Tuesday, March 8, 2011

அம்மணமாக நிற்கும் கருணாநிதி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி மீது எனக்கு மரியாதை இருந்தது. திராவிட தமிழ் தேசிய சிந்தனை உடையவர்களுக்கு கருணாநிதி மீது விமர்சனம் இருந்தாலும் அவரை நிராகரிக்க

முடிந்ததில்லை. காரணம் திராவிட சித்தாந்தம் கருணாநிதியின் நிழலில் தான் ஓரளவுக்கு நிலைத்து நிற்க முடியும் என நம்பினேன். அப்படி தான் பலரும் நம்பினார்கள். அது போல ஈழத் தமிழர்களுக்கு “முழுமையான” ஆதரவாக இல்லாவிடினும் எதிரியாக கருணாநிதி மாறி விட மாட்டார் என்றும் நம்பினேன்.

அதற்கு விழுந்தது 2009ல் மிகப் பெரிய வேட்டு. ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது ஒரு கையில் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் கடிதம் எழுதிக் கொண்டு,

நாடகங்களை நடத்தி தன் பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி. அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளப்பட்டோம். இதன் எதிரொலியாகவே கருணாநிதியை பழிவாங்க இரண்டாம் எதிரியான ஜெயலலிதாவை ஆதரிக்க துணிந்தோம். ஜெயலலிதாவை ஆதிரிக்க நேர்ந்தது மிகவும் அவலமான ஒரு சூழ்நிலையே. தமிழினத்தலைவர் எனக் கொண்டாடப்பட்டவர் தமிழின துரோகியானார். உடன்பிறப்புகள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்தனர். தலைவர் பிரபாகரனை பார்ப்பனர்களுக்கு இணையாக உடன்பிறப்புகளும் அவதூறு செய்தனர். இப்படி உடன்பிறப்புகளும், கருணாநிதியும் தங்களுடைய முக்கிய அடையாளமான ”தமிழர் சார்பு அடையாளத்தை” இழந்து அரை ஆடையுடன் காட்சியளித்தனர்.

அடுத்த வந்த மாதங்கள் கருணாநிதியை இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தியது. தமிழக மீனவர் பிரச்சனையில் பேராசைக்கார மீனவர்கள் எல்லை தாண்டி போவதாக கருணாநிதி கூறினார். ஈழத்தமிழனை தான் காப்பாற்ற முடியவில்லை. வேறு நாடு என்றனர். உள்ளூர் மீனவனுக்கும் அதே கதி தான். கடிதத்தை எழுதிக் கொண்டே நாடகம் நடத்தினார். இதற்கு அடுத்த வந்த 2ஜியில் கருணாநிதியையும், திமுகவையும் ”கொள்ளைக்காரனாக” வட இந்திய ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் வெளிப்படுத்தின. ராஜா கைது செய்யப்பட்டார். அண்ணா அறிவாலயத்தினுள்

சிபிஐ நுழைந்தது. இது கருணாநிதியின் சுயமரியாதையை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த திமுகவின் சுயமரியாதையையும், உடன்பிறப்புகளின் சுயமரியாதையையும் சோதித்து பார்த்தது. அமைதியாக இருந்தார் கருணாநிதி. வேட்டி உருவப்பட்டாலும் எப்படி தான் ஒரு மனிதன் அமைதியாக இருக்க முடியும் என ஆச்சரியம் மட்டுமே பட்டோம். கோபப்படவில்லை.

சீமான் போயஸ் தோட்டத்தில் நுழைந்து ஜெயலலிதா காலடியில் விழுவார் என உடன்பிறப்புகள் கொக்கரித்த சமயத்தில் கருணாநிதி டெல்லிக்கு சென்று சோனியாவின் காலில் விழுந்து கூட்டணிக்கு

ஒப்புதல் வாங்கி வந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக சேரலாமா வேண்டாமா என்று உத்தரவிடுவது கூட சோனியா தான். அன்புமணி சோனியாவின் காலில் விழுந்து ஒப்புதல் வாங்கியவுடன் தான் கூட்டணியில் சேர முடியும் என்ற நிலைமை. கருணாநிதி காலில் விழத் தயாராக இருந்த பாமகவை டெல்லி எஜமானியின் ஒப்புதல் வாங்க சொன்னார் கருணாநிதி. கருணாநிதி கூட்டணியின் தலைவரா, சோனியா தலைவரா என்று நாம் கேள்வி எழுப்பினோம். தீவிரமாக வாதாடும் உடன்பிறப்புகள் கூட இப்பொழுது அமைதியாக இருந்தனர்.

திராவிட சிந்தனை உள்ள அனைவருக்கும் திமுகவும், திகவும் தான் தாய் வீடு. எனக்கும் அப்படி தான். திமுக காங்கிரசால் அவமதிக்கப்பட்ட பொழுது நானும் தவித்தேன். இது கருணாநிதிக்கான தவிப்பு அல்ல. அண்ணா உருவாக்கிய பெரியாரின் சுயமரியாதை பாதையில் வந்த இந்த இயக்கம் அவமதிக்கப்படுகிறதே என்ற வேதனையே இந்த தவிப்பிற்கு காரணம். ஈழப் பிரச்சனையில் திமுக மீதும், கருணாநிதி மீதும் கடும் கோபத்தில் இருந்த பொழுதும் இந்த தவிப்பு மிக இயல்பாக என்னுள் எழுந்தது (Blood is thicker than Water). எல்லாவற்றையும் இழந்தாலும் ஒரு மனிதன் ஒரு போதும் தன் சுயமரியாதையை இழக்க மாட்டான். அதுவும் சுயமரியாதை இயக்கத்தில் வந்த ஒருவனால் தன் சுயமரியாதையை இழக்க முடியுமா ? தன்னுடைய சுயமரியாதையை நிச்சயம் திமுக காப்பாற்றிக் கொள்ளும் என நம்பினோம்.

ஆனால்...

இன்றைக்கு கருணாநிதியிடம் மிஞ்சி இருந்த சுயமரியாதை என்ற ஒரே கோமணமும் அவிழ்க்கப்பட்டு அம்மணமாக நிற்கிறார் கருணாநிதி. இப்பொழுது கருணாநிதியை பார்த்தால் கோபம் வரவில்லை. பரிதாபமாகவே உள்ளது. இதற்கு மேல் கருணாநிதியை விமர்சிப்பது கூட நமக்கு தான் அசிங்கம்.

நன்றி-தமிழ்சசி

No comments: