Tuesday, August 25, 2009

தமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.
சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது ‘ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.
ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.
பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.
வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.
சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.
‘விடுதலைப் புலிகள்’ என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.
இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.
சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

No comments: