Wednesday, December 30, 2009

இழப்பு - 2009

உறவினை இழக்கையில்
உள்ளம் உறங்கிப் போகும்
உணர்வுகளின் கொந்தளிப்பில்
உதடுகள் கூட ஊமையாகிவிடும்...

நெஞ்சுக் குழிக்குள்ளே
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்
நிழலாய் தொடரும்...

கனவுகளும் கூட
கற்பனைகள் இல்லாமல்
கலங்கிப்போய்
கண் மூடி கிடக்கும்
கண்களில் கண்ணீரும்
காய்ந்து போய் விடும்...

இரவுகளுக்கும் பகல்களுக்கும்
இடைவெளியே இல்லை
இரவிலும் உறக்கமில்லை
இருளே பகலிலுமாய்
மனம் விரும்பாவிட்டாலும்
மௌனம் நம்மை
தனதாக்கி கொள்ளும்...

மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலைபோல காட்டும்...
பரிச்சயமற்ற மௌனத்தால்
பாறாங்கல்லாய்
பாரம் ஏறும்
உடலிலும் உணர்விலும்...

விழுதலிலும் இருந்து
எழுவதற்காய்
மௌனத்தை கேட்கவேண்டும்
ஏ...மௌனமே பேசிவிடு...


No comments: