Sunday, May 30, 2010

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான் உரை





தமிழ் நாடல்ல - தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமை அலைகடல் வெற்றிகொண்டான் உரை.

தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமையென்றார் அலைகடல் வெற்றிகொண்டான்.

சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று (28.5.2010) நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் வீரமணியும் என்ற தலைப்பில் தி.மு.க. சொற்பொழிவாளர் வெற்றிகொண்டான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நான் எனது சொந்த வீட்டில், தாய் வீட்டில் பேசும் உணர்ச்சியோடு பேசுகின்றேன். இங்கு நான் உரையாற்றும்போது புதுத் தெம்பும், புத்துணர்ச்சியும் பெறுகின்றேன்.

பிரித்துப் பார்க்காதே

தந்தை பெரியாரும்_ வீரமணியும் என்று சொல்லும்போது இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரியார் சிந்தித்தார்- சொன்னார்- செயல்பட்டார் - நம்மை மனிதராக்கினார். கொள்கைச் சொத்துக்களை விட்டுச் சென்றார்- நமக்கு வீரமணியையும் தந்தார்- வீரமணியோ பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இதில் ஏன் இவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருஞ்சட்டைத் தொண்டன் என்பவன் யார்?

இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பது போல ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறான்.

இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாழ்வு எல்லாம், வளம் எல்லாம் பெரியார் என்ற தலைவன் கொடுத்துச் சென்றது.

ஒரு காலத்தில் வடநாட்டான் நம்மை ஆண்டான். நம் ஆட்சியை இருமுறை கவிழ்த்தான். இன்றைக்கு இந்திய ஆட்சியைக் கவிழாமல் காக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு அல்லவா கிடைத்திருக்கிறது! இந்தப் பலம் நமக்கு எங்கே இருந்து கிடைத்தது? காரணம் பெரியார் அல்லவா!

இந்தியாவின் தலைநகரம் டில்லியா? தமிழ் நாடா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதே! நம்மைப் பெரியார் ஆளாக்கி வைத்து விட்டுச் சென்ற தன்மையில் கிடைத்த மரியாதை இது.

பெரியார் நாடு

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியானது, - நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதும் ஆகும்.

பெரியார் என்ற ஒரு மாமனிதன் நம்மிடம் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் தமிழ் ஏது? தமிழன் ஏது? எதிரி நம்மை ஏப்பமிட்டிருக்க மாட்டானா?

எதிரியின் கைகளில் இருந்த ஆயுதங்களை யெல்லாம் பறிமுதல் செய்து தந்தவர் பெரியார்தான்.
சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்கவாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார்.

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது

உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள்; கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் - ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் நம் அய்யாதான் எல்லா எதிர்ப்புகளையும் பொடிப்பொடியாக்கிக் கொள்கையில் வெற்றி பெற்றார்.

உலகத்தில் எந்த கொள்கை அழிந்தாலும் நம் பெரியார் தந்த கொள்கைக்கு அழிவே இல்லை. அது நம்மிடம் இருக்கும் வரைக்கும்தான் நமக்குப் பாதுகாப்பு.

கடைசிக் கருஞ்சட்டைக்காரன் உள்ளவரை தந்தை பெரியார் கொள்கைக்கு அழிவே இல்லை.

பெரியார் இருந்த காலத்தில் இருந்த எதிர்ப்புக்கும் ஆசிரியர் வீரமணி காலத்தில் இருக்கும் எதிர்ப்புக்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் ஊடகங்கள்

இப்பொழுது இருக்கும் ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றன. காலை முதல் இரவு வரை மூடச் சரக்குகள்தான்.

நீ பிரதமராக வேண்டுமா? உன் பெயரோடு இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள் என்கிறான். அந்த ஜோதிடனை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அட முட்டாளே! அடுத்தவனை ஏண்டா பிரதமராக்க ஆசைப்படுகிறாய்? உன் பெயரில் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு நீ ஜனாதிபதியாகப் போகவேண்டியதுதானே? என்று கேட்பேன். என் கண்களுக்கு அவன் சிக்க மாட்டேங்குறான்.

காந்தியைச் சுட்டபோது
கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிறோம். இருக்கு, இருக்கு என்பவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். காந்தியார் மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு திரிந்தார். உண்மையான ஆசிரமவாசி போல இருந்தவர். அவரை கோட்சே என்ற பார்ப்பான் சுட்டபோது எங்கேடா போச்சு உன் கடவுள்? எதற்கு எடுத்தாலும் ராம் ராம் என்பவராயிற்றே காந்தியார்! அந்த ராமன் வந்து காப்பாற்றினானா? ( பலத்த கைதட்டல்)

வேலும் சூலாயுதமும் ஏன்?

எவ்வளவு காலமாக இந்த தெய்வங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வளரவே யில்லையே! பிள்ளைக் குட்டிகளைக் காணவில்லையே! இது கூட இல்லாமல் எதற்கடா உன் கையில் வேலு, சூலாயுதம் என்று கேட்பதில் என்ன தப்பு?

அது என்ன மரண யோகம்?

இராகு காலம் என்கிறான் மரண யோகம் என்கிறான். இப்படியெல்லாம் சொல்லி நாள் ஒன்றுக்கு நம்மை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் படுக்க வைத்துவிட்டானே!

மரண யோகத்தில் அந்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது? ஒன்றரை மணி நேரத்தில் செத்துப் போய் மீண்டும் பிழைத்துக் கொள்கிறானா? இப்படியெல்லாம் கேட்கக்கூடிய பகுத்தறிவை நமக்குக் கொடுத்துச் சென்ற தலைவர்தான் நம் பெரியார். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய ஒரு கூட்டம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.

கர்ப்பக்கிரகத்துக்குள் என்னென்ன அக்கிரமங்கள்?

நாம் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் தீட்டு என்கிறான். நீ செய்கிற வேலை என்ன? அந்தக் கடவுளுக்கு முன்னால்தான் எல்லாம் நடக்குது. பிரேமானந்தா என்ற சாமியார் செய்யாத அக்கிரமமே இல்லை. இந்தியாவிலேயே பெரிய வக்கீலைப் பிடித்தான். அவர்தான் ராம் ஜெத்மலானி. கடைசியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்ததே. எங்கே போனான் கடவுள்?

சாமியார் ஆகுமுன் அறுவை சிகிச்சை

நித்தியானந்தாவாம். அடேயப்பா ; என்ன கெட்டிக்காரன்? நான் சட்டப்படி தவறே செய்யவில்லை என்கிறானே. இனிமேல் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். சாமியார் ஆகவேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும். சாமியாராவதற்கு முன் அவனை மருத்துவமனையில் வைத்து சில அறுவை சிகிச்சைகளைச் செய்யவேண்டும்.

ராமனை செருப்பால் அடித்தாரே பெரியார்!

பெரியார் சேலத்தில் ராமனை செருப்பால் அடித்தார். எவன் எதிர்த்தான்? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ராமன்பாலம் என்று குறுக்குச் சால் ஓட்டுகிறார்கள். ராமன் கட்டிய பாலம் என்கிறார்கள். ராமன் என்பவன் என்ஜினீயரா என கலைஞர் கேட்டார். பதில் தெரிந்தால் மரியாதையாகச் சொல். உடனே நாக்கை அறுப்பேன் என்கிறானே! பெரியார் இல்லை என்ற தைரியமா? பெரியார் இல்லை என்றால் என்ன? இதோ கருப்புச் சட்டைக்காரர்கள் இருக்கிறார்களே, விட்டு விடுவார்களா?

பெரியார் கொள்கை நாளும் வெற்றி பெற்று வருகிறது

டில்லி உச்ச நீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதியாக வந்தாரே பெரியார் மறைந்து வீரமணி காலத்திலே! - இது பெரியாருக்கும் வீரமணிக்கும் கிடைத்த வெற்றியல்லவா?

542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தலைவராக வந்துவிட்டாரே! ராமன் பிறந்ததாகக் கூறும் உத்தரப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் அமைச்சராக வந்துவிட்டாரே! இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா? பெரியார் மறைந்திருக்கலாம் ஆனால் அவர் கொள்கை மறையவில்லை. நாளும் வெற்றி பெற்றே வருகிறது.

இந்த நாட்டிலே முதல் கவர்னர் ஜெனரல் யார் என்றால் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்தான். கவர்னர் ஜெனரலாக இருந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் வந்தார்.

பெரியார் கொடுத்த சீதனம்

பச்சைத் தமிழர் காமராசர் பார்த்தார் பெரியார். சுற்றிச் சுற்றிப் பார்ப்பான்தானே அதிகாரத்துக்கு வருகிறான். இதற்கொரு முடிவைக் கண்டுபிடித்தார் பெரியார். அந்தக் கண்டுபிடிப்புதான் பச்சைத் தமிழர் காமராசர். காமராசரை நேருவா கண்டுபிடித்தார்? காங்கிரஸ்காரர்களா கண்டுபிடித்தார்கள்? கண்டு பிடித்தது பெரியார்தானே?

பெரியார் கொடுத்த சீதனம்தான் காமராசர். காமராசர் தயங்கினார்; தைரியம் கொடுத்தவர் பெரியார். குடியாத்தம் தேர்தலில் தானாகச் சென்று ஆதரித்தார். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும் ஓடோடிச்சென்று ஆதரித்தார். குணாளா,- குலக்கொழுந்தே - அஞ்சாதே! என்று தைரியம் கொடுத்து எழுதினார் அண்ணா.

காமராசரின் சாதனை

தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அல்லவா இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கினார் பச்சைத் தமிழர் காமராசர் காரணம் பெரியார் அல்லவா?

தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது. உலக உயர் மொழிகளின் வரிசையிலே நம் அன்னைத் தமிழ்.

கோவை செம்மொழி மாநாட்டிலே

நமது தலைவர்கள்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே நமது முதல்வர் கலைஞர் அருகில் ஆசிரியர் வீரமணி அவர்களும் அமர்ந்திருக்கும் அந்த அழகிய காட்சியைக் காணவேண்டுமே!

மனிதாபிமானம் பெரியார் கற்றுத் தந்தது

தலைவர் கலைஞர் ஆட்சியிலே மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை. உயிர் காக்கும் மருத்துவம், - அவசர உதவிக்கு 108,தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு; தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?

நம் உயிரைக் கொடுப்போம்!

திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டது. இன்னொரு திருவள்ளுவர் வரவில்லை.

இன்னொரு தந்தை பெரியார் தோன்ற இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

நம்மிடம் வாழும் நமது தலைவர்களை கலைஞரை, ஆசிரியர் வீரமணியை நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்போம் என்று குறிப்பிட்டார்.

No comments: