Saturday, July 4, 2009

எங்கள் குடும்பத்தலைவரில் ஒருவர்

எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன்.

ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது.

பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

பட்டுக்கோட்டையில் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும்.

தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான்.

இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

2 comments:

கவிஞர்வாலிதாசன் said...

உணர்வு உள்ள தமிழனுக்கு இது மருந்து,
உணர்வு கெட்ட தமிழனுக்கு கள்ள ப்ருந்து..
அருமை நண்பரே! வாழ்த்துகள்
கவிஞர் வாலிதாசன்

கவிஞர்வாலிதாசன் said...

உணர்வு உள்ள தமிழனுக்கு இது மருந்து,
உணர்வு கெட்ட தமிழனுக்கு கள்ள ப்ருந்து..
அருமை நண்பரே! வாழ்த்துகள்
கவிஞர் வாலிதாசன்