Friday, October 21, 2011

1 . மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பின்னரே, அணு உலையை திறக்க வேண்டும் என்பது சரி. ஆனால் நாகர்கோவில் நகரத்தில் 6 ,500 பேர் வசிப்பதாக அறிக்கை தயாரிக்கும் இந்திய அரசை, போபால் விஷ வாயு விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பல வகையிலும் கை விட்ட , இன்றளவும் கை விட்டு வரும் இந்திய அரசின் நம்பக தன்மையை எப்படி நம்புவது? இத்திட்டத்தின் , கட்டுமான பணியை துவக்கிய திட்ட இயக்குனர் அகர்வால் மர்ம மரணம் குறித்து அரசிடம் இருந்து எந்த விளக்கமும் இதுவரை இல்லை. 2 . இந்தியா இதுவரை ,திட்டமிட்டுள்ள அனைத்து அணு உலைகளும் இயங்கினாலும் , அணு மின் சக்தியின் பங்களிப்பு 10 % மட்டுமே. இந்த வெறும் பத்து சத வீததுக்காக ஏன் இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்?.இதில் வேறு இதன் கழிவுகளை 24 ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டுமாம். நினைத்து பார்க்கவே மலைப்பாக இல்லையா? 3 . தொண்ணூறு சதவீதம் பங்களிப்பு தரும்,அனல்,புனல்,காற்று, சூரிய சக்தி திட்டங்களை பற்றி அரசு அதிகம் சிந்தித்ததாக தெரியவில்லை. ஐம்பது வருடங்களாக கிடப்பில் உள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை அரசு ஏன் துவங்க மறுக்கிறது? 4 . கூடன் குளம் திட்டம் துவங்கபட்ட ஆண்டு 1988 -89 .அப்போது நிறைய போராட்டங்கள், ஊர்வலங்கள் நாகர்கோவிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஆகினர். தீவிர போராட்டங்களின் காரணமாக ,அடிக்கல் நாட்ட வர இருந்த ராஜீவ் காந்தி தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். போராட்டம் என்றால் 2 பேர் செத்தது போதாதா?. 200 பேர் சாக வேண்டுமா என்ன ?. 5 . அதன் பின்னர் , ரஷ்ய உடைந்தபின்னர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. ரஷ்யா உடைந்து விட்டதால், இத்திட்டம் வராது என்று மக்கள் நம்ப தொடங்கி விட்டனர். 6 . ஆனால் திட்ட பணிகள் துவங்கியபோது , பெருமளவு எதிர்ப்பு இல்லை என்பது உண்மை. அதே வேளையில் ,அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளும் அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன.அது மீடியாக்களால், கண்டு கொள்ள படவில்லை. ஈழத்தில் படுகொலைகள் நடந்த போது ,மானாட மயிலாட கண்டவர்கள் நாம் என்பதை மறக்க வேண்டாம். மீடியாகளால் கண்டு கொள்ளப்படாதவை ,மக்கள் சபைக்கு வருவதில்லை. அதனால் உங்கள் கவனத்திற்கு வர வாய்ப்பில்லை. 7 . அடுத்து திட்டம் துவங்கிய போது, மக்கள் சுனாமி,ஆழி பேரலை போன்ற வார்த்தைகளை அறிந்து இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். தமிழ் நாட்டு வரலாறு அறியாத, ஏன் தனது ,தனது குடும்பத்து வரலாறு அறியாத, எம்.ஜி .ஆர்,சிவாஜி ,ரஜினி வரலாறு அறிந்த, இன்னும் அணு வின் தீமைகளை அறியாத படித்தவர்கள் வாழும் பூமி இது. இந்த நிலையில் ,கூடன்குளத்தை சுற்றி வாழும் படிப்பறிவில்லாத ,பாமர மக்கள் எதை தெரிந்து வைத்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்? 8 . பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் அணு உலையும் வெடிக்கவில்லை , இந்தியாவில் சுனாமியும் வரவில்லை. இதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள். இவை ஏற்பட்ட பின்னர் தான் ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. 9 . ரஷ்ய தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரஷ்ய தொழில் நுட்பம் இரண்டாம் தரமானது. உதாரணம் , இந்திய விமான படையில் உள்ள மிக்-21 . விமான படையில் இருபது வருடங்கள் பணியாற்றிய எனது நண்பர் சொன்னார்,அவர் கண் எதிரே, நான்கு விமானங்கள் தீ பிடித்தன என்று. அதை ஏன் ரஷ்ய பொறியாளர்களால் சரி செய்ய இயவில்லை? இவர்களுடைய அணு பாதுகாப்பு மட்டும் எப்படி தரமாக இருக்கும்? 10 . ரஷ்ய எம்.பி.பி.எஸ் தரமற்ற கல்வி என்பதால் ,இந்திய அரசு அதை நேரிடையாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. 11 . மக்கள் எதிர்ப்பு அல்லது புரட்சி வெடிப்பதற்கு நீங்கள் காலக்கெடு எப்படி விதிக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. லிபியாவில் அறுபது ஆண்டுகளாக மக்கள் மௌனமாக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு இருந்தனர். எப்படி திடீர் என்று புரட்சி செய்யலாம் என்று நீங்கள் கேட்பதை போல் உள்ளது. 12 . எண்ணெய் ,வாயு துறையில் லீக் ஏற்பட்டால் அருகில் நிற்கும் நபர் மட்டுமே சாவார். அவரது குடும்பமோ ,வருங்கால சந்ததியோ சாகாது. ஆனால் அணு கதிரியக்கத்தில் சந்ததி சாவும் அல்லது ஊனமாகும். அணு துறையை , எண்ணெய் துறையுடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. 14 . இந்தியாவில் மின்சார தட்டுபாடாம். ஆனால் இலங்கைக்கு கொடுக்க மட்டும் மின்சாரம் இருக்கிறதாம். உங்கள் வசதிக்காக கீழே தந்துள்ளேன். India Sri Lanka to Share Electricity through Undersea Power Cables As a step towards strengthening bilateral relations, India and Sri Lanka are planning to share electricity through undersea power cables. The interesting features of the project are: A. Indian power circuit Indian power grid from Madurai to feed Rameswaram through an overhead transmission line From Rameswaram undersea cable would be laid to connect Talai Mannar, Sri Lanka B. Sri Lankan power circuit Talaimannar to feed to Anuradhapura through an overhead line to connect to Sri Lankan power grid Key Facts : 1.cost of the project is Indian Rupees 2292 crores 2.power cables would be laid in seabed like telecom or internet cables 3.to have built in safety to address electrocution on both sides in case of 4.undersea cable damage 5.an optical fibre cable also would be laid along with power cables to monitor power cables and to enhance communication facilities on both sides 6.to start with, power sharing would be of 500 MW and later can be enhanced up to 1000 MW 7.could be completed in 42 months 15 . இப்படி இலங்கைக்கு மின்சாரம், என்.எல்.சி , அணை நீர் பிரச்சினை என்று எல்லாவற்றிலும் நாம் இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிரோம். இதை டமிளர்கள் என்று புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. நன்றி பகலவன் குழுமம் (இணையதளம்)

Thursday, October 20, 2011

உடைந்த கடவுள் (கவிதைத் தொகுப்பு)

புத்தகத்தின் பெயர் : உடைந்த கடவுள் (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கவிஞர் வித்யாசாகர் ஆய்வு : கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம் பேரன்புடையீர் வணக்கம், ஒரு சில நாட்களில் என் மகிழ்ச்சி எல்லையில்லாமல் சென்றுவிடும். காரணம் எதாவது ஒரு புதிய புத்தகம் கிடைத்துவிட்டால் ஏறக்குறைய நான் பித்தாகவே ஆகிவிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும்.... கவிஞர் திரு. வித்யாசாகர் எழுதி சமீபத்தில் வெளிவந்த "உடைந்த கடவுள்" புத்தகத்தை படிக்கப் படிக்க அங்கனம் ஆனேன். சாதாரணமான ஒரு புன்னகையுடன் மட்டுமே அவரிடமிருந்து அப்புத்தகத்தைப் பெற்றுவந்த நான் வாங்கிக்கொண்டு... வீடு வந்து சேர்வதற்குள் 47 கவிதைகளைப் படித்துவிட்டேன். அதாவது 47 கருத்துக்களை என் மூளையிடம் ஒப்படைத்துவிட்டேன். வீடுவந்தவுடன், மிச்ச கவிதைகளை சொச்சமின்றி படித்து மெச்சினேன்.... அக்கவிதைகளைப் பற்றிச் சொல்வதெனில், சில கவிதைகள் நம்மிடம் பேசுகின்றன.. சில என்னைச் சிந்திக்க வைத்தன... சில என்னை இவ்வுலக நடப்பெண்ணி சிரிக்கவும் வைத்தது. உண்மையில் இன்று என்னிடம் இப்புத்தகம் நிறைய பேசியது... என்னை நிறைய சிந்திக்கவைத்தது, என் கண்ணீரை சிந்தவும் வைத்து’ என் உணர்வுகளைச் சிலிர்க்கவும் வைத்தது... ஒவ்வொருக் கவிதையும்... வசிக்க வாசிக்க மணித்துளிகளை உடைத்துக் கொண்டு வெளிவந்துவிடுகிறது. அத்தகு, அவர் சொன்னதுபோலவே – //ஆனால் புரிவதற்கும் அர்த்தப்படவும் நாட்களும் வருடங்களும் தேவைப்படலாம்// ஆழமான கருத்துக்களை அசாதாரணமாகச் சொல்லி சிந்தையில் ஏற்றிவிடும் இவரா இப்படிச் சொல்வது ? என்று எண்ணினேன். உலக அசைவுகள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்து உணர்வுகளை உள்வாங்கி எழுத்துக்களின் கழுத்தை வளைத்து ஏட்டினில் எளிதாகப் பூட்டிவைத்த இந்தச் சாட்டையிலுள்ள ஒவ்வொரு நூலும் தெளிவாகவே நம் அறிவுக்குப் புரியவும் கண்ணுக்குத் தெரியவுமேத் தந்துள்ளார். மொழிமீது கவிஞர் வைத்த விழியை.. இந்தக் கவிதைகள்தான் அடித்துச் சொல்கிறதே ... //புதைந்து கிடந்ததை தோண்டிஎடுத்தவன் தானே செய்ததாகச் சொன்னான் – செம்மொழி// //கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் "கிலோ" தமிழ் என்றே தெரியப்பட்டுள்ளது// மனித நேயம் என்பது நாம் அடுத்தவர் மீது இரக்கப்பட்டு கொடுத்து உதவுவது என்பதல்ல. முதலில் அடுத்தவர் படும் துன்பத்தை உணர வேண்டும்...இதுதான் மனித நேயத்தின் முதல் நிலை... நம் கவிஞரின் மனம் சுமக்கும் மனித நேயத்தை இக்கவிதைகளின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. //தெருவோரத்தில் நிறைய வாகனங்கள் வரிசையாய் நிற்கிறது... எத்தனையோ பேரின் அவசரம் தெரிந்தோ தெரியாமலோ ..// //நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது... // //அந்த அறைகளுக்கு எந்தக் கவலையுமில்லை.... தெருவில் உண்டு உணர்ந்து புணர்ந்து ஒரு தலைமுறையைக் கடக்கும் ஒரு சாமானியனுக்குத் தேவை அந்த நன்கு சுவர்களே... // என்று சமுதாய சிந்தனையோடு அவர் படும் ஆதங்கம் எத்தனை எத்தனையோ அவரின் கவிதைகளில் காண முடிகிறது .... மேலும் நம் தேசத்தின் இன்றைய நிலையானது...ஒரே இடத்தில் நிலையாக நின்றுகொண்டே ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்போல் தான் உள்ளதென்பதை...மிக எளிதாகப் புரியும்படி கூறிவிட்டுப் போகிறார் கீழுள்ள இந்தக் கவிதையில். //சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகிறது நம் தேசத்தின் முன்னேற்றம்// இதோ... எதிர்பார்ப்புகளோடு சுழன்று கொண்டிருப்பதென்ன நம் மனித இனம் மட்டுமா? ...எத்தனையோ எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிக்கொண்டிருக்கிறதோ இந்தப் பிரபஞ்சம் என்று நம்மைச் சிந்திக்க வைத்துவிடுகிறாரே கீழ்வரும் இச்சிறு கவிதையில்... //நிறைய மண் மாளிகையாகமலும் நிறைய பஞ்சுகள் நெய்யப்படாமலும் நிறைய மனிதர்கள் பக்குவப்படாமலும் விதியென்று சுற்றுகிறது பூமி // ...... வலிகளைப் புரிந்து கொள்ள அடிபட்டிருக்கவேண்டும் என்பதல்ல.... ஒரு கவிஞனென்பவன் தான் எழுத எடுத்துக் கொண்ட கருவை தானே "அது" வாக மாறிவிடும்போதுதான் அதன் நுணுக்கமான உணர்வுகளை அவனால் அக்கவிதையில் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ''விதவை'' என்ற ஒற்றை வார்த்தைப் போர்வை அவள் உணர்வுகளின் மூச்சடைத்துவிடுவதை உணர்ந்து சொல்லி யுள்ளாரே... // வெற்று நெற்றியின் கோடி ஆசையை விதவை என்ற – ஒற்றை வார்த்தை மறைத்துக் கொள்கிறது... // இதைப் படித்துமுடிக்கையில் உண்மையில் தொண்டையை அடைத்த உமிழ்நீரை விழுங்கிவிட்டுத்தான் அடுத்த கவிதைக்குள் கண்புகுத்தினேன் நான்! செவ்வாயில் நீரையும் நிலாவில் காற்றையும் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் காலத்திலும் கண்மூடித்தனமான மூடத்தனத்தை இன்னும் நம் மூளை சுமந்து கொண்டுதானே இருக்கிறது..... அந்த மூடத்தனத்தை என்று நாம் முடக்கிப் போடுவோமோ தெரியவில்லையே என்ற ஆதங்கத்துடன் வெளிப்படும் கவிஞரின் கோபாவேசமும் மிக நன்றாகப் பல கவிதைகளில் புலப்படுகிறது...., அதை கீழ்வரும் கவிதைகள் செம்மையுறக் காட்டியும் விடுகிறது - // சுத்திப் போடறதை விட சுலபம் அதெல்லாம் ஒண்ணுமே யில்லைன்னு நம்பறது // சூப்பர் வித்யா...சபாஷ் என்று சொல்லாமல் இருக்க முடியுமா இதைப் படித்துவிட்டு? அடுத்து... // சிந்திக்காமல் வாங்கினவன் வீட்டில் கழுதைப் படமும் நெற்றியில் முட்டாள் பட்டமும் // // கால நேர சம்பிரதாயம் பார்ப்பவன் வீட்டிலும் பிணங்கள் விழாமலில்லை... // இப்படி எத்தனை எத்தனை பாமரத்தனமான பழக்கங்களை இன்னும் நம் மக்கள் வழக்கில் கொண்டிருப்பதை இப்புத்தகத்தில் பல இடங்களில் தன் கூர்மையான எழுதுகோலால் நிம்பி நம்மை உணர்வைத்திருக்கிறார். // அங்கிருந்தே நூல் பிடிங்க மொத்த மூடத்தனத்துக்கும் பாடையை நாமே கட்டலாம் // இந்த வரிகளைப் படிக்கும்போது "மிக அழுத்தமான வரிகள் வித்யாசாகர்" என்று கூறி கவிஞருக்கு இங்கிருந்தே ஒரு பூங்கொத்து கொடுத்துவிடத் தோன்றுகிறது. // இதெல்லாம் வேண்டாம்னு சாமியே வந்து சொன்னாக்கூட சாமியையே முட்டாள் என்று சொல்லும் புத்திசாலிகள்தாம் நாம்.. // என்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ.... இப்படி, சின்ன சின்ன சில்லறை மூடத்தனங்கள் இன்றும் நம்மைப் பெரிய அளவில் ஆட்டிப் படைப்பதை அர்த்தத்தோடு சொல்லி இருக்கிறார் நிறையக் கவிதைகளில்.... //மரணம் மட்டும் நிகழாதிருக்குமானால் நிகழாது இருந்திருந்தால் மனிதன் கொல்லும் முதல் நபர் கடவுளாகக் கூட இருக்கலாம் ... // அடப்பாவிகளே... மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள பிணைப்பே இவ்வளவுதானே என நையாண்டி செய்ததுபோல் உள்ளது இக்கவிதை... சிரித்து மகிழ்ந்தேன்....இதைப் படிக்கும்போது... //எத்தனையோ வாகனங்கள்.... தரையைக் கிழிக்கும் வண்ணம் சீறிப் பாய்கிறது... யாருக்கு என்ன அவசரமோ...... ................................ இருப்பினும் - ‘போறவன் அப்படியே சாவறானா பாரு’ என நிறையப்பேர் மனசு நினைக்காமலில்லையே..// எவ்வளவு உண்மை இது... எத்தனையோ முறை எத்தனையோப் பேரை நானும் இப்படித் திட்டியிருக்கிறேனே, இதுபோல் ஒரு தருணமினி வருமெனில் ஒரு நிமிடம் நான் இக்கவிதையினை நினைத்துப் பார்த்து அவசரப்படாமல் ... அவர்களின் அவசரம் என்னவாக இருக்குமோ என நினைத்து... திட்டாமல் வழி விட்டே செல்வோமே என நினைக்கவைத்துவிட்டார் கவிஞர் வித்யாசாகர்.. இன்னொரு கவிதையில் // கோவில் உண்டியலில் போடும் பணத்தைப் படிக்கச் செல்லும் பாலகனின் கிழிந்த சீருடையை மாற்றச் சொல்லி அவனின் தாயின் கையில் திணித்த // அந்த நல்லெண்ணம்... கவிஞரின் உள்ளத்தை முழுமையாகப் படிக்கச்செய்தது. //நூறு ரூபாய்க்குத் துணிவாங்கி நூற்றி ஐம்பதிற்கு சட்டை தைத்து.... தினம் இரண்டு ரூபாயில் பெட்டிப் போட்டு ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும் ஏழைகளை நினைக்காததில் உடைகிறது கடவுள் // என்கிறார். கட வுள் உடைந்தானோ இல்லையோ என் கண்ணீர் இக்கவிதை வரியில் உடைந்தது... // தெருவோர தூசிகளில் தூளி கட்டி கிழிந்த புடவையின் வழியே அம்மா வருவாளா... எனப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் ஏக்கத்தின் தடங்கள் தன் அடையாளங்களை நல்ல தார் சாலையாக மட்டுமே காட்டிக்கொள்கிறது.. // இந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் திரு. காசி ஆனந்தனின் – நீ செருப்பின் அழகைப் பார்க்கிறாய்... நான் அதைத் தைத்தவன் கையைப் பார்க்கிறேன்" என்ற கவிதை வரி நினைவுக்கு வருகிறது... ஆக... பலவித நறுமண மலர்களைச் சேர்த்துச் செய்த இக்கவிதைப்பூங் கொத்தினை... சிறிது சிறிதாகக் கொத்தித் தின்ற ஒரு சிறிய பறவைப் போல் நானும் இப்புத்தகத்தை படித்து மன நிறைவு பெற்று மகிழ்ந்தேன்.... மொத்தத்தில் கவிக்கோ திரு. அப்துல்ரகுமானின் ஆலாபனையும், ஈழத்துப் புரட்சிக் கவி திரு. காசி ஆனந்தனின் "நறுக்குகளும்" சேர்ந்து இரண்டிலுமாய் அப்பெருங் கவிஞர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சற்றும் குறைவின்றி கவிஞர் வித்யாசாகரின் கவிதைகளும் சமுதாயத்தை நோக்கித் தாக்குகின்றது.... இத்தனைப் பண்பட்ட இப்படைப்பாளியின் வரிகளில் சமுதாயத்தைப் பண்படுத்த முனையும் இவரின் எண்ணங்களும் எழுத்துக்களும் இத் தமிழுலகில் என்றென்றும் நிலைப் பெற்றிருக்க வாழ்த்துகிறேன்! அன்புடன், கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம் செயலாளர்: பெரியார் பன்னாட்டு மையம், குவைத் கிளை

Sunday, October 9, 2011

தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க அரிமாவளவன் அழைப்பு!!

காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார். உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும் கட்டடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இந்தியா தலை குனிந்து நின்றது. இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமர் அவர். அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிகளை விழுங்கிய எமகாதர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால், அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர்தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார். ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டட ஊழல், அரங்குகளும் பாலங்களும் சரிந்து விழுந்த கல்மாடி ஊழல், அலைக்கற்றைத் திருட்டு ஊழல் போன்றனவெல்லாம் மன்மோகன்சிங் அருகில்தான் நடந்தன. ஆனால், கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது! பாதுகாப்பானது என்றால், பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! பாராளுமன்றத்தைத் தாக்கியதையே தடுக்க முடியாது அசகாயச் சூரர்கள் அணுஉலை வெடித்தால் காப்பாற்றிக் கரை சேர்த்து விடுவார்களாம்! முதல் அணுஉலையைக் கட்டும்போது எச் சி எல் என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத்தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது. கடல் மணலைக் கலந்து கட்டடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணுஉலை வரைபடத்திலும் விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன் வெல்த் “கலக்கல்” கட்டடம்தான். தில்லி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இரண்டு முறை குண்டு வெடித்தது. அதையே தடுக்க முடியவில்லை. மும்பை நகரின் நட்ட நடு வீதியில், நடுப்பகலில் சுட்டுத் தள்ளியதை நேரடி ஒளிபரப்பினார்களே! இப்படி மையத்தையே காப்பாற்ற இயலாத இவர்கள் கடைக்கோடியில் கடைபரப்பி வைத்திருக்கிற அணுஉலைகளைக் காப்பாற்றப் போகிறார்களாம்! வெடித்தபிறகு மன்மோகன்சிங், எழுதி வைத்து இரங்கல் வாசிப்பார். கேட்க நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு எதிராக இருக்கிற இலங்கைக்கும் கேரளாவிற்கும் மின்சாரம் வழங்கத்தான் திட்டம். எஞ்சியிருப்பது தமிழ்நாட்டிற்கு என்று காடை காட்டுகிறார்கள்! கண்ணை விற்றா சித்திரம் வாங்குவோம்? உயிரை விலை பேசியா எச்சில உணவு தேடுவோம்? தமிழனைக் காவு கொடுத்து மின் உற்பத்தியா? மத்தியில் இருக்கிற காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு என்று எண்ணற்ற முறை மெய்ப்பித்து விட்டது. இரு நாட்களுக்கு முன்பாக ராமேசுவரம் பகுதியிலிருந்து சிங்கள இனவெறி கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் இந்தியப் படைகளின் முன்பாகத்தான் கடத்தப்பட்டிருக்கின்றன. 550 மீனவர்களைக் கொன்ற பின்னரும் இந்தியா தமிழ் மீனவர்களைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலையை சிங்களப் இனவெறி அரசோடு சேர்ந்து செய்து முடித்த காங்கிரசு ஆட்சி கூடங்குளத்தில் மட்டும் தமிழினத்தின் மீது பாசமழையையா கொட்டப்போகிறது? மீண்டும் ஒரு தமிழினப் படுகொலைக் களத்தைத்தான் அங்கே உருவாக்கி வைத்திருக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரசுக் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்! ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது. வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக்கூட நாம் இருக்கமாட்டோம்! நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரசுக் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக் கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம். இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, October 8, 2011

‘இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிடிபடவில்லை பிரபாகரன்!’-விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், “விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 25, 2009-ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் முன்னாள் வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ‘புலிகளை எதிரிகளாகவே கருதிய நாராயணன்!’ ‘த இந்து’ வெளியிட்டுள்ள இன்னொரு விக்கிலீக்ஸ் கேபிளிலில், “இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் எம் கே நாராயணன் விடுதலைப் புலிகளை அடியோடு வெறுத்தார். புலிகளை எதிரிகளாக பாவித்துதான் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். புலிகள் பற்றிப் பேசும்போதெல்லாம் துவேஷமான வார்த்தைகளைப் பிரயோகித்தார்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி: http://www.envazhi.com/?p=24033