Thursday, January 6, 2011

சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!



தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் ‘அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான்.

அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான். சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு ‘இளவரசன்’ என்று பெயர் வைத்தார்களோ…. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ஒருநாள்…. இரண்டு நாள்… அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக ‘திருட்டுத் தொழில்’ தொடர்ந்தது.

‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட ‘நகையைத் திருடி விட்டான்’ என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை. விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை.

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?

பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான் விழுங்கிக் கொண்டான். இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது. எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா… இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே….அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா…. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி”! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை… பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே… பிரதமர்… அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன்.

சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி… அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே…. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே… மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்… அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!

இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா… அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!

தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே… அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!

முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை தூக்கிலேற்ற வேண்டும்

மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.

ம.மரியதாஸ்

No comments: