Monday, July 27, 2009

தமிழர்களை அழிக்க உதவியது நீங்கள் தானே!!!

இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண்டு (இராஜீவ் - ஜெயவர்த்தனே) ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டு்ம் என்று தான் ராஜபக்சவுடம் கூறியதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் 33 முகாம்களில் உள்ள 3 இலட்சம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவர்களின் மறுவாழ்விற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை சிறிலங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“இலங்கைத் தமிழர்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டே இந்திய - சிறிலங்க உறவு அமையும்” என்றும் கூறிய பிரதமரின் இந்தப் பேச்சை தொலைக்காட்சியில் நேரடியாக கேட்டவர்களுக்கும், செய்தித்தாள்களில் படித்தவர்களுக்கும் அவர்கள் தமிழர்களாக இருந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! இத்தனை கரிசனத்தோடுதான் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை இந்திய அரசு இதுவரை அணுகியுள்ளதா? என்ற கேள்வியும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களின் மனதில் பிறந்திருக்கும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை பல்லாண்டுக் காலமாக கீழ்க்கண்ட அடிப்படைகளில்தான் இருந்துவந்தது:
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
அந்தத் தீர்வு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் (Unity and Integrity) உட்பட்டதாகவும் அந்நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கவேண்டும்.
இதுவே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இலங்கை இனப் பிரச்சனைத் தொடர்பான நமது நாட்டின் அணுகுமுறையாகும் என்றும் குடியரசுத் தலைவர் உரையிலும், அயலுறவு அமைச்சர், பிரதமர் உரைகளிலும் பலமுறை தெளிவாக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டு அரசின் (இதில் பாரதிய ஜனதா அரசு வேறுபடவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்) இந்த அணுகுமுறை ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைத் தரவல்லதா என்பது வேறு விடயம். ஆனால் நாடாளுமன்றத்திலும் வெளியேயும் பிரகடனம் செய்யப்பட்ட இந்த அணுகுமுறையை இந்தியா நடைமுறையில் கடைபிடித்ததா? என்பதே கேள்வியாகும்.
இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமும் தமிழர் நலனும்
இலங்கை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் வாழும் ஒரு பன்முக சமூகம் என்பதை இந்த (இராஜீவ் - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம் ஏற்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்கு இணையான (அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில்) சம நிலை அளிக்கப்படும் என்று கூறப்பட்டதா எனறால் இல்லை.
இலங்கையில் வாழும் ஒவ்வொரு மொழி இனத்திற்கும் அதற்கென தனித்த மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் உள்ளதை இந்த ஒப்பந்தம் (பிரிவு 1.3) அங்கீகரிக்கிறது, அவைகளை சிரத்தையுடன் வளர்க்கப்பட வேண்டும் ((1.3 Recognizing that each ethnic group has a distinct cultural and linguistic identity which has to be carefully nurtured) என்று கூறியுள்ளது இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் அப்படி ஒவ்வொரு மொழி இனங்களின் பண்பாட்டு அடிப்படைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில், அவைகளுக்கு அரசமைப்பு ரீதியாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அந்த மொழிகள் அனைத்திற்கும் சிறிலங்க அரசில் சம உரிமை (அந்தஸ்து) அளிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதனை இராஜீங் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உறுதி செய்யவில்லையே! தமிழர்களின் தனித்த அடையாளங்களை காப்பாற்றுவாரா ராஜபக்ச?
சமீபத்தில் இங்கிருந்து வெளிவரும் ஒரு ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில தேசிய இதழ் பேட்டி கண்டபோது கூட, சிங்கள மக்கள் தமிழைப் படிக்க வேண்டும், தமிழ் மக்கள் சிங்களத்தைப் படிக்க வேண்டும் என்று தான் சிறிலங்க அதிபர் ராஜபக்ச கூறினாரே தவிர, சிங்கள மொழிக்கு உள்ள அரசின் நிர்வாக மொழி என்ற அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்படும் என்று கூறவில்லையே? அப்படியானால் என்ன பொருள்? சிறிலங்க அரசு நிர்வாகப் பணிகளில் தமிழர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் அவர்கள் சிங்கள மொழியை பயின்றிருக்க வேண்டும்! இதுதான் அங்குள்ள சமூகங்களின் மொழி, பண்பாட்டை அங்கீகரித்து வளர்க்கும் உறுதி மொழியா?
அதுமட்டுமன்று, இப்போது இருப்பது போல் அல்லாமல் இலங்கையில் ஒரு கலப்பினம் உருவாக வேண்டும் என்கிறார் ராஜபக்ச!
my theory…[that] there are no minorities in Sri Lanka, there are only those who love the country and those who don’t. They tried to twist that but I still maintain that position. For reconciliation to happen, there must be a mix [of ethnicities]. Here the Sinhalese, the Tamils, and Muslims inter-marry.
இலங்கையின் பன்மொழி, பல மத பன்முகச் சமூகத் தன்மைகளைக் காப்பாற்றி, அதன் மூலம் அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம், பாதுகாப்பு, ஒத்திசைவு உறுதி செய்து அவர்கள் மேம்படவும், அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறவும் இலங்கையின் ஒற்றுமையை உறுதி செய்யும் சக்திகளை பலப்படுத்தவும், அந்நாட்டின் நில ஒற்றுமையையும், இறையாண்மை காப்பாற்ற வேண்டும் (1.5 Conscious of the necessity of strengthening the forces contributing to the unity, sovereignty and territorial integrity of Sri Lanka, and preserving its character as a multi ethnic, multi lingual and multi religious plural society in which all citizens can live in equality, safety and harmony, and prosper and fulfill their aspirations) என்றும் ஒப்பந்தம் கூறியுள்ளது.
இந்த நிலை இலங்கையில் அதுவரை (ஏன் இன்றுவரை கூட) நிலவவில்லை என்பதற்கும், அதனால்தான் அங்கு இனப் பிரச்சனை பிறந்தது என்பதற்கும் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இந்த விவரமே போதுமானதாகும்.
ஆக, சம உரிமை, சமத்துவம் பற்றிப் பேசும் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒபந்தம் அதனை அந்நாட்டின் அரசமைப்பு ரீதியாக உறுதி செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
1987 ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் (இதுதான் இந்த ஒப்பந்த்தை அரை மனதுடன் விடுதலைப் புலிகளை ஏற்க வைத்ததற்கான காரணமாகும்) தமிழர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக (administrative unit) ஏற்று, அதனை வாக்கெடுப்பு நடத்தி உறுதி செய்வது என்பதுதான்.
(2.1 Since the government of Sri Lanka proposes to permit adjoining provinces to join to form one administrative unit and also by a referendum to separate as may be permitted to the Northern and Eastern Provinces as outlined below)
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது, அவர்களின் பிடியில் இருந்து தமிழர்களை மீட்டுவிட்டோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் இந்தப் பகுதியை ஏற்கிறாரா?
இங்கிருந்து வரும் அந்த ‘பாரம்பரிய’ நாளிதழில் வெளியிடப்பட்ட அந்தப் பேட்டியைப் பாருங்கள். “தற்பொழுது இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அருதியிட்டுக் கூறியுள்ளார் ராஜபக்ச! “எதைத் தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பதை நான்தான் முடிவு செய்வேன், ஏனென்றால் எனக்குத்தான் சிறிலங்க மக்கள் (தேர்தல் தீர்ப்பு வாயிலான) அந்த அதிகாரத்தை (Mandate) அளித்துள்ளார்கள். அவர்கள் நினைப்பது (கூட்டாட்சி) கிடைக்காது” என்று கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பது இதுதான்:
[As for the political] solution, I’m willing. I know what to give and I know what not to give. The people have given me the mandate, so I’m going to use it. But I must get these people [the TNA representatives] to agree to this. They must also know that they can’t get what they want. No way for federalism in this country.
ஆக, இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும்:
அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை என்பதும்;
இலங்கையிலுள்ள அனைத்து மொழிப் பிரிவினரின் பண்பாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும்;
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாகப் பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்பதும்;
இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு அரை கூட்டாட்சியாவது (மத்திய, மாநில அரசுகள் போல) அங்கு ஏற்படவேண்டும் என்பதும்;
தனது அரசியல் தீர்வுத் திட்டத்தில் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளது மட்டுமின்றி, அவர்கள் (தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாகத் திகழும் தமிழர் தேசியக் கூட்டணி (Tamil National Alliance - TNA) எதிர்ப்பார்ப்பது எதுவும் கிடைக்காது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால் தனது தீர்வுத் திட்டத்தை அவர்கள் ஏற்கச் செய்ய வேண்டும் என்ற ‘அவசியத்தையும்’ ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் அவர்களின் ஒப்புதலின்றி இவர் உருவாக்கும் எந்த தீர்வையும் தமிழர்கள் மீது திணிக்க முடியாது என்பதும், அதனைக் காட்டி சர்வதேச சமூகத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியாது என்பதும் ராஜபக்சவுக்கு தெளிவாகத் தெரியும்.
மகிந்த ராஜபக்ச உருவாக்கும் ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை அவர் சிங்களர்கள் பெரும்பான்மை கொண்ட சிறிலங்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் காட்டிட முடியும், ஆனால் அது தமிழர் பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி ஏற்கப்படாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இதற்குத்தான் அவர் இந்தியாவை நாடுகிறார். இதனைச் சாதித்துத் தருவதற்குத்தான் டெல்லியும் தமிழர் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசியது. இதெல்லாம் தமிழர்களுக்குப் புரியாதது அல்ல.
ஆக, நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியது போல இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் அதற்கு இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் நடந்தேறப் போவதில்லை என்பது தெளிவு.
சிவ்சங்கர் மேனன் கூறியதன் பொருளென்ன?
தமிழர்களின் பிரச்சனைக்கு கெளரவமான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை அளிப்பது நமதுப் பிரதமரின் அப்பழுக்கற்ற நோக்கமெனில், நமது நாட்டின் அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் இவ்வாறு கூறியதற்கும் பொருளென்ன:
“இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு என்று எதையும் இந்தியா சிறிலங்காவிற்குக் கூறப்போவதில்லை. இதைச் செய், அதைச் செய் என்று நாம் அந்த நாட்டிற்கு உத்தரவிட முடியாது. அது இறையாண்மை கொண்ட வேறு ஒரு நாடு” என்று டெல்லி வந்த சிறிலங்கப் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய சி்வ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
இலங்கையில் பன்னெடுங் காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு சம உரிமை அளிக்க வகை செய்யும் தீர்வுத் திட்டத்தை இந்தியா முன்மொழிந்து, அதற்கான ஒப்புதலையும் பெற்றதே 1987 இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம். இதனடிப்படையில் தீர்வு காணப்படும் என்று இந்தியாவின் பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார்.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ்வதற்கு வகை செய்யப்பட வேண்டும் என்று புதிய அரசு பதவியேற்றப்பின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறுகிறார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசின் அயலுறவு அமைச்சராக பொறுப்பேற்ற எஸ்.எம். கிருஷ்ணாவும் கூறினார்.
ஆனால், சிறிலங்க அரசுடன் - அதன் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்ச, அந்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிவரும் அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் வேறு குரலில் பேசுகிறார்!
இது மட்டுமல்ல, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கவும், அவர்கள் மறுவாழ்விற்கான திட்டங்களை நிறைவேற்றவும், முகாமில் உள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிக்கவும் சிறிலங்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசியதைக் கண்டித்து, கோத்தபய ராஜபக்சவின் நண்பர் அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் கட்டுரை எழுதினார். அதில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டு மக்கள் என்றும், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எந்த ஒரு நாடும் தங்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம் என்றும் காட்டமாக எழுதியிருந்தார். அவரும் சிறிலங்கா ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று சிவ்சங்கர் மேனன் கூறியதையே தனது கட்டுரையிலும் கூறியிருந்தார்.
ஆக, பிரதமர் உட்பட நமது தலைவர்கள் பேசுவது ஒரு அடிப்படையிலு்ம, நமது அயலுறவு செயலர், சிறிலங்க அதிபர் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பேசுவது வேறொரு அடிப்படையிலும் இருப்பது, இந்திய அரசின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் உள்ள முரண்பாட்டையே காட்டுகிறது.
இராணுவ உதவி செய்தது ஏன்?
தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு இராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதே சரியாக இருக்குமெனில், இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே நீடித்த, நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று இந்திய அரசு நம்புவது உண்மையெனில், அப்படிப்பட்ட தீர்வை எட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்ட அரசியல் ரீதியான அணுகுமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தாமல், தமிழர்களின் மீது போரை நடத்தி தீர்வுகாண முற்பட்ட சிறிலங்க அரசிற்கு இராணுவ உதவிகளை செய்தது ஏன்? அதன் மூலம் அதிபர் ராஜபக்சவின் இனப் படுகொலைக்கு உதவியது ஏன்?
விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், எனவே அதனை அழிக்கத்தான் சிறிலங்க அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்றால், அதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்து செய்யாமல், அனைத்து உதவிகளையும் ரகசியமாக செய்தது ஏன்?
ஈழத் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதை இரண்டு கட்டங்களில் இந்தியா ஒப்புக்கொண்டு அங்கீகரித்திருக்கிறது.
இராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் ஒப்புதலைப் பெற அன்றைய பிரதமர் இராஜீவ் படாத பாடுபட்ட வரலாறு நாடறியந்த ரகசியம். அவர்களின் சம்மதமின்றி இலங்கையில் அமைதி ஏற்படாது என்பதும், ஈழ மக்களின் ஆதரவு தங்கள் ஒப்பந்தத்திற்கு கிடைக்காது என்பதும் இந்தியாவிற்கும் தெரியும், ஜெயவர்தனேவுக்கும் தெரியும்.
அதன்பிறகு, 2002ஆம் ஆண்டில் நார்வே நாட்டின் அனுசரணையுடன் சிறிலங்க அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே துவங்கிய அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா அங்கீகரித்தது. ஏனென்றால், அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே நீடித்த அரசியல் தீர்வை எட்ட முடியும் என்ற இந்தியாவின் நிலைப்பாடும், அதன் எட்ட வேண்டுமெனில் விடுதலைப் புலிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தியாக வேண்டும் என்பதையும் இந்தியா ‘உணர்ந்திருந்த’ காரணத்தினால், அதனை அங்கீகரித்தது. எனவே இராஜீவ் உயிருடன் இருந்தபோதும் சரி, அவருடைய படுகொலைப் பின்னரும் சரி, ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை மற்ற சர்வதேச நாடுகளைப் போல இந்தியாவும் ஒப்புக் கொண்டுதான் அந்த அமைதிப் பேச்சுவார்த்தையை அங்கீகரித்தது.
அதனால்தான், ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு இராணுவத் தீர்வை நோக்கி போரை ராஜபக்ச துவக்கியபோது அதனை இந்தியா கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகக் கூறியிருந்தது.
ஆனால் சில மாதங்களிலேயே அதன் போக்கு (ரகசியமாக) மாறியது! தமிழர்களின் சம உரிமை போராட்டத்தை இராணுவ ரீதியாக நசுக்க முற்பட்ட ராஜபக்ச அரசிற்கு ராடார் கொடுத்து உதவி அந்தப் போர் பெளத்த - சிங்கள மேலாதிக்க சிறிலங்க அரசிற்கு வெற்றியாக முடிய தொடர்ந்து ஆலோசனையும் வழங்கியது. இதைத்தான் அந்நாட்டு அமைச்சர்கள் தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அறிவித்து இந்தியாவை பாராட்டினார்கள்.
வெளிப்படையாக ஒரு நிலை, ரகசியாக மற்றொரு நிலை என்றெடுத்து ஈழ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முற்றிலுமாக நசுக்கிவிட்டு, அதனை விளைவாக, எந்த வன்னி மண்ணில் அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமாகவும், செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்து வந்தார்களோ, அதே வன்னி மண்ணில் அவர்களை முள் வேலிகளுக்கு உள்ளே முடக்கிவிட்டு, அவர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கண்ணியமான, கெளரமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும், அதனை மறுக்கும் அரசின் தலைவரிடம் தான் வலியுறுத்தியதாக பேசுவது அயோக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன?
தங்கள் தொப்பூழ்க் கொடி உறவுகளை இராணுவ பலம் கொண்டு ஒடுக்கிவரும் ஒரு அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டு்ம் என்று தமிழ்நாட்டு மக்கள் விடுத்த கோரிக்கையை இராஜ தந்திர வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடும் வாய்ப்பைப் பெற்ற இந்திய அரசு, எந்த மக்களின் உரிமைகளை காக்க கோரிக்கை எழுப்பினார்களோ அவர்களுக்கு உதவாமல், ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்காமல், அவர்களை அடக்கி ஒடுக்கி, இனப் படுகொலை செய்து முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்டு போர் தொடுத்த அரசுடன் நட்புறவு கொள்கிறது என்றால் இதுதான் ராஜ தந்திரமா? அல்லது தமிழினத்திற்குச் செய்த அப்பட்டமான துரோகமா?
தங்கள் பிரச்சனையில் இந்தியாவின் பேச்சிற்கும் செயலிற்கும் என்ன அர்த்தம் என்பதை ஈழத் தமிழினமும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு மேலும் இந்திய அரசின் தமிழின விரோத இராஜ தந்திர விளையாட்டிற்கு தமிழர்கள் பகடையாக மாட்டார்கள்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதையும், இதுநாள் வரை அப்பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட அணுகுமுறையையும் ஆழமாக பார்க்கும் எவரும், ஈழத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து வருகிறது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
வெள்ளையருக்கு எதிரான நமது தலைவர்கள் நடத்திய மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் முன்மொழியப்பட்ட தார்மீக நெறிகளை இன்றைய அரசும், எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டன. அதன் விளைவே தடையன்று நடந்த ஈழத் தமிழினப் படுகொலை. அந்த ரகசிய உதவி நாடகம் வெளிப்பட்ட இடமே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசை காப்பாற்றிய இந்தியாவின் பெரும் முயற்சி.
சொந்த நாட்டு மக்களை பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி, கொன்று குவித்த குற்றத்திற்கான சிறிலங்க அரசு ஒரு நாள் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்போது, நீதியின் விரல் இந்தியாவிற்கு எதிராகவும் நீளும்… அதில் சந்தேகமில்லை.

Friday, July 17, 2009

ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்


ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
தமிழர்களுக்கு தனி மாநிலம், ‘மாகாண சபை’, ‘மாநில சுயாட்சி’ என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத்தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். அதே மாநாட்டில் தமிழர் கூட்டணியின் பெயர் ‘தமிழர் விடுதலை கூட்டணி’ என்று மாற்றப்பட்டது.
இனி சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் எடுத்த முடிவு தனி ஈழம் என்பதாகும். பிறகு அதே கோரிக்கைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார்கள். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, ஈழத் துக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலொ, புளோட் போன்ற அமைப்புகளின் ஆதரவாளர் களாக இருந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் களாக தேர்வு பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விடுதலைப்புலிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். இன்று துரோகக் குழுக்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கிற குழுவினரும் தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். அங்கே – அமைதிப்படை என்ற பெயரில் சென்ற இந்திய ராணுவம் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற குழுவின் சார்பில் வரதராஜப் பெருமாள் என்பவரை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக அமர வைத்தது. அந்த வரதராஜப் பெருமாளே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ் ஈழத்தையே பிரகடனம் செய்தார். அமைதிப் படை வெளியேறிய போது இனி அமைதி யாக இருக்க முடியாது என்று இந்தியாவுக்கு ஓடி வந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழத்தை அறிவித்து விட்டுத்தான் ஓடி வந்தார். அவர்கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. இப்போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஆனந்த சங்கரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, 1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தி லிருந்து அந்த நாட்டில் விடுதலைப்புலிகள் ஆனா லும் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனாலும் பொது மக்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்களாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நாட்டில் வாழவே முடியாது என்று கருதி, புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள்கூட அந்த நாடுகளில் தமிழ் ஈழத்துக்காகப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்கள் உரிமையற்றவர்களாக கேவலமானவர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு போராட வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் போராடுவதற்கான உரிமைகள் தமிழ்நாட்டில் இல்லை.
தமிழ்நாட்டில் 1938 இல் பெரியார் முன் வைத்த தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிற எங்களைப் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேச தன்னுரிமை கோரும் தமிழ் தேசியவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலையை ஆதரித்தார்கள். இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பொதுவுடைமை கட்சியினரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே போராடினார்கள். நமது ‘அகில இந்திய’ தி.மு.க.வின் தலைவர் கலைஞர்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயள விலாது பேசியே வந்தார். தமிழக அரசு கூட்டிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உண்ணா விரதப் போராட்டத்தை அனைத்துக் கட்சி ஆதரவு டன் நடத்தியதைத் தொடர்ந்து மயிலை மாங் கொல்லையில் தி.மு.க. கூட்டத்தைக் கூட்டிப் பேசிய கலைஞர்கூட ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத இந்த அரசு இருக்கக்கூட தேவை இல்லை என்றார். பிறகு இந்த அரசு என்பது தமிழக அரசு என்று விளக்கம் கூறினார். ஒரு வேளை ‘இந்த அரசு’ என்பதை ‘மத்திய அரசு’ என்று தவறாக கருதி, தமது அரசு மீது 356’ பாய்ந்து விடக் கூடாது என்று அவர் கருதியிருக்கக் கூடும்.
அதற்குப் பிறகு அக்.14 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. மூன்று தீர்மானங்களை நிறை வேற்றினார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது முதல் தீர்மானம். இந்திய அரசு அந்தப் போருக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பது இரண்டாவது தீர்மானம். குறிப்பிட்ட காலத்துக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பது. மூன்றாவது தீர்மானம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட, அதில் பங்கேற்ற எல்லா கட்சிகளும், இத் தீர்மானங்களை ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியே சென்று, பதவி விலகல் என்பது பற்றி மட்டும் பின்னால் கருத்து கூறுவதாக கூறியது. காங்கிரஸ் கட்சி, பதவி விலகல் பற்றி கூற முடியாது என்று கூறிவிட்டது. ஆனால், அதற்கு முன்னால் இருந்த இரண்டு தீர்மானங்களை எல்லா கட்சிகளுமே ஏற்றுக்கொண்டன. எந்தக் கட்சியும் மறுக்கவே இல்லை.
அந்தக் கூட்டத்துக்கு வராத ம.தி.மு.க.வும், ஜெய லலிதாவும் தீர்மானத்தை ஆதரித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பதில் கருத்து வேறுபட்டாலும், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும், இந்தியா ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதையும், எந்தக் கட்சியும் இன்று வரை மறுக்கவே இல்லை. அதற்குப் பிறகு, மாணவர்கள், பொதுமக்கள், அரவாணிகள், பார்வையற்றவர்கள் என்று எல்லா பிரிவினரும் போராட்டம் நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், மனிதச் சங்கிலி என்று அனைத்து வடிவங்களிலும் போராட்டங்கள் நடந்தன. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட சபையில் தீர்மானங்களை மூன்று முறை நிறை வேற்றினார்கள். கடைசியாக ‘அய்யகோ, தமிழினம் அழிகிறதே’ என்று அழுதுகொண்டே கலைஞர் தீர்மானத்தைப் படித்தார். எல்லோரும் சேர்ந்து போய் பிரதமரிடம் வலியுறுத்தினார்கள். ஆக ஒட்டு மொத்த தமிழினமும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இப்படிப்பட்ட கோரிக்கைக்கு என்ன விளைவு ஏற்பட்டது? நமது தலைவர்களும் இந்த அடிமைப் பட்ட தமிழினமும் முன் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து நாம் என்ன பதிலைப் பெற்றோம்? கடைசியாக கலைஞர், மன்மோகன் சிங்கிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையாவது கொழும்புக்கு அனுப்புங்கள் என்றார். கோரிக்கைகளைக்கூட இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டாம். விமானத்திலாவது ஒருமுறை கொழும்பு போய் வந்தால் போதும். அவ்வளவுதான். அதுதான் கடைசியாக பிரதமரிடம், கலைஞர் வைத்த கோரிக்கை.
அதுகூட பல மாதங்களாக நிறைவேற்றப்பட வில்லை. இந்தக் கோரிக்கைக்குக்கூட அதாவது, பிரணாப் போய் வரவேண்டும் என்பதற்காக – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழகம் வந்த மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டினோம். எங்கள் தோழர்கள் ஆயிரம் பேர் கைதானார்கள். அப்போதும் மன்மோகன் சிங் விரைவில் பிரணாப் கொழும்புக்கு செல்வார் என்றுதான் கூறினார். அப்புறம் பிரணாப் போய் வந்தார். போய் வந்தவர் சொன்னார், 48 மணி நேர போர் நிறுத்தம் வர இருக்கிறது என்று. உடனே, இது போர் நிறுத்தம் அல்ல; 48 மணி நேர கெடு. அதற்குள் எல்லோரும் போரில்லாப் பகுதிக்கு வந்து விட வேண்டும், அதற்கான கெடு என்று இலங்கை அரசு கூறியது.
ஆக, தமிழகத்தில் போராட்டங்கள், கோரிக்கை கள் எதற்கும் வளைந்து கொடுக்காத மத்திய அரசு, இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகும், ஒரே ஒரு முறை – பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி வைத்தது. அவ்வளவு தான். தமிழகத்தின் ஒட்டு மொத்தமான கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான அசைவைக் கூட தமிழர்களுக்கு சாதக மாகக் காட்டவில்லை.
ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்கள், பல்வேறு கோரிக்கை களை முன் வைக்கிறார்கள். மராட்டியத்தில் வாழும் மராட்டியர்கள், இந்தியில் பேசக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். மராட்டியில் பேசு என்கிறான். இந்தி பேசுவோரை மராட்டியத்தை விட்டு விரட்டுகிறான். சிறிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கூட தாக்குதல் நடத்துகிறான். ரயில்களை கொளுத்துகிறான். கன்னட செய்தி நேரத்தை தள்ளி வைத்து, சம°கிருதத்தில் செய்தியை ஒளிபரப்பி யதற்காக கலவரம் நடத்தினான்.
கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைந்து போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. பொது ஒழுங்கு குலைந்து போனால்தான் பயன்படுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு என்பது வேறு; பொது ஒழுங்கு என்பது வேறு. ஏற்கனவே பார்ப்பனர் பூணூலை அறுத்த ‘குற்றத்துக்காக’ இந்த ஆட்சி, எங்கள் தோழர்கள் பெரம்பலூர் லட்சுமணன், தாமோதரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி யது. வேறு எந்த முன் வழக்கும் அவர்கள் மீது இல்லை. இந்த ஒரே வழக்குக்காக, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டார் கலைஞர்.
மத்திய அரசுக்கு பயந்து அவர்களைத் திருப்திப் படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன் படுத்துவதாக சமாதானம் கூறினார்கள். இப்போது மத்திய அரசே கூறிவிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என்று. இராணுவ வாகன மறிப்பு வழக்கில் ம.தி.மு.க. மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீது தி.மு.க. ஆட்சி போட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக போடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசே ரத்து செய்து விட்டது. அதற்குப் பின்னரும்கூட எங்கள் தோழர் சூலூர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகத் தில் வருவதைப்போல் ‘அரசனை விட அரசனை மிஞ்சிய இராஜ விசுவாசியாக’ இவர்கள் செயல் படுகிறார்கள்.
பிற மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினால் கூட வழக்குப் போடுவது இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பேசினாலே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால், என்ன காரணம்? ஏன் விடுதலை இயக்கங்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்?
தமிழர்களை எப்படி அடக்கினாலும் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதுதான் காரணம். சீக்கியர்கள் கலவரம் நடத் தினால் பயப்படுகிறான்; மத்திய அரசு பணிகிறது. ஆனால், ஆறரை கோடி எண்ணிக்கையாக உள்ள ஒரு இனத்துக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறார்கள்? இந்த சிந்தனையோடுதான் ஈழத் தமிழர்களுக்குநாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் – தங்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அதில் உறுதியாக இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட இந்த நிலையிலும்கூட முள்வேலிக் கம்பிக்குள் அகதி களாக அடைக்கப்பட்ட நிலையிலும்கூட அந்த அகதி முகாமுக்குள் இருந்த தமிழன், உயரமான கம்பத்தில் ஏறி புலிக் கொடியைக் கட்டிப் பறக்க விடுகிறான் (கைதட்டல்). அந்தத் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. தன்னுடன் முகாமுக்குள் உள்ள பெண்ணிடம் ராணுவம் அத்து மீறி நடக்கும்போது அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. அப்படி எதிர்த்துக் கேட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அத்துமீறி நடந்த ராணுவ அதிகாரியின் துப்பக்கியைப் பிடுங்கி அடித் திருக்கிறார்கள். அதற்காகவும் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். முகாமில் அடைத்தாலும் விடுதலை உணர்வை அப்படியே காத்துக் கொண்டிருக்கிற உணர்வோடு அந்தத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக இங்கே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அடக்குமுறைகளை நேரில் அறிந்திடாத புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள்கூட ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக எதுவும் செய்யாத, எதுவுமே செய்யும் துணிவில்லாதவர் களாகிய நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; என்ன செய்ய வேண்டும் என்று! என்ன செய்ய முடியும்? மீண்டும் ஆர்ப்பாட்டம்; ஊர்வலம்; இதைத்தான் செய்வோம். அதற்கு அரசு செவி சாய்க்குமா? பலன் ஏதும் தராமல் கோரிக்கைகளை முன் வைப்பது மட்டுமே பலன் சேர்க்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கலைஞர் வேண்டுமானால் கடிதம் எழுதுவார். பிற்காலத்தில் – வரலாற்றில் கடிதம் எழுதியதாக சொல்லிக் கொள்வதற்கு அது பயன்படும். அல்லது அஞ்சல் துறைக்கு 5 ரூபாய் லாபம் சேர்ப்பதற்கும் பயன்படும். வேறு எந்தப் பயனும் நிகழ்ந்து விடாது. பதிவு செய்யக்கூடிய போராட்டங்களாக நமது போராட்டங்கள் இருக்கக் கூடாது. சிறு போராட்ட மாக இருந்தாலும் அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டு நடத்துகிற போராட்டமாக நமது போரட்டம் இருக்க வேண் டும். அது அறவழிப்பட்ட போராட்டமானாலும் சரி, வேறு வகைப் போராட்டமானாலும் சரி, அரசு செவி சாய்க்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்குச் சட்டப்படியான தீர்ப்பை நாம் பெற்ற பிறகும்கூட அதை கேரள மார்க்சி°ட் ஆட்சி அமுல் படுத்த மறுக்கிறது. அதையும் நாம் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்; இது தானே நமது நிலை.
ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக்கூட சீனாவும், கியுபாவும் தோற்கடிக் கின்றன. மாறாக, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக நிதி உதவி கோரும் இலங்கை அரசு தீர்மானத்தை இந்தியாவும், சீனாவும் ஆதரிக்கின்றன. சாட்சிகளற்ற இனப்படுகொலையை அங்கே நடத்தி இருக்கிறார்கள். படுகொலைகளுக்கு சாட்சியாக இருந்த பத்திரிகையாளர் ‘இந்து’ பார்ப்பான் இராம் – மார்க்சியவாதி போல பேசிக் கொள்ளும் அந்த இராம் – தமிழர் அகதி முகாம்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக எழுதுகிறார். ஆனால் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா என்பவர் சுப்பிரமணியம் என்ற தமிழ் புகைப்படக் காரரை உடன் அழைத்துக்கொண்டு போய் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். எல்லாவற்றையும் படம் பிடிக்கச் சொன்னார். அவர் தலைமை நீதிபதி என்பதால் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியாது. அவர் அறிக்கை கொடுத்தார்.
“இலங்கை நாட்டின் குடிமகனாக இருப்பதை நான் கேவலமாக உணருகிறேன்”. அகதி முகாம்களில் எல்லாவற்றுக்கும் கியூ நிற்கிறார்கள். கூடாரத்துக்குள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இடுப்பு ஒடிந்து விடும். 5 பேர் இருக்கவேண்டிய கூடாரத்தில் 30-க்கும் மேல் இருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த நாட்டின் தலைமை நீதிபதி அறிக்கை விடுத்தார். அந்நாட்டு தலைமை நீதிபதி கூறுவதையாவது உலக நாடுகள் காது கொடுத்து கேட்க வேண்டாமா? அதற்குப் பின்னால் அவர் பதவி ஓய்வு பெற்றார். இப்படிக் கூறுவதால், தனது உயிருக்கும் உடைமைக் கும் ஆபத்து நேரிடலாம் என்று கூறிவிட்டே பேட்டி கொடுத்தார். எங்கள் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே இல்லை. எங்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கும், அறவழிகளுக்கும் யாரேனும் இருந்ததாக உதாரணம் கூறவேண்டுமானால் அது பிரபாகரன் ஒருவர் தான் என்று, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தனது பதவி ஓய்வு பெறும் நாளில் பேசும் போது கூறியிருக்கிறார். (கைதட்டல்) எத்தனையோ வழக்குகளில் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு கூறியிருக்கிறார். புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதியில் கிரிமினல் குற்றவாளிகள் இருப்பதை பட்டியல் போட்டுக் காட்டி நீதிமன்றம் வழியாக கேட்ட போது புலிகள் அந்த கிரிமினல் குற்றவாளிகளை இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், அதேபோல் புலிகள் கேட்ட குற்றவாளிகளை ஒருமுறைகூட இலங்கை நீதிமன்றம் ஒப்படைத்தது இல்லை என்று, அந்த நிகழ்ச்சியில் நீதிபதி கூறியிருக்கிறார்.
கடைசியாக தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்: நான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் போன போது அவர்கள் மரியாதையுடன் நடத்தினார்கள். இவ்வளவு அறவழியைப் பின்பற்றுகிற விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் நான் பாராட்டுகிறேன் என்று. (பலத்த கைதட்டல்) சிங்கள தேசிய இனத்திலிருந்தே இந்தக் குரல் கேட்கிறது, எத்தனையோ சிங்கள பத்திரிகை யாளர்கள் இலங்கையைக் கண்டித்து எழுதியதற்காக உயிருக்கு பாதுகாப்பு தேடி இந்தியாவில் அடைக் கலம் புகுந்துள்ளனர். அவர்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. காரணம், தமிழ்நாடு அரசை நம்பத் தயாராக இல்லை. அதைவிட டெல்லியில் இருக்கும் ஆட் சியை நம்பலாம் என்று டெல்லியில் இருக்கிறார்கள்.
ஒரு சிங்கள பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப் பட்டார். இப்படி சிங்கள இனத்தில் கூட சிலர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாது உரிமைக்கு குரல் கொடுக்கும்போது நம்முடைய தொப்புள்கொடி உறவான தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்? இங்கிருந்து செய்யும் கடமையை நாம் முழுமையாக செய்திருக்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.
புலிகள் என்று பேசினாலே குற்றம் என்ற நிலை இங்கு இருந்தது. இனி அந்த நிலை வராது. காரணம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அவர்களே கூறுகிறார்கள். எனவே தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரிப்பது குற்றமாகிவிடுமே என்ற அச்சம் நீங்கி நீங்கள் செயல்படலாம். ஆபத்து இல்லாத இத்தகைய போராட்டங்களில் ஆயிரக் கணக்கில் நீங்கள் திரண்டு நமது ஆதரவுக் குரலை எழுப்பவேண்டும். நூற்றுக்கணக்கில் கூடினால் மட்டும் போதாது.
சிறைக்குப் போகும் போராட்டத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். காலையில் போராட்டம் நடத்தி, மாலையில் விடுதலையாகும் போராட்டத் துக்கு நாம் பழகிவிட்டோம். எனவே 15 நாள் சிறையிலிருக்கும் போராட்டத்துக்காவாவது உணர்வுள்ள இளைஞர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் தமிழன் என்று உணர வேண்டும்; நமக்கான அடையாளத்துடன் தனித்த அரசை அமைத்து, நமக்கான அதிகாரம் நம்மிடம் வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் இருக்க வேண்டும் . அந்த ஆவல் வலுப்பட்டால்தான் இயக்கமாகும்; அந்த எண்ணத்தையாவது நாம் எழுப்ப வேண் டாமா? அதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா, என்பது தான் முக்கியம். குரல் எழுப்புவது மட்டும் போதாது; இதைச் சொன்னால் பிரிவினைவாதம் என்கிறார்கள்? என்ன பிரிவினைவாதம்? அய்.நா.சபை தோன்றிய பிறகு எத்தனை நாடுகள் தோன்றியிருக்கின்றன? ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரிந்துதான், மற்றொரு நாடு உருவாகிறது. எந்த நாட்டிலும் பிரிவினை வாதம் என்று பேசவில்லை.
இங்கேதான் பிரிவினை வாதம் என்று கூச்சல் போடுகிறான். ஆனால், அய்.நா.மன்றம், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனது உரிமையை நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அய்.நா. மன்றத்தின் சிவில் அரசியல் உரிமை பிரகடனத்தின் முதல் விதி அது தான். தேசிய இனம் பற்றிய புதிய சிந்தனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் அம்மையார் கரண்பார்க்கர். அவர் தொடர்ந்து தமிழ் ஈழத்துக்கான குரலை எழுப்பி வருகிறார். அதற்காக உலக நாடுகளில் உள்ள எல்லா வழக்கறிஞர்களையும் சந்தித்து, தனது குரலை பதிவு செய்து வருகிறார். அவர்களுக்கான தனித்த நிலம்; தனித்த அடையாளம்; தொடர்ந்த அரசுகள் பற்றி எல்லாம் அவர் சொல்கிறார். இவைகளைத் தவிர மேலும் இரண்டு புதிய கோட்பாடுகளை அவர் சொல்கிறார். அதுதான், இப்போது நம்மிடம் இல்லை. சுதந்திர வேட்கை (றடைட வடி கசநநனடிஅ) இருக்க வேண்டும் என்பது ஒன்று; அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றல் (உயயீயbடைவைல) இருக்கவேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டு மட்டும் நமக்கு இல்லை. ஆனால், நிலம், தொடர்ந்து நடந்த தமிழர் அரசுகள், கலாச்சாரம் என்ற மூன்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் சுதந்திர வேட்கையை அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாததைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அல்லது அந்த நியாயமான உணர்ச்சிகள் நம்மிடம் இல்லை என்பதை விவாதத்திற்காகவாவது நாம் உட்படுத்த வேண்டும். அதைத்தான் தமிழர் களுக்கு உள்ள கடமையாக இப்போது நாம் உணருகிறோம்.
ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினை ஒரு நாளில் தீர்ந்துவிடப் போவது இல்லை. அது நீண்ட நாள் போராட்டம்; ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அதில் ஒரு லட்சம் பேர் ஊர்வலத்துக்கு வருகிறார்கள். ஆனால் ஆறரை கோடிப் பேராக இருக்கும் தமிழ்நாட்டில் 650 பேர்தான். அவ்வளவுதான் போராடியிருப்போம். எவ்வளவு வெட்கக்கேடான நிலை? எளிய போராட் டத்தைக்கூடநாம் நடத்த முன்வருவதில்லை. இப்படி எல்லாம் உள்ள ஒரு இனத்தை அல்லது மக்களை அரசும், அரசு அதிகாரங்களும் அடக்குகின்றன என்று சொன்னால், ஏன் அடக்க மாட்டார்கள்? அடக்கத்தான் செய்வார்கள். இந்த அடக்குமுறை அதிகமானால், நமக்கு ஒரு வேளை உணர்வு வரலாம். வீண் பெருமை பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழன் இமயத்தில் கொடி நாட்டினான் என்றெல்லாம் பேசுவதை விடுங்கள். முதலில் நமது நாட்டில் கொடியை உயர்த்த வேண்டும். நம் நாட்டில் நம் கொடியைப் பறப்பதற்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அதற்கான ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம். வேட்கையை வளர்ப்போம். ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம். இதைத்தான் ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதைத் தொடர்ந்து செய்யலாம். அதுவரை நமது நாட்டில் இருக்கிற, நமக்கு எதிரானவர்களை என்ன செய்யலாம்? முதலாவதாக எதிரானவர்களைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரி யாருடைய உழைப்பு, ஒரு சமூகச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருக்கிறார் என்றால், ஏறத்தாழ வேறு பெயரில் இருக்கிற பா.ஜ.க. அவர், நரேந்திர மோடிப் பதவி ஏற்றால், பதவி ஏற்புக்குப் போவார். சென்னைக்கு நரேந்திர மோடி வந்தால், வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார். ஆனால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், இந்த மண்ணின் சூழல் பா.ஜ.க.வின் கூட்டணியைப் புறக்கணிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே அந்த உள்ளம் இருந்தா லும் உணர்வு இருந்தாலும், அவர்களோடு கூட்டுச் சேர அவர் துணியவில்லை. அதே போல, தீண்டத் தகாத கட்சியாக புறக்கணிக்க, வெறுக்கத்தக்க கட்சி யாக காங்கிரஸ் கட்சியை நாம் கருத வேண்டும். அந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு ஊட்ட வேண்டும். (கைதட்டல்) தொடர்ந்து, நமக்கு துரோகமே செய்து வந்திருக்கிற கட்சி, காங்கிரஸ். நமது உரிமைகளைப் பறித்தவன் யார்? ஈழத்தில் தமிழ்மொழி உரிமையை சிங்களன் பறித்தான் என்றால் – இங்கே நமது மொழி உரிமையைப் பறித்தது யார்?
கடந்த நாடாளுமன்ற இறுதிக் கூட்டத்திலேகூட 47 உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, மாநிலங் களவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பு, தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஒருவேளை, நாடாளு மன்றத்தில் இனி நிறைவேற்றப்படலாம். தமிழர்களை மட்டுமல்ல, சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குக்கூட, அவர்கள் துடிக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் நமது மாநில உரிமைக்காக காவிரி நீர் உரிமைக்கு வழங்கிய தீர்ப்பைக் கூட அமுல்படுத்த மறுக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு நமது கூட்டணியில் இருக்கிறார்களே, எப்படி கண்டிப்பது என்று, கூட்டணி தர்மம் பேசி, காங்கிரஸ் கட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அய்ரோப்பிய நாடுகளில், மனித உரிமையை மிகவும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில்கூட ஜெர்மனியில் ஹிட்லரைப் பாராட்டிப் பேசினால் குற்றம். இன்று வரை, அதை குற்றமாக வரையறுத்து வைத்துள்ளனர்.
அதுபோல் – தமிழ்நாட்டில் காங்கிரசை ஆதரிப்பது குற்றம் என்ற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். அதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இப்போது காங்கிரஸ்காரனைவிட நமது ‘அகில இந்திய’ திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஒருமைப்பாடு பேசுகிறது. கலைஞர் எல்லாம், இப்போது நமக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்கு கூட அறிவுரை கூறுகிறார். தனி ஈழம் எல்லாம் வேண்டாம். அதை எல்லாம் கைவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஏனென்றால், தி.மு.க. – அந்தக் கொள்கை எல்லாம் கைவிட்டு விட்டது அல்லவா? எனவே எல்லோருமே கொள்கைகளை கைவிட்டுவிட்டால், மக்கள் கொள்கைகளைப் பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள் அல்லவா?
ஆனால், அறிவு மிக்க இளைஞர்கள் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டார்கள். முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் அரசியல் தலைவர்களையெல் லாம் நம்பாதீர்கள் என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். எனவே பல இளைஞர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி முத்துக்குமார் பெயரில் இயக்கங்களைத் தொடங்கி வருகிறார்கள். மார்க் சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி – முத்துக் குமார் மன்றம் தொடங்கியிருப்பதாக திருப்பரங் குன்றத்தில் தோழர்கள் என்னிடம் கூறினார்கள். கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு நமது உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத மடை யர்களாக இனிவரும் இளைஞர் சமூகம் இருக்காது; இருக்கவும் கூடாது. கட்சியில் இருப்பதற்காகவே கட்சியின் கொள்கை துரோகங்களுக்கு துணை போய்க் கொண்டு, உணர்வுகளையேகூட வெளிப் படுத்தாது இருக்க வேண்டுமா?
இந்த மாநிலக் கட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்கள் மசோதா நிறைவேற்றினாலும் கூட, டெல்லியில் உள்ளவர்கள் ஒப்புதலைத்தான் பெற வேண்டும். பதவிக்குப் போகிறவரை கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கெள்கையைக் கைவிடுகிறோம் என்பார்கள். இதைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தக் கட்சிகளை வழிநடத்துகிற சக்திகளாக நாம் மாறவேண்டும்.
அகில இந்தியா பேசுகிற கட்சிகள்கூட வேறு மாநிலத்தில் எப்படி செயல்படுகிறான்? கருநாட கத்தில் அகில இந்தியாவைப் பேசும் கட்சிகள் தான் இருக்கின்றன. ஆனால், அவன் தனது மாநிலத்திற் காகத்தான் குரல் கொடுக்கிறான். கருநாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கட்சியின் பெயரில் அகில இந்தியா என்று இருக்கும். ஆனால் அவன் தனது மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கிறான். தி.மு.க.வின் பெயரில் அகில இந்தியா இல்லை. ஆனால் அக்கட்சியின் சிந்தனை அகில இந்தியாவாகி விட்டது. இதுமட்டுமல்ல, சர்வ தேசியம் பேசுகிற கியுபா போன்ற நாடுகள் கதை என்ன? குறைந்த பட்சம், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கண்டனமாவது தெரிவித்திருக்கக் கூடாதா?
வியட்நாமில் மைலாய் எனும் கிராமத்தில் 148 பேரை குண்டுவீசி, அமெரிக்க படை கொன்றது. அதற்கு அமெரிக்க நாட்டிலேயே கொந்தளிப்பு எழுந்தது. அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று வீதிக்கு வந்து போராடினார்கள். வியட்நாமிலிருந்து அமெரிக்கப்படை விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த ஆத்திரம் நமக்கு வந்ததா? நமது நாட்டுப் படை அமைதிப்படை என்ற பெயரில் இங்கிருந்து போய் கொன்றதே. 64000 பேரைக் கொன்றதாக, கணக்கு 70000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 148 பேரைக் கொன்றதற்காக ஒரு ஆதிக்க நாட்டுக்காரன் நாட்டில் அவன் நாட்டிலேயே மக்கள் போராடியபோது நாம் 70000 மக்களைக் கொன்றதற்காக என்ன போராட்டத்தை நடத்தினோம்? அந்த அமைதிப் படையில் தளபதிகளாக இருந்தவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் மேத்தா, ஹர்கரந்த்சிங் போன்றவர்கள் எல்லாம் தாங்கள் சொன்னதை இந்தியா கேட்கவில்லை என்று பேசுகிறார்கள். புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்?
இப்போது ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பேசுகிறார்களே. அந்த ஒப்பந்தத்தை முறையாக அமுல்படுத்து என்று வலியுறுத்திதான், திலீபன் உண்ணாவிரதம் இருந்தான். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசும் காங்கிரசார், அப்போது, திலீபன் உண்ணாவிரதத்தை ஆதரித்து அல்லவா இருந்திருக்க வேண்டும்? திலீபனை போய் பார்ப்பதற்குக்கூட இந்திய அரசு அங்குள்ள இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு உத்தரவிடவில்லை.
இங்கேயும், நமது நாட்டிலும், என்ன நிலைமை? மக்கள் ரேஷன் கிடைக்கவில்லை, தண்ணீர் லாரி வரவில்லை என்று போராடினால், அதில் தொடர்புடைய அதிகாரிகளா வருகிறார்கள்? காவல்துறையைத்தான் எந்தப் போராட்டமானாலும் கைது செய்வதற்கு அனுப்புகிறான். தொடர்புடைய அதிகாரிகள் வருவது இல்லை. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் நடக்கும்போது அதிகாரிகளோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. எல்லாவற்றுக்கும் காவல்துறைதான் வரும். மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், அதை காவல்துறை தான் தீர்த்து வைக்கும் என்று அரசு செயல்படுகிறது. இதை நாம் எதிர்க்காதவரை, அரசு இதைத் தானே செய்யும்? இந்தப் போராட்ட உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளாமல், வெறும் ரசிக மனப்பான்மையோடு விடுதலைப் புலிகளைப் பாராட்டிக் கொண்டு குதிரைப் போட்டிக்கு பந்தயம் கட்டுகிறவனைப் போல் நாம் நமது வேட்கையை வளர்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ஈழத் தமிழினம் போராட்டத்துக்கு தயாராகிவிட்ட இனம். தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இனம். அந்தப் போராட்ட உணர்வு இன்றும் குன்றாமல் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்கள். தங்களுக்கான உரிமையுள்ள ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு விடுவார்கள்.
ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம்? நமது குரலுக்கு செவி சாய்க்காத அரசோடு நாம் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா அல்லது இணைந்திருக்க முடியுமா என்பதுபற்றி சிந்திக்கக்கூடத் தயங்கினோம் என்றால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டுமே, ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கான விடையாய் உங்களிடம் விட்டு விடைபெற விரும்புகிறேன்

நன்றி.தமிழ்வின்

Saturday, July 4, 2009

எங்கள் குடும்பத்தலைவரில் ஒருவர்

எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன்.

ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது.

பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

பட்டுக்கோட்டையில் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும்.

தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான்.

இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!