Tuesday, November 2, 2010

பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலை திறப்பு



பிரான்சு நாட்டு மக்களுக்கு முக்கியமாக கருதப்படும் புனிதர் அனைவரின் பெருவிழா நாளான நவம்பர் 1 அன்று பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடங்களில் ஒன்றான லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

லாக்கூர்னோவ் மாநகரசபை வளாகத்தின் அருகமையில் 01.11.2010 திங்கட்கிழமை மதியம் 13.00 மணிக்கு மாவீரர் பிரிகேடியர் தமிச்செல்வனுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டன. ஈகைச்சுடரினை தமிழ்ச்செல்வனின் சிறியதாயார் ஏற்றி வைக்க தமிழே உயிரே வணக்கப்பாடல் நடனம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன் பற்றியும் சமாதானத்தின் புறாவாக சர்வதேசமெங்கும் திரிந்ததையும் சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட அரசியல்வாதிகள் பலவற்றை சந்தித்தது பற்றியும் தமிழீழத்தின் நிலவரங்கள், தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்ததையும் மாபெரும் இனவழிப்பை நடாத்த சிங்கள அரசு தயாரிப்பில் ஈடுபட்டுவருதும் பல்லாயிரக்கணக்கான் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படப்போகின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறிவந்ததையும் அவர் கூறியது போன்று இன்று எமது மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நடந்தேறியதையும் இதற்கான தயாரிப்பில் ஒரு நடவடிக்கையே தமிழ்ச்செல்வன் வீமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டதும். 2007 ம் இதே காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் இங்கு வருகை தர இருந்ததையும் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்க தலைவர் உரையாற்றியதும், பிரெஞ்சு மொழியிலும் இன்னும் சற்று விரிவாக உரையாற்றப்பட்டது. திறான்சி, தமிழ்ச்சங்க மாணவியர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவீரர்களின் நினைவுப்பாடலுக்கு நடனம் வழங்கிய போது பல மக்களின் கண்கள் குழமாகிப்போனதும், கண்ணீர்விட்ட காட்சி மக்கள் நெஞ்சில் இவர்களின் நினைவு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காணக்கூடியதொரு காட்சியாக இருந்தது.

இத்துடன் சிலையை வடித்து தந்த பிரஞ்சுப்பெண்மணி தமிழ்ச்செல்வனின் படத்தை மட்டும் வைத்து அல்லாமல் நண்பர்கள் அவர் பற்றி கூறிய செய்திகள் குணாதியங்கள் பற்றி கூறியதையும் வைத்தே தான் மனதில் ஒரு கற்பனையை அவர்பற்றி வளர்த்துக்கொண்டதாகவும் அதன் வடிவமே இது என்று கூறினார்.

லாக்கூர்னோவ் மற்றும் ஒபவில்லியே என்ற அயல்கிராமத்தை சேர்ந்த உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். இன்னும் பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்களும் உரையாற்றியிருந்தனர். அவர்களின் கருத்துக்கள் சமாதானமும், அமைதியும், எவ்வளவோ முக்கியமானது என்றும் அதே நேரத்தில் அடிமைநிலையற்ற சுதந்திரமான வாழ்வும் ஒவ்வொரு மனிதனுக்கும், இனத்திற்கும் முக்கியமானது என்றும், அல்ஐpரியா நாட்டு நண்பர் ஒருவர் உரையாற்றும் பொழுது தம்முடைய மண்ணிலும் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றது என்றும் தாமும் எத்தனையோ இழப்புகளின் பின்பே சுதந்திரமடைந்துள்ள இனமாக உள்ளோம் என்றும் இவ்வாறானதொரு நிகழ்வில் கலந்து கொள்வதானது தனக்கு பெருமை தருகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிற்பாடு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் சிலையை அவரை இரண்டு தடவை தாயகத்திலும், பின்னர் பேச்சுவார்த்தையின் போது சந்தித்து கொண்டவரும் லாக்கூர்னோவ் நகரசபை உறுப்பினரும், தமிழ்மக்களின் நண்பருமாகிய திரு. அந்தோனியோ ருசெல் அவர்கள் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையாக நின்று மாவீரர்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினர். அரசியல்வாதிகள் பலர் கட்சிபேதமின்றி கலந்து கொண்டதோடு இதுவொரு அரசியல் பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மனிதநேய நடிவடிக்கை என்றும் கூறினர். நந்தியார் தமிழ்சங்க மாணவியர்கள் எழுச்சி நடனங்கள் வழங்கியிருந்தனர்.

சிலை செய்த பிரெஞ்சுப்பெண்மணிக்கு தமிழ்ச்சங்கம் நடராஐர் சிலை கொடுத்து மதிப்பளித்தனர். இந்த சிலை திறப்பிற்கு பொருளாதரா உதவி செய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை சங்கத்தினர் தெரிவித்தனர். மாலை 17. 00 மணிவரை மக்கள் இந்த நிகழ்வுக்கு வந்துகொண்டிருந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளருக்கு சிலை வைக்கும் நிகழ்வை தடுப்பதற்கு பல்வேறான நடவடிக்கையை சிறீலங்கா அரசானது தனது தூதரகத்தின் ஊடாக பிரான்சு நாட்டிற்கு கொடுத்திருந்ததும் இதற்கு சில கோடாலிகாப்புகள் துணைபோயிருந்ததும், சிங்களவர் சிலர் அடாவடித்தனங்களை மேற்கொண்டிருந்த போதும் இன்று உயிர் ஈந்த சமாதானப்புறாவுக்கு சிலை எழுப்பியும், தாயகத்தில் மனிநேயமற்ற கொடிய அரசாட்சியில் எமது மாவீரர்கள் துயிலும் இல்லமும், அவர்கள் உடல்களும் அழிக்கப்படும் வேளை புலம்பெயர் மண்ணில் மனிதநேயமிக்கவர்களால் அந்த மாவீரர்களுக்கு சிலையும், நினைவுச்சின்னங்களும் வைக்கபடுவது பெருமை கொள்கின்ற அதேவேளை பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் வரலாற்றில் மீண்டும் மற்றொரு பதிவையும் இன்று பதிவாக்கிக் கொண்டுள்ளனர்.

No comments: