Tuesday, March 30, 2010

ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது



இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக 62 அயல் நாடுகளின் ஆதரவுகளை பெறுவது அவசியமானது. அதனை ஈரான் முன்னெடுத்து வருகின்றது.

முஸ்லீம் உலகத்தின் ஆதரவுகளை இந்தியா பெற மேற்கொண்டுவரும் முயற்சிகள் அண்மைக்காலமாக தோல்வியடைந்து வருகின்றன.
சவுதி அரேபியாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தோல்வியுடன் திரும்பியுள்ளார். துருக்கி அரச தலைவரை இந்திய அழைத்துள்ள போதும், அவரும் இந்தியா வருவதை விரும்பவில்லை. துருக்கி பாகிஸ்த்தானை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்தியா ஈரானுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயன்றபோதும் ஈரான் அதில் அக்கறை கொள்ளவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், அதனை இரு தடவைகள் மாற்றி அமைத்த ஈரான் பின்னர் அதனை கைவிட்டுள்ளது.

எதிர்கால விஜயம் தொடர்பிலும் எதனையும் ஈரான் தெரிவிக்கவில்லை. அணுசக்தி திட்டத்தின் மீதான தடை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா தனது ஆதரவுகளை தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவுக்கான 6 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்தையும் ஈரான் இரத்துச் செய்துள்ளது. இந்த எல்என்ஜி திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.

இதனிடையே இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகளும், ஈரானை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகள் ஈரான் விடயத்தில் தோல்வி கண்டுள்ளது.

பாகிஸ்த்தானின் பிரச்சனையானது புதுடில்லிக்கு சிக்கலானது. 1980 களில் ஈரானும், பாகிஸ்த்தானும் போட்டியான நாடுகள். தமது அனுபவங்களில் இருந்து அவர்கள் தற்போது பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர்.

மன்மோகன் சிங்கின் ஈரான் விஜயம் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், தற்போது அதில் அக்கறை அற்ற நிலையில் ஈரான் உள்ளது.

இவ்வாறு இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் பல வேற்றுமைகள் தோற்றம்பெற்று வருகின்றபோதும், ஒரு விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கொள்கையை கொண்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோ படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதில் தான் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.

ஆப்கான் பிரச்சனை தொடர்பாக இஸ்ரன்புல் பகுதியில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படவில்லை. இந்த மாநாட்டை ஈரான், பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகள் ஒழுங்கு செய்திருந்தன.

இது தொடர்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு இரண்டாம் தர வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஈரானில் இருந்து பாகிஸ்த்தான் ஊடாக எண்ணை விநியோக குழாய்களை அமைப்பதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. பாகிஸ்த்தானில் இருந்து ஈரானின் தலைநகருக்கு தொடரூந்து பாதைகளை அமைப்பதற்கு துருக்கி பல பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்த்தானுடன் தாஜிகிஸ்தான் மற்றும் உபெஸ்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் வீதிகளையும் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முஸ்லீம் உலகத்தின் இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றால் ஐக்கிய நாடுகள் சபையில் தற்காலிக உறுப்புரிமை பெறும் இந்தியாவும் கனவும் கலைந்து விடலாம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவை 26 துண்டுகளாக உடைப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க முடியும் என தெரிவித்துவரும் சீனா தற்போது முஸ்லீம் நாடுகளை தனது பக்கம் திருப்பியுள்ளது இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகின்றது.

நன்றி - மீனகம்

No comments: