Tuesday, June 1, 2010

இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன?

உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள்.

இது உண்மையானதுதானா? தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு நடத்திய ஈவிரக்கமற்ற போர், மனித அறத்திற்கு எதிரான மாபெரும் குற்றமாக விவாதிக்கப்படுகின்ற இன்றைய சூழலில் வைத்து இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தியா வரம்புமீறி இத்தகைய உதவிகளை இலங்கைக்கு ஏன் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதும்,ஆராய்வதும் நமக்கு அவசியமாகிறது.

உலகம் முழுவதும் எழுகின்ற குற்றச்சாட்டுகளால் இலங்கை காயப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த வளர்ந்த மேற்குலக நாடுகளின் போக்குகள் இலங்கை அரசுக்கு சிறிது அச்சத்தை கொடுக்கத்தான் செய்திருக்கின்றன. போர்க் காலத்தின்போது இலங்கையில் நடந்ததைப் பற்றி அறிய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஐ.நா தலைவர் பான்கீ மூன் கூறுகிறார். இங்கிலாந்தும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மறைமுகமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவை பதிவு செய்யவும் அனுமதித்து இருக்கிறது. இலங்கையில் தனது வரிச்சலுகைகளை நீட்டிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்த வரிச்சலுகை இழப்பால் 10 இலட்சம் சிங்களவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழில் மற்றும் வருமானத்தை இழப்பார்கள். இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும்.

ஐ.நா‐வின் மனித உரிமைகள் பாதுகாப்பகத்தின் தலைவர் நவநீதம்பிள்ளையும், (உலக குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் ருவாண்டாவிற்கான உலக குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்தவர்) Amnesty HRW (Human rights watch) போன்ற மனித உரிமை அமைப்புகளும் இலங்கையின் நேர்மையையும், நடத்தையையும், நற்பெயரையும் கேள்விக்கு உள்ளாக்கியதன் மூலமாக ராஜபக்சவின் அரசை அரசியல் நெருக்கடிக்கு உட்படுத்தி இருக்கின்றன. இந்த செய்திகள் உலகிற்கு “ஜனநாயகத்திற்கு புறம்பான நாடு இலங்கை” என்று சுட்டிக் காண்பிக்கின்றன.

சனல்4 வெளியிட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சி உலக மக்களின் நினைவில் மறக்கவே முடியாதபடி நிலைத்திருக்கின்றன. இலங்கையோ அது பொய்யான வீடியோ என்று மழுப்பியது. ஆனால் அது உண்மைதான் என்று ஐ.நா சபையைச் சேர்ந்தவர்களே நிரூபித்தார்கள். அண்மையில் நடைபெற்ற டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் நற்பெயரை கிழித்தெறிந்து, அதனை போர்க்குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறெல்லாம் ஜனநாயகத்திற்கு புறம்பாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் சிங்கள அரசு தனது நற்பெயரை பொய்யான முறையில் உருவாக்க முயல்கிறது. மக்கள் தொடர்பு செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகிறது. நிறுவனத்தையும் இலங்கை அரசிற்காக வேலை செய்ய நியமித்துள்ளது. இந்த நிறுவனத்திற்காக இலங்கை செலவிடும் தொகை அமெரிக்காவில் மட்டும் சுமார் 4,83,000 டாலர்கள்.

எந்தவொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நற்பெயர்தான் நிதிவளத்திற்கான மூலதனம். சுற்றுலா மூலமாக ஏற்படும் நிதிவளர்ச்சி கூட ஒரு நாட்டின் நற்பெயரைப் பொறுத்தே அமைகிறது. இந்த நற்பெயரை, தமிழ் இனத்தின் மீதான போரின் காரணமாக தவற விட்ட இலங்கை அரசு தனது நாட்டின் நிதிவளத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறது.

தனது மதிப்பினை தூக்கி நிறுத்த உதவும் எந்த வாய்ப்பும் வசதியும் இல்லாமல் இலங்கை திணறிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்தான் இந்தியா மிகச் சரியான ஆயுதத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதற்காகத்தான் இலங்கைக்கு உதவும் வகையில், கொழும்பில் விருது வழங்கும் விழாவை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் காரணமாக இலங்கையின் போர்க் குற்றங்கள் மறக்கடிக்கப்படும் என்று இந்தியாவும், இலங்கையும் நம்புகின்றன. அதுதான் உண்மையும் கூட.

26 மார்ச் 2010ல் IIFA விருதுகள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மும்பையை தலைமையாகக் கொண்ட அகில இந்திய திரைப்படக் கழகம் ( IIFA ) பொலிவூட்டின் சந்தைகளை உலகெங்கும் பிரபலப்படுத்தும் ஒரு தனியார் நிறுவனம். ஆண்ட்ரி டிம்மின்ஸ்,விராவ் சர்க்காரி,சப்பாச் ஜோசப் ஆகியோரே இதனை நிறுவியவர்கள். இதைவிட முக்கியமானவர்கள் இதன் ஆலோசகர்கள். இதன் சிறப்புத் தூதுவர்‐அமிதாப்பச்சன். ஆலோசகர்கள்‐டேவிட் தவன், ஜே.பி.தத்தா,ஜெயா பச்சன்,கரன் ஜோகர்,மன்மோகன் ஷெட்டி,பகலாஜ் நிஷ்லானி,ரமேஷ் சிப்பி,சியாம் ஷிராவ் மற்றும் வினோத் கன்னா.

IIFA விருது என்பது பொலிவூட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது. IIFA யின் முதல் நிகழ்ச்சியிலேயே (லண்டன்–2000) பணத்தையும்,புகழையும் பெற்றுத் தரக்கூடிய நிகழ்ச்சியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடா, தென் கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது நாட்டில் இந்நிகழ்ச்சியை நடத்த ஆர்வத்துடன் இருக்கின்றன.

விழாவில் பாலிவுட்டின் நட்சத்திரங்கள் நடனமாடுவது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் IIFA‐யும், FICC ஐ‐யும் ( FICCI– இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டமைப்பு நிறுவனம். இது இந்தியாவின் பழமையாதும், முக்கியமானதுமான முதலாளிகளின் கூட்டமைப்பு) இணைந்து புதிய வர்த்தக வாசல்களை திறக்கவும் இந்த விழாவை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த அமைப்பின் வழியாக வர்த்தக உறவுகள்,பரிமாற்றங்கள், பொலிவூட்டிற்கான சலுகைகள்,முதலீடுகள் எளிதில் உருவாகின்றன.

FICCIயின் துணைத்தலைவர் ஷிபாலி முன்ஷி இது பற்றி குறிப்பிடுகிறார்.

தென் கொரியா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த விழாவை தங்கள் நாட்டில் நடுத்துவத்துவதற்காக போட்டிபோடுகின்றன.

இந்த கடுமையான போட்டிகளுக்கு இடையேதான் 2010 விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கிற்து. போன வருடம் வரை இதற்கான பட்டியலில் அயர்லாந்து முன்னணியில் நின்றது. ஆனால் ஜனவரி 2010ல் இந்த வாய்ப்பு சியோலுக்கு கிடைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஜனவரி 26 இந்தியாவிற்கு கொரிய ஜனாதிபதி “லீ மியூங் பாக்” வந்தபோது அகில இந்திய திரைப்படக் கழகத்தின் விருது விழா கொரியத் தலைநகரில் நடத்தப்பட இருப்பதாக கொரிய ஜனாதிபதி அதிகார வட்டங்கள் தெரிவித்தன. இதை உலகிந்திய திரைப்படக் கழகத்தின் நிறுவனர் ஆண்ட்ரி டிம்மின்ஸ் உறுதி செய்தார். இந்த அறிவிப்பை கொரியாவின் நற்பெயரை ( Presidential Council for Nation Branding ) உயர்த்தும் கொரிய ஜனாதிபதியின் நிர்வாகக் குழுவே அறிவித்தது.

ஆகவே FICCI யின் பட்டியலில் 27 பெப்ரவரி 2010 வரை கொழும்பு இல்லவே இல்லை. ஆனால் இன்றைய தேதியில் கொழும்பில்தான் விருது வழங்கும் விழா நடக்கப் போகிறது என்பது உறுதிபடத் தெரிகிறது. இது குறித்து இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா குறுப்பிடுகையில் “இது இலங்கையின் மிகப்பெரிய உலகசாதனை. கடுமையான போட்டிக்ளுக்கு இடையே இலங்கைக்கு இது கிடைத்திருக்கிறது. இந்த விழாவினை ஒட்டி பல்வேறு வர்த்தக சந்திப்புகளும் நடைபெற உள்ளன” என்கிறார்.

இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்னெவென்றால் விழாவை நடத்துவதற்கான போட்டியில், முன்னணி நாடுகளை குறிப்பாக வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, போட்டிப் பட்டியலிலேயே இல்லாத இலங்கைக்கு இது தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

கொழும்பில் நடைபெற உள்ள இந்த விழா திட்டமிட்டபடி நடந்தால், இலங்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சொந்தங்களாய் இருந்த வணிக உறவுகளும்,ஏனைய உறவுகளும் பிணைந்த தமிழர் சமூகத்தை மறந்து, வடக்கிந்திய பெரு, சிறு முதலாளிகள் கடை விரிக்கப் போகிறார்கள். தமிழர்களின் வணிக இழப்பை மையமாக வைத்து மட்டும் இதனைச் சொல்லவில்லை. இதன் மூலமாக அறுந்து விழக்கூடிய மெல்லிய உறவுகள் எத்தனை?. ஜெயின்களும், ப்டேல்களும், அகர்வால்களும் தாம் இதுவரை கண்டிராத நிலத்தில் வணிக வலையை விரிக்கப் போகிறார்கள்.

இத்தகைய வணிக அமைப்புகள் உருவாக்கப்பட்ட பின் அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் எவ்வாறு மதிப்பிடப்பட போகிறது. திலீபன் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட இடத்தில் வட்டிக்கடைகள் கூட முளைக்கலாம். தமிழகம் மேற்கொள்ளும் ஈழத்திற்கான போராட்டங்கள் தனித்து விடப்பட்டு ஏனைய இந்தியா இலங்கையை விழா பூமியாக மாற்றப் போகிறது. நமது இருத்தலை மறுபடியும் நிராகரிக்கிற நிகழ்வு நம் கண்முன்னே ஜூன் 2 முதல் 4 வரை நடக்க இருக்கிறது. விருது வழங்கும் விழா கொழும்பில் நடைபெறப் போகும் இந்த தருணத்தில் தமிழ் உணர்வாளர்களும்,போராளிகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. 400க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பல பேர் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த விழா மிக குறுகிய காலத்தில் நடக்க இருப்பதால் காலம் தாழ்த்தாது போராட அழைக்கிறோம். உங்களின் நண்பர்களிடம் இது குறித்து பேசுங்கள். எல்லோரிடமும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள். நமது போராட்டம் உலகிந்திய திரைப்படக் கழகத்தின் ( IIFA) முடிவை மாற்றியமைக்கட்டும். இலங்கையை விடுத்து வேறு ஒரு நாட்டில் நடத்தலாம் என்ற முடிவுக்கு அவர்களை உந்திச் செல்லட்டும்.

ஒன்றுபட்டு நிற்போம். நமக்கான போராட்டத்தை நாமே தொடங்குவோம்..

நன்றி - மீனகம்

No comments: