Friday, December 4, 2009

தமிழன் நாதியற்ற இனமா?

“முல்லைபெரியாரில் அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள காங்கிரசு அரசு அனுமதி வழங்கியதால் குடிமூழ்கி போய்விடவில்லை!” என்று அறிக்கை வாசிக்கிறார் தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு தலைவர். தமிழகமீனவர்களை சிங்களவன் சுடவில்லை மீனவர்கள் பிரச்சனை குறித்து தொடர்ந்து பேசுகிறோம் என்கிறார் தமிழகத்தில் பிறந்த காங்கிரசு மத்தியமைச்சர். தமிழகத்தின் எல்லைபகுதியில் துவங்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கர்நாடகாவின் தேர்தல் முடியும்வரை ஒத்திவையுங்கள் என்று தமிழக முதல்வருக்கு உத்தரவிடுகிறார் காங்கிரசு தலைவி. இதுவரை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என்னவானது என்று தெரியவில்லை.

மேலே கூறிய அனைத்து விடயமும் காங்கிரசு கட்சி சமீபத்தில் தமிழகத்தில் நடத்திகாட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு பாதகமான நிகழ்வுகள். இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் எல்லையில் இருந்த கச்சத்தீவை தமிழனின் இனப்பகைவனான சிங்களவனிடம் காங்கிரசு தாரை வார்த்தது பழைய வரலாறு. அந்த வரலாறில் முல்லைபெரியாரும் ஒகேனக்கலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழர்களின் ஓட்டுகளை பெற்றுகொண்டு தமிழர்களுக்கே எதிராக காங்கிரசு கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. காங்கிரசு காலால் இட்டதை தலையால் முடிக்கும் தலைமையிலான அரசு தமிழகத்தில் வாய்க்கப்பட்டிருக்கிறது. தமிழனும் சுய உணர்வற்று அந்த காங்கிரசு கட்சிக்கு காலம்காலமாக வாக்களித்துவிட்டு தனது உரிமைகளை இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறான். தமிழகதமிழன் நிலை இதுவென்றால் ஈழத்தமிழன் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழன் இன்று அகதி முகாம்களில் கண்ணீரோடு உலகநாடுகளுக்கு கருணை மனு நீட்டுகிறான். ஈழத்தமிழன் அழிவிற்கும் இன்று அனுபவிக்கும் துயரத்திற்கும் முழுப்பொறுப்பு காங்கிரசு கட்சியே.

நமது அண்டை மாநிலங்களில் வேறெங்கும் இல்லாதா அளவிற்கு தமிழகத்தில் தமிழன் என்று உணர்வு சிறிதும் இல்லாதவர்களாக காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த காங்கிரசின் ஆதரவோடு கொள்ளை அடித்து அதிகாரத்தை அனுபவிக்க துடிப்பவர்களாகவே திராவிடத்தை தங்கள் கட்சியின் பெயரில் தாங்கியவர்கள் இருக்கிறார்கள.

உலகில் வேறு எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் அண்டை நாட்டு கப்பல்படையால் சுடப்படுவது அதிகமாக இந்தியாவில் நமது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடைகளை அவிழ்த்தார்கள், அடித்து உதைத்தார்கள், வலையை அறுத்தார்கள், படகை சேதப்படுத்தினார்கள் என்று மீனவர்கள் கூறும் குற்றச்சாட்டு அதிகமாக இருந்தாலும் அவனுக்காக குரல்கொடுக்க எவனுமில்லை என்பதால் மீனவர்கள் சோகம் தொடர்கதையாகிகொண்டே போகிறது. தமிழகமீனவர்கள் 600 பேர் படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதுவரை ஒரு வழக்கை கூட சிங்களவன் சுட்டு தமிழக மீனவன் செத்தான் என்று பதிவு செய்யாத காவல்துறையாக தமிழககாவல்துறை இருக்கிறது. 600 மீனவர்களும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று பொய்வழக்கு போட்டு சட்டம் தன்கடமையை செய்துள்ளது.

காங்கிரசுகட்சி தமிழின அழிப்பில் மிக உறுதியாக இருப்பது தெளிவாகிறது. திராவிடகட்சிகள் காங்கிரசுக்கு காவடி தூக்குவதை நிறுத்துவதாக தெரியவில்லை. “தமிழ அரசியல்வாதிகளை கோமாளிகள்” என்று வர்ணித்த பொன்சேகாவின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் இன்னும் விளங்கி கொள்ளவில்லை.

ஈழத்தில் செத்துவிழுந்த ஆயிமாயிரம் தமிழர்களின் புகைப்படங்களை தமிழகவீதிகளில் வைத்து பாருங்கள்அதில் உறுப்புகளை இழந்து செத்து விழுந்த சிறுவர் சிறுமிகளை பற்றியோ உயிரிழந்த தமிழர்கள் பற்றியோ சிறிதும் கவலை இல்லாது.
அதில் எங்காவது பிரபாகரன் படம் தெரிகிறதா? புலி கொடி தெரிகிறதா என்று உத்துபார்த்து உடனே அதனை அகற்று என்று ஆரம்பித்து விடுகிறார்கள் காங்கிரசு புண்ணியவான்கள்.

ராணுவவாகனங்கள் தாக்குதல், இலங்கை தூதரகத்தாக்குதல், இளங்கோவன் வீடு தாக்குதல் என்று தொடர்ச்சியாக தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடி விளையாடும் காவல்துறை. தா.பாண்டியன் மற்றும் சீமான் காரை எரித்தவர்கள் பாரதிராசா அலுவலகத்தை தாக்கியவர்கள் என்று எவரையும் கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் தமிழனுக்கத்தான் பாதுகாப்பில்லை .தாயகதமிழன் மெளனசாட்சியாக கொன்றழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் நிலை தாயகதமிழனுக்கும் வரும்நிலை வெகுதொலைவில் இல்லை. காங்கிரசு பேரியக்கம் தமிழக மண்ணில் துடைத்து எறியப்படும் வரையில் தமிழனின் கண்ணீரை துடைக்கும் வழி பிறக்க போவதில்லை. நீர்த்து போன திராவிட இயக்கங்களை தமிழன் வீழ்த்தும் நாளே தமிழனின் விடியலுக்கான துவக்கம்.

லண்டனில் செத்த தமிழன் உடலை மீட்க இந்தியா உதவவில்லை என்று அனைவரும் அலறி கொண்டிருக்கிறோம். இதில் நாம் அதிர்ச்சி அடைய ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தமிழன் எங்கே செத்து விழுந்தாலும் அங்கே முதலில் மகிழ்ச்சி அடையவது இந்தியாவின் அதிகார மையம்தான். இந்தியகடல் எல்லையில் செத்துவிழும் தமிழனாக இருக்கட்டும் அல்லது எங்கோ உலகின் ஒரு மூலையில் தமிழன் செத்து விழுந்திருந்தாலும் அதில் சிறிதும் கவலை கொள்ளாத திராவிடகட்சிகளும் காங்கிரசு கட்சியும் தமிழனின் முதல் எதிரி என்பதை இன்னும் உணராத இனமாக தம்ழினம் இருக்கும்வரை நாதியற்ற இனம்தான் தமிழினம்.


No comments: