Wednesday, March 31, 2010

1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்

ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.

முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு. அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம். அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின் ராஜதந்திரியாக இயங்கிய அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது. ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமெரிக்க அதிகாரிதான்.

நன்றி - மொழியும் நிலமும்

1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.

ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.

முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு. அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம். அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின் ராஜதந்திரியாக இயங்கிய அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது. ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமெரிக்க அதிகாரிதான்.

நன்றி - மொழியும் நிலமும்

Tuesday, March 30, 2010

ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது



இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 62 அயல் நாடுகளின் ஆதரவுகளை பெறுவது அவசியமானது. அதனை ஈரான் முன்னெடுத்து வருகின்றது.

முஸ்லீம் உலகத்தின் ஆதரவுகளை இந்தியா பெற மேற்கொண்டுவரும் முயற்சிகள் அண்மைக்காலமாக தோல்வியடைந்து வருகின்றன.
சவுதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தோல்வியுடன் திரும்பியுள்ளார். துருக்கி அரச தலைவரை இந்திய அழைத்துள்ள போதும், அவரும் இந்தியா வருவதை விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்த்தானை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்தியா ஈரானுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயன்றபோதும் ஈரான் அதில் அக்கறை கொள்ளவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், அதனை இரு தடவைகள் மாற்றி அமைத்த ஈரான் பின்னர் அதனை கைவிட்டுள்ளது.

எதிர்கால விஜயம் தொடர்பிலும் எதனையும் ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் மீதான தடை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது ஆதரவுகளை தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கான 6 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்தையும் ஈரான் இரத்துச் செய்துள்ளது. இந்த எல்என்ஜி திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.

இதனிடையே இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகளும், ஈரானை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகள் ஈரான் விடயத்தில் தோல்வி கண்டுள்ளது.

பாகிஸ்த்தானின் பிரச்சனையானது புதுடில்லிக்கு சிக்கலானது. 1980 களில் ஈரானும், பாகிஸ்த்தானும் போட்டியான நாடுகள். தமது அனுபவங்களில் இருந்து அவர்கள் தற்போது பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர்.

மன்மோகன் சிங்கின் ஈரான் விஜயம் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தற்போது அதில் அக்கறை அற்ற நிலையில் ஈரான் உள்ளது.

இவ்வாறு இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் பல வேற்றுமைகள் தோற்றம்பெற்று வருகின்றபோதும், ஒரு விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கொள்கையை கொண்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோ படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தான் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.

ஆப்கான் பிரச்சனை தொடர்பாக இஸ்ரன்புல் பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டை ஈரான், பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகள் ஒழுங்கு செய்திருந்தன.

இது தொடர்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு இரண்டாம் தர வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஈரானில் இருந்து பாகிஸ்த்தான் ஊடாக எண்ணை விநியோக குழாய்களை அமைப்பதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்த்தானில் இருந்து ஈரானின் தலைநகருக்கு தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு துருக்கி பல பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்த்தானுடன் தாஜிகிஸ்தான் மற்றும் உபெஸ்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் வீதிகளையும் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முஸ்லீம் உலகத்தின் இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றால் ஐக்கிய நாடுகள் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெறும் இந்தியாவும் கனவும் கலைந்து விடலாம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவை 26 துண்டுகளாக உடைப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என தெரிவித்துவரும் சீனா தற்போது முஸ்லீம் நாடுகளை தனது பக்கம் திருப்பியுள்ளது இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகின்றது.

நன்றி - மீனகம்

நாம் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு,

Monday, March 29, 2010

ஜ‌ன‌நாய‌க‌ சாமியார்க‌ள்..

எங்க‌ளை விட‌

எங்க‌ள் நாட்டு

சாமியார்க‌ள் தான்

ஜ‌ன‌நாய‌கத்தை சரியாக‌

புரிந்து கொண்டிருக்கிறார்க‌ள்...

அத‌னால்தான்

இங்கு சில‌ த‌ந்திர‌சாமிக‌ளின்

ம‌ந்திர‌ வ‌லைக‌ளில்

எங்க‌ள் மந்திரிமார்க‌ள்

ம‌ய‌ங்கி கிட‌க்கிறார்க‌ள்...

சாமியார் ம‌ட‌ங்க‌ளின்

சாய்வு மேசையில் எங்க‌ள்

ச‌ட்ட‌ வ‌ர‌வுக‌ள்

ச‌ரி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌...

அர‌சிய‌ல் வாதிக‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ள் தான்

அதிக‌மாய் அதிகார‌ம்

செலுத்துகிறார்க‌ள்...

ஆட்சியாள‌ர்க‌ள் மாற‌லாம்

ஆனால் ஆசியாள‌ர்க‌ள்

மாறுவ‌தில்லை...

என‌வே தான் இங்கு

ஆட்சியாள‌ர்க‌ளை விட‌

ஆசிர‌மவாசிக‌ளுக்கு

அதிக‌ ம‌ரியாதை...

ஒன்று ம‌ட்டும் புரிந்த‌து

எதையும் புரிந்து கொள்ளாத‌

இந்திய‌னைத்தான்

இவ‌ர்க‌ள் எதிர்பார்க்கிறார்க‌ள்...

Saturday, March 27, 2010

குறையுமா இந்த சுமை?





இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். இந்த தலைவர்களின் நிலையோ மிகவும் பரிதாபம். படிப்புதான் வாழ்க்கையின் ஆதாரம். இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் டியூசன்,மியூசிக்,யோகா போன்ற வகுப்புகள். இப்படி பயணம் சென்றால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதுதான் பெரும்பாலான பெற்றோரின் கனவு. இந்த கனவு நிறைவேறுகிறதோ இல்லையோ குழந்தை பருவத்திலேயே முழு சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

வீடு - பள்ளி - வீடு - டியூசன் செண்டர்,ஹோம் ஒர்க் இப்படி இயந்திர ஓட்டம்தான் குழந்தைகளுக்கு. இவை எல்லாம் சேர்ந்து படிப்பு மீது ஆர்வம் வருவதறகு பதில் பயம்தான் வருகிறது. விளையாட இடம் இல்லை, இடம் இருந்தாலும் நேரம் இல்லை. தங்க கூண்டில் கிளியாக மாற்றப்படுகின்றனர். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டும் பெற்றோர், அவர்கள் சுமக்கும் புத்தகப் பையை தூக்கி சுமந்து பார்த்தவர்கள் எத்தனை பேர்? என் குழந்தைக்கு லேட்டஸ்ட் பேஷனில் ஸ்கூல் பேக் வாங்கி கொடுத்திருக்கிறேன் என்று பெருமையாக கூறுகின்றனர். எல்கேஜி படிக்கும் மகன் கூட, அவன் எடைக்கு புத்தகப் பையை சுமக்கும் கொடுமை பற்றி பெற்றோருக்கு கவலை இல்லை. எல்லா புத்தகத்தையும் எடுத்து கொண்டாயா என்பதில் உஷாராக இருக்கின்றனர். பள்ளிகளில் அன்று என்னென்ன வகுப்புகள் உள்ளன என்பதை கூட பார்ப்பதில்லை. அதிக எடை சுமப்பதால் குழந்தைகள் கூன் போடும் நிலை. இதனால்,முதுகுவலி உள்ளிட்ட உடல்வலி. அதைவிட மனரீதியான பாதிப்பு. இந்த சுமையை குறைக்க கல்வியாளர்கள் பேசினார்கள்... பேசுகிறார்கள்... பேசுவார்கள். சுமைமட்டும் தொடர்கிறது. இப்போது குழந்தைகளின் புத்தக சுமை பற்றிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி உள்ளது. ஒரு பேனா, ஒரு பென்சில், ஒரு நோட்டு, ஒரு புத்தகம் போதாதா? அதை முடிவெடுக்க உத்தரவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார் வழக்கு தொடர்ந்தவர். அதில் நியாயம் இருக்கிறது. விசாரித்த உயர் நீதிமன்றம், புத்தக சுமையை குறைப்பது பற்றி மூன்று மாதத்தில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மூன்று மாத்துக்கு பிறகு சுமை குறையுமா?

Friday, March 26, 2010

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!

மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.

போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இறுதி நாட்களில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தாலும், அங்கிருந்து தப்பி வெளியேறியவர்கள் வெளியிட்டுவரும் தகவல்களின்படி, பலிகொள்ளப்பட்ட தமிழர்களின் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் ஒரு உறுப்பினர்கூடத் தப்பியிருக்கவில்லை என்பதால், இது குறித்த உண்மை விபரங்கள் வெளிவரக் கால தாமதம் ஆகலாம்.

இருப்பினும், யுத்தம் முடியும்வரை மவுனத்தைக் கடைப்பிடித்த மேற்குலகுக்கு, யுத்தத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் அணுகுமுறை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வும், எதிர்கால நம்பிக்கையுடனான புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்ற மேற்குலகின் வற்புறுத்தல்கள் சிங்கள அரசால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்தில், இந்த அழுத்தங்களை இந்திய – சீன – ரஷ்ய ஆதரவுகளுடன் முறியடித்த சிறிலங்கா அரசு தற்போது, ஐ.நா. ஊடான யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.

ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்குப் பின்பலமாக நின்ற இந்தியா, மேற்குலகின் மனிதாபிமான அணுகு முறைகளுக்கும் தடை போட்டுத் தனது சிங்களக் கூட்டாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களது பகை நாடாகக் கருத வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் தமக்கான நீதிக்காக மேற்குலகின் பக்கம் சாயவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவின் தென் திசைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயம் கொண்டது என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. இதனால்த்தான், தனது இறுதித் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் களத்தில் இறக்கியுள்ளது.
ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளையும், சிங்கள தேசத்தின் மேலாதிக்க சிந்தனையும் இந்தியாவின் மிரட்டல் அரசியலுக்கு இலங்கைத் தீவு களமாகியது. ஈழத் தமிழர்கள் ஊடான இந்தியாவின் இலங்கைப் பிரவேசம் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பால் தடம் மாறியது. இந்தியாவின் எதிர்பார்ப்பை விடுதலைப் புலிகள் நிர்மூலம் ஆக்கியதால், அதன் மிரட்டல் அரசியல் சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது. அதனை சிங்கள தேசம் அழகாகக் கையாண்டு, முள்ளிவாய்க்கால் வரை இந்தியாவின் துணையோடு ஈழத் தமிழர்கள் மீது அத்தனை கொடூரங்களையும் நடாத்தி முடித்தது. தற்போது, சிங்கள அரசு இந்தியா மீது மிரட்டல் அரசியலை ஆரம்பித்துள்ளது. அது இந்தியாவை தற்போது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியா விரித்த சதி வலையில் இந்தியாவையே சிங்கள தேசம் சிக்க வைத்துள்ளது. தற்போது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டும் அரசியலை சிங்கள தேசம் ஆரம்பித்துள்ளது.

இந்தியாவை மீறி தெற்காசியாவில் எதுவுமே சாத்தியமில்லை என்ற காலம் காலாவதியாகி, இலங்கைத் தீவிற்கான தமிழீழ நுழைவாயிலையும் இந்தியா இழந்து தடுமாறுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடத்தைப் பிடித்தால், அவர்கள் மூலமான காய் நகர்த்தல்கள் ஊடாகத் தன்னை இலங்கைத் தீவில் நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்குப் போடுகின்றது. இதற்குச் சமாந்தரமாக கிழக்கின் முதல்வராக மகிந்தாவால் முடி சூட்டப்பட்ட பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் வலை விரிக்கப்படுகின்றது. ஆனாலும், கிழக்கு தமிழர்களது கரங்களை விட்டு நழுவிச் செல்லும் நிலையை அடைந்து விட்டதால், அது எதிர்பார்த்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் கூட வடக்குடன் இந்தியக் கனவு முடிவுக்கு வரப் போகின்றது.

தற்போது, சிங்கள அரசு மேற்கொள்ளும் இராணுவக் குடியிருப்புக்கள், சிங்கள வர்த்தகர்களது யாழ். முற்றுகை, வர்த்தக வளாகங்கள் என்ற போர்வையிலான சிங்களத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் என்று வடக்கு சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் சென்று கொண்டுள்ளது. இது வட பகுதித் தமிழர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பதுடன், அவர்களது மொத்த கோபமும் இந்தியா மீது திரும்பும் நிலையில், தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியும் சிங்கள ஆக்கிரமிப்பு வர்த்தகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தமிழீழத்தின் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பூசிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் சிதைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது.

சிங்கள தேசத்தினதும் அதன் காடையர் கூட்டத்தினாலும் ஈழத் தமிழர்களின் போராட்டகால நினைவு சின்னங்களும், கலாச்சார அடையாளங்களும் திட்டமிட்டுத் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு வருவது புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. சிங்கள தேசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் சோகங்களால் சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் நீதி கோரிப் போராட வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழக்கூடிய அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. இது சாத்தியமல்ல என்று தத்துவம் பேசுபவர்கள் இஸ்ரயேலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதிலிருந்து எதிர்கால நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் போராட மறுத்தாலோ, தயங்கினாலோ சிங்கள ஆக்கிரமிப்புக்குள் நாம் எமது தேசத்தை இழந்துவிடுவது மட்டுமல்ல, எமக்கான அடையாளங்களையும் இழந்து விடுவோம்.

சிங்கள தேசத்திற்கு எதிராகவோ, ஒற்றைச் சிங்களவனுக்கு எதிராகவோ நாம் கருத்துக் கூறாவிட்டாலும் கூட, நாம் தமிழர்களாக வாழ முற்பட்டால் அவர்களது தாக்குதல்களுக்கு இரையாகுவோம் என்பதே தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி இடிப்பு எமக்கு உணர்த்தும் செய்தியாகும். எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய சார்பு நிலைப்பாடும் புலம்பெயர் தமிழீழ மக்களின் சுதந்திரத் தமிழீழ நிலைப்பாடும் ஒரே புள்ளியில் சந்திப்பதற்கான சாத்தியம் அற்றே காணப்படுகின்றது. இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும்.

Thursday, March 25, 2010

தன்மானம் ஒழிய பார்க்கிறோம் மானாட மயிலாட ....

தமிழ் வாழ்கிறது

தமிழ் நாடு அழிய...
இவன் வாழ்கிறான்
தமிழினம் அழிய...

மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க....
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா.

இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை...
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட .

மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ...
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ.

பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள்வாழ...
இலவசம், மயக்கம்கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய்வாழ.

தமிழைத்தேடுகிறேன்
செம்மொழி- தமிழைத் தேடுகிறேன்!
தமிழனைத்தேடுகிறேன்,
தன்மானத்தமிழனைத் தேடுகிறேன்,

கட்சிக்குச் சொந்தக்காரன்
பாதித்தமிழன் !
சாதிக்குச்சொந்தக்காரன்
மீதித்தமிழன்.

அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு ;
அதைப் புரிந்துகொள்ளாதவரை
நீதான் தமிழனே ! தமிழுக்குச்சாபக்கேடு.

தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டுபோக...
தமிழனின் வீரத்தின்பட்டியல்
குருடாகிப்போனது.

தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல்விளையாட !
தமிழ் நடனம்ஆடுகிறதாம்

டாஸ்மாக்கில் குடிகாரத்தமிழன்ஆட.

தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலைஅள்ள !
தமிழனம் ஒளிர்கிறதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திரிய.

வந்தாரை வாழவைத்தானாம்,
வந்தவனெல்லாம் ஏறிமிதிக்க !
இந்தியஅன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழகமீனவனை ஏறிநசுக்க.

ஆம்! எங்கும் தமிழ்நாடுவாழ்கிறது,
தமிழ் அழிய ....
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய !!!


....பகலவன்...

Wednesday, March 24, 2010

அநீதிக் கண்டு பொங்குவாய் -கண்மணி


இந்த நாடு எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது விளங்கவில்லை. தமிழ் நாட்டு அரசின் ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி மக்களை மதி மயங்க செய்ததா? அல்லது இலவச தொலைக்காட்சியின் தொடர்கள் அவர்களின் மூளையை முற்றிலுமாய் அழித்ததா? புரியவில்லை. இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சீர்கேடும் நாட்டு மக்களின் உயிர் ஆதாரத்திற்கு உலை வைப்பவையாக இருக்கின்றன. மக்களின் உயிரோடு விளையாடுவதென்பது மிக இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது.

மக்களின் உயிர், மாற்று தன்மை மிக்கதல்ல என்கின்ற உள்ளார்ந்த உண்மை வெளிப்படையாக, அழுத்தமாக தெரிந்திருந்தும்கூட உயிர்களை குறித்த அக்கறையோ, உயிர்கள் மேல் ஒரு துளிக்கூட உண்மையான நம்பிக்கையோ அற்றவர்களாய் இவர்கள் இருக்கிறார்கள். நாள்தோறும் செய்தித்தாள்களில் கொலை, கொள்ளை என செய்திகள் வருகிறது. மனித உயிர்கள் கொல்லப்படுவதை குறித்து கொஞ்சமும் கவலை அற்றவர்களாய் இவர்கள் இருக்க காரணம் என்ன? இந்த கொலைக்கான காரணங்களை காவல்துறையினர் கதை, வசனம் எழுதி வெளியிடும்போது அதற்கான அடிப்படை, ஒருவருக்கு ஒருவர் இடையே மனக்கசப்பு, போட்டி மனப்பான்மை. இதுவே அழித்தொழிப்பின் காரணமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அதைவிட மேலாக ஒரு காரணம் இருக்கிறது. அவர்களின் செயல்களில் லாப வெறி செழித்தோங்கி இருப்பதை காண முடியும். மனைச்சந்தை பெரும் வர்த்தகமாக வளர்ந்து வந்தபோதுதான் அதற்கான லாப பங்கீடு, அதற்கான கழிவுத் தொகை இப்படி பல்வேறு காரணங்கள் லாப நோக்கைக் கொண்டு கொலையை வெற்றிகரமாக நடத்தி முடித்தன. ஒரு மாந்த வாழ்வு என்பது கேவலம் பணத்திற்காக அல்லது, பதவிக்காக அழித்தொழிக்கப்படும் அவலம் மாந்த நாகரீகத்தை கேவலப்படுத்துகின்றன. மனித உயிர் என்பது அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தது. இந்த மண்ணை மாற்றி அமைக்கும் மாபெரும் திறன் கொண்டது. இந்த பூமி இயங்குவதற்கு அடிப்படையானது.

ஆனால் இவ்வளவு சிறப்புக் கொண்ட மனித உயிர்கள் கொல்லப்படுவது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும்கூட. ஆனால் கண்டிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. காரணம் உயிர்மேல் கொண்ட அச்சம் அவர்களை அநீதியைக் கண்டு பொங்கி எழும் மனதை பாழடித்துவிட்டது. நீதிக்காக அவர்களின் வாழ்வு என்பது நிர்மூலமாக்கப்பட்டது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான உயிர்கள் போராயுதங்களால் பெரும் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தால் கொத்துக் கொத்தாய் உயிர்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. பகைமையால் ஏற்பட்ட கருத்து சீரழிவு பலரின் உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகின்ற செயல்கள். இவைகளுக்கான காரணங்கள் பலவாறு சொல்லப்படுகின்றது. ஆனால் தூக்குத்தண்டனை கொடுப்பதுகூட தவறு என வாதிடும் ஒரு மகத்தான வாழ்வியலை நோக்கி இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

உயிருக்கு உயிர் என்கின்ற கோட்பாடு ஏற்புடையதல்ல என்கிற உயரிய தத்துவம் இன்று உயர்ந்தோங்கி நிற்கிறது. ஆக, மாந்தத்தின்மேல் அக்கறைக் கொண்ட அனைவரும் மனித உயிர்களை காப்பாற்ற அணியணியாய் களத்திலே இருக்கிறார்கள். அவர்கள் எதனையும் எதிர்பார்த்து அல்ல, இந்த மாந்தம் அழிந்துவிடக் கூடாது என்கிற ஒரே நேர்க்கோட்டில் அவர்களின் சிறப்புப் பயணம் சென்றுகொண்டிருக்கிறது. இதற்காக அவர்கள் இரவு பகல் பாராது சிந்திக்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் உழைக்கின்றார்கள். உலகத்தை ஒன்றிணைக்க பெரும் முயற்சி எடுக்கின்றார்கள்.

எப்படியாவது உயிர்கள் போவதை தடுத்துவிட முடியாதா? போர்களிலும் இயற்கையின் சீற்றத்திலும் போகும் உயிர்களை காப்பாற்ற முடியாதா? பசி, பஞ்சம், வறுமையில் போகும் உயிர்களை தடுத்து வைக்க முடியாதா? மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் உயிர்களை நிறுத்தி வைக்க முடியாதா? என்றெல்லாம் பலவாறு அவர்களின் வாழ்வு ஓய்வு, உறக்கம் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கேவலம் பணத்திற்காக மனித உயிர்களை குறித்து கொஞ்சமும் கவலைப்படாத கொடும் நெஞ்சம் படைத்தவர்கள், கேடு நிறைந்தவர்கள், இந்த மண்ணிலே மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்கிறார்கள்.

அவர்களின் தனிமனித வாழ்வின் உயர்வுக்காக, மகிழ்வுக்காக, ஆடம்பர வாழ்க்கைக்காக எத்தனை உயிர்களை பலி கொடுக்கவும் அவர்கள் தயங்குவது கிடையாது. அதுவும் நம்பிக்கையோடு நோய் தீரும் என்று வாங்கி அருந்தும் மருந்திலேக்கூட நஞ்சு கலக்கும் வேலையை இந்த கனத்த நெஞ்சம் கொண்டவர்கள் செய்கிறார்களே என்ற செய்தி சில நாட்களாக ஊடகங்களை உலுக்கி எடுக்கிறது. மருந்து கடைகளில் காலவதி ஆனதா? இல்லையா? என்பதை கண்டறிய நாம் மருந்தை திறந்து சோதித்தறிய முடியாது. அந்த கலன்மீது ஒட்டப்பட்டிருக்கும் துண்டு குறிப்புத்தான் நமது நம்பிக்கை. அதிலிருக்கும் தகவல்தான் நமக்கு அளிக்கப்படும் உத்திரவாதம். அதை பார்த்துத்தான் நாம் மருந்தை வாங்கி நோய் தீர்க்க அருந்துகிறோம்.

ஆனால் அதையே சாவு வர வைக்கும் சாத்தானாக உருமாற்றும் இந்த உள்ளமற்ற கொடியவர்களை என்னச் சொல்லி அழைப்பது என்பது இன்றுவரை விளங்கவில்லை. போலி மருந்து தயாரிப்பு என்கிற செய்தி சமீப நாட்களில் மக்களை மருந்து கடை பக்கம்கூட செல்ல அச்சமடைய செய்கிறது. தலைவலிக்கென்று வாங்கும் மருந்துக்கு நமது தலையை திருகிக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறதோ? யார் அறிவார்? இதய வலிக்கு வாங்கும் மருந்தில் நமது இதயத்தை உடைத்தெறியும் நிலை இருக்கிறதோ? அந்த மருந்திற்கு தான் தெரியும். எவ்வளவு கேவலம்.

தமது வாழ்வின் மகிழ்ச்சிக்காக இந்த மாந்த குலத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்யும் இவர்களை என்னச்சொல்லி அழைப்பது? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? கேடு நிறைந்த இந்த வாழ்வு இவர்களுக்கு தேவைதானா? என்றெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இதற்கான மறுகட்டமைப்போ, இல்லையென்றால் இதை மாற்றுவதற்கான செயல்வடிவமோ இதுவரை நாம் செய்யவில்லை. இதில் முழுக்க முழுக்க பணவெறி மட்டும்தான் குறிக்கோளாய் இருந்திருக்கிறது. காலவதி ஆகிப்போன மருந்துகளை அழிப்பதற்காக அனுப்பும்போது அவற்றை மீண்டுமாய் அதே மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்து அந்த மருந்தின் மீது இருக்கும் லேபிள் என்று சொல்லப்படும் குறிப்பு சீட்டை மட்டும் எடுத்தெறிந்து விட்டு அதே மருந்திற்கு புதிய குறிப்பு சீட்டை ஒட்டி, புதிய மருந்தாக கடைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பும் மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறார்கள்.

இதில் தனிநபர் ஒருவருக்கு மட்டுமே பங்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. இதன் உள்கட்டமைப்பில், வெளி அரங்கில் எத்தனை பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்களோ, யார் யாருக்கெல்லாம் இந்த உயிர்கொல்லும் இயக்கத்திற்கு கழிவுத்தொகை செல்கிறதோ என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாத உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது. அரசு அதிரடியாக நடவடிக்கை என்ற பெயரில் சில நிறுவனங்களை மூடி, முத்திரையிட்டிருக்கிறது. சிலரை தேடி வருகிறது. இவ்வளவு பெரிய மோசடி மூளை இவர்கள் மட்டும்தானா? இவர்களுக்கு அப்பால் யார் இருக்கிறார்கள் என்கிற செய்தியெல்லாம் நமக்கு தெரிவதற்கு முன்னால் மீண்டும் ஒரு பென்னாகரம் இடைத்தேர்தலோ அல்லது பிரேமானந்தாவோ, நித்தியானந்தாவோ, கல்கி பகவானோ ஊடகங்களிலே வந்து முகம் காட்ட தொடங்கிவிடுவார்.

பிறகு, இந்த மோசடி மருந்தை குறித்த சிந்தனை நம்மிடமிருந்து மறக்கடிக்கப்பட்டுவிடும். மீண்டுமாய் நாம் பழையபடி கிளுகிளுப்பு செய்திகளிலும், குத்தாட்ட நடனங்களிலும் நம்மை ஒப்படைத்துவிட்டு, அநியாயத்திற்கு துணைபோகும் கூட்டத்தில் ஒருவராக இணைந்துவிடுவோம். இதையெல்லாம் மாற்றி அமைக்க, ஒரு ஆற்றல் வாய்ந்த, திறன் கொண்ட அமைப்பு நிறுவப்பட வேண்டும். மக்களின் உயிர் காக்கும் பிரச்சனையிலேயே இவ்வளவு கேவலங்கள் நிகழ்கிறது என்றால், இந்த நாட்டின் வளர்ச்சி குறித்து, இந்த நாட்டின் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது உண்மையிலேயே சிறப்பானதாக தெரியவில்லை. போபால் விஷவாயு ஆயிரக்கணக்கான மக்களை பழி வாங்கியது.

இதுவரை அந்த மக்களுக்கு விடிவு அல்ல, வெறும் நிவாரணம்கூட வழங்குவதற்கு அந்த நிறுவனம் தயாராக இல்லாமல் பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று அதே நிறுவனம் வேறொரு பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தடுப்பார் யாரும் இல்லை. உயிர் கொடுப்பதற்கோ அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படிதான் இந்த மோசடி மருந்து விற்பனையில்கூட நிறுவனங்கள் பூட்டி முத்திரையிடப்படும். மேலோட்டமாக சிலர் கைது செய்யப்படுவார்கள். பின்னர் அதே நிறுவனம் வேறொரு பெயரில் மீண்டும் இயங்கத் தொடங்கும். கேட்பதற்கு யாரும் கிடையாது.

இந்த நாட்டு மக்களின் உயிராதாரப் பிரச்சினையை கட்டிக் காப்பதற்கு நாதிக் கிடையாது. இதையெல்லாம் பார்க்கும்போது நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விதான் நம்முன் எழுகிறது. நாம் அநீதியைக் கண்டு அமைதி காத்தால் நாளை நாமும் அந்த அநீதிக்கு பலியாகலாம். இப்போதே சொல்லிக் கொள்வோம் அநீதிக் கண்டு பொங்குவாய் வா வா என.

ஈழத் தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கப்போவது யார்?

நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது.

இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம்.

சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும்.

நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்!

பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள்.

ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும்.

ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது.

ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.

எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன.
இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்!

தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்!


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Monday, March 22, 2010

தேடல்...

தேடித் தேடி சலித்துவிட்டது
பேருந்துகளிலும்
ரயில் வண்டிகளிலும்
ஒவ்வொரு சன்னலாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீதானா என்று?

கடற்கரை முதல்
கவியரங்கம் வரை
ஒவ்வோர் இடங்களிலும்
உனக்கான என் தேடல்
இன்னும் ஓய்ந்த பாடில்லை...

நண்பர்கள்
நகைக்கிறார்கள்
நகைக்கட்டும்...

உடன் பிறப்புகள்
உதறுகிறார்கள்
உதறட்டும்...

எனக்கு
நீ மட்டும்தான்
வேண்டும்!
உன் பார்வை
மட்டும்தான்!

உன்னைத் தேடுவேன்
என் விழிகள்
பனிக்கும் வரை!
எந்தச் செடியில்
பூத்துக்கிடக்கிறாய்?

தூக்கத்தில் மட்டுமே
வந்து போகும் நீ
நேரிலே
வரமாட்டாயா?

சில சமயம்
நடுக்கனவில்
எழுந்து விடுகிறேன்
உன்னை காண்பதற்கு!

மனதெல்லாம்
நிறைந்திருக்கும் உனக்கு
என்ன பெயர் வைப்பதென்று
யோசித்து யோசித்து
கடைசியாக
என் பெயரில் பாதியையே
வைத்து விட்டேன்...

எங்கே இருக்கிறாய்?
ஒரே ஒருமுறை
காட்சி தா!

உன் வருகைக்கான
நம்பிக்கைகளுடன்....

Sunday, March 21, 2010

பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு

தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் போராளிகளுக்கு தங்க இடமும் , உணவும் கொடுத்தவர்களில் ஒருவரான திருமதி சி.மாதம்மாள் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது இறுதி நிகழ்வினை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர்.

நேற்று (20.03.2010) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் அவர்களின் தாயார் திருமதி சி.மாதம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார். பேரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இறுதி ஊர்வலம் 21.03.10 ஞாயிறு காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் பெரியார் திராவிடர்கழகத்தின் மகளிரணி தோழியர்கள் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மறைந்த திருமதி மாதம்மாள் அவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிகழ்வுகளை கண்ட ஏராளமான பொதுமக்கள் வியப்படைந்தனர். இதுவே இப்பகுதியின் முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வை தோழியர் கனகரத்தினம் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார்.


தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது! இதில் பங்கெடுங்கள்!


‘தமிழீழம்’ மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, ‘இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்’ என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார்.

“சமஷ்டியின் காலம் எப்பவோ முடிவடைந்து விட்டது. தமிழ் பிரதேசங்கள் கொழும்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படாவிடின், இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ ஏற்படமுடியாது. இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் இத்தகைய வாக்கெடுப்பு நடத்தினால் 100 வீதம் ‘ஆம்’ என்றே வாக்களிப்பார்கள். ஏழு கோடி தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பு நடத்தினாலோ, டெல்லி அரசு ஓடி ஒளிப்பதற்கு இடம் தேடவேண்டி வரும் என அவர் எழுதுகிறார்.

அவரின் கருத்துப்படி, உலகளாவிய இந்தக் கவலைக்கிடமான நிலைமையின் கரு, பிரித்தானியக் காலனித்துவமும், அதனைத் தீர்ப்பதில் பின்னடைவு ஏற்படுத்திய உலக நடவடிக்கைகளும் ஆதலால், இதற்கு உலகமே பதிலளிக்க வேண்டும். யதார்த்தமான யுத்தம்,, ஆயுத ரீதியில் இல்லாவிட்டாலும் தற்பொழுதுதான் தொடங்குகிறது. நம்பிக்கை இழப்பதினால், ஒன்றையும் அடைய முடியாது. ஆனால், தமிழர்களின் இளைய சமுதாயம், நம்பிக்கையெனும் ஒளிக்கதிரை மிளிரச் செய்கிறது என அவர் கூறினார்.

‘இலங்கைத் தீவில் தமிழீழம் பற்றிய வெளிநாட்டுக் கருத்துக்கணிப்பு’ எனும் 42 பக்கங்கள் அடங்கிய டாக்டர் செனிவரத்னாவின் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன. முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் ஆங்கிலக்கட்டுரையை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். 78 வயது டாக்டர் செனிவரத்னா ஆஸ்திரேலியாவில், வசிக்கும் புகழ் பெற்ற சிங்கள வைத்தியர். அவர் பன்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் தமிழீழக் கொள்கையை நீண்ட காலமாக ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வாக்கெடுப்பு - இதுவரை உலகம் முழுவதிலும் இப்படியொரு தீர்ப்பை எந்த விடயத்திலும், எந்த இடத்திலும் நான் காணவில்லை. புலம் பெயர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தமிழீழம் எனும் வேறு நாட்டை விரும்புகிறார்கள் என்ற கூற்று மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றாகும். இத்தனை வருடங்களாக இவ்விடயத்தில் ஈடுபட்ட போதிலும், இந்தத் தீர்ப்பினால் நான் பிரம்மிப்படைந்தேன்.

இலங்கைத் தீவில் என்பது ஒரு குடியேற்ற நாட்டின் அமைப்பு. தமிழர்கள் இந்த வாக்கெடுப்பின் மூலம் கேட்பதும், பேராதரவோடு உறுதிப்படுத்துவதும், தோல்வியுற்ற இந்தக் குடியேற்ற அரசமைப்பைக் கலைக்க வேண்டும் என்பதே. 70 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால், டெல்லி அரசு மாத்திரமல்ல அத்துடன் அவர்களின் உளவுத்துறையான ‘ரா’ அமைப்பும் ஒளித்தோட வேண்டி வரும்.

இலங்கைத் தீவில் தமிழ் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் ஒரு வாக்கெடுப்பைப் பார்க்க நான் ஆசைப் படுகிறேன். ஆனால், அத்தகைய வாக்கெடுப்பை இராஜபக்சேவின் இராணுவ சீருடையுடனோ அல்லது இல்லாமலோ பணியாற்றும் அடிவருடிகளைத் தவிர்த்தும், அல்லது வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என தமது எஜமானர்களுக்கு முறையிடுவதற்கு வேவு பார்க்கும் தமிழ் ‘உதவியாளர்களைத்’ தவிர்த்தும் இது நடைபெற வேண்டும். அதாவது, ஒரு நம்பகமான வாக்கெடுப்பில், இலங்கைத் தீவில் இராணுவம் அப்பிரதேசங்களில் இருந்து விலக்கப்பட்டு, இராஜபக்சேவின் பல்லக்குக் காவிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களும் தவிர்க்கப்பட்டால் நூறு வீதம் தமிழீழத்திற்கு ஆதரவான வாக்குகள் சுலபமாகக் கிடைக்கலாம்.

சமஷ்டித் தீர்வின் பயனின்மை

அன்றும் (1945-ல்) அதனிலும் பார்க்க இன்றும், இந்தப் பொறுப்பற்ற, நாசகாரமான பிரித்தானியக் குடியேற்ற அமைப்பை இல்லாது ஓழிக்கும் வரை, இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ வரப்போவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் கிடைப்பது ‘ஈழம்’ எனப்படலாம். அல்லது வேறொன்றாகலாம். ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் நிர்வாக உரிமை, சிங்களவர்களின் கைகளுக்கு வெளியே கொணரப்பட வேண்டும். நார்வே வாக்கெடுப்பு முடிவுற்று (98.95 மூ தமிழீழ ஆதரவு வாக்குகளின் பின்) சில நாட்களில் இலங்கை தீவில் நடைபெற்ற நடைமுறை தமிழீழ அரசை நிறுவியதில் பங்கெடுத்த நார்விஜிய மந்திரி எரிக் சோல்கைம் (அது 2009-ல் அழிக்கப்படும் முன்) சமஷ்டி அரசியல் இலங்கைத் தீவின் பிரச்சனைக்கு ஒரு உகந்த தீர்வு எனக் கூறினார். மதிப்பிற்குரிய மந்திரியும், இலங்கைத் தீவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில ‘நடு நிலைமை வகிக்கும்’ தமிழ்ப் பிரமுகர்களும் இன்னும் தமது கடந்த கால எண்ணங்களுடனே வாழ்கின்றார்கள். சமஷ்டி பற்றிய காலம் எப்பொழுதோ கடந்து விட்டது.

இலங்கைத் தீவில் சமஷ்டி ஆட்சி இயங்குவதற்கு, தமிழர்கள் கொழும்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் சித்த சுவாதீனம் அடைந்தாலொழிய அத்தகைய நம்பிக்கை வைப்பதை நான் எதிர்பார்க்க முடியாது. தமிழர்கள் எதனைக் கட்டியெழுப்பினாலும், அது அழிக்கப்படும் என்பதை இராஜபக்சே திட்டத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த யதார்த்தத்தை, ஹரோ-வின் கன்சர்வேட்டீவ் வேட்பாளராகிய டாக்டர் ரேச்சல் ஜாய்ஸ் எடுத்துக் கூறும்போது ‘எனது நீண்ட கால நோக்கில் இலங்கைத் தீவின் அமைதிக்கு ஒரே நேர்மையான பாதை ஈழத்தை அமைக்கும் ஒரு அரசியல் தீர்ப்பாகும். அது ஒன்றுதான் நீண்ட நோக்கில் வெற்றியளிக்கக் கூடிய தீர்ப்பு’.

தமிழ் வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு:

தமிழ் வாக்கெடுப்பில் எதிராக ‘இல்லையென வாக்களித்த’ 561 (0.28 மூ) மக்களின் மனதில் எத்தகைய தீர்வு இருந்ததென அறிய ஆவற் பட்டேன்.

1. விடுதலை கிடைத்தபின் இலங்கைத் தீவில் இருந்த அதே நிலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ அல்லது மூன்றாந்தரப் பிரஜைகளாகவோ வாழ்வது.

2. தமிழர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறுவது.

3. சிங்கள எஜமானர்கள் கொடுப்பதைக் கைநீட்டி இரந்து பெறுவது.

4. சிங்கள ஆட்சியாளர்களின் உதார குணத்தை நம்பி ‘சமஷ்டி ஆட்சி’ கிடைக்குமென எதிர்பார்ப்பது.

சமஷ்டித் தீர்வு, அரசியல் அறியாமை உடையவர்களுக்கே ஏற்றதாகும். (இல்லையென வாக்களித்தவர்கள், நடுநிலைமை எனக்கூறும் பிரமுகர்கள், இலங்கை தீவில் அரசியல் சரித்திரப் பதிவுகளை அறியாத பரிதாபத்திற்குரிய எரிக் சோல்கைம் போன்ற வெளிநாட்டவர்கள்) கனடாவில் இவ்வாக்கெடுப்பிற்கு எதிராக ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதற்குக் காரணம், இத்தகைய ‘ஆம்’ எனும் செய்தி இலங்கைத் தீவின் அரசை எட்டினால், வாக்காளர்கள் இலங்கைத் தீவிற்கு காலடி எடுத்து வைப்பதைப் பாதிக்கும் என்பதாகும். பல வருடங்கள் என்னுடன் வேலை செய்த கனடிய காங்கிரஸின் நிலைப்பாட்டில் நான் கவனம் செலுத்தினேன்.

கனடாவில் வாக்கெடுப்பு நடைபெற்ற அதே சமயம், வியன்னாவில், இலங்கை தீவின் சில தமிழறிஞர்கள் (நான் சந்தித்த சிலரும்;) உள்ளக சுயநிர்ணயம், திம்புக் கொள்கை பற்றி ஆலோசித்தனர். இத்தகைய அழிகரைகளினால் திசை திருப்பப்படாமலும், தளர்ச்சி அடையாமலும், பயமடையாமலும் தமது வாக்கெடுப்பை அமைதியாக கொண்டு செல்லும்படி அதை ஏற்படுத்தியவர்களுக்கு நான் கூறுவேன். தமிழ் இளைஞர்கள் எமக்கு ஒளியூட்டுபவர்கள் - ஊடகங்களின் ஆதரவின்றியும் இவர்கள் பிரித்தானியாவில் நடாத்திய இவ்வாக்கெடுப்பு இளைஞர்களிலேயே தங்கியிருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலேயே இளைஞர்களின் பங்கெடுப்பு தெளிவாக விளக்கப்பட்டது. அவர்கள் முழுமூச்சாக இந்த புனிதப்பணியில் பங்குபற்றி, தமிழீழம் எனும் குறிக்கோளை அடையும் வரை ஈடுபட வேண்டும் என அதில் கூறப்பட்டது.

இக்கவலைக்கிடமான நிலை குடியேற்ற அரசினால் ஏற்பட்டது. அதன் பொறுப்பு பிரித்தானியாவையே சாரும்:

பிரித்தானியாவின் குடியேற்ற அரசையும், இலங்கைத் தீவில் இருந்த குழப்ப நிலையைத் தீர்க்க முற்பட்டு மேலும் ஆழமான குழப்பங்களை உண்டாக்கிய கோல் ப்ரூக், கேமரூன், டொனாமூர், சோல்பரி ஆகியோரையும் அவர்களோடு கூடிய ஆளுணர்களையும் இந்த நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சேரும். சிங்களவர்களின் தற்போதைய நாடகத்திற்கு இவர்களே வழியமைத்துக் கொடுத்தார்கள். பிரித்தானியா இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவது இதற்கு ஒரு முதற்படியாகலாம்.

1833-ல்’ கோல்ப்ரூக்-கேமரூன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பிரித்தானியரால் தமது நிர்வாக வசதிக்கு கொணரப்பட்டு, சுற்றுப்புறங்களின் வளர்ச்சியில் பாராதூரமான அலட்சியங்களையும் அதனால் நாட்டுக்கு எல்லாவற்றிற்கும் மேலான தீங்கையும் விளைவித்தன. ஹியூஜ் கிளைகோன் என்பவர் தனது ‘கிளைகோன் குறிப்பு’ எனும் நூலில் 1799-லேயே சிங்களவர்களும் தமிழர்களும் வேறாக குடியமர்ந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். முற்காலந்தொட்டு, இலங்கைத் தீவை சிங்களவர்கள் வலபா ஆற்றின் தெற்கு மேற்குப் பகுதிகளின் உள்நாட்டிலும் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் பிரிந்திருந்தார்கள். அவர்கள் இருபாலாரும் தமது மதம், மொழி, பழக்கவழக்கங்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த குறிப்பினை கிளைகோன் அனுப்பிய பின்பும் கோல்ப்ரூக் ஆனவர் கோட்டே, யாழ்ப்பாணம், கண்டி இராச்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொழும்பில் மத்திய அரசு அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தார். சமூக பிரதிநிதித்துவத்தையும் சர்வதேச வாக்களிப்பையும் அழிப்பது, ‘சிறுபான்மையினரின் அழிவு’ க்கு வழிவகுக்கும் என அகில இலங்கைத் தீவின் தமிழ் காங்கிரஸ் சரியாக எடுத்துக்கூறியது. இலங்கைத் தீவினை முழுவதும் ஒரு தேசம் எனத் தவறாக எண்ணியமைதான் ஆட்சியாளர்கள் விட்ட பெரிய தவறாகும். உண்மை நிலையானது யாதெனில், இலங்கைத் தீவு ஒரு நாடு. அதில் சிங்களவர், தமிழர் என இரு தேசிய இனங்களும், இந்தியத் தமிழர், இலங்கைத் தீவின் முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள், பரங்கிகள், மலேயர் என வேறு ஐந்து சமுதாயத்தினரும் இருந்தனர்.

டொனாமூர் குழுவினர்க்குச் சமஷ்டி ஆட்சியைக் கோரி கண்டிச் சிங்களவர்களால் ஒரு பலமான அறிக்கை விடப்பட்டது. ‘எமக்கு, எமது மக்கள் சுயமாக வாழ வேண்டும். அதற்கு அமெரிக்காவைப் போல ஒர் சமஷ்டி ஆட்சி வேண்டும். அதன் மூலம் எல்லாத் தேசிய இனங்களும் மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்துத் தமது சொந்த தேசியத்தை வளர்க்கலாம்’ என அது கோரியது. இக்கோரிக்கை இன்றையத் தமிழர்களின் பிரச்சனைக்கும் வாக்கெடுப்பிற்கும் மிகவும் முக்கியமானதாகிறது. 1840-ல் கண்டியில் வாழ்ந்த விவசாயிகளுக்குத் தமது காணியை உறுதிபடுத்துவது முடியாத காரியமாய் இருந்தது (இன்று இராணுவக் கட்டுப்பாட்டில், வடக்கில் இருக்கும் தமிழரின் நிலைபோல்!). 1948-ல் சோல்பரியின் குழுவானது இலங்கை அரசின் யாப்பில் சிறுபான்மையினர்க்கு எதிராக ஒன்றையும் காணமுடியவில்லை எனக் கூறியது.

1948-ன் பின் தமிழர்கள் தமது இறையாண்மையைச் சிங்கள பெருபான்மை அரசிடம் இழந்துவிட்டார்களா?:

இதற்கு மறுமொழி நிச்சயமாக ‘ஆம்’ என்பதே. இதற்குத் தனியே பிரித்தானியா மாத்திரம்தான் பொறுப்பு எனக்கூற முடியாது. இலங்கைத் தீவின் மக்களுக்கு 60 வருடகாலமிருந்தும், அவர்கள், பிரித்தானியரால் செய்யப்பட்ட அழிவை நிவர்த்திச் செய்வதற்குப் பதிலாக அதனுடன் கூடிய அழிவை உண்டாக்கியுள்ளனர். 1972 குடியரசு யாப்பின் மூலம் சோல்புரி யாப்பில் இருந்த பாதுகாப்பளிக்கும் ஷரத்துகளை அகற்றி தமது குறிக்கோள்களை அடைந்தனர். இதனால் 1. தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் தனக்கு விரும்பிய எதையும் செய்யலாம் (கல்வி, தொழில் ஆகிய எல்லாவற்றிலும் பாகுபாடு). 2. இலங்கைத் தீவினை சிங்கள பௌத்த நாடாக மாற்றலாம்.

6வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசுரிமையை ஒழித்தது. 1983-ல் ஜெயவர்த்தனாவின் குண்டர்களும், கொலைகார மந்திரிகளும், புத்த பிக்குகளும் நடாத்திய இனப்படுகொலையின் பின்னும், தமிழ் பிரதேசமென அழைக்கப்படுவதை இது தடுத்தது. இதன் மூலம் இலங்கைத் தீவிலோ, வெளிநாட்டிலோ தமிழர்களுக்கு இலங்கைத் தீவிற்;குள் ஓர் தனிநாடு கோர முடியாது. சரித்திர பூர்வமாக ஓர் தமிழரசு இருந்தததை மறுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. தமிழரசு என ஒன்று இல்லாவிடின் தமிழ் மக்கள எப்படி இறையாண்மையைக் கோர முடியும்? என்பதே சிங்கள அரசின் தர்க்கம்.

போரும் இன அழிப்பும் - பயங்கரவாதத்தின் சுற்றுமாற்று:

கீழ்கண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

1. சிங்கள மக்களைக் கொண்ட இராணுவமும், தமிழ் மக்களைக் கொண்ட இராணுவமும் (விடுதலைப் புலிகள்) யுத்தத்தில் மோதின.

2. தமிழருக் கெதிரான இனக்கலவரங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை அடிபணிந்து சிங்கள பௌத்த அரசைச் சர்வமத சர்வகலாச்சார அரசாக ஏற்கும்படி வற்புறுத்தியது.

3. இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இலங்கைத் தீவினைவிட வேறு இடம் இருக்க முடியாது என சர்வதேசங்கள் காய் நகர்த்தின.


உள்ள தமிழர்களால் என்ன செய்ய முடியும்?

1. அவர்களை நாட்டிலிருந்து கலைக்கலாம். 13 இலட்சம் தமிழ் மக்கள் முன்னரேயே சென்றுவிட்டனர். மற்றவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். எப்படியாயினும் சிலர் மிஞ்சியுள்ளனர்.

2. அவர்களை அகதிகளாக்கலாம். இங்கு ஏறத்தாழ 5 இலட்சம் தமிழர்கள் இந்நிலையிலேயே தற்போது உள்ளனர். தமிழ் நாட்டில் 1இ50இ000 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர்.

3. அவர்களை ‘காணாமற் போகச் செய்யலாம்’. உலகத்தில் காணாமற் போக்குவதில் (ஈராக் முதலிடத்தைப் பெறுகிறது) இலங்கைத் தீவு இரண்டாமிடத்தைப் பெறுகிறது. இப்படிக் காணாமற் போகிறவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர

4. அவர்களைக் கொன்றுவிடலாம். அதாவது இன அழிப்புச் செய்யலாம். தற்போது 2,50,000(பெரும்பாலும் அதனிலும்கூட) தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது இனஅழிப்பு நடவடிக்கையாகும் :

ஐ.நா-வின் சட்டத்தின்படி ஒரு தேசிய, சமய, கலாச்சார குழுவினரை முழுதாகவோ பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் செய்யப்படுவது இனப்படுகொலை என மொழியப்படும். இலங்கைத் தீவுத் தமிழரைப் பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பகுதியினர் அவர்களாகும்.

இனஅழிப்பில் பலவிதங்கள் உண்டு – கலாச்சார, பொருளாதார, சமய இனஅழிப்பாகியன. இவற்றை அழிக்கும் நோக்கோடு செய்யும் செயல்கள் இனஅழிப்பாகும். இலங்கைத் தீவின் அரசு இத்தகைய எல்லா வகை இனஅழிப்புகளையும் புரியும் குற்றவாளியாகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழர்களின் நிலைமை தமிழர் சிங்கள என்ற வரையறைவுக்கப்பால் ஒரு மனித உரிமைப் பிரச்சனை. உலகளாவிய பரிமாணத்துடன் உலகளாவிய பின்தங்கல் நிகழ்ந்ததால் அதற்கு உலகளாவிய தீர்வு தேவை. மனித உரிமைப் பிரச்சனை இனிமேல் உள்நாட்டுப் பிரச்சனை எனத் தட்டிக்கழிக்க முடியாது. இதனால்தான் தென்னாபிரிக்காவில் நிற வேற்றுமை ஒழிக்கப்பட்டது. இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இலங்கைத் தீவும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

நம்பிக்கை இழப்பதன் மூலம் ஒன்றையும் அடையமுடியாது:

சர்ச்சில் கூறியது போல் எங்கும் போரிடுங்கள் என நான் கூறவில்லை. ஆனால் தோல்வி மனப்பாண்மையைத் தவிருங்கள் என்றுதான் கூறுகிறேன். இராணுவத்துறை அல்லாத பல மார்க்கங்கள் இன்று உள்ளன. எனவே இராணுவ முறையில் போர் தொடங்கும்படி நான் கூறவில்லை.

உண்மையான போர் தற்போது தொடங்குகிறது. சம்பிரதாயமானப் போர் முடிந்திருக்கலாம். ஆனால் போருக்கான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. ‘நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம்’ என சார்ல்ஸ் டிகோல் நாஸிகள் பிரான்ஸிற்கு வரும்போதும், கூறினர். ஆனால் வெளிநாட்டில் இருப்பதால்தான் உங்கள் பொறுப்புகள் இன்னும் கூடியவையாக உள்ளன. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெளிநாட்டில் இருந்தும் தமது பிரச்சனையைத் தீர்க்கமுடியவில்லை என்றால் அவர்களில் அல்லது அவர்களது வழிமுறைகளில் அல்லது இரண்டிலும் ஏதோ பிழை இருக்க வேண்டும்.

கிழக்குத் தீமோரில் அப்படியொரு சாட்டு ஏற்கப்படலாம். ஏனெனில் அங்கு புலம்பெயர் மக்கள் குறைவாகவும் கல்வியறிவில் குறைவாகவும் இருந்தனர். இலங்கைத் தீவின் தமிழரின் நிலை வேறு. இத்தனை வலுவுள்ள புலம்பெயர் சமுதாயத்தை உலகில் உள்ள எந்தவொரு விடுதலை இயக்கமும் கொண்டிருக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

‘ஈடுபடுங்கள்’ என்பதே பிரெயின் செனிவரத்னா தமிழர்களுக்கு கூறிய தொகுப்பான புத்திமதியாகும்.