்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டிருந்த‌ வேளையில் அவ‌ர்க‌ள் விடுத‌லையாகி வெளியே வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளை வர‌வேற்க‌ திர‌ண்டிருந்த‌ கூட்ட‌த்தின‌ரை க‌ண்டு கூனிக் குறுகிப்போனீர்க‌ள் என்ப‌துதான் உண்மை.இவ‌ர்க‌ளை ஆத‌ரித்து எழுத‌ முடியாவிட்டாலும் இந்நிக‌ழ்வினை அணைக்க‌ முய‌ல‌வேண்டாம்.

பிற்கால‌த்தில் இதுக்கெல்லாம் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ கால‌ம் வெகுதூர‌த்திலில்லை. ந‌டிகை ஒருத்திக்கு நான்குநாள் காய்ச்ச‌ல் நாடே ச‌ல‌ச‌ல‌க்கிற‌து என்று எழுதும் நீங்க‌ள் எத்த‌னை முதியோர்க‌ள் இங்கேயும் ஈழ‌த்திலும் உண்ண‌ உண‌வுமின்றி உடுக்க‌ உடையுமின்றி காடு ம‌லைக‌ளில் கொட்டும் ப‌னியிலிலும் கொளுத்தும் வெயிலிலும் இருக்க‌ இட‌மில்லாது வாழ்கின்றார்க‌ள் என்பதை நீங்க‌ள் அறிய‌வில்லையா? ந‌டிகைக‌ளின் அங்க‌ங்க‌ளை ப‌ற்றியே எழுதிக்கொண்டிருக்கும் உங்க‌ளுக்கு வீர‌போராட்ட‌தின் விலைம‌திப்பு எங்கே தெரியப்போகிற‌து.

ப‌ட்டினிப்போரில் பாழும் ஈழ‌த்தில் பாலில்லாம‌ல் ப‌ரித‌விக்கும் குழ‌ந்தைக‌ள் இருக்கையில் ப‌ல‌ ஆயிர‌ம் லிட்ட‌ரில் க‌ட‌வுளுக்கு பாலபிசேக‌ம் செய்து பாலையும் வீண‌டித்த‌தை எழுதும் உங்க‌ளை என்ன‌ சொல்வ‌து? இத‌னால் யாருக்கு என்ன‌ ப‌ய‌ன் என்று உங்க‌ளால் சொல்ல‌ முடியுமா? ப‌ள்ளிக்கு செல்ல‌வேண்டிய‌ ப‌ச்சிள‌ங்குழ‌ந்தைக‌ள் ப‌துங்கு குழிக்குள் அடைப்ப‌ட்டு கிட‌க்கின்ற‌ன‌ர்.அங்கு ந‌ம் தமிழ‌ர்க‌ள் வாழ்க்கையே போராட்ட‌மாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.அவ‌ர்க‌ள் சாக‌ப்பிற‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை த‌மிழீழ‌த்தை ஆள‌ப்பிற‌ந்த‌வர்க‌ள். நாளை ம‌ல‌ர‌போகும் த‌னி ஈழ‌த்தின் ச‌ரித்திர‌த்தையும் ச‌ரித்திர‌ நாய‌ர்க‌ளை ப‌ற்றியும் நீங்க‌ள் எழுதும் கால‌ம் வெகுவிரைவில் இல்லை.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எதையும் செய்ய‌ துணிந்த சில‌ இய‌க்க‌ங்க‌ள் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்றும், த‌னி ஈழ‌ம் கிடைக்கும் வ‌ரை அவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடுவோமென்று போராடிகொண்டிருப்ப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி வாழ்த்தி எழுத‌ ம‌ன‌மில்லை என்றாலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி அவ‌தூர‌க‌ எழுதுவ‌தை நிறுத்துங்க‌ள். எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு த‌மிழ்நாடே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ கொதித்தெழுந்திருப்ப‌தை ச‌கிக்க‌ முடியாவிட்டால் இந்த‌ தொழிலை விட்டுவிட்டு வேறு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கும் தொழில் எத்த‌னையோ இருக்கு அதையாவ‌து செய்யுங்க‌ள்.

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்.

Monday, December 15, 2008

க‌ரும்புலிக‌ள்




க‌ரும்புலிக‌ள்

பெற்ற‌ தாய் நாட்டையும்

பேசும் த‌மிழ் மொழியையும்

ப‌ற்றுட‌ன் ம‌தித்து

ம‌ன‌தில் உறுதியும்

கொள்கையும் கொண்டு

க‌ட‌ற்புலியாக‌வும்

க‌ள‌ப்புலியாக‌வும்

சாத‌னை ப‌டைக்கும்

க‌ரும்புலி வீர‌ரே

உமை நாம் வ‌ண‌ங்குகிறோம்...

நேர‌ம் குறித்து வைத்து

சாவைத் தோள் மீது தாங்கி

ப‌ட்ட‌ப் ப‌க‌லிலும் கார் இருளிலும்

எதிரியை சித‌ற‌டித்து

வெந்து உட‌ல் க‌ருகி

வெற்றிக‌ளை ஈட்டித‌ரும்

வேங்கைய‌ல்லவா நீங்க‌ள்...

ம‌ண் மீது ப‌டை எடுத்த‌

மாற்றானின் முக‌ம் க‌ண்டு

ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு

நெஞ்ச‌ம‌தில் வீர‌த்துட‌ன்

மெய்த‌னிலே வெடி குண்டைச் சும‌ந்து

வெடித்து சித‌றிய‌ வேங்கைக‌ள் நீங்க‌ள்...

வேத‌னைக் க‌ட‌லில் மூழ்கிய் போதும்

சோத‌னை புய‌லில் சிக்கிய‌ போதும்

சாத‌னை புரிந்த‌ ச‌ரித்திர‌

நாய‌கர்க‌ள் நீங்க‌ள்...
விடுதலைவீரபத்திரன்
துபாய்

Thursday, December 11, 2008

பிரிவு




என்னையே சொல்லி

அழுது கொண்டிருப்பாய் அம்மா

கையாலாகாத‌ ம‌க‌ன் க‌விதை

எழுதிக்கொண்டிருக்கிறேன்

க‌ண்காணாத‌ தூர‌த்தில்...

முட்டிப்போன‌ என் வ‌யிற்றை

தொட்டுப்பார்க்கிறேன் அம்மா

ஒட்டி உல‌ர்ந்து போன‌

உன் வ‌யிறு ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து...

வெள்ளைக்காரில்

வ‌ழுக்கிச்செல்லும் போதெல்லாம் அம்மா

வெறும் காலுட‌ன்

நீ ந‌ட‌ந்த‌ தூர‌ம்

நினைவுக்கு வ‌ரும்...

விழிக‌ளுக்கும் உத‌டுக‌ளுக்கும்

இனி வேலையில்லை அம்மா

காகித‌ங்க‌ளே க‌வ‌லை சும‌க்கும்

க‌ண்ணீர் சும‌க்கும்

அன்பு வ‌ள‌ர்க்கும் ஆத‌ர‌வு தேடும்...

வ‌யிற்றுக்காய் வாழ்வு வ‌ள‌ர்த்து

வாழ்வுக்காய் வ‌யிறு வ‌ள‌ர்த்து

ஆனால்

அன்புக்காக‌ ம‌ட்டும்

அன்பு வ‌ள‌ர்த்த‌து

என் அம்மா ம‌ட்டும்தான்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

ம‌ன‌ம்




ம‌ன‌ம் ஒரு குர‌ங்குதான்

அது எங்கெங்கோ

தாவித்திரிகிற‌து...

சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்

குழ‌ந்தை போன்று

அட‌ம் பிடிக்கிற‌து...

ம‌ற‌க்க‌ நினைப்ப‌வ‌ற்றை

ம‌ற‌க்க‌ முடியாது

த‌த்த‌ளிக்கிற‌து...

அள‌வில்லா

ச‌ந்தோச‌த்தில் ஆர்ப்ப‌ரிகின்ற‌து...

தாங்க‌ முடியாத‌

துக்க‌த்தினால்

துவ‌ண்டு போகின்ற‌து...

அடைய‌ முடியாத‌வ‌ற்றை

எண்ணி ஏங்குகின்ற‌து

இருப்ப‌தைக்கொண்டு

திருப்திய‌டைய‌

ம‌றுக்கின்ற‌து...

இருப்பினும்

ம‌ன‌ம்மென்ப‌து

எதுவென்று

வ‌ரைய‌றுக்க‌

முடியாதிருக்கின்ற‌து....

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்



--
விடுதலைவீரபத்திரன்
துபாய்

த‌னிமை




அத்துவான‌க் க‌ட்டில்

வெந்து காய்ந்தும்

ந‌னைந்து குளிர்ந்தும்

த‌லைவிரித்து

நின்று கொண்டிருக்கும்

ஒற்றைப் ப‌னைம‌ர‌த்தின்

துக்க‌ங்க‌ளோடு

ஒளிபுக‌ முடியா கால‌வெளிக்க‌ப்பால்

அட‌ர்ந்த‌ காட்டில்

துள்ளி குதித்து

வீழ்ந்து கொண்டிருக்கும்

அருவியின்

ச‌ந்தோச‌ங்க‌ளோடும்

ஆயிர‌மாயிர‌ம்

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்கூடாய்

எதிலும் ஒட்டாது

வ‌ள‌ர்ந்து தேய்ந்தும்

தேய்ந்து வ‌ள‌ர்ந்தும்

காய்ந்து கொண்டிருக்கிற‌து

என் த‌னிமை நில‌வு...



க‌ண்ணாடி ம‌னித‌ன்

நான் அப்ப‌டியே நானாக‌த் தெரிவேன்

நான் நானாக‌த் தெரிந்தாலும்

க‌ண்ணாடி ம‌னித‌னுக்கு இல்லை

என்னைப் போல‌ நிறைய‌ முக‌ங்க‌ள்



எட்டுப்புலிக்காடு

ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

ஜ‌ன‌நாய‌க‌ சாமியார்க‌ள்

எங்க‌ளை விட‌

எங்க‌ள் நாட்டு

சாமியார்க‌ள் தான்

ஜ‌ன‌நாய‌கத்தை சரியாக‌

புரிந்து கொண்டிருக்கிறார்க‌ள்...

அத‌னால்தான்

இங்கு சில‌ த‌ந்திர‌சாமிக‌ளின்

ம‌ந்திர‌ வ‌லைக‌ளில்

எங்க‌ள் மந்திரிமார்க‌ள்

ம‌ய‌ங்கி கிட‌க்கிறார்க‌ள்...

சாமியார் ம‌ட‌ங்க‌ளின்

சாய்வு மேசையில் எங்க‌ள்

ச‌ட்ட‌ வ‌ர‌வுக‌ள்

ச‌ரி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌...

அர‌சிய‌ல் வாதிக‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ள் தான்

அதிக‌மாய் அதிகார‌ம்

செலுத்துகிறார்க‌ள்...

ஆட்சியாள‌ர்க‌ள் மாற‌லாம்

ஆனால் ஆசியாள‌ர்க‌ள்

மாறுவ‌தில்லை...

என‌வே தான் இங்கு

ஆட்சியாள‌ர்க‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ளுக்கு

அதிக‌ ம‌ரியாதை...

ஒன்று ம‌ட்டும் புரிந்த‌து

எதையும் புரிந்து கொள்ளாத‌

இந்திய‌னைத்தான்

இவ‌ர்க‌ள் எதிர்பார்க்கிறார்க‌ள்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

என் ஆசை




அப்பா அம்மாவுட‌ன்

கொஞ்சி ம‌கிழ‌ ஆசை

அண்ணா அக்க‌வுட‌ன்

அன்பாக‌ ஆடிபாட‌ ஆசை

த‌ம்பி த‌ங்கையுட‌ன்

த‌வ‌ழ்ந்து விளையாட‌ ஆசை

உற்றார் உற‌வின‌ருட‌ன்

உற‌வாட‌ ஆசை

ப‌க்க‌த்து வீட்டு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன்

பந்து விளையாட‌ ஆசை

சொந்த‌ ம‌ண்ணில் சுத‌ந்திர‌மாக‌

சுற்றி திரிய‌ ஆசைதான்

ஆனால்

அந்நிய‌ நாட்டில்

அனாதையாக‌ அல்ல‌வா

வாழ்கிறேன்...

வ‌ய‌ல்த‌னை விட்டு

பிடுங்கிய‌ நாற்றாய்

வாழ்ந்த‌ வீட்டையும்

வாழ‌வைத்த‌ ம‌ண்ணையும் விட்டு

வெளியேறி வாடிப்போன‌து

என் இத‌ய‌ம்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

உன் பார்வைக‌ள்




சில‌ நேர‌ங்க‌ளில்

பார்வையில்

சிலுவையிலிட்டு

பார்த்த‌வ‌ள் நீ - உன்

சிரிப்புக‌ளின்

பாதிப்புக‌ளில்

சிறைப்ப‌ட்டுப்போகும் - என்

பாச‌ இத‌ய‌ம் - மீண்டு

சிந்திக்க‌தான்

பார்த்தேன் - உன்

சிந்த‌னை வ‌ரைய‌ - என்

பாதிப்பாய் நீ அளித்த‌

சில‌ ப‌க்க‌ங்க‌ளோடு - பேசி

பார்க்கும் என் மைத்துளி

விடுதலைவீரபத்திரன்
துபாய்

Wednesday, December 10, 2008

பைத்தியம் தானடா....



உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....

என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....


தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....



நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...

விடுதலைவீரபத்திரன்
துபாய்

இந்தியா?




காவிரி ந‌தியோர‌த்து

காகித‌ பூக்க‌ளாய்

இளைஞ‌ர்க‌ள் கூட்ட‌ம்

வேலை வாய்ப்பு

அலுவ‌ல‌க‌த்தில்...

கைத‌டியே மூன்றாம் காலாக்கி

குனிந்த‌ ப‌டியே கிள‌வி ந‌ட‌க்க‌

பாட்டி எதை தேடுகிறாய்

என்று கிண்ட‌லாய்

இளைஞ‌ர்க‌ள் சிரிக்க‌...

த‌ம்பி!

கேள்விகுறியாய் வ‌ளைந்து

கிட‌க்கும் இந்தியாவுக்கு

ஒரு கைத்த‌டி தேடுகிறேன்...

வேலை வேலையென‌ தேடி

வேலை வாய்ப்பு அலுவ‌ல‌க‌த்தில்

வேலை வாங்கிவிட்டால்

வேலை நிறுத்த‌ம் செய்ய‌

ஒரு வாய்ப்பை தேடி அலைவீங்க‌

என்று கூற‌

இளைஞ‌ர்க‌ள் மௌன‌த்தில்...



எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

இவ‌ர்தான் த‌ந்தை பெரியார்


ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு



நண்பர்களுக்கு வணக்கம்!
நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் சுவை பட சொல்ல முடியுமா.. என்பதை நான் அறியேன். இருந்தாலும் முயற்சித்து பார்க்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். குறிச்சொல்லாக பெரியார் வரலாறு என்று கொடுத்திருப்பதால் ஒரு சேர வாசிக்கவும் முடியும். இனி…
மிகுந்த தெய்வநம்பிக்கையும் பக்தியையும் உடையவர் ராமநாதன் அய்யர். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி சொந்த ஊராக இருந்தாலும் ஈரோட்டில் மளிகைகடை வைத்திருந்தார்.வியாபாரத்துடன் சேர்த்து தனது பக்திமார்க்க விசயங்களையும் சேர்த்தே இலவசமாக கொடுப்பது அவரது வழக்கம். அதனாலேயே அவரது கடைக்கு வருவோரில் பலர் “சாமீ.. அந்த தெய்வத்துக்கு என்ன வச்சு கும்பிடனும், இந்த தெய்வத்துக்கு என்னவச்சு கும்பிடனும்”என்பது போன்ற சந்தேகங்களை கேட்டு, அவர் சொல்படியே கேட்டும் வந்தனர். எதற்கெடுத்தாலும் அவர் விதியை துணைக்கு இழுத்து தான் பேசுவார். யாருக்காவது உடம்பு சரி இல்லை என்றால்.. “அவனுக்கு விதி சரியில்லை” என்பார். எவராவது இறந்து போனாலும், “அவனுக்கு விதி முடிச்சு போச்சு. அவ்வளவுதான்” என்று சாதாரணமாக சொல்லி விடுவார்.
அவர் கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் வந்தான். அவன் தொடர்ச்சியாக ராமநாதன் அய்யரை கவனித்து வருபவன். அய்யரின் கடையில் வெயில் படாமல் இருக்க.. முட்டுக்கட்டை கொடுத்து தட்டி வைக்கப்பட்டிருக்கும். அய்யர் அந்த சிறுவனை கவனிக்க வில்லை. “சாமீ” என்றழைத்தான் சிறுவன். அய்யர் திரும்பிப்பார்த்தார். என்னடா சொல்லு என்பது போலிருந்தது அவரின் பார்வை. “விதின்னு ஒன்னு நிசமாகவே இருக்கிறதா?”. ஆழாக்கு உயரத்திலிருக்கும் சிறுவன் அப்படி கேட்டது, அய்யருக்கு சிரிப்பு வரவழைத்து விட்டது.
“இருக்குடா.. நடக்குற எல்லா காரியங்களுமே விதியோடு தொடர்புடையது” என்று அய்யர் சொல்லி வாய் மூடுவதற்குள் சிறுவன் தட்டிக்கு கொடுத்திருந்த முட்டுக்கட்டையை தட்டி விட்டான். கட்டை விலகியதும், தட்டி சடாரென கிழிறங்கி அய்யரின் தலையை பதம் பார்த்தது.
“அடேய் சண்டாளா.. ஏண்டா இப்படி பண்ணினாய்?” என்று தலையை தடவியவாரே சிறுவனை விரட்டினார் அய்யர். சிறுவன் பத்தடி ஓடி, திரும்பி நின்று சொன்னான், “நான் ஒன்னுமே செய்யவில்லை சாமீ.. எல்லாம் விதியோட விளையாட்டு. கட்டை விலகி, தட்டி உங்க தலையில விழணும் என்று இன்னைக்கு உங்கள் விதி இருந்திருக்கிறது.” என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான். அய்யர் விக்கித்து நின்றார். அந்த சிறுவன் தான் பின்னாலில் பெரியார் என்றழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி.
சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து விட்ட வெங்கட்ட நாயக்கர் தம் பன்னிரெண்டாம் வயதிலேயே கல் தச்சர்களுக்கு எடுபிடியாக கூலி வேலைக்கு போகத்தொடங்கினார். அதில் கிடைத்து வந்த சொற்ப வருமாணத்தைக்கொண்டு தன் வயிற்றை கழுவி வந்தார். சில நாட்கள் பட்டினி கிடந்து கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து வந்தார்.
தன் பதினெட்டாவது வயதில் தன்னைப்போலவே எழ்மை நிலையில் இருந்த குடும்பத்திலிருந்து முத்தம்மாள் என்ற சின்னத்தாயம்மையரை மணம் புரிந்து கொண்டார் வெங்கட்டர். அம்மையாரும் கணவனின் துன்பத்தில் பங்குகொள்ள வேலைக்கு போகத்துணிந்தார். இருவரும் வேலைக்குப் போயும் மூன்று வேலையும் வயிறு நிறைய சாப்பிட முடியாது. ஏதோ சாப்பிட்டோ ம் என்ற நிலையில் தான் வாழ்க்கை ஓடியது.
சில ஆண்டுகள் ஓடியது. சிறுகச்சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு வண்டி,மாடு வாங்கினார் வெங்கட்டர். அப்போது அதிகம் வாகணங்கள் இல்லாத சமயமானதால்.. வாடகைக்கு வண்டியோட்டி கொண்டிருந்த வெங்கட்டருக்கு வருமாணம் கூடியது. சில சமயங்களில் பக்கத்து ஊர்கள் வரைக்கும் போய் வர பயணிகள் அழைப்பார்கள். தவிர்க்க முடியாது. போய் வருவார். சில மாதங்கள் இப்படியே ஓடியது. மாதத்தில் இரண்டொரு நாட்களாவது வெளியில் இரவு நேரங்களில் தங்கி விடும்படி ஆகியது. இது சின்னத்தாயம்மையாருக்கு பிடிக்கவில்லை. தனியே வீட்டில் இருக்கவேண்டி இருந்தது. இரவு நேரங்களில் அப்படி தனித்து இருப்பது பயத்தை உண்டு பண்ணியது. கணவனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அம்மையாரின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்துகொண்ட அவரும்.. தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். வண்டி,மாட்டை விற்றுவிட்டு ஈரோட்டிலேயே சின்னதாக ஒரு மளிகைக்கடை வைத்தார் வெங்கட்டர். சின்னத்தாய்யம்மாளும் வீட்டில் நெல்லை குத்தி அரிசியாக்கி அருகில் இருந்த சந்தையில் கொண்டுபோய் விற்று வருவார். கணவன் மனைவி இருவரின் உழைப்பிலும் குடும்பம் பொருளாதாரத்தில் உயரத்தொடங்கியது. சின்ன மளிகைக்கடை பெரியதாகி.. மொத்தப்பொருட்கள் விற்கும் மண்டியானது.
கடுமையான உழைப்பும் நேர்மையான வியாபாரத்திறமையும் ஊருக்குள் வெங்கட்டருக்கு நன்மதிப்பைக்கூட்டியது. மணமாகி பல ஆண்டுகளாக அந்த தம்பதியினருக்கு மகப்பேறுக்கு மட்டும் வழியிலாமல் இருந்தது. வைணவத்தில் பற்றுகொண்ட அவர்கள் தங்களின் வேண்டுதல்களை அதிகமாக்கினார்கள். ஆன்மிகத்தின் பெயரில் நிறைய செலவும் செய்யத் தொடங்கினார்கள்.
பண்டிதர்களையும், பாகவதர்களையும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்து பஜனையும், கதாகாலச்சேமமும் நடத்தினார்கள். பத்து வருடங்களுக்குப் பின் சின்னத்தாய்யம்மையார் கருவுற்றார். தங்கள் வழிபட்ட திருப்பதி ஏழுமலையானின் அருள் தான் குழந்தைவரம் கிடைக்க காரணமானது என்று நம்பினார்கள். முதலில் பிறந்த ஆண்குழந்தைக்கு கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
அக்குடும்பத்தில் இரண்டாவதாக 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாளில் பிறந்தார் ராமசாமி. அவருக்கு இளையசகோதரிகள் இருவர்.
நான்கு குழந்தைகளுடன் வெங்கட்டர் மகிழ்ச்சியாய் இருக்க, கணவனை இழந்த அவரின் சித்தி ஒருவருக்கு பிள்ளை இல்லாமல் தனியாளாய் அவதி பட்டுக்கொண்டிருந்தார். அவர் வெங்கட்டரிடம் இரண்டாவது பிள்ளையை தனக்கு தத்துகொடுத்து விடும்படி கேட்டார்.
பாவம் ஆதரவற்ற அவருக்கு தன் மகனை தத்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வெங்கட்டர் வந்தாலும், குழந்தையின் தாயாகிய சின்னத்தாயம்மாளுக்கு இதில் இஞ்சிதும் விருப்பமில்லை. சரி.. தத்தாக இல்லாமல்.. பாட்டி வீட்டில் கொஞ்ச காலம் வளரட்டும் என்று மனைவியை சமாதானப்படுத்தி, இரண்டாவது பையன் ராமசாமியை தூக்கி கொடுத்து விட்டார்.
குழந்தையை கையில் வாங்கிக்கொண்ட வெங்கட்டரின் சித்தி கண்ணீர் நிறைந்த விழிகளுடன் நன்றி சொல்லிச்சென்றார். குழந்தை பாலுக்கு அழும்போதெல்லாம்.. புட்டியில் நிரப்பப் பட்டிருந்த ஆட்டு பாலை ஊட்டி வளர்க்கத்தொடங்கினார் பாட்டி.
குழந்தையே இல்லாமல்.. கிடைத்த குழந்தை ராமசாமியை ஏகத்துக்கும் செல்லம் கொடுத்து வளர்க்கலானார் பாட்டி. அங்கே வெங்கட்டநாயக்கரின் வீட்டில் வளர்ந்த கிருஷ்ணசாமிக்கு வித விதமான உணவுகள் கிடைத்தது. ராமசாமிக்கோ.., பழைய சோறும், ஊறுகாயும் தான் தினம் கிடைத்தது.
எல்லாவற்ரையும் கேள்விகேட்டு தன் அறிவு பசியை ஆற்றி வந்த சிறுவன் ராமசாமிக்கு, பாட்டிகொடுக்கும் பழைய சோறு வயிற்றுப்பசிக்கு போதுமானதாக இல்லை. அதனால்.. தெரிவில் சிந்திக்கிடக்கும் பொட்டுக்கடலை போன்ற தாணியங்களை பொறுக்கித் திண்ணத்தொடங்கினான்.
பள்ளி சேர்க்கும் வயது ஆனதும் அவளை பள்ளியில் சேர்த்தார்கள். அது திண்ணைப் பள்ளிக்கூடம். ஈரோடு நகருக்கு சற்று தள்ளி இருந்தது.
பள்ளியைச்சுற்றி வாணிபச் செட்டியார்கள், இஸ்லாமியர்கள், மற்றும் கிருஸ்தவ மக்களின் வீடுகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவர்கள் எல்லாம் புழங்கக்கூடாத மக்களாக கருதப்பட்ட சமயம். அதனால் ராமசாமி தினம் பள்ளி போகும் போது, பள்ளியைச்சுற்றி இருக்கும் வீடுகளுக்கு போகக்கூடாது என்று சொல்லி அனுப்புவார் பாட்டி.
ஆனால், பாட்டியின் எந்த அறிவுறையையும் எப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் ராமசாமி இல்லை. “ஏன்.. அவர்களோடு பழகக்கூடாது. அவர்களும் நம்மைப்போலத்தானே இருக்கிறார்கள்?” என்று எதிர் கேள்வி எழுப்புவான். பாட்டியிடம் அவனது இப்படியான கேள்விகளுக்கு பதில் இருக்காது. “அது எல்லாம் காலங்காலமாக நடந்துவர சம்ரதாயம். அதை நாமலும் கடைப்பிடிச்சுட்டு வாரோம். அவ்வளவு தான்” என்று ஏதாவது கூறி சமாளித்து விடுவார்.
எந்த சமாதானங்களும் ராமசாமியை திருப்தி படுத்த வில்லை. அதனாலேயே பாட்டி எதையெல்லாம் கூடாது என்கிறாளோ அதை செய்து பார்த்து விடுவது என்று முடிவெடுக்கிறான்.
பள்ளிக்கூடத்தில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வெளியே தான் போக வேண்டி இருந்தது. வாத்தியார் ராமசாமி போன்ற சில சிறுவர்களை மட்டும் பள்ளிக்கு பின் பக்கம் இருந்த தன்னுடைய வீட்டுக்கு மட்டும் தண்ணீர் குடித்து வர அனுப்புவார். அப்பகுதியைச்சேர்ந்த ஏனைய சிறுவர்கள் வீட்டுக்கு அவர்களை போகவிடாமல் பார்த்துக்கொண்டார்.
வாத்தியார் வீட்டில் கொடுக்கும் தண்ணீர் டம்ளரை உதட்டில் வைத்து குடிக்க முடியாது. அன்னாந்து தான் குடிக்கவேண்டி இருக்கும். உதட்டில் வைத்தே குடித்துப் பழக்கப்பட்ட ராமசாமியால் அன்னாந்து குடிக்க முடியாது. சட்டை, வேஸ்டி என எல்லா வற்றையும் நனைத்துக்கொண்டுதான் வகுப்பறைக்கு திரும்ப வேண்டி இருந்தது. அதனால் மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாக வேண்டி இருந்தது. வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கலாம் என்றாலும் வீடு தொலைவில் இருந்தால் அதுவும் முடியாமல் போனது.
ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் செல்லாமல் தன்னுடன் படிக்கும் வேறு ஒரு பையனின் வீட்டுக்குச் சென்றான் ராமசாமி. அங்கே அன்னாந்து குடிக்கவேண்டிய கட்டாயமில்லை. அதனால் உதட்டில் வைத்தே தண்ணீர் குடித்தான். எளிமையாக உபசரித்த அம்மக்களின் அனுகு முறை இவன் கவனத்தை ஈர்த்தது.
ஒரு நாள் பழக்கம் தினம் தொடர்ந்தது. பள்ளியைச்சுற்றி இருந்த அனேகர் வீடுகளுக்கும் இவன் போய் வரத்தொடங்கினான். ஒரு வீட்டில் இவனை அடையாளம் கண்டுகொண்டு, நீ இன்னாரின் பிள்ளை தானே.. இங்கெல்லாம் வந்தால் உங்க வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா.. என்று ஒர் அம்மாள் விசாரிக்க, ஒன்னும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லிச் சமாளித்தான் ராமசாமி.
விசயம் வீட்டினர் காதுகளுக்கு எட்டியது. பாட்டியின் வளர்ப்பு சரியில்லாமல் போனதால் தான் பையன் இப்படி ஆகிவிட்டான் என்று புலம்பத்தொடங்கினார் சின்னத்தாயம்மாள். தத்துகொடுக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு ராமசாமியை தங்களுடனே அழைத்து வந்து விட்டார்கள். சின்னத்தாயம்மையார் வருத்தப்பட்ட அளவுக்கு வெங்கட்ட நாயக்கர் வருத்தப்படவில்லை. வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் பலதரப்பட்ட மக்களிடமும் பழகிய அனுபவம் வாய்ந்த அவர்,”அப்படியெல்லாம் பழகக்கூடாது. அது தவறு” என்பதோடு தனது கண்டிப்பை நிறுத்திக்கொண்டார்.
தன் வீட்டுக்கு அழைத்து வந்ததோடு திண்ணை பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போடப்பட்டது. ஆனாலும் ராமசாமியை மாற்ற முடியவில்லை. பழைய நண்பர்களை பார்க்க போய் விடுவார். அவர்களுடனே விளையாட்டு, அவர்கள் கொடுக்கும் திண்படங்களையும் வாங்கிச்சாப்பிடுவது என்று நாட்கள் நகரத்தொடங்கியது.
ஒருமுறை இஸ்லாமியர் வீட்டில் ஏதோ பண்டம் வாங்கி சாப்பிட்டது தெரிந்ததும், கொதித்துப் போனார் சின்னத்தாயம்மையார். பழகக்கூடாதவர்களுடன் பழகி பையன் கட்டுக்கடங்காத காவாலியாக மாறிக்கொண்டிருப்பதாக பெரிதும் துயரப்பட்டார். அடியாத மாடு படியாது என்று முடிவுகட்டிய அவர், ராமசாமியின் காலில் இரும்பு வளையத்தை மாட்டிவிடுவார்கள். அதனுடன் இணைக்கப்பட்ட சங்கலியின் மறு முனை சதுரமான மரக்கட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கட்டையையும் கையில் கொடுத்து விடுவார்கள். இந்த தண்டனைக்கு முட்டி போடுதல் என்று பெயர்.
அதனை மாட்டிவிட்டால் நடக்கவே சிரமப்பட வேண்டி இருக்கும் போது எப்படி விளையாட முடியும். அடங்காப்பிடாரனாக அலையும் குழந்தைகளுக்குத்தான் இந்த முட்டி போடும் தண்டனை கொடுக்கப்படும். அப்படி தண்டனை அடையும் சிறுவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவார்கள். வெளியில் வந்தால் மற்ற சிறுவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். இவை எதையும் இவன் பொருட்படுத்துவது கிடையாது. ராமசாமி அடங்குவதாக தெரியவில்லை. பலகையை தோளில் போட்டுக்கொண்டு, அப்படியே வீதிக்கு வந்து விளையாடும் மற்ற சிறுவர்களுடன் கலந்து விடுவான். என்ன செய்தும் வீட்டுக்குள் அடங்க மறுப்பவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது என்று முடிவு செய்கிறார்கள் பெற்றோர்.
இம்முறை ஆங்கில வழிக்கல்வி கற்க அனுப்பப்பட்டான். அங்கும் அவனுக்கு படிப்பில் கவனம் போகவில்லை. ஏகத்துக்கும் குறும்பு செய்வதும், தனக்கான மாணவர்களை கோஷ்டி சேர்த்து வம்பு செய்வதுமாக கழிந்தது நாட்கள். இவனது தொல்லை பொருக்க மாட்டாமல் தான் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கேயும் இவது தொல்லைகள் தொடரவே செய்தது. சகமாணவர்களை அடிப்பது. அவர்களிடன் வம்பு செய்வது என்று ஏகப்பட்ட புகார்கள் வீட்டுக்கு போகத்தொடங்கியது.
ஒவ்வொரு முறையும் இவன் சேட்டை செய்து மாட்டியவுடன், “இனி இப்படி செய்ய மாட்டேன்” என்று ஆயிரம் முறை எழுதி வரும்படி தண்டனை தரப்பட்டது. நல்லபிள்ளையாக எழுதி விடுவான். மீண்டும் தன் சேட்டையை தொடர்வான். பள்ளியில் நடத்திய பாடத்தை விட, இவன் எழுதிய இம்போர்ஸிசன் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகம். ஒரு முறை வாத்தியாரையும் அடித்து விட்டான்.
செய்தி வீட்டுக்கு வந்ததும், ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்த அவனது அப்பா வெங்கட்டர், ராமசாமியின் பள்ளிப்பை பரணில் ஏற்றினார். படிப்பு நிறுத்தப்பட்டது. ஒழுங்காக படித்து வரும் மூத்த மகன் கிருஷ்ண சாமி போல் இல்லாமல், இளைய மகனின் வாக்கை வீணாகி விட்டதே என்று புலம்பி, புலம்பியே ஓய்ந்து போனார் சின்னத்தாயம்மையார். மனைவின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பையனை மண்டிக்கு அழைத்துப்போவதாக சொல்லி விட்டார் வெங்கட்டர்.
அப்படி கடைக்கு அழைத்து வந்த பின் தான் தொடக்கத்தில் படித்த சம்பவம் நடந்தது. தன் மண்டியில் இருந்து வெளி ஊர்களுக்கு போகும் மூட்டைகளில் விலாசம் எழுதும் வேலை தரப்பட்டது. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து வந்தான். அப்படியே மஞ்சள், மிளகாய் போன்றவற்றை கடை வாசலில் நின்று கூவி ஏலம் போட வேண்டும். அதையும் சரியாக செய்யத்தொடங்கினான். தனது மண்டிக்குள் வந்துவிட்ட எவரையும் வெறும் கையுடன் வெளியே போக விடமாட்டான். எந்த வியாபாரியாக இருந்தாலும் பேச்சு சாதூரியத்தால் கவுத்தி விடுவான் ராமசாமி.
மகனின் வியாபாரத்திறமை கண்டு மகிழ்ந்து போனார் வெங்கட்டர். படிப்பு வராவிட்டாலும் வியாபரத்தில் மகன் திறமையாக நடந்துகொள்வது அறிந்து மகிழ்ந்து போனார் சின்னத்தாயம்மையார்.

கடைக்கு இளைய மகன் வரத்தொடங்கி, வியாபாரத்திலும் கெட்டிக்காரனாக இருப்பதும் ஆண்டவன் அருளினால் தான் என்று நம்பினார், பக்தி மார்கத்தில் அதிக ஆர்வம் கொண்ட வெங்கட்டநாயக்கர்.
தன் பிராத்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான் என்று நம்பிய காரணத்தால்.. முன்னை விட அதிக ஆர்வத்துடன் பக்தி மார்கத்தின் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார். அவ்வப்போது வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்த விரதம், பூஜை போன்றவை அடிக்கடி நடக்கத்தொடங்கின. பஜனையும், பாகவதர்களின் வருகையும் முன்பை விட அதிகமாகிப்போனது. எப்போது பார்த்ததாலும் ஏதாவதொரு பூஜை நடந்துகொண்டே இருந்தது.
எதை எல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதை எல்லாம் செய்யத்தொடங்கினான் ராமசாமி. தினம் குளித்து சுத்த பத்தமாக இருக்க வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. ஆனால்.. பல நாட்கள் குளிக்காமலேயே குளித்தது போன்ற பாவனையை ஏற்படுத்துவதை வாடிக்கையாக்கிக்கொண்டான்.
வீட்டில் சொல்லப்படும் கதைகளையும், சொற்பொழிவுகளையும் கேட்டபடியே வளர்ந்த ராமசாமிக்கு அவற்றில் ஏகப்பட்ட சந்தேகங்கள் வரத்தொடங்கின. அவற்றை கதை சொல்லும் பாகவதர்களிடமே கேட்கத்தொடங்கினான்.
அவர்கள் சொல்லும் பதில்கள் போதுமானதாக அவனுக்கு படவில்லை. ஒரே கேள்விக்கு ஒவ்வொரு பண்டிதர்களும் ஒவ்வொரு விதமான பதில்களைக் கொடுத்தார்கள். அதனால் மேலும் மேலும் கேள்விகள் கேட்கும் ஆர்வம் அதிகமானது. படிப்பு வரவில்லை என்பதற்காக பலிக்கப்பட்ட தன்னால், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் பண்டிதர்களே தடுமாறுவதைப் பார்க்க ராமசாமிக்கு கேள்வி கேட்கும் ஆர்வம் அதிகரித்தது.
பெரும்பாலும் இவனது கேள்விகள், காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த புராண, இதிகாசங்களை சுற்றியே இருக்கும். கேட்கும் கேள்விகளையும் அப்படியே வரட்டு வாதமாக வைக்காமல்.., நகைச்சுவை உணர்வுடன் கூடிய கற்பனை கலந்து கேட்பான்.
பிள்ளையார் சாமி உண்மையாக இருக்குமா..யானைத் தலையும் மனித உடலுமாக எப்படி ஒருவர் இருக்க முடியும்?
அனுமார் என்ற சாமி உண்மையில் இருந்திருக்க முடியுமா..குரங்குத் தலையும் மனித உடலும் சாத்தியமா? அப்படி ஒருவர் இருந்திருப்பாரே ஆனால் குழந்தைகள் அந்த உருவத்தைப் பார்த்து பயந்து போகாதா? பெரியவர்கள் எப்படி கேலி பேசாமல் இருந்திருப்பார்கள். கொஞ்சம் பல்லு தூக்கலாக இருந்தாலே அவனை கேலியும் கிண்டலும் செய்கிறார்களே.. அனுமாரை மட்டும் எப்படி சும்மா விட்டார்கள்?
கடலை ஒரே தாவல் மூலம் கடந்து விட முடியுமா? கடல் என்ன தெருவில் ஓடும் சாக்கடை நீரா?
தீயை அக்னி தேவன் என்று சொல்லுகிறீர்கள்.. அப்புறம் ஏன் அவர் ஏழைகளின் குடிசைகளை எரிக்கிறார். அவருக்கு பாவமாகத் தெரியவில்லையா? - என்பது மாதிரியான கேள்விகளாக இருக்கும்.
வீட்டுக்கு வரும் பண்டிதர்களோடு நின்று விட வில்லை இவனது வாதம். கடையில் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் தொடங்கி, வரும் வியாபாரிகள் வரை அனைவரிடமும் வாதம் புரியத்தொடங்கி விடுவான்.எவராலும் பதில் சொல்ல முடிய வில்லை.
முதலாளியின் மகன் என்ற அந்தஸ்தும், கேள்வியில் இருக்கும் நகைச்சுவையும், தாங்களுக்கே புதிதாக இருக்கும் கேள்வி என்பதாலும் கேட்போர் பதில் பேச முடியாமல் போனார்கள்.
எல்லோராலும் குசும்பு பிடித்த கெட்டிக்காரப் பேச்சுக்காரன் என்று சொல்லுமளவுக்கு சிறுவன் ராமசாமி மாறிப்போனான். தன்னை எல்லோரும் பாராட்டும் புகழ்போதைக்கு மயங்கி.. அப்படியான கேள்விகள் கேட்பதைத் தொடர்ந்தான் ராமசாமி. வயது ஏறினாலும் அவனது போக்கில் மட்டும் மாற்றம் ஏற்படவே இல்லை.
இவனது போக்கு குறித்து சின்னத்தாயம்மையாருக்கு வருத்தம் இருந்தது, வெங்கட்டருக்கும் வருத்தங்கள் இருந்தாலும் மகனின் சாதூரியமான கேள்விகளை உள்ளூர ரசித்து வந்தார். அதனாலேயே கேள்வி கேட்கும் விசயத்தில் அவனை பெரிதாக கண்டுகொள்ள வில்லை.கேள்விகளால் வேள்வி செய்து பெரிய ஞானி போல தன் மகன் வந்துவிடுவான் என்று நம்பினார்.
ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமி தன் அப்பாவைப் போலவே ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வமிக்கவராக திகழ்ந்தார். குடும்ப வழக்கப்படி வைணவ வழிபாட்டு முறைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
ஆன்மிகத்தில் இருந்த அதே ஆர்வம் படிப்பிலும் இருந்தது. நன்கு கல்வி கற்று வந்தார். தமிழ் மட்டுமல்லாது, சமஸ்கிரதம் போன்ற பொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மத சம்பந்தமாக பல செய்யுள் நூல்களை எழுதினார்.
வீட்டுக்கு அடங்கிய நல்ல பிள்ளையாக கிருஷ்ணசாமி வளர்ந்து வருவது அம்மாவுக்கு மன நிம்மதியை கொடுத்தது. நன்கு படித்து தேறி வந்த கிருஷ்ணசாமி சித்தமருத்துவம் படித்து மருத்துவரானார். ‘வெங்கட்டநாயக்கர் தர்ம வைத்தியச்சாலை’ என்ற பெயரில் தொடங்கி நடத்திவரத் தொடங்கினார். ராமசாமியோ சிறந்த வியாபாரியாக மாறி இருந்தார்.
வியாபாரத்தில் கொடிகட்டி பரந்த ராமசாமியின் கிண்டலும், குதர்கமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவரின் பேச்சை ரசிக்கின்ற, ஆதரிக்கின்ற நண்பர்களின் வட்டமும் பெருகியது. வியாபாரம் தவிர்த்த நேரங்களில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வழக்கப்படி விவாதங்களில் ஈடுபடுவார். நண்பர்களின் சவகாசம் விவாதத்திற்கு மட்டும் பயன் படவில்லை.
அந்த கால கட்டத்தில் பணம் படைத்த செல்வந்தர்களின் மைனர் விளையாட்டுக்களிலும் ஆர்வம் ஏற்பட்டது. ராமசாமியின் மைனர் நண்பர்களில் பலருக்கு குடிக்கும் பழக்கம் இருந்தது. தான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகா விட்டாலும் நண்பர்கள் எல்லோருக்கும் தன்னுடைய காசிலேயே குடிக்க சரக்கு வாங்கிக்கொடுப்பார்.
அவர்களின் துணையோடு தேவதாசிகளையும் நாடிப்போக ஆரம்பித்தார். மண்டிக்கடையை அடைத்தபின் வீட்டுக்கு வராமல் நேராக தாசி வீடுகளுக்கு போய், உல்லாசமாய் பொழுதை கழித்துவிட்டுத்தான் வீடு திரும்புவார் ராமசாமி.
பெரிய நாயக்கரின் சின்னமகன் ராமசாமி நாயக்கர் இப்படி அடிக்கடி தாசி வீடுகளுக்கு போய் வரும் செய்தி குடும்பத்தாருக்கு எட்டியது. சேரக்கூடாத சேர்மானங்களினால் தான் இப்படி தங்கள் மகன் ஆகிவிட்டான் என்று வருத்தப்பட்டனர் பெற்றோர்.
ஒரு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொந்தங்கள் சொல்ல.. ராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். விசயம் ராமசாமியின் காதுகளுக்கு எட்டியாது. நேராக வீட்டிற்கு போனார். தான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா என்று கேட்டார். ஆம் என்றனர் பெற்றோர்.
திருமணம் செய்துகொள்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் தான் சொல்லும் பெண்ணை மட்டுமே மணப்பேன் என்றும் பிடிவாதமாகச் சொன்னார் ராமசாமி. அவரின் தைரியமான இந்த கருத்து, குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பதை முடிவு செய்யும் உரிமை மணமக்களுக்கு கிடையாது. பெற்றோர்கள் முடிவு செய்வார்கள் பெண்ணோ, பையனோ எதிர்ப்பு சொல்லாமல், பெற்றோரின் சொல்படி நடக்க வேண்டும். அப்படித் தான் நடந்து கொண்டிருந்தது.
அப்படியான சூழலில், நான் சொல்லுகின்ற பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னால்.. அதிர்ச்சியடையாமல் என்ன செய்ய முடியும். மறுத்துப் பேசலாம் என்றாலும் உள்ளுக்குள் ராமசாமியின் செயல்கள் அச்சமூட்டின. குடும்பத்து பெயரை கெடுத்துவிடுவான். அதற்கு அவன் சொல்லுவதை கேட்டுப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள் பெற்றோர்கள்.
சரி.., தாசி வீடுகளுக்கு போவது குறைந்தால் போதும் என்ற எண்ணமும், தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடியே தான் ராமசாமி பெண் பார்த்து இருப்பான் என்ற நம்பிக்கையிலும் ‘ஆகட்டும்..முதலில் பெண்ணைப் பற்றி சொல்லு’ என்றனர்.
ராமசாமி பெண்ணைப் பற்றி சொல்ல.. மேலும் அதிர்ந்து போனார்கள் குடும்பத்தினர்

3. யாருடா இந்த தாசி..?- பெரியார் போட்ட நாடகம்.
ராமசாமி சொன்ன பெண் நாகம்மை. அவரின் மாமா ரெங்கசாமி நாயக்கரின் மகள். சேலம் மாவட்டம் தம்மாப்பட்டியில் வசித்து வந்தவர். மாமா என்றால் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. சின்னத்தாயம்மையாரின் ஒன்று விட்ட சகோதரன் ரெங்கசாமி நாயக்கர். வெங்கட்டநாயக்கர் குடும்பம் ரெங்கசாமி நாயக்கர் வீட்டுக்கும், ரெங்கசாமி நாயக்கர் குடும்பம் இவர்கள் வீட்டுக்கும் போய் சில நாட்கள் தங்குவதும் உண்டு. அப்போதே ராமசாமிக்கு நாகம்மையை பிடித்துப் போனது.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ரெங்கசாமி நாயக்கரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வெங்கட்ட நாயக்கரின் குடும்பமோ செல்வச் செழிப்பான குடும்பம். மலை உச்சிக்கும் அடிவாரத்துக்குமான வித்தியாசம்.
வழக்கம் போல வெங்கட்ட நாயக்கர் கருத்து ஏதும் சொல்ல வில்லை. சின்னத்தாயம்மையாருக்குத் தான் சுத்தமாக இந்த யோசனை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நாகம்மையை அவருக்கு மிகவும் பிடிக்கும். அழகான பெண். புத்திசாலியும் கூட.., அதற்காக மருமகளாக்கிக் கொள்ள முடியுமா?, சமூக அந்தஸ்து என்று ஒன்று இருக்கிறதே.. அதை விட்டுக்கொடுக்க முடியுமா எனத் தயங்கினார். மகனிடம் பேசிப்பார்த்தார். பயனில்லை. கட்டினால் நாகம்மையைத் தான் கட்டுவேன். இல்லையெனில் ஆளை விடு என்பதாக இருந்தது ராமசாமியின் பதில்.
இதே சமயத்தில் தான் நாகம்மைக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கி இருந்தார் ரெங்கசாமி நாயக்கர். ஏழ்மையான நிலையில் இருந்தவர்களால் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத காலம் அது. இளம் மாப்பிள்ளைகள் யாரும் முன் வரவில்லை. இரண்டு மனைவிகளை இழந்து, தள்ளாடிக் கொண்டிருந்த வயசான பெரியவருக்கு மூன்றாம் தாரமாக நாகம்மையைக் கொடுக்க முடிவு செய்தார்.
நாகம்மைக்கு பெற்றோரின் முடிவில் சம்மதமில்லை. தலை பின்னாமல், குளிக்காமல், சாப்பிடாமல் இருந்து பெரிய அமளி செய்து விட்டார். “கட்டினால் மாமன் ராமசாமியைத்தான் கட்டுவேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்” என்று திடமாக சொல்லி விட்டார். இவரது உறுதி கண்டு பயந்து போனார்கள் அவரது குடும்பத்தினர்.
சகோதரி வீட்டு சம்பந்தம் நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது அவர்கள் தான் வசதி படைத்தவர்களாயிற்றே.. சின்னத்தாயம்மை சம்மதிக்க மாட்டாரே.. என்ற கவலை ரெங்கசாமி-யாரின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.
இதற்கிடையில் அம்மா ஒத்துக்கொள்ளாத காரணத்தால்.. ராமசாமியின் மைனர் விளையாட்டுக்கள் அதிகமாகிப்போனது. தொடர்ச்சியாக அவர் குறித்த புகார் செய்திகள் வீட்டுக்கு வந்துகொண்டே இருந்தது. சரி.. மகன் சொல்படியே கேட்போம் என்ற முடிவுக்கு ராமசாமியின் வீட்டார் வந்தார்கள்.
ராமசாமிக்கு பத்தொன்பது வயதும், நாகம்மைக்கு பதின்மூன்று வயதும் இருக்கும் போது, இருவீட்டார் சம்மததோடு 1898ம் ஆண்டு ராமசாமி நாயக்கர்-நாகம்மை திருமணம் நடந்தேறியது.
திருமணம் முடிந்த கையோடு எல்லாத் தாய்மார்களும் செய்வது போல, சின்னத்தாயம்மையாரும் ராமசாமியின் போக்கு குறித்து நாகம்மையின் காதில் ஓதினார். எல்லா விதத்திலும் அவனை திருத்தி, குடும்பத்திற்கு ஏற்ற மகனாக மாற்ற வேண்டியது நாகம்மையின் கடமை என்பது போல பேசி வைத்தார்.
ஒரே நாளில் இவர்கள் சொல்லும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நாகம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும் மாமனார், மாமியார் மணம் கோணாமல் முதலில் நடந்துகொள்ள வேண்டும். அதன் வழி மாமனை மாற்றி விட நினைத்தார்.
ஆச்சாரத்தை கடைபிடிக்கும் அவர்களுக்கு சேவை செய்யும் போது தானும் அப்படியே இருக்க முடிவு செய்தார் நாகம்மை. வீட்டில் எல்லோரும் ஒரு பாதையில் போகும் போது, ராமசாமி மாமன் மட்டும் வேறு வழியில் போய் விடுவாரா என்ன? அதிகாலையிலேயே எழுந்து, குளித்த பின் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடுவார். பூப்பறித்து கொடுப்பது முதல், பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது, சமையல் வேலைகள் என எல்லாவற்றிலும் மிகுந்த அக்கரையுடன் செய்யலானார். மாமியாருக்கு மிகுந்த நம்பிக்கை வந்தது. தன் மகன் ராமசாமியை எப்படியும் இவள் மாற்றி விடுவாள் என்று திடமாக நம்பத் தொடங்கினார்.
மனைவியின் இந்த போக்கு ராமசாமிக்கு அதிர்ச்சியை தந்தது. தன் காரியங்களுக்கு ஏற்றபடி நாகம்மை இருப்பார் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. தம் மனைவி குடும்பத்தாரின் மூடச் செயல்களுக்கு எல்லாம் உதவி செய்கின்றவராக இருப்பது ராமசாமிக்கு உறுத்தியது. சில அதிரடி செயல்கள் மூலம் தான் மனைவியை மாற்ற முடியும் என்று சில திட்டங்களைப் யோசிக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே அவை நடைமுறை படுத்தப்பட்டன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகம்மை விரதம் இருந்து வந்தார். இது அத்தை சின்னத்தாய்யம்மையார் போட்ட உத்திரவு. சீக்கரம் குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை தொடங்கச்செய்தார்.
கிட்டத்தட்ட அம்மாவைப் போலவே மனைவியும் மாறி வருவதைக்கண்ட ராமசாமி, மனைவியின் ஆச்சாரங்களை முதலில் கலைப்பது என்று முடிவு செய்தார். அதற்காகவே குளிக்க மாட்டார். ஏற்கனவே குளிப்பதில் இருந்த சோம்பேறித்தனம் இப்போது நாகம்மையை வெறுப்பேற்ற உதவியது. மண்டியில் மட்டுமே அதிக பொழுதை கழிக்க வேண்டி இருந்ததால்.. ஒரே சட்டையை அதிக நாட்கள் போடுவார். சட்டையை யாராவது மாற்றச் சொன்னால், கடையில் தானே இருக்கேன். வெளியே எங்காவது போனால் மாற்றிக் கொண்டு போகிறேன் என்று பதில் வரும் அவரிடமிருந்து.
இவரின் தொல்லை தாங்காமல், ஏற்கனவே சமையல் கட்டு பக்கம் வரக்கூடாது என்று வீட்டில் எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்தது. ஏனெனில் குளித்து சுத்தமாக திருமண் இட்டுக்கொண்டுதான் சமையலறைக்குள் நுழைவார்கள் வீட்டினர். இவர் மட்டும் அடிக்கடி குளிக்காமலேயே உள்ளே புகுந்து விடுவார்.
ராமசாமிக்கு தினமும் அசைவம் வேண்டும். அதனால் விரதமிருக்கும் நாட்களின் போது ராமசாமிக்கு என தனி சாப்பாடும், மற்றவர்களுக்கு தனியான சைவ சாப்பாடும் தயாரிப்பார் நாகம்மை. முதலில் சைவ சாப்பாடு தயாரித்து விட்டு, பின் அசைவ சாப்பாடு தயாரிப்பார்.
ராமசாமிக்கு பரிமாறிய பின், குளித்துவிட்டு வந்து, மாமனார்,மாமியாருக்கு சாப்படு போட்டுவிட்டு தானும் சாப்பிடுவார். இது தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் ராமசாமிக்கு சாப்பாடு போட்டு விட்டு, குளிக்கப் போய் விட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமசாமி, யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் புகுந்தார். ஒரு சிக்கன் எலும்புத் துண்டை எடுத்து சோற்றுப் பானைக்குள் புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவராக வெளியே வந்து விட்டார்.
வீட்டில் பெரியவர்களுக்கு எல்லாம் உணவளித்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தார் நாகம்மை. சோற்றை இலையில் போடும் போது சோற்றுடன் எலும்பும் வெளியே வந்தது. அத்தையிடம் போய் முறையிட்டாள். குளித்து விட்டு வந்து மீண்டும் சமைத்து சாப்பிடுவது என்பது ஆகாத காரியம். அதனால் அன்றைய விரதம் முடிந்து போனது. தொடர்ந்து ராமசாமி இது போன்றே செய்து வர வெறுத்துப்போனார் சின்னதாயம்மையார். விரதமிருப்பதை நிறுத்தும்படி நாகம்மையை சொல்லிவிட்டார்.
நாகம்மைக்கான விரதம் தான் தடைபட்டது. சின்னதாய்யம்மையாரின் விரதம் தொடர்ந்தது. அதனால் நாகம்மை குளித்து மாமியாருக்கு சமைப்பார். சமையலறையில் வேலையாக இருக்கும் போது, உள்ளே புகுந்து ராமசாமி நாகம்மையை தொட்டு விடுவார். தீட்டு என்று மாமியார் சொல்லி விடுவார்களே என்று நாகம்மை போய் குளித்து விட்டு வருவார். இவர் மீண்டும் தொட்டு விடுவார். ஒரு வேளை சமையல் செய்து முடிக்கும் முன் பல முறை குளிக்க வேண்டிய நிலை.
நாகம்மை பார்த்தார் குளிக்காமல் இருந்தால் தானே இந்த பிரச்சனை என்று, கணவனை விரட்டிப் பிடித்து தண்ணீரை தலை வழியாக ஊற்றி விட்டு குளிக்க வைத்து விடுவார். அதன் பின், தானும் குளித்து சமையலறைக்கு போவார். காலையில் ராமசாமி தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு குடம் தண்ணீரை அவர் மீது ஊற்றி விட்டு தான் நாகம்மை குளிக்க கிளம்புவது வாடிக்கையானது.
மனைவியின் விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். அம்மாவைப் போலவே.. கோவிலுக்கு அடிக்கடி போகும் மனைவியை மாற்ற.., தன் மைனர் நண்பர்களின் உதவியோடு திட்டம் ஒன்றை தயாரித்தார்.
ஒரு சமயம் நாகம்மை கோவிலுக்கு போனார். அவரின் பின்னாலேயே வந்த ராமசாமி ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, தம் நண்பர்களை அனுப்பினார், “யாருடா இந்த தாசி.. அழகா இருக்காளே.. இவளை இதற்கு முன் பார்த்ததில்லையே.., புதுசா வேற தெரியிறா..” என்று நாகம்மையின் காதுகளில் விழும்படி அவர்களும் பேசினார்கள். இந்த காலிக்கூட்டத்தை கண்டு கோவிலில் இருந்த பிராமணப் பெண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட இல்லாது போனது.
நாகம்மை நடுங்கிப் போனார். இப்படி கோவிலில் தனியாளாக மாட்டிக்கொண்டோமே.. அடுத்து என்ன நடக்குமோ.. என்று அவருக்கு கலக்கம் உண்டானது. பயந்து போய் வேகமாக வெளியில் வந்தவரை எதிர் கொண்டு ஆறுதல் சொல்லி அழைத்துப்போனார் ராமசாமி. இங்கு வந்ததால் தான் இந்த கதி ஏற்பட்டதென்றும் ஒரு போடு போட்டார். நாகம்மைக்கும் அது சரி என்றே பட்டது. தாசிகள் நிறைந்த காலகட்டம் அது. தாசிகள் கோவில்களில் அடிக்கடி தென்பட்டு வந்த காலம் அது. அதனால்.. இந்த காலிக்கூட்டம் தன்னையும் தாசியாக நினைத்து, தவறாக பார்க்கிறது. அதுவும் கோவிலுக்கு வந்ததால் தானே.. என்று நினைத்தவர் கோவிலுக்குப் போவதை நிறுத்தினார்.
உள்ளுக்குள் மகிழ்ந்து போன ராமசாமி, அடுத்ததாக ஒரு திட்டம் போட்டார். இச்சமூகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த விசயங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பது அவரது சிறுவயது பழக்கம்.
அது போலவே பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதற்கு திருமணமும், அதிலும் அதை ஒட்டி பெண்களுக்கு மாட்டிவிடப்படும் தாலி என்ற பொருளும் மிக முக்கிய காரணமாக இருப்பதாக உணர்ந்திருந்தார். மிகவும் புனித பிம்பத்தை தாலிக்கு ஏற்படுத்தி வைக்கப் பட்டிருந்ததை பலரிடம் விமர்சித்து வந்தவர் ராமசாமி. தன்னுடைய மனைவியே இப்படியான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு என்னொவோ போலிருந்தது.
ஒருநாள் இரவில் நாகம்மையுடன் இருக்கும் போது தாலியை கழட்டி கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அவரோ மறுத்து முரண்டு பிடித்தார். சிரித்துக்கொண்டே ராமசாமி, “அம்மா, உன்னிடம் இது பற்றி ஏதும் சொல்லவே இல்லையா?” கேட்டார். நாகம்மையும் அப்பாவியாக “இல்லையே.., ஏங்க.. நீங்களே தான் சொல்லுங்களேன்” என்று ராமசாமியிடமே கேட்டார். இதைத்தானே எதிர்பார்த்தார்.
“கணவன் உடன் இருக்கும் போது தாலி தேவையில்லை. கணவன் வெளியூர் எங்காவது போகும் போது மட்டும் தாலி அணிந்தால் போடும்.” என்று ஒரு போடு போட்டார். நாகமையால் நம்ப முடியவில்லை. தாலியை கழட்டினால் கணவன் உடனே இறந்து விடுவான் என்று பயந்தார். ராமசாமி கட்டாயமாக அவர் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டினார். தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்றும்… அப்படி சொல்லப்பட்டு வருவது பொய் என்றும்.. தான் ஊரில் இருக்கும் சமயத்தில் தாலி தேவை இல்லை என்றும் அறிவுருத்தினார். அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய நாகம்மையும் தாலியை கழட்டி கொடுத்துவிட்டார். இவரும் வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டவர். பொழுது புலர்ந்ததும் அதே சட்டையை மாட்டிக்கொண்டு, கடைக்கு போய் விட்டார். காலையில் குளிக்கும் போது தான் நகம்மைக்கு தாலியின் நினைவு வந்தது. இப்படியே அத்தை பார்த்தால் நல்லா இருக்காதே.., ஏதாவது சொல்லிவிட்டால்.. கொஞ்சம் பயந்து போன நாகம்மை சேலையின் தலைப்பால் உடலை மூடிக்கொண்டார்.
சமையல் கட்டில் புகுந்து வேலைகளை கவனிக்கத்தொடங்கினார். மதியம் மாமன் வீட்டுக்கு வந்ததும் மறக்காமல் தாலியை வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டும். யாராவது பார்த்து விட்டால்.. வேறு வம்பே வேண்டாம். மனதிற்குள் தாலி குறித்த சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், சமயல் வேலைகளையும் கவனித்த படியே இருந்தார். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன? பூஜை அறையில் இருந்து சின்னத்தாய்யம்மையாரின் குரல் நாகம்மையை அழைத்தது.
“நாகா.. கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா”

4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!
அதுவரை இருந்த தைரியம் பொலபொலவென உதிர்ந்தது. நாகம்மை, ஏற்கனவே வசதி குறைவான இடத்திலிருந்து வந்தவள் என்ற எண்ணம் சின்னத்தாய்யம்மையாரின் மனதில் இருந்தது. இப்போது தாலி இல்லாமல் எப்படி போய் நிற்க முடியும். அத்தையின் கண்களில் தன் கழுத்தின் மேல் விழுந்துவிட்டால்.. ஆகாத மனுசி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம் என்ற சொலவடை போல.. மருமகளாக வந்து விட்ட போதிலும் இன்னும் மாமியாரின் முழு அன்பை பெறவில்லை.
இந்நிலையில் மாமியார் சொல்லாத விசயத்தை, கணவன் பேச்சை மட்டும் கேட்டு, தான் தாலி கழட்டி கொடுத்தது தெரிந்து போனால்.. தன்னையும் மாமனைப் போல குடும்பத்துக்கு ஆகாதவள் என புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் வந்து மனதில் அமர்ந்துகொண்டது.
புடவையின் தலைப்பை எடுத்து தோளில் சுற்றிக்கொண்டார். கைகளை கழுவி, பித்தளைச் சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றார் நாகம்மை. விஷ்ணு சகஸ்கரநாமம் பாராயணம் செய்துகொண்டிருந்த சின்னத்தாய்யம்மையார் பஞ்சபாத்திரத்தை முன்னுக்கு நகர்த்தி அதில் நீர் ஊற்றும்படி சைகை சொல்லி நிமிர்ந்து பார்த்தார்.
வழக்கத்திற்கு மாறாக மிகுந்த பக்தியுடன் போர்த்தி மூடி மருமகள் நிற்பது வித்தியாசமாகப் பட்டது. குனிந்து நீரை ஊற்றிய மருமகளிடம் சைகையாளே கேட்டார் என்ன ஆயிற்று என்று, ஒன்றும் இல்லைனென நாகம்மையும் சைகையிலேயே பதில் சொல்ல.. கண்களை மூடி பெருமாளை சேவித்துவிட்டு, பாராயணம் செய்து கொண்டிருந்த நூலை மூடி வைத்தார் சின்னத்தாயம்மை.
ருத்ரணியில் நீர் எடுத்து பெருமாள் படத்துக்கு முன் வைத்திருந்த பிரசாதத்தை சுற்றி.. நீரை ஓரமாக கீழே கொட்டினார். பிரசாதத்தை நைவேத்தியம் செய்தாயிற்று.
“என்ன ஆச்சு நாகா, என்ன இப்படி இழுத்து போர்த்திகிட்டு நிக்குற..?”
“ஒ…ஒன்னுமில்ல அத்தை.. சும்மா தான்…” தயங்கித் தயங்கி பதில் வந்தது.
“என்னது சும்மாவா.. அப்படி எல்லாம் போர்த்தக்கூடாது.. ஒழுங்கா போடு முந்தானையை” என்று சொல்லவும்.. நெளிந்தார் நாகம்மை. என்னத்துக்கு இப்போது இவள் இவ்வளவு சங்கடப்படுகிறாள். சந்தேகம் தோன்றியது. பலகையில் இருந்து எழுந்த சின்னத்தாயம்மை, அவரே மருமகளின்
புடவையை சரி செய்தார். கழுத்து மூளியாக இருந்தது. ‘அய்யோ.. என்னடி இது கழுத்து காலியா கிடக்கு.. தாலியைக்காணோம்.., தாலிக்கொடி எங்கே..’ என்று மாமியார் சத்தம் போடவும்.. வீட்டில் இருந்த எல்லா பெண்களும் பூஜை அறையை நோக்கி ஓடி வந்தார்கள்.
நாகம்மைக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. எல்லா காரியங்களிலும் தனக்கு
சம்பிரதாயத்தை சொல்லிக்கொடுத்த மாமியாருக்கு.. இந்த தாலி விசயம் தெரியாமலா இருக்கும். அல்லது தான் தாலியை தொலைத்து விட்டதாக நினைத்துக்கொண்டாரா.. எதற்காக இப்படி சத்தம் போடுகிறார். வேகமாக பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் நாகம்மை.
கேக்குறதுக்கு பதில் சொல்லீட்டு போடீ.. நில்லுடி! - துரத்திக்கொண்டு வந்தார் சின்னத்தாய்யம்மையார். தலைகுனிந்த படி நின்றார் நாகம்மை. ‘பதில் சொலுடீ..’ அமைதியாக நின்றார். எல்லாபெண்களும் தன்னை உற்று நோக்கிவதை உணர்ந்த நாகம்மைக்கு வெட்கமாக இருந்தது. ‘இப்ப நீ சொல்லப்போறியா இல்லையா..எவ்வளவு பெரிய காரியத்தை செஞ்சுட்டு.. இப்படி நின்னா என்னடி அர்த்தம்’ வேறு வழி இல்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். மாமியார் விடுவதாக இல்லை.
“அத்தை தாலியை அவர்கிட்ட கழட்டி கொடுத்திருக்கேன்.” “என்னது.. கழட்டிக் கொடுத்துறிக்கியா.. ஏண்டீ.. என்ன ஆச்சு?” சின்னத்தாய்யம்மையாரின் குரலில் அதிர்ச்சியும் பதற்றமும் இருந்தது.
என்னத்துக்கு இவ்வளவு பதட்டமடைகிறார். மாமன் கிட்ட கொடுத்ததற்கா..! ‘என்ன அத்தை.. தெரியாத மாதிரி கேக்குறீங்க.. புருசன் பக்கத்துல இருக்கும் போது தாலி என்னத்துக்கு? அவர் வெளியூர் போகும் போது மட்டும் போட்டுகிட்டா போதாது?’
மாமியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பதினான்கு வயதான நாகம்மைக்கு தாலியின் பெருமையை தெரியவில்லையா.. அல்லது இவளும் ராமசாமி மாதிரி ஏதாவது காரியங்களில் ஈடுபடுகிறவளா.. அதனால் தான் இவளையே மணப்பேன் என்று அவன் அடம் பிடித்தானா.. ஏகப்பட்ட கேள்விகள் வேகமாக மனதில் தோன்றின. ‘என்னடி சொல்லுற..?’
‘அத்தை.. தாலிங்கிறது என்ன.. புருசனைப் போன்றது இல்லையா.. நிஜ புருசனே பக்கத்துல இருக்குறப்போ.. தாலி என்னத்துக்கு? புருசன் பக்கத்தில் இல்லாதப்பத் தான் தாலியை போட்டுக்கிடனும். அவர் பக்கத்துல இருக்கிறப்போ.. அது தேவை இல்லை. அதனால தான் கழட்டி கொடுத்துட்டேன். இந்த சம்பிரதாயம் உங்களுக்கு தெரியாததா என்ன..?’ மாமியாருக்கே அறிவுறை சொன்ன திருப்தி. சுற்றி நின்ற பெண்களுக்கும் சின்னத்தய்யம்மையாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
‘என்னடீ சொல்ற.. இது யார் சொல்லிக் கொடுத்த சம்ரதாயம்?’ கோபமாக வந்தது கேள்வி. ‘வேற யாரு.. அவரு தான்’ என்று வெட்கப்பட்டு சொன்னார் நாகம்மை. ‘அது
சரி..புருசனுக்கு ஏற்ற பொண்சாதி தான்’ என்று எல்லோரும் சிரித்தனர். எல்லாம் தன் தவறுதான்.. எல்லா விசயங்களையும் தெளிவாக சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். இப்படியான குதர்க்கமான திட்டங்கள் எல்லாம் அவன் தான் போடுவான். இப்படியே போனால்.. மருமகளையும் அவனைப் போலவே மாற்றி விடுவான். வீட்டு வேலைகளை மற்றப் பெண்களிடம் கொடுத்து விட்டு.. நாகம்மைக்கு அறிவுரை கொடுக்கத்தொடங்கினார் சின்னத்தாய்யம்மையார்.
கடையை முடித்து இரவு வீட்டுக்கு வந்ததும்.. கணவன் இறந்தால் மட்டும் தான் தாலியைக் கழட்ட வேண்டுமாம்.. அபசகுணமாக நான் தாலியை கழட்டியதால் உங்களுக்கு ஏதேனு நடந்து விட்டால்..என்று கணவனிடம் சண்டைக்குப் போனார் நாகம்மை. காசுமாலை, மோதிரம், ஒட்டியாணம், கொலுசு மாதிரி தாலியும் ஒரு ஆபரணம் அவ்வளவு தான். மற்றபடி அதற்கு தனியாக எந்த சக்தியும் கிடையாது.. அதை நீ போட்டாலும் போடாவிட்டாலும் எனக்கு ஒன்னும் ஆகிடாது என்று விளக்கம் கொடுத்தார் ராமசாமி. ஆனாலும் நாகம்மைக்கு மாமியார் அடித்த வேப்பிலை தான் வேலை செய்தது. தாலியை வாங்கி அணிந்து கொண்டார்.
ராமசாமிக்கு மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நாகம்மை கருவுற்றார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தது குடும்பம். கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். தனக்கு வாரிசு உருவாகி விட்ட மகிழ்ச்சியில் ராமசாமி நண்பர்களுக்கு அடிக்கடி மதுவிருந்து கொடுத்துவந்தார்.
பிரசவ நேரம் நெருங்கியது. அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தார் நாகம்மை.
நல்ல நிறத்தில்.. அம்மா நாகம்மையை அப்படியே அச்சு வார்த்தது போல இருந்தது குழந்தை. அந்த பிரசவத்தில் மிகவும் களைப்பாகிப் போய் இருந்த நாகம்மையைப் பார்த்த ராமசாமி ஒரு முடிவுக்கு வந்தார். அடிக்கடி பிள்ளை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விசயம். இந்த ஒரு பிரசவத்திலேயே நாகம்மை மிகவும் களைத்துப்போய் விட்டார். போதும்.. ஒருகுழந்தை போதும். இந்த குழந்தையை எந்த குறையுமின்றி நன்கு வளர்க்க வேண்டும்.
இப்போது இருப்பது போன்ற மருத்துவ வசதிகள் அந்த காலத்தில் கிடையாது. நிறைய நோய்களுக்கு மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்படாத காலம் அது. என்ன மருந்து.. என்ன நோய் என்று கண்டு பிடிப்பதே அப்போதெல்லாம் குதிரைக்கொம்பான விசயம் தான்.
அப்படி ஒரு நோய்.. ராமசாமியின் மகளை ஆறாவது மாதத்தில் தாக்கியது.

5. ஈரோட்டுக்கு குட் பை!



என்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.. அச்சிசுவின் சிரிப்பு, அதன் கண்கள், முகச்சாயல் என எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்த கணம்.. எல்லாம் சேர்ந்து மனதை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. குழந்தையின் இழப்பை நினைத்து துவண்டு போய் இருக்கும் நாகம்மையின் முன்னால் தனது சோகத்தை காட்டிக்கொள்ளக்கூடாது என்று ராமசாமி முடிவுக்கு வருகிறார். தன் வருத்தங்களை மறைத்து துணைவியாருக்கு ஆறுதல் சொல்கிறார்.
எத்தனை ஆறுதல் சொன்னாலும் இழப்பின் வலி பெரியது இல்லையா..? தொலைந்து போன பொருளா திரும்ப கிடைத்து விடும் என்று நம்பிக்கை கொள்வதற்கு..? உயிர் ஆயிற்றே.. அதுவும் தன் வயிற்றில் சுமந்து, உள்ளிருக்கும் உயிருக்கு இது ஆகாது இது ஆகும்.. என்று பார்த்து பார்த்து உணவருந்தியதெல்லாம் வீணாகிப்போனதே.. பட்டுப்போன்ற பிஞ்சு உயிரை இதே கையில் தூக்கி எத்தனை முறை உச்சிமோந்திருப்பேன். இனி அந்த சுகம் எப்போது வாய்க்கும். வலி நோக பெற்றெடுத்தது மண்ணுக்கு தாரைவார்க்கத்தானா.. மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எதிலும் நாட்டமற்றுப் போனது. வெறித்த பார்வை. வீட்டின் கூடத்து தூணிலும், சமையலறையின் புகையேறிய சுவற்றிலும் சாய்ந்து உட்காந்துகொள்ளுதல் வாடிக்கையாகிப் போனது.
பிள்ளையை இழந்தவளை இப்படியே விட்டு விடுமா சொந்தங்கள். தொடர்ச்சியாக ஆறுதல் கூறினார்கள். மகவை இழந்த பல தாய்மார்களின் கதைகள், சிசுவிலேயே இறந்து பிறந்த குழந்தகைகள் பற்றிய செய்திகள் என்று நாகம்மையை தேற்றுவதற்கான பல வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு.. கதைகளாக அவருக்கு சொல்லப்பட்டது. ஆயினும் சில மாதங்கள் துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தார் நாகம்மை.
இந்த சமயத்தில் வீட்டுக்கு வந்து சோகமா இருக்கும் மனைவியையும் மற்றவர்களையும் பார்த்துக்கொண்டு இருக்க பிடிக்காமல்.. ஆற்றுமணலில் நண்பர்களுடன் கூடி அரட்டைக்கச்சேரி, மது விருந்து என்று நேரத்தை செலவிட்டு விட்டு தாமதமாக வீடு வந்து சேரலானார் ராமசாமி. நண்பர்களுடனான விவாதத்தில் தனது பகுத்தறிவு கருத்துக்களை கூர்தீட்டிக்கொண்டார்.
குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருந்ததால் தான் பலர் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களில்
தான் அறிந்த வரை எல்லா மனிதர்களும் தன்னைப்போல பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்து, திருமணம், குழந்தைகள் என்றான பிறகு தான் பின் வாங்கி இருக்கிறார்கள் என்பதும், இது மாதிரி உறவுச்சிறைக்குள் மாட்டிக்கொள்ளாத வரை தன் நண்பர்கள் எல்லோருமே மாற்றுச்சித்தனையுடன் தான் இருந்திருக்கிறார்கள், குடும்பம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு இச்சமூக சக்கரத்தை சுற்றும் செக்கு மாடுகள் போல மாறியிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார் ராமசாமி. நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தாலும் ராமசாமி குடிப்பதில்லை. அதற்கொரு காரணமும் இருந்தது. சாதாரணமான நிலையில் தன் கருத்துக்களை ஆமோதித்து பேச மறுத்தவர்கள் எல்லாம் குடிபோதையின் உண்மைகளை, தன் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அவர்கள் பேசியதும், அவர்களுக்குள் இருந்த புராண புரட்டுகள் குறித்த கேள்விகளையும் தனது தேடலுக்கான துவக்கத்தை நண்பர்களிடத்திலேயே தொடங்கினார்.
கிருஷ்ணசாமியின் குழந்தைகளையும் அடுத்த பக்கத்து வீட்டு குழந்தைகளையும் கொஞ்சுவதில் சிறிது ஆறுதல் அடைந்தது நாகம்மையின் மனசு. நாட்கள ஆக ஆக பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலானார். ராமசாமி ஆற்றுமணலில் அடிக்கும் கூத்து வீட்டுக்கு செய்தியாக வந்து விடும். இரவு தாமதமாக வீட்டுக்கு வரும் கணவரை ஊதிக்காட்டச்சொல்லி வற்புறுத்துவார் நாகம்மை. ஆனால்.. ராமசாமியோ ஊதிக்காட்டாமல் வாயை மூடிக்கொண்டு முரண்டு பிடிப்பார். வேறு வழி இன்றி ராமசாமியின் மூக்கை இறுக்கப்பற்றிக்கொள்வார் நாகம்மை. சில நிமிடங்களிலேயே மூச்சு விடுவதற்காக வாயைத்திறந்து தானே ஆகவேண்டும். இப்படியே தினமும் சோதனை போட்டுவந்தார் நாகம்மை. பழைய குறும்புத்தனமான நாகம்மையாக அம்மையார் இயல்புக்கு மாறி வருவது ராமசாமிக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மாமியார் மற்றும் அடுத்தவர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்த குழந்தை குறித்து ராமசாமியிடம் பேசினார் நாகம்மை. ஆனால்.. இனி குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார் அவர். ஒரே ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ளுவோம் என்ற நாகம்மையின் ஆசையை மறுதலித்தார் ராமசாமி. பெற்றால் தான் பிள்ளையா.. நமக்கு இருக்கும் சொத்து பத்துக்கு நூறு குழந்தைகளை நாம் தத்து எடுத்து வளர்க்க முடியும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். கணவரின் பிடிவாத குணம் பற்றி அறிந்திருந்த நாகம்மை அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்ளுவது குறித்து அவரிடம் பேசவே இல்லை.
ராமசாமியின் கவனம் முழுவதும் வியாபரத்திலேயே இருந்தது. வியாபரமும் பெருக ஆரம்பித்தது. பணம் சேரச்சேர.. பெரும் செல்வந்தர்களின் சேர்க்கையும் அதிகரிக்கத்தொடங்கியது. மிராசுதார்கள், ஜமீந்தார்கள், அரசு உயர்பதவியில் இருப்பவர்கள் எல்லாம் ராமசாமியைத் தேடி வரலானார்கள். இவர்கள் எல்லாம் மதுபழக்கம் உள்ளவர்கள். குடிக்கும் பழக்கம் ராமசாமிக்கு இல்லாது போனாலும் தினம் நான்கைந்து பாட்டில் பிராந்திக்கு ஆடர் செய்வார். அந்தகாலத்தில் மாதம் இதற்கென குறைந்தது ஐம்பது ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்.
நிலவொளி காலம் வந்தால்.. இவர்களின் சந்தோசத்திற்காக விலைமாதர்களையும் ஆற்றுமணலுக்கு வரச்சொல்லி விடுவார் ராமசாமி. கடைச்சாவியை வீட்டிற்கு கொடுத்து விட்டு ஆற்றுமணலுக்கு வந்து விடுவார். ஆட்டம் பாட்டம் என்று இரவுப் பொழுது முழுவதும் கேளிக்கையாக ஆற்றுமணலிலேயே போகும். அந்த சமயங்களில் இரவு உணவு ராமசாமியில் வீட்டிலிருந்து தான் வரும். மாமனார்,மாமியாருக்குத் தெரியாமல்.. உணவு சமைத்து பின்வாசல் வழியாக வண்டியில் அனுப்பி வைப்பார் நாகம்மை. பல சமயங்களில் காலையில் வீட்டுக்கு வந்து கடைச்சாவியை வாங்கிக்கொண்டு கடைதிறக்கப் போய் விடுவார்.
நண்பர்களுக்காக இப்படி செலவு செய்தாலும் சிக்கனத்தை வீட்டில் கடை பிடிக்கச் சொல்லி வற்புறுத்துவார். காபியில் திக்காக இருக்கும் பாலுக்காகவும், சாப்பாட்டில் கூடுதலாக சமைக்கப்பட்ட பதார்த்தத்திற்காகவும் பல சமயங்களில் குறைபட்டுக்கொள்வார். காபி என்பது சூடாக குடிக்க ஒரு பாணம் அவ்வளவு தான். எடைகட்டாமல் பால் சேர்க்க வேண்டும் என்பதில்லை. நாம் குடிக்கத்தான் என்றாலும் இவ்வளவு கெட்டியான பாலாக இருக்கக்கூடாது. அதில் தண்ணீர் கலந்தால்.. கூடுதலாக கிடைக்குமே என்றும், சாதம், ஒரு குழம்பு, ஒரு கரி போதும் என்று அடிக்கடி தன் சிக்கனத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இந்த சமயத்தில் தான் தன் கருத்துக்களை வெறும் பேச்சுடன் நிறுத்திக்கொள்ளாமல்.. செயல்களிலும் காட்டலானார். பஜனை நடக்கும் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து தம் கருத்துக்களை கேள்வியக வைப்பதும், அச்சமயத்தில் மிக உயர்ந்த குடிகளாக மதிக்கப்பட்ட பார்ப்பனர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை தொட்டு விடுவதும் என்று ஏகப்பட்ட செயல்களை செய்யலானார். ஒரு பக்கம் இவரோடு இது போன்ற காரியங்களில் ஈடுபடும் காலிக்கூட்டம்(இது தமிழர் தலைவர் நூலில் சாமி.சிதம்பரனார் பயன்படுத்திய சொல்லாடல் பக்கம்-48), இன்னொரு புறம் அரசாங்க அதிகாரிகள், மிராசு,ஜமீந்தார்கள் என்று செல்வந்தர்களின் கூட்டம். ராமசாமியின் சேட்டைகள் அதிகரிக்கத்தொடங்கி இருந்தது.
வெங்கட்டருக்கு தகவல் வந்தது. ராமசாமியை அழைத்து சத்தம் போட்டார். எப்போதும் மவுனமாக இருக்கின்ற ராமசாமி தந்தையை எதிர்த்து பேசினார். தன் சந்தேகங்களுக்கு விடை தெரியாதவரை தனது இப்போக்கை மாற்றிக்கொள்ள முடியாது என்று உறுதியாக கூறினார். எப்போதும் தன்னிடம் மட்டுமாவது அமைதியாக இருக்கும் மகன் இப்போது எதிர்த்து பேசும் அளவுக்கு வந்து விட்டானே.. மற்றவர்களை வேண்டுமானால் அவன் தன் வாதத்திறமையால் வெற்றி பெற முடியும். தன்னிடம் அது நடக்குமா.. வெங்கட்டரும் விடவில்லை. தொடர்ந்து எதிர்ந்து வந்த ராமசாமியின் போக்கு பிடிக்காமல் கடுமையான சண்டையாகிப்போனது இருவருக்குள்ளும். வார்த்தைகள் தடித்து விழுந்தது. வீட்டில் இருந்த எல்லா உறவுகளுக்கும் ராமசாமியை அடக்க.. வெறுத்துப்போய் அமைதியானர்.
தன் எண்ணங்களை.. தன் விருப்பப்படி சொல்லவோ, செயல்படவோ விடாத வாழ்க்கை மீது வெறுப்பு தோன்றியது. இங்கே இருந்து கொண்டு இப்படி தினம் தினம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விட தேசாந்திரம் போய் விடலாம் என்ற எண்ணம் அதிகமானது. தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தனக்கு விருப்பமான படி வாழ்க்கையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
தேசாந்திரம் என்பது குடும்பம் குட்டி போன்ற உறவுகளையும், பணம், பொன், போன்ற பொருள் உடைமைகளையும் உதறிவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது. அதுவும் அந்த காலகட்டத்தில்.. வடக்கு நோக்கி செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தானும் வடக்கு நோக்கி போய் விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. வடக்கு என்றால் எங்கே போவது என்ற குழப்பம் வந்தது. ஏன் குழம்ப வேண்டும் எல்லா சன்நியாசிகளும் காசி காசி என்று பாராயணம் செய்யும் வாரணாசிக்கே போய் விடுவது என்ற பதிலும் உடனே கிடைத்தது.
வாரணாசிக்கு போனதில்லையே தவிர அந்த நகரின் பெருமையைப் பற்றி, புரோகிதர்களும், பண்டாரங்களும் சொல்ல கேட்டிருந்தார். உலகில் பிறந்த எல்லா மனிதனின் பாவங்களை போக்கும் புனித கங்கை அங்கே தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியில் வாழும் மனிதர்கள் அங்கே தான் இருக்கிறார்கள். அந்நகரில் இறந்தால் நேரடியாக சொர்க்கத்துக்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். பாவங்கள் இல்லாத நகரம் அது. இப்படி எத்தனையோ பெருமைகளை சொல்லி கேட்டிருக்கிறார் ராமசாமி.
ஆனால்.. நிசத்தில்.. அந்த அனுபவமும், அந்த நகரும் எப்படி இருந்தது?

6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி

ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி போகப்போகிறோம். தனியாளாகப் போய் அவதி படுவதைக்காட்டிலும் கூட்டுக்கு ஆள் இருந்தால் சிரமம் தெரியாது. அவரின் அழைப்பை ஏற்று, உடன் வர சம்மதித்தவர்கள் இருவர்.
ஒருவர் ராமசாமியின் தங்கையின் கணவர். மற்றொருவர் நணபர். மூவருமாக ஈரோட்டை விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரணாசி போகும் ரயிலைப் பற்றி விசாரித்தார்கள். அதிக நேரமிருந்தது. அருகிலேயே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். பயணக்களைப்பு நீங்க குளித்து, புத்துணர்ச்சியாகி வெளியே சாப்பிட வந்தார்கள் மூவரும்.
கையில் காசு இருந்தது. நல்ல கடையாக தேடி அலையும் போது தான் அவரைப் பார்த்தார்கள். ஈரோட்டுக்காரர் ஒருவர் சாலையின் எதிரில் இருந்த கடை வாசலில் நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். வெங்கட்டர் அனுப்பிய ஆளாக இருக்குமோ என்ற பயன் இவர்களைத் தொற்றிக்கொண்டது. ஊரை விட்டு வந்த இந்த இருபத்தி நாலு மணிநேரத்தில் தாங்கள் காணமால் போன செய்தி எத்தனை பேருக்கு சொல்லப்பட்டதோ.. எத்தனை இடங்களில் இவர்களைத் தேடி ஆட்கள் அலைகிறார்களோ.. சாலைக்கு அந்த பக்கம் நிற்கும் நபர் கூட தங்களைத் தேடி வந்தவராக இருக்குமோ.. ஏகப்பட்ட குழப்பங்கள் தோன்றி மறைந்தன.
அவர் கண்ணில் பட்டுவிடாமல் இவர்கள் நழுவினாலும், உள்மனதில் பயம் இருந்து. பின்னால் எவர் நடந்து வந்தாலும் சந்தேகத்துடனே பார்க்க வேண்டி இருந்தது. எதிரில் கடந்து போகிறவர்களியும் ஈரோட்டுக்காரராக இருக்கக்கூடுமோ என்ற அச்சத்தினூடாகவே கடந்து போக வேண்டி இருந்தது. ஒருவழியாக உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பிய பின்னும் பதட்டம் குறையவில்லை.
இப்படியான மனநிலையிலையே நாட்களை நகர்த்த முடியாது என்று முடிவுக்கு வருகின்றனர் மற்ற இருவரும். தங்களின் எண்ணத்தை ராமசாமியிடம் சொல்லிப்பார்த்தார்கள். ஊருக்கு திரும்பிப் போய் விடுவது என்று அவர்களின் முடிவு ராமசாமிக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவர் திரும்பவும் ஈரோட்டுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார். இவர்களும் விடாமல் வாதம் செய்து பார்த்தார்கள். பயனில்லை. ராமசாமி தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இருவரையும் சென்னையிலேயே விட்டு விட்டு தனியாளாக ரயில் ஏறினார் ராமசாமி. அவர்கள் ஈரோட்டுக்கு திரும்பி விட்டார்கள். பெஜவாடா என்று அழைக்கப்பட்ட அறைய விஜயவாடா நகரத்தின் வந்து இறங்கினார் ராமசாமி. அங்கு தான் வெங்கட்டராமைய்யர் என்ற சமஸ்கிரத பண்டிதர், கணபதி அய்யார் என்ற கிராம முன்சீப் அறிமுகமும் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் இவரைப் போலவே காசி செல்ல திட்டமிட்டு வந்திருந்தவர்கள். சரி.. காசி போய்ச் சேரும் வரை பேச்சுத்துணைக்காவது ஆள் கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர்களின் வழிகாட்டுதலின் படியே சென்று காசி போய் விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. ஆனால்.. அவர்கள் இருவரும் கையில் தம்படி காசு இல்லாமல் இருந்தார்கள். ராமசாமியோ.. தங்ககாப்பு, காதில் கடுக்கண், கழுத்தில் தங்கச்சங்கிலி, இருப்பிலும் கூட தங்கத்தில் அரைஞாண் என்று ஒரு நடமாடும் நகைக்கடை போல இருந்தார். இப்படி இருந்தால் காசி போய் சேருவதற்குள்ளாக எல்லாவற்றையும் விற்றுத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். எதுவும் இல்லாமல் இவர்களால் காசிக்கு போகும் போது தன்னால் மட்டும் அது முடியாமலா போய் விடும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லா நகைகளையும் கழட்டி ஒரு சின்ன துணியில் மூட்டையாக கட்டி இருப்பில் பத்திரப்படுத்திக்கொண்டார். அங்கிருந்து ஐத்ராபாத் போய்ச் சேர்ந்தார்கள். வழி நெடுக பரஸ்பர அறிமுகமும் ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்களிருவருடனும் கருத்து வேறு பாடு கொண்டிருந்தார் ராமசாமி. அவர்கள் பாவத்தை தொலைத்து புனிதம் தேடி காசிக்கு போகிறவர்கள். இவரோ.. வீட்டின் கண்டிப்பில் வெறுப்புற்று சுதந்திரமாக வாழ காசியைத்தேர்வு செய்திருந்தார்.
ஐத்ராபாத் போய் சேர்ந்ததும்.. வீதிகளில் பிச்சை எடுக்கத் தயாரானார்கள் அய்யர்கள் இருவரும். ராமசாமிக்கு முதலில் தயக்கமாக இருந்தது. சத்தரத்திலேயே இருந்து விடுகிறேன். நீங்கள் போய் பிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தங்கி விட்டார். இவரின் பொறுப்பில் பொருட்களை வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டார்கள். மாலையில் அவர்கள் திரும்பி வந்ததும் பிச்சை எடுத்த அரிசி கொண்டு சமையல் செய்து சாப்பிட்டார்கள். ராமசாமியை அழைக்க வில்லை. ஆனால் பசி யாரை விட்டது. எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்த போதும் வயிற்றுக்கு வித்தியாசம் தெரியாதே.. ராம்சாமி அவர்களிடம் பசிக்கிறது என்றார். பிச்சை எடுக்க வராததினால் சோறு போட மறுத்தார்கள் அவர்கள். மறுநாள் கண்டிப்பாக வருவதாகக் கூறிய பின்னரே ராமசாமிக்கு உணவு அளிக்கப்பட்டது.
நேற்றைய போல இன்றும் சும்மா இருந்து விட முடியாது. மனதை தயார் செய்து அய்யர்களுடன் பிச்சைக்குச் சென்றார். மூவரும் சேர்ந்து சுற்றியதில் பிச்சைப் பொருட்கள் சீக்கரமே கிடைத்து விட்டது. சத்திரத்திற்கு திரும்பி கிடைத்த பொருட்களைக் கொண்டு சமையல் முடித்து, உணவருந்திய பின்னும் நேரம் பிச்சமிருந்தது. சத்திரத்தின் பெரிய திண்ணையில் அமர்ந்து கொண்டு வெங்கட்டராமய்யார்.. சமஸ்கிரத மொழியில் புராணத்தில் உள்ள அதிசியங்களை புகழ்ந்து சொல்லத்தொடங்கினார். அதை தமிழில் மொழிபெயர்த்து ராமசாமிக்கு சொன்னார் கணபதி அய்யர். கேட்டுக்கொண்டிருந்த ராமசாமியால் சும்மா இருக்க முடியாமல் தன் வழக்கமான பாணியில் எதிர் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதோடு புராணங்களில் இருக்கும் புரட்டுக்களைச் சொல்லியும் கிண்டல் செய்து வந்தார்.
இதே வழக்கம் தினமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ராமசாமியின் மதிநுட்பத்தை அய்யர்கள் இருவரும் ரசித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தினம் இவர்கள் இப்படி பிரசங்கம் நடத்துவதும் அதை எதிர்த்து ராமசாமி எதிர்பிரசங்கம் நடத்துவதையும் அப்பகுதியில் இருந்த தமிழர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கலானார்கள். அப்படி வேடிக்கை பார்ப்பதோடு சும்மா இருந்து விடாமல் சில்லரைகளை கொடுத்து விட்டு சென்றார்கள். இவர்கள் மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தினம் அலைந்து திரிந்து வீடு வீடாக பிச்சை எடுப்பதை விட இப்படி பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தாலே காசி போவதற்கான காசு சேர்த்து விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் பிச்சை எடுப்பதை நிறுத்த வில்லை. சாப்பிடுவதற்கு கிடைக்கும் காசை செலவளிப்பதை விட நாலு தெருவுக்கு போய் பிச்சை எடுத்து சாப்பிட்டு விடுவது உத்தமம் என்று தோன்றியது.
இவர்களின் தர்க்கத்தை காண தினம் மாலை வேலைகளில் சத்திரத்தில் மக்கள் கூடுவது வாடிக்கையாகி விட்டது. காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளை அய்யர்கள் சொல்லுவதை, தன் தர்க்க திறமையால் கேள்விகளால் திறனச்செய்யும் ராமசாமியை மக்களுக்கு பிடித்துப் போனது. வேடிக்கை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தில் ஐத்ராபாத் சமாஸ்தானத்தின் ரெசிடென்சி ஆபிசில் தலைமை குமஸ்தாவாக இருந்த காஞ்சிபுரம் முருகேச முதலியாரும் ஒருவர்.
ராமசாமி பேசும் முறையும், விவாதிக்கும் தன்மையும் முருகேச முதலியாருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது. மூவரையும் தன் வீட்டில் சில நாட்கள் வந்து தங்கும் படி வேண்டினார். இவர்கள் தயங்கவே.. தன் வீட்டுப்பெண்கள் எல்லோரும் ஊருக்கு போய் இருப்பதால் தான் மட்டும் தனியாக இருப்பதால் கூச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதோடு இனி பிச்சை எடுக்காமல் தன் வீட்டில் இருக்கும் தானியங்களைக்கொண்டு சாப்பாடு சமைத்து தனக்கும் போட்டு விட்டு, நீங்களும் சாப்பிடலாம். பின் வழக்கம் போல தர்க்கத்தில் ஈடுபடலாம் என்றும் வேண்டிக்கொண்டதால் மூவரும் அவர் வீட்டிற்கு இடம் மாறினார்கள்.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே அப்படி அந்த அய்யர்களால் சும்மா இருக்க முடியவில்லை. முருகேச முதலியார் அலுவலகம் சென்ற பின், ராமசாமியை அழைத்துக்கொண்டு பிச்சைக்கு சென்று விடுவார்கள். மாலையில் முதலியார் வீடு வருவதற்குள்ளாகவே திரும்பி விடுவார்கள். ஒரு நாள் சமையால் அறைக்குள் வந்த முதலியார் பலரக ஆரிசிகளும், ஐத்ராபாத் செப்பு காசுகளும் இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க, ராமசாமி விசயத்தை சொன்னார். காசி போவதற்கு தங்களுக்கு பணம் தேவை என்று அவர்கள் சொல்லவும்.. ஐத்ராபாத்திலிருந்த தமிழ் உத்தியோகஸ்தர்களிடமிருந்து இரண்டு மூன்று ரூபாய் வசூல் செய்து கொடுத்தார் முதலியார்.
அதோடு நில்லாமல் எஞ்சினியர்கள், வியாபாரிகள் வீடுகளுக்கு அழைத்துச்சென்று கதா காலச்சேபம் செய்ய வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுத்தார். இவர்களுக்கு ஐத்ராபாத் தமிழர்கள் மத்தியில் நல்லா கிராக்கி ஏற்பட்டது. ரங்கநாதம் நாயுடு என்பவர் வீட்டில் தினசரி காலட்சேபம் நடத்த ஆரம்பித்து விட்டார். அய்யர்கள் சமஸ்கிரதத்திலும், தமிழிலும் சொல்லும் ராமாயண, பாரத இதிகாச கதைகளை தெலுங்கில் சொல்லுவது ராசாமியின் வேலையாக இருந்தது.
வெறும் மொழிபெயர்ப்பாளனாக மட்டும் செயல்படாமல்.. அவர்கள் சொல்லும் கதைகளின் ஊடாக தன் கைச் சரக்கையும் கேள்விகளாய் ராமசாமி அவிழ்த்து விட்டார். உணையைச் சொல்ல வேண்டுமெனில் ராமசாமியின் பேச்சு மொழிபெயர்ப்பாக இல்லாமல் அவரின் சொந்த சரக்காகவே இருந்தது. மக்களிடம் மொழி பேதமின்றி இந்த குழு பிரபலமடைந்தது. வருமானமும் பெருகியது. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
போதிய அளவு காசு சேர்ந்ததும் காசி செல்லும் திட்டத்திற்கு தயாரானார்கள். ஆனால் ஐத்ராபாத் நண்பர்கள் இவர்களைத் தடுத்துப் பார்த்தார்கள். முதலியார் ராமசாமியை தனியே அழைத்து அந்த அய்யர்களுடன் போகவேண்டாம் என்று சொன்னார். ராமசாமி மறுக்கவே.. சரி.. எப்போது உனக்கு என் உதவி தேவைப்பட்டாலும் தகவல் தா.. உதவத்தயாராக இருக்கிறேன். பயப்படாமல் போய் வா.. என்று கூறினார்.
முருகேச முதலியார் மேல் சந்தேகத்துடன் இருந்த ராமசாமிக்கு அவரின் வார்த்தைகளுக்கு இதமானதாக இருந்தது. தன்னிடமிருந்த எல்லா நகைகளையும் முருகேச முதலியார் வசமே கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும் படி சொன்னார். நகைகளை சீட்டெழுதி தன்னிடம், ஒரு படியும், முருகேச முதலியாரிடம் ஒரு படியும் கொடுத்தார். ஒரே மோதிரத்தை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டார். அதையும் கருப்பு கயிறு அரைஞாணில் கட்டிவைத்துக்கொண்டார்.
டிக்கேட் எடுக்காமலேயே காசி போய் விடலாம் என்ற அவர்களின் பேச்சை மறுத்து இருந்த பணத்தில் மூவருக்கும் கல்கத்தாவுக்கு டிக்கேட் எடுத்துக்கொண்டார் ராமசாமி. அப்படியும் நூறு ரூபாய் மிச்சமிருந்தது. அதை கலகத்தாவில் தாராளமாக செலவளித்தார்கள். முதலீடு போடாமல் சம்பாதிக்கும் கலையைத்தான் ஐத்ராபாத்தியேலே கற்றுக்கொண்டு விட்டதால்.. அத பணியை கல்கத்தாவிலும் செய்து, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கொடுத்தபணத்தில் காசியை வந்து அடைந்தார்கள் மூவரும்.