Saturday, June 19, 2010

தேசிய தலைவரின் தம்பிகள் -கண்மணி

அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம், குழந்தைகள் கர ஓசை எழுப்பி, பாடி வரும் குரல். கூர்மையோடு பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு படபடப்பு எழத்தொடங்குகிறது. தலைமையோடு தொடர்பு கொள்கிறார்கள். தலைமையிலிருந்து கட்டளை பிறக்கிறது, அந்த வண்டி வந்து சேருவதற்குள்ளாக யாராவது சென்று அந்த கண்ணிவெடியை மிதித்து கொடையாளியாகுங்கள் என. போராளி ஒருவர் ஓடிச்சென்று கண்ணிவெடியை மிதித்து சுக்கு நூறாக வெடித்து சிதறுகிறார். சற்றேறக்குறைய 55 குழந்தைகளோடு வந்துக் கொண்டிருந்த அந்த சுற்றுலாப் பேருந்து, குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு 10 மீட்டருக்கு முன்னால் நிற்கிறது.

அனைவரும் மலைத்து நிற்கிறார்கள். அதற்குப் பின்னால் வந்துக் கொண்டிருந்த ராணுவ வண்டியை குறிவைத்து புதைக்கப்பட்ட கண்ணி வெடியில் சிக்கி, சாதாரண குழந்தைகள் சாகக்கூடாது என்பதற்காக தம்மை பலிக்கொடுத்து, சாகாவரம் பெற்ற மாவீரர்களாக மாறி நின்ற இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள், தமிழ்தேசிய விடுதலைப் புலிகள். எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் செத்துப்போகக் கூடாது என்பதிலே மிக அக்கறையோடு களமாடியவர்கள். மேற்கண்ட நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த சம்பவம். இன்றுவரை இந்த நிகழ்வு நம் மனதிலே பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. எப்போதுமே புரட்சியாளர்கள் அப்பாவி மக்கள்மீது தங்களுடைய கருவிகளை அறைவது கிடையாது. எந்த இன மக்களோடும் எந்தக் காலத்திலும் புரட்சியாளர்களுக்கு பகைமை கிடையாது. அவர்கள் முற்றும் முழுதுமாக தம் எதிரியோடு மட்டுமே களமாடுகிறார்கள்.

அவனோடு மட்டுமே தமது மோதலை கைக்கொள்கிறார்கள். கோழைகள்தான் கருவி ஏந்தாத மக்களோடு மோதி, அவர்களை கொன்றொழிப்பார்கள். போராளிகள் ஒருபோதும் கருவி அற்ற கரங்களோடு தமது கரங்களை மோத விடுவது கிடையாது. இது வரலாறு மட்டுமல்ல, போராளிகளின் தத்துவமும் கூட இதுதான். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டதாகவோ, அல்லது சிங்கள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவோ ஒரு சிறு தகவல்கூட நமது பகைவனால்கூட நமக்குத் தரமுடியாது. உலகிலேயே தம்மை முழுமையாக எவ்வித சமரசமும் இன்றி, தம்மை களபலியாக்கத் துணிந்த தற்கொடையாளர் அமைப்பு நமது தேசிய ராணுவத்திடம் மட்டும்தான் மதிநுட்பத்தோடு இருக்கிறது. நாம் பலமுறை சொன்னதைப்போல ஒருவேளை மேதகு தேசிய தலைவர் அவர்கள் கட்டளையிட்டிருப்பாரேயாகில், சிங்களர்கள் லட்சக்கணக்கிலே சிதறி செத்திருப்பார்கள்.

மாந்த உயிர்களை குறித்து மரியாதை கொண்டவராகவும், மாந்த மாண்பை உயர்வாக எண்ணியவராகவும், மாந்தத்தின் அளப்பறியா ஆற்றலை உளமாற நேசிப்பவராகவும் தேசிய தலைவர் இருந்த காரணத்தினால், எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்பதிலே மிக நேர்த்தியாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொண்டார். இதுவே சிங்கள மக்களைக்கூட நமது தேசிய தலைவரை, தலைவராக ஏற்றுக் கொள்ள துணிவைத் தந்தது. சிங்கள இளைஞர்களில் பலர் தேசிய தலைவரை தமது கதாநாயகனாக உளமாற நேசிப்பதை பல்வேறு செய்திகள் எடுத்துக் கூறுகின்றன. இவ்வளவு செய்திகளையும் நாம் சொல்லிக் கொண்டு வருவதற்கு காரணம், நாம் எல்லோரும் அறிந்ததுதான். கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தனியில் இருப்புப்பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்து, தொடர்வண்டி நிறுத்தப்பட்டதாகவும், சற்றேறக்குறைய 2500 பயணிகள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வந்தன. அந்த செய்திகளுக்கு இடையே ஒரு துணை செய்தி. ஒரு துண்டு காகிதத்தில் ஒரு 7 வரிகளில் தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்தது.

அந்த தகவல், மத்திய அரசே! ரத்த வெறிக் கொண்ட ராசபக்சே இந்தியா வந்ததை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணைப்போன இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டிக்கிறோம். தமிழா! இனியும் மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாம். இந்த செய்தியை பார்த்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டில் இப்படி குண்டு வெடிக்கும் நிலை இல்லை. விழுப்புரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், 1 மீட்டர் நீளத்திற்கு இருப்புப் பாதை வெடிவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. அங்கே தேசிய தலைவரின் தம்பிகள் என்ற குறிப்போடு ஒரு துண்டுச் சீட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ் மாநில காவல்துறைத் தலைவர் லத்திகா சரண், என்ன நடந்தது? எப்படி நடந்தது? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இந்த நிகழ்வுகளுக்கு யாரெல்லாம் காரணமாக இருப்பார்கள்? என்பதையெல்லாம் கொஞ்சமும் அலசி, ஆராயாமல் நேரிடையாக சில மணி நேரங்களிலேயே சொல்கிறார், இந்த நிகழ்வுகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று.

நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கிறது. நிகழ்ந்தது மிகப்பெரிய செயல். ஒருவேளை தொடர் வண்டி துறையின் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மாந்த உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டிய காவல்துறையின் தலைவர், மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பில்லாத செயல் என்று கூறுகிறார். அதைவிட கொடுமையாக புலனாய்வுத்துறை தலைவரான ஜாபர்சேட், இது விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று எவ்வித விசாரணையும் செய்யாமல் ஊடகத்திற்கு அறிவிப்பு செய்கிறார். நிகழ்வு நடந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துண்டு காகிதத்தின் மூலம் ஒரு விசாரணை நிறைவு பெறுமா? அதைக் கொண்டே ஒட்டுமொத்த விசாரணையையும் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த யூனியன் கார்பைடு நிறுவத்தின் கொலை கள விசாரணை, கால் நூற்றாண்டுகளாக நிகழ்ந்து, அதில் பிறழ் நீதி நிகழ்ந்து, குற்றவாளிகள் மிக எளிதாக தப்பிக்க முடிந்தது.

கால் நூற்றாண்டு விசாரணைக்குப் பிறகும்கூட ஒரு மிகப்பெரிய மாந்த அவலத்தில் கண்டுபிடிக்க முடியாத உண்மையை சில மணி நேரங்களில் பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் கூறுவதற்கு யார் அவர்களை தூண்டியது என்று மக்கள் கேட்கிறார்கள். இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அந்த துண்டு காகிதத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒரு தகவலை தெரிவிப்பது சரியான நிலைப்பாடா? குற்றம் செய்தவர்கள் முட்டாள்தனமாக தாம் மாட்டிக் கொள்ளும் விதமாக இவ்வளவு கேவலமான ஒரு இழிச் செயலுக்கு பொறுப்பேற்பார்களா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பதின் மூலம் இவர்கள் எதைச் சொல்ல முன்வருகிறார்கள் என்கின்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. நமக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைக்காரன் இனஅழிப்பை மேற்கொண்ட வேறொரு கொலைவெறியன் ராசபக்சேவோடு சேர்ந்து இந்தியாவிற்கு வந்தான். வந்தவன், இந்தியாவின் பிரதமரோடு கைகுலுக்கி, வாய்நிறைய புன்னகைத்தான். இது டெல்லி அரசியலிலும், தமிழக அரசியல் தளங்களிலும் பெரும் விமர்சனப் பொருளாகியது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த தமிழீழ மக்களின்விடுதலைக் குறித்த தாக்கங்கள், இன்று வடநாட்டு ஊடகங்களிலும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் இருக்கும் தலைவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ராசபக்சேவின் இன அழிப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். நமக்குரிய சந்தேகம் என்னவென்றால், நிகழ்வு ராசபக்சேவிற்கு எதிராக போய்க் கொண்டிருக்கும்போது, இதை திசை திருப்புவதற்காக இந்திய உளவுத்துறையே விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்காக இப்படிப்பட்ட ஒரு செயலை ஏன் செய்திருக்கக்கூடாது என்பதுதான்.

யாராய் இருந்தாலும் ஒரு துண்டு சீட்டின் மூலம் முடிவெடுப்பது வடிவேலு சொல்வதைப்போல சிறுப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு சொல்வது இரண்டு விதத்தில் நம்மை சிந்திக்க வைக்கின்றது. ஒன்று, டக்ளஸ் தேவானந்தாவின் செய்தியை மூடி மறைக்க இதை செய்திருக்கலாம். இரண்டு, முன்பைக் காட்டிலும் இப்போது வீச்சடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, தமிழீழ விடுதலைக்கு ஆதரவு களத்தில் இருப்பவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த கருவியை அரசே கையில் ஏந்தியிருக்குமோ? என்பதுதான். குற்றவாளிகளை பிடித்து, விசாரித்து, மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் கிடையாது. ஆனால் சமீப காலங்களில் ஊடகங்களில் நமது உளவுத்துறை குறித்தும், நடுவண் புலனாய்வுத்துறை குறித்தும் வரும் தகவல்கள் கசப்பாகவே இருக்கின்றன.

ஒட்டுமொத்த அரசுத் துறைகளும், அரசியல் சாயங்களோடுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சுமத்துவதிலிருந்தே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நாம் இறுதியாக சொல்ல நினைப்பது என்னதென்றால், கடந்த காலங்களிலாகட்டும், நிகழ்காலத்திலாகட்டும், எதிர்காலத்திலாகட்டும், புரட்சியாளர்கள் ஒருபோதும் அப்பாவி மக்களின் உயிரை பணையம் வைக்க மாட்டார்கள். அப்பாவிகள் உயிர்களை காப்பாற்றுவதற்காக தம் உயிரை கொடுக்க துணிவார்களேத் தவிர, எந்த நேரத்திலும் மக்களின் உயிரை களவாட அவர்கள் களம் அமைத்தது கிடையாது. மக்களின் உயிர்களையும், அவர்களின் உடைமைகளையும் தொடர்ந்து நாசப்படுத்தி, கொன்றொழிக்கும் கூட்டமாக அரச பயங்கரவாத ஆற்றல்கள்தான் உலகெங்கும் இருக்கின்றன. ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பாலஸ்தீனம் என தொடர்ச்சியாக அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்படுவது புரட்சியாளர்களால் அல்ல, பயங்கவாதிகளால் தான். தமிழீழ போராட்டக் களத்திலே இதுவரை ஒரு தோட்டாக்கூட அப்பாவி மக்களுக்கு நேரே வீசப்பட்டது கிடையாது. அது, அவர்களின் பணியும் இல்லை. நாம் பகைவனை பணிய வைக்க, படை அணியோடு மட்டும்தான் சமர் செய்தோமேத் தவிர, எந்தநிலையிலும் மக்களோடு அல்ல என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்திருக்கிறது.

இனி வரும் காலங்களில் நாம் எதிர்பார்க்கலாம், தமிழீழ தேசிய விடுதலைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சிறு சிறு குழுக்கள் கைது, கண்டிப்பு, சித்ரவதை, சிறைச்சாலை என்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படலாம். அதன் தொடக்கமாகத்தான் வாய்க்கு வந்தப்படி பேசும் நிலை உருவாகியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் எல்லை மீறி, தினமலர் என்னும் பார்ப்பனிய ஏடு தலைப்பு செய்தியாகவே சொல்லியிருக்கிறது, புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் என. தமிழீழ தேசிய விடுதலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தினமலர் எழுதிய தலைப்பு செய்திக்கு எதிராக குறைந்தபட்சம் தமது எதிர்பையாவது பதிவு செய்ய வேண்டும். யார் குற்றவாளி என்பது கைதுக்குப் பின்னர்கூட தெரியாது. குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, தினமலர் எப்போது நீதிபதியானது என்பது நமக்கு விளங்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழர்களின் பணத்தை சுரண்டி, தமிழர்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும் தினமலர் போன்ற பார்ப்பனிய ஏடுகளுக்கு எதிராக தமிழர்கள் அணி திரள வேண்டும். அதை கண்டிக்க வேண்டும். இந்தப் போக்கு நீடிக்குமேயானால், நாளை தினமலர் சுட்டிக்காட்டும் எல்லோரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். தமிழ் இன உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக களம் காண வேண்டியது கட்டாயம். மறந்துவிடக் கூடாது. தேசிய தலைவரின் தம்பிகள் ஒருபோதும் மக்களுக்கெதிராக, மக்களின் உயிரை பணையம் வைத்து வெற்றியைப் பெறுவதோ, பழி தீர்ப்பதோ என்கின்ற இழி நிலைக்கு வரமாட்டார்கள். மக்களைக் காக்க தமது உயிரைத் தருவதற்குத்தான் தயாராக களத்திற்கு வருவார்களேத் தவிர, மக்களின் பிணங்களின் மீது தமது வாழ்வை நிறுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். தினமலருக்கு மட்டுமல்ல, தினமலர் சிந்தனை கொண்ட எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இதுதான். தேசிய தலைவரின் தம்பிகள் உயிர் கொடுப்பவர்கள். உயிர் எடுப்பவர்கள் அல்ல.

No comments: