Thursday, October 21, 2010

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி




வினவு!
Skip to content

* Home
* அறிமுகம்
* வினவை ஆதரியுங்கள்!
* அங்காடி
* நூல்கள்

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

14/14




சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தன்னுடைய சாதனைகளையும் தகுதியையும் இந்த தேசம் நியாயமாக மதிப்பிட்டுப் பார்த்திருக்கும் பட்சத்தில், காந்தி – நேரு வரிசையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசியத் தலைவராகத் தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கருத்து. இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக அவர் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற திமிர் பிடித்த காங்கிரசுக்காரர்களால் அவ்வப்போது தான் விமரிசிக்கப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளின் வாரிசுரிமைத் தகராறில் முச்சந்தியில் வைத்து அவரது வேட்டி இழுபடுவதைக்கூட அவர் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்கிறார். அவற்றுக்கெல்லாம் ஒரு நியாயம் இருக்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் சத்துணவு ஊழியர்கள் போன்ற சாமானியர்கள் அவரது கவுரவத்தில் குறுக்கிடும்போது, அவரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நெற்றிக் கண்ணைத் திறந்து பாசிச ஜெயலலிதாவின் வழியில் அடக்குமுறையை ஏவத் தொடங்கிவிட்டார்.

கனவைக் கலைத்த சாமானியர்களின் போராட்டம் !!

தமிழகத்தின் 12 இலட்சம் அரசு ஊழியர்களில் 5 லட்சம் பேர் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் மாதம் ரூ.300 முதல் ரூ.4500 வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்களில் 1.23 இலட்சம் பேர் சத்துணவு ஊழியர்கள். இவர்களுக்கு மைய அரசின் 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்ததைவிடக் குறைவாக, ஒரு புதிய சிறப்புக் காலமுறை ஊதியத்தைக் (ரூ.3780 முதல் ரூ.4694 வரை) கண்டுபிடித்து வழங்கி வருகிறது,கருணாநிதி அரசு. அற்ப ஊதியத்துடன் பணியாற்றிவிட்டு, பணிமூப்படைந்து ஓய்வுபெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.400 முதல் ரூ.600 வரைதான் ஓய்வூதியமாகத் தரப்படுகிறது. ஆனால், தமிழகப் போலீசுத் துறையில் 6,7 ஆண்டுகளில் ஓய்வு கொடுக்கப்படும் மோப்ப நாய்களைப் பராமரிக்க, அதன் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது

கடந்த 25 ஆண்டுகளாக, அற்ப ஊதியத்துடன் அடுப்படியில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் சி.பி.எம். கட்சியின் தலைமையிலான சங்கத்தில் கணிசமாக அணிதிரண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும், சட்டரீதியான ஓய்வூதியம் வேண்டும், கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பலமுறை போராடியும் அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் 30 அன்று தலைமைச் செயலகத்தை (கோட்டையை) முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். உடனே கருணாநிதிக்கு ஆத்திரம் பொங்கியது. சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஆட்சிக்கு எதிரான போராட்டமாகவும் அதனைக் கம்யூனிஸ்டுகள் தூண்டிவிடுவதாகவும் பாயத் தொடங்கினார்.

கோட்டை முற்றுகைப் போராட்டத்தையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் வேன்களிலும் சென்னைக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் 3,500க்கும் மேற்பட்டோர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறைக் கெடுபிடிகளைத் தாண்டி தலைமைச் செயலக வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தமிழகம் முழுவதும் முன்னணியாளர்கள் ஏறத்தாழ 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை வாழ்த்தச் சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27 மாநில நிர்வாகிகள் வேலைநீக்கம் செய்யப்பட்டு, 42 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்துக்குச் சற்று முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் போராட்டமும் இதே முறையில் கடுமையாக ஒடுக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு சாராயக் கடைகளில் (டாஸ்மாக்) பணியாற்றும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2100 முதல் 2800 வரைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. பலமுறை அரசிடம் முறையிட்டும் அசைந்து கொடுக்காததால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சட்டமுறைப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. முன்னணியாளர்களைப் போராட்டத்தில் பங்கேற்கவோ அணிதிரட்டவோ விடாமல் பிடித்து வைத்துக் கொண்டும், இதர பணியாளர்களை மிரட்டி கட்டாயமாகக் கடையைத் திறக்க வைத்தும், போலீசு பாதுகாப்புடன் சரக்கு விற்பனை செய்யப்பட்டு அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.

கோட்டையை முற்றுகையிடுவது குற்றமா?

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம். அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் போர்முனைக்கு வாருங்கள் என்று தி.மு.க.வோ தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காகப் போராட்டம் நடத்தினாலும், அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்கிறார் கருணாநிதி.

‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி மதுரையில் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் அறவழிதானா? தி.மு.க. மூத்த தலைவரான தா.கிருட்டிணன் வெட்டிக் கொல்லப்பட்டாரே, அது அமைதி வழியா? மதுரையில் தினகரன் நாளேட்டின் அலுவலகத்தில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி தாக்குதல் நடத்தி 3 ஊழியர்களைக் கொன்றொழித்ததும்கூட அறவழியா? அதனால்தான் நீதிமன்றம் அந்த ‘மகாத்மா’வை விடுதலை செய்துவிட்டதா?

பதவிப் பட்டியலைக் கையிலே வைத்துக் கொண்டு குடும்பத்தோடு டெல்லிக்குப் படையெடுத்து முற்றுகையிட்டாரே, கருணாநிதி? பணி நிரந்தரம் கேட்டுக் கோட்டையைச் சத்துணவுப் பணியாளர்கள் முற்றுகையிடுவதுதான் குற்றமா? சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் தொலைக்காட்சி, திரையரங்குகள், சினிமா தயாரிப்புக் கம்பெனிகள், சிமெண்டு – சாராயக் கம்பெனிகள், வீட்டுமனைத் தொழில், இத்தனையும் போதாதென அமைச்சர் பதவிகள் – எனத் தமிழகத்தையே கருணாநிதியின் வம்சம் முற்றுகையிட்டிருக்கிறது. சத்துணவுப் பணியாளர்கள் கோட்டையை முற்றுகையிடுவதுதான் குற்றமாம்!

நாடாளுமன்றத்தில் வாய்திறந்து பேசாத அழகிரிக்கு முழுச் சம்பளம். ஏனென்றால், அவர் முழுநேரப் பணியாளர்! நாள் முழுக்க புகை மூட்டத்தின் நடுவே அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால், இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்!

போராடினாலும் குற்றம் வாய்திறந்தாலும் குற்றம்

இத்தகைய சாமானிய மக்கள், தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் சென்னை நகரிலிருந்து விரட்டப்படுகிறார்கள். சிங்காரச் சென்னையை மேலும் அழகுபடுத்துவது என்ற பெயரில், கூவம் – அடையாறு கரையோரக் குடிசைகள் இடித்துத் தள்ளப்படுகின்றன. இதை எதிர்த்து வாய் திறக்கக்கூடாதாம். ஏனென்றால், இது தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாம்.

சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்யுமாறு மிரட்டுதல், ஆட்களைக் கடத்திப் பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து முதலான பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் – போலீசுத்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஆணையிடுகிறார், கருணாநிதி.

ஆனால், மலைகளையே மொட்டையடிக்கும் கிரானைட் குத்தகைதாரர்கள் அடிக்கும் கொள்ளையைத் தனது விரலசைவில் வைத்துப் பாகம் பிரித்துக் கொள்கிற ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரியை மதுரையிலேயே அம்பலப்படுத்திய “தினபூமி” நாளேட்டின் ஆசிரியரையும் அவரது மகனையும் கைது செய்து பொவழக்குப் போட்டு மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.

குடியாத்தம் நகரில் மேல் ஆலத்தூர் ரோடு, பாட்டை புறம்போக்கில் நூறாண்டு காலமாகக் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் என 36 குடும்பங்களின் வீடுகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆளும் கட்சி ரியல் எஸ்டேட் கும்பல் சமூக விரோதிகளுடன் வந்து சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி, குடியிருப்பவர்களைக் கடுமையாகத் தாக்கி, அந்த இடத்தை வளைத்து வேலி போட்டுக் கொண்டுள்ளது.

இந்த அநியாயத்தை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சி.பி.எம். கட்சி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தியபோது, இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் முன்னணியாளர்களையும் தாக்கி, கைது செய்து சிறையிலடைத்துள்ளது, கருணாநிதி அரசு. சி.பி.எம். கட்சியின் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரான லதா, மொசைக் செல்வம் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 20 இலட்ச ரூபாய் கேட்டதாகப் பொப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கருணாநிதியின் ஆட்சியில் அநியாயத்துக்கு எதிராகப் போராடினாலும் வாய்திறந்தாலும்கூடக் குற்றம். கருணாநிதி அரசை விமர்சித்த தா.பாண்டியன், பழ.கருப்பையா வீடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியத்தைக் கண்டித்துப் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான இயக்குநர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வெளிவர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம்-ஒழுங்கு தன் கடமையைச் செய்யும் என்று தி.மு.க. அமைச்சர் எச்சரிக்கிறார்.

அருகதையற்ற மார்க்சிஸ்டுகளின் ஆகாத வழி

“மே.வங்கத்தில் சத்துணவுப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் இங்கே மட்டும் நிரந்தரம் செய்யக் கோருவது ஏன்? அங்கே சத்துணவு, ரேஷன் கடைகளைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, இங்கு போராட்டத்தைத் தூண்டுவது ஏன்?” என்று மார்க்சிஸ்டுகளை மடக்குகிறார் கருணாநிதி. “ஜெயலலிதாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது வாய்மூடி கிடப்பது ஏன்? சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த அருகதையில்லை என்று சாடுகிறார்.

ஓட்டுக்கும் சீட்டுக்கும் பாசிச ஜெயலலிதாவின் காலடியில் கிடப்பதாலும், தாங்கள் ஆளும் மே.வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தனியார்மய-தாராளமயமாக்கலை விசுவாசமாகச் செயல்படுத்தி வருவதாலும் கருணாநிதியின் இந்தக் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளால் வாய்திறக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தாங்கள் போராடி வருவதாகவும், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் சி.பி.எம். கட்சி அறிக்கை விட்டு அடங்கி விட்டது. இதுதான் கருணாநிதியின் கேள்விகளுக்கு மார்க்சிஸ்டுகளின் பதிலடி. கருணாநிதி உபதேசிக்கும் அறவழிக்கு மாற்றாக சி.பி.எம். வைக்கும் ஆகாத வழி இதுதான். மார்க்சிஸ்டுகளை நம்பி போராட்டத்தில் இறங்கிய சத்துணவு ஊழியர்களோ அடக்குமுறைக்கும் பழிவாங்கலுக்கும் ஆளாகி அவமானத்தால் துடிக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத அடக்குமுறைகள் அடுத்தடுத்து அம்பலமாகியுள்ள போதிலும், பிழைப்புவாதத்திலும் சந்தர்ப்பவாதத்திலும் மூழ்கிக் கிடப்பதால் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நடத்த முடியவில்லை. கண்டன அறிக்கைகள், அடையாள எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மேல் அவை முன்னேறுவதுமில்லை. எதிர்க்கட்சிகளின் செயலற்ற தன்மையால், ஒருபுறம் இலவசத் திட்டங்கள் மறுபுறம் அடக்குமுறை என கருணாநிதியின் குடும்ப ஆட்சி கேள்விமுறையற்று ஆதிக்கத்தை நிறுவிக் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி-வினவு

No comments: