Friday, December 31, 2010

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?



மனித உரிமை ஆர்வலரான பினாயக் சென்னுக்கு இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது (இந்த இணைப்பில் அது தொடர்பான் செய்தியினைக் காணலாம்.). இந்தத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டமைக்கான காரணம் ராஜத்துரோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் பினாயக் சென் மீது சாட்டப்பட்டிருக்கும் இக்குற்றச்சாட்டுக்குறித்து விரிவாக தனது இந்திய மக்களாகிய நாம் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரராஜன். இவர் முன்னாள் பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைப் பதிவின் முக்கியத்துவம் கருதி, அவரது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், அவரது பதிவினை எமது வாசகர்களுக்காக முழுமையாக இங்கு மீள் பிரசுரம் செய்கின்றோம்.

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?

ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம். 24-12-2010, வெள்ளிக்கிழமை. குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கும் நபரிடம் நீதிபதி சொல்கிறார்: "உங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-பி இன்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது!"
குற்றவாளிக்கூண்டில் நிற்கும் அந்த நபர் கேட்கிறார்: "124-பி என்றால்..?"
நீதிபதி பதில் அளித்தார்: "ராஜத்துரோகம்!"
---
வங்கமொழியில் பினாயக் சென் என்று அழைக்கப்படும் இவரை நாம் விநாயக் சென் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்! இவரைப் பற்றி தெரியாதவர்கள் இந்தப்பக்கத்தை பார்க்கலாம்:



வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் வென்ற டாக்டர் விநாயக் சென், சிறிது காலம் டெல்லியில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அந்த பணியில் திருப்தி அடையாத அவர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளுக்கு மருத்துவச் சேவை ஆற்ற ஆரம்பித்தார்.
குழந்தை மருத்துவ நிபுணரான அவர், அப்பகுதியில் ஊட்டச்சத்துணவு இல்லாத காரணத்தால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார். மேலும் சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பு அரசின் ஆதரவுடன் சுரங்க அதிபர்களால் சுரண்டப்படுவது குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்காக சுரங்க அதிபர்கள் “சல்வா ஜுடும்” என்ற ஆயுதம் தாங்கிய கூலிப்படையை உருவாக்கி அப்பகுதி பூர்வகுடி மக்களை சித்ரவதை செய்வதையும் அம்பலப்படுத்த தொடங்கினார். மத்திய – மாநில அரசுப்படைகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களை போலி என்கவுண்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தி வருவதையும் எதிர்த்து அவர் குரல் எழுப்பி வந்தார்.
மேலும் பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வு முடிவுகள் காட்டும் அவல நிலையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியில் ஈடுபட்டார். மேலும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நாராயண சன்யால் (வயது 70) என்பவருக்கும், பியுஷ் குஹா என்ற தொழில் அதிபருக்கும் இடையே இணைப்புப்பாலமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் விநாயக் சென் கடந்த 14-5-2007 அன்று சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் சட்டீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருக்கும் நாராயண் சன்யாலை, சிறை அதிகாரிகளின் வேண்டுகோள்படி சிகிச்சை அளிப்பதற்காகவே டாக்டர் விநாயக் சென் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளின் கண் முன்பே நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்புகளின்போதுதான் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண் சன்யாலுக்கும், தொழில் அதிபர் பியுஷ் குஹாவுக்கும் இடையே இணைப்புப் பாலமாக விநாயக் சென் செயல்பட்டு கடித பரிவர்த்தனை செய்தார் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் எழுந்த குரல்களை அடுத்து கடந்த 2009 மே 25ம் தேதி அவருக்கு பிணை அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர் பிணையில் வந்த நிலையில் இவர் மீதான வழக்கு ராய்ப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெகுவிரைவாக நடத்தப்பட்டது. அரசுத் தரப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ”க்கும் டாக்டர் விநாயக் சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக “திடுக்கிடும்” தகவலை வெளியிட்டார். விநாயக் சென் தரப்பில் இந்த ஐஎஸ்ஐ டெல்லியில் இருக்கும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் அமைப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அரசுத் தரப்பு சான்றுகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்படவில்லை. அரசுத்தரப்பு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
எனினும், டாக்டர் விநாயக் சென் மீதான ராஜத்துரோக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து ராய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
---
இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பாக இருக்கலாம். ஆனால் சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், இந்திய நீதித்துறையை கவனித்து வருபவர்களுக்கும் இந்த தீர்ப்பு எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.



ஏனெனில் இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும், இந்தியா பிரிட்டனுக்கு அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆதிக்க நாடான இங்கிலாந்து, அடிமைகளான இந்தியர்களை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட சட்டங்களே தொடர்ந்து அமலில் இருந்து வரும் சூழலில் இந்த தீர்ப்பு வராவிட்டால்தான் சட்டத்துறை சார்ந்தவர்கள் அதிர்ச்சி அடைய வேண்டும்.
இந்திய நீதித்துறையின் இந்த அவல நிலை குறித்து பின்னர் தனியாக பார்ப்போம்.
---

நேரு குடும்பத்தின் தற்போதைய வாரிசு ராகுல் காந்தி போகும் இடமெல்லாம், “இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன!” என்று கூறி வருகிறார். அதாவது ஒன்று சிறுபான்மையான வளமையான இந்தியாவாம்.. மற்றொன்று பெரும்பான்மையான வறுமையான இந்தியாவாம்! உண்மைதான்!!
சுதந்திர இந்தியாவை மிக அதிக காலம் ஆட்சி செய்த ராகுலின் கொள்ளுத் தாத்தாவும், பாட்டியும், தந்தையும், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ராகுல் காந்தி சுட்டிக் காட்டியபடி இந்தியாவை இரண்டு இந்தியாக்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்த இரண்டில் சிறுபான்மையான வளமையான இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் விசுவாசிகளாக உள்ளனர். உதாரணமாக ப.சிதம்பரத்தைக் கூறலாம். பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்கு மத்திய அமைச்சராக இருக்கும்போது இந்தியாவின் வளங்களை தாரை வார்ப்பார். அதை எதிர்த்து மக்கள் போராடினால் பசுமை வேட்டையை ஏவுவார். ஆட்சியில் இல்லாதபோது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு இயக்குனராகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவார். ஆக மொத்தத்தில் ராகுல் காந்தி கூறிய இரண்டு இந்தியாக்களில் ஒரு (வளமையான) இந்தியாவின் தேச பக்தர். மற்றவர்களுக்கும் இதேபோல் விளக்கவுரை எழுதலாம். நேரம் காரணமாக நிறுத்திக் கொள்வோம்.
மற்றொரு இந்தியாவோ ராகுல் காந்தியே குறிப்பிடுவதுபோல வறுமையில் வாழும் பெரும்பான்மை கொண்ட மக்களைக் கொண்ட இந்தியா! ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தாவும், பாட்டியும். தந்தையும், தற்போதைய காங்கிரஸ் காரர்களும் செய்த துரோகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா! இந்த மக்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் எத்தனையோ பேரில் டாக்டர் விநாயக் சென்னும் ஒருவர்.
ஏழை இந்தியா மீது டாக்டர் விநாயக் சென் அன்பு காட்டுவதும், அக்கறை செலுத்துவதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வளமையான இந்தியாவிற்கு தேசத்துரோகமாக தெரிகிறது.
இந்தியாவில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்று ஒருவர் இருந்தார். “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. அதைக் கேட்ட மோகன்தாஸுக்கு மார்பு வலி வரவில்லை. அவர் கூறினார்: “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக அது தோன்றுகிறது!” மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இன்றைக்கும் இந்தியாவில் அதே சட்டம்தான் அமலில் உள்ளது. அன்று மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட அதே சட்டப்பிரிவின் கீழ் இன்று டாக்டர் விநாயக் சென் மீது அதே தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வர்ணித்தபடி, "எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் விசுவாசமாக இருந்தார்? எந்த இந்தியாவிற்கு டாக்டர் விநாயக் சென் துரோகம் செய்தார்!" என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.

- இப் பதிவின் தாயகம்
http://ww5.4tamilmedia.com/index.php/special/republish/2008-2010-12-27-13-48-29

No comments: