Wednesday, September 22, 2010

உலகின் அழகிய மணமக்கள் ! – சந்தனமுல்லை



உலகின் அழகிய மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உலகின் அழகிய மணமகனை?

ஜோசிய‌ர் சொன்னார் என்பதற்காக மாங்கல்ய தோஷத்தை நீக்க மரங்களை இரண்டு முறைகள் மணந்து, அதற்கு பின்னர் நடமாடும் மூன்றாவது மரத்தை மணந்த ‘உலக அழகி’ ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனையா நினைத்துக் கொண்டீர்கள் நீங்கள்? ச்சே..ச்சே….நிச்சயமாக அவர்கள் இல்லை.

உலகின் எந்த மூலைக்குப் போனாலும், ஏன் சந்திரனுக்கே சென்று வந்திருந்தாலும் சந்தியாவந்தனம் செய்வதை விடுவதில்லை - ஆவணி அவிட்டத்தை விடுவதில்லை – ஒரு சம்பிரதாயம் விடாமல் எல்லா சடங்குகளையும் நிறைவேற்றி,காசி யாத்திரைக்குச் சென்று அய்யர் வைத்து ஓதி நெருப்பை வலம் வந்து அம்மி மிதித்து நமது பண்பாட்டின் படிதான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் பல தமிழர்களின் பகட்டான திருமணங்களுக்கு நடுவில் -‍உடலில் ஒரு பொட்டு தங்கம் இல்லாமல் பெண்களை அடிமையாக்கும் எந்த சம்பிரதாயங்களுககோ, மூடநம்பிக்கைகளுக்கோ, போலி ஆடம்பரங்களுக்கோ இடம் தராமல் தலைநிமிர்ந்து, ‘இந்த சமூகத்தின் எந்த அழுக்குகளும் கறைகளும் எங்கள் மீது படவிடமாட்டோம்’ என்று உறுதியான கொள்கையுடன் நடந்த திருமணத்தின் மணமக்களான தோழர்.அஜிதா மற்றும் தோழர்.பாண்டியன்-தான் அவர்கள் – உலகின் அழகிய மணமக்கள்!

ஆம்,அங்கு ஜோடிக்கப்பட்ட மேடை அலங்காரங்களோ கண்கவரும் மேடை வளைவுகளோ இல்லை; ஆனால் போலித்தனமில்லாத சுயமரியாதை இருந்தது.

கை கூப்பி வரவேற்கும் ஆட்டோமேடிக் பொம்மைகளோ, கல்கண்டு டப்பாக்களோ மணக்கும் சந்தனமோ இல்லை ; ஆனால், பார்க்கும் யாவரையும் நோக்கி புன்னகைக்கும் எளிமையும் தோழமையும் இருந்தது.

மண்டபத்தில், பளபளவென அடுக்கி வைக்கப்பட்ட புத்தம்புதிய சீர்வரிசை பாண்டங்களோ அட்டை பிரிக்கப்படாத வீட்டு உபயோகப் பொருட்களோ இல்லை ; ஆனால் “நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட இவ்வாழ்க்கையை சமூகத்தின் விடுதலைக்காக இதுவரை தனியாக போராடிய வாழ்க்கையை இனி இருவருமாக ஒன்றாகத் தொடர்வோம்” என்ற உறுதியும், உத்வேகமும் இருந்தது.

திரை இசையை பாடி மகிழ்விக்கும் ஆர்கெஸ்ட்ராவோ, பட்டுப்புடவை சரசரப்புகளோ இல்லை; “கலகலப்பு என்பது இவற்றில் இல்லை, உண்மையான மகிழ்ச்சி என்பது போராட்டத்தில் இருக்கிறது” என்ற உறுதி இருந்தது. மக்களை சிந்திக்க வைக்கும் பேச்சாளர்களாலும், மக்களுக்கான கலையாலும் களை கட்டிய விழாக்கோலம் அங்கிருந்தது.

காது பிளக்கும் இரைச்சலான கெட்டிமேளம், நாயனங்கள் இல்லை; ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லையும் தூண்டி உணர்வுகளை புதுப்பிக்கும் பறையும் புல்லாங்குழலும் இருந்தது.

சாதியோ, மதமோ, காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை; ஆனால் மனிதரை மனிதர் உள்ளன்போடு நேசித்து அவர்களின் உணர்வுகளை, உரிமைகளை மதித்து அங்கீகரிக்கும் உயர்ந்த பண்பு இருந்தது. தங்கள் மகன் மற்றும் மகளுக்காக காலங்காலமாக மக்களை அழுத்தி வைத்திருக்கும் போலி நம்பிக்கைகளை தூக்கியெறிந்து, புதிய சமூக மாற்றங்களை மனமுவந்து ஏற்கும் தெளிவும், தைரியமும், எதிர்கொள்ளும் துணிவும் அந்த பெற்றோர்களிடம் இருந்தது.

ஓ, சுய மரியாதைத் திருமணமா என்றா கேட்கிறீர்கள்…இல்லை…இல்லை….இது ஒரு புரட்சிகர திருமணம்!

சாதி மத சம்பிரதாயங்களை மறுத்த சுயமரியாதைத் திருமணங்களைக் கேள்விப்பட்டிருப்போம்; ஏன் பார்த்துமிருப்போம்.

ஆனால், கோடானுகோடி மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர்களின் புரட்சிகரத் திருமணத்தை?

ஆம், முதல் முறையாக ஒரு புரட்சிகரத் திருமணத்திற்கு சென்று பங்கேற்ற பிரமிப்பிலிருந்தும் தாக்கத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமலிருக்கிறேன்.

மனித குல விடுதலைக்காக, கம்யூனிசமே தீர்வு என்று தான் நம்பும் கொள்கைகளுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக சொந்த வாழ்க்கையை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக‌களை துச்சமென மதித்து சமூகத்திற்காக வாழும் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட விழா அது! இதுதான் எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

மக்களின் நலனுக்காக தங்கள் உயிரை ஈந்து தியாகிகளான தோழர்களை நினைவு கூர்ந்தபடி விழா ஆரம்பமாயிற்று.மணமக்களின் பெற்றோர்கள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட இரு தம்பதிகளும் மேடைக்கு வந்து வணங்கி அமர்ந்தனர்.அதன்பின், மணமக்கள் இருவரும் அழைக்கப்பட மேடையை நோக்கி இருவரும் நடந்து வந்தனர்.

பார்க்கத்தான் அது எவ்வளவு கம்பீரமாக கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!

பெண்ணை அவமானத்துக்குள்ளாக்காத திருமண முறை எந்த மதத்திலாவது எந்த சாதியிலாவது இருக்கிறதா?

“திருமண மேடையில் எப்படிப் பெண்ணுக்குரிய லட்சணங்களோடு நடந்துக் கொள்ள வேண்டும், நீ பெண் என்பதால் தலைகுனிந்து நாணி கோணி தன்னியல்பாக இருப்பதை விட இயல்பைவிட்டு ஒதுங்கி வெட்கத்தை, குடும்ப வளர்ப்பை, மானத்தை நீ நடந்துக் கொள்ளும் முறையில்தான் காப்பற்ற வேண்டும்” என்றும் “அளவா சிரி, பல்லு தெரியயாம ஸ்மைல் பண்ணக் கத்துக்கோ” என்றும் அறிவுரைகள் வழங்கி, இத்தனைக்கும் மேலாக தலைகொள்ளாப் பூவை சடையில் தைத்து வைத்து நினைத்தாலும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மணப்பெண்ணை அலங்கார பொம்மையாகவே மாற்றியிருக்கும் திருமணங்கள் - முக்காடிட்டு பெண்ணை ஒரு தனி இடத்திலும், ஆணை ஒரு தனி இடத்திலும் அமர வைத்து, ஆணை மையமாக வைத்தே சம்பிரதாயங்களை நிறைவேற்றி, வரதட்சிணையை பேரேட்டில் குறித்துக் கொண்டு கையெழுத்திட்டு, இருவரையும் பொதுவாக ஒரு இடத்தில் இருவரும் அமரக் கூட வழியில்லாமல் மணவிழாச் சடங்குகள் நிறைந்த கட்டுக்கோப்பான திருமணங்கள் – முதலில் மணமகன் நடந்து வர பின்னாலேயே தலை குனிந்து மணமகள் நடந்து வரும் நடைபெறும் திருமணங்கள் -

இவை நடுவில் மணமகனும் இருவரும் சமமாக நடந்து வர எந்த திருமண மேடை அல்லது திருமண அமைப்பு அனுமதிக்கிறது?

இல்லை, அந்த மாற்றத்தைத்தான் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்? படித்திருக்கிறோம், உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம், உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டுகிறோம், ஊருக்கே முன்மாதிரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஏற்க மறுக்கும் மாற்றங்களை இந்தத் தோழர்களின் பெற்றோர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு பின்னுதாரணமாக இருக்கும் பிரபலக் குடும்பங்கள் பார்ப்பனிய சடங்குகளையும் பிற்போக்குத்தனங்களையும் கடைபிடித்து உலகை பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேளையில் இந்த எளிய மக்கள் தங்களின் உயர்பண்பால் உலகை முன்னோக்கி தள்ளிச் செல்கிறார்கள். அப்பிரபல குடும்பங்களின் பெண்கள் தந்தைகளின் மடியில் அமர்ந்து கன்னிகாதானமாக வழங்கப்படுகையில், இங்கு ’நாங்களிருவரும் சரிசமமாக வாழ்வோம்’ என்று உறுதிமொழி எடுக்கிறார்கள்!

எப்படி சாத்தியமாயிற்று இது?

இந்த திருமணத்தில் தாலி இல்லை, சாதி மத சம்பிரதாயங்கள் இல்லை. இது வேறுபட்ட திருமண வடிவம் என்பதை பெற்றோருக்கும் தோழர் பாண்டியன் சொன்னபோது முதலில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது அவரது தந்தையிடமிருந்து. ஆனால், அவரது தாய் தோழருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அதோடு நில்லாமல், “இந்த சம்பிரதாயங்கள் நம்மோடு போகட்டும்” என்று மணமகனின் தந்தையிடம் கூறி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார். உறவினர்களையும் சமாளித்திருக்கிறார். சுவாரசியமானதென்னவெனில், அவரொன்றும் பெரும் படிப்போ அல்லது பெண்ணியம் பேசும் மெத்த படித்தவருமல்லர். தேயிலை தோட்டத்தில் தேயிலைக்க் கொழுந்துகளை பறிக்கும் ஒரு தொழிலாளி. தனது வாழ்வியல் மூலமாக அனுபவங்கள் ரீதியாக ஒரு பெண் இதை சொல்லும்போது அந்த வார்த்தைகள்தான் எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது!

ஒருவேளை படித்தவர் இம்மாறுதலை எளிதாக ஏற்றுக்கொண்டிருந்தால் இதில் எவ்வித சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும். ஆனால் முரண்பாடுகளின் மொத்த உருவமான நம் நாட்டில்தான் நடைமுறை முற்றிலும் வேறாக அல்லவா இருக்கிறது!

குழந்தை ஒன்று பிறந்துவிட்டாலே அதை எப்படி கரையேத்துவது என்ற கவலைப்படுவர்களை பார்த்திருப்போம். மேலும், அக்குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம். ’வயித்துலே நெருப்பை கட்டிக்கிட்ட மாதிரி’தான். ’அதை எப்படி ஒருத்தன் கையிலே புடிச்சு கொடுக்கிறது’ என்பதே பெற்றோருக்கு மனதை அரிக்கும் கவலையாக இருக்கும். அது எந்த வர்க்கத்து பெற்றோராக இருந்தாலுமே! இதில் பெற்றோரை அந்த நிர்பந்தத்துக்கு தள்ளுவது எது? திருமணத்தோடு சீரும் காரும் பங்களாவும் குறைந்த பட்சம் பைக்கும் எதிர்பார்க்கும் நமது சமூகச் சூழல்தானே!

”எங்கே, செக்கோஸ்லாவேகியா சொல்லு” என்றும் இன்று இவ்வளவு முதலீடு செய்தால் 20 வருடங்களில் இவ்வளவு தொகை வரும் என்றும் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் ஆயிரமாவது கட்டினால் ஐந்து வருடங்களில் இவ்வளவு கிடைக்கும் கணக்கிடும் தந்தைகளை பார்த்திருப்போம். அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தோழர் அஜிதாவின் தந்தை. எந்திரனில் கையை காலை ஆட்டி கோடிகளில் சம்பாரித்து மகளின் திருமணத்தை நடத்திய தந்தையில்லை அவர்.ஆனால் அந்தத் தந்தைகள் தங்கள் மகள்களுக்கு கொடுக்காததை தனது மகளுக்கு கொடுத்திருத்திருக்கிறார் இவர். விவசாயம் பொய்த்து போனதன் காரணமாக திருப்பூருக்கு சென்று பனியன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்துக் கொண்ட குற்றத்திற்காக மகளை கொல்லும் தந்தைகள் மத்தியில், ஒரு பெருமைமிகு வாழ்க்கையை, அதை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை தனது மகளுக்குக் கொடுத்திருக்கிறார்.

தன் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கத் துடிக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் அஜிதா சிறுமியாக இருக்கும்போதே ம.க.இ.க கலைக்குழுவில் சேர்த்துவிட்டு “தனது மகள் மக்கள் தொண்டாற்றட்டும்” என்று பெருமை கொண்டவர் அந்த தந்தை. “எங்களுக்கு மொய் தேவையில்லை, அன்பளிப்பாக கொடுப்பதாக இருந்தால் புத்தகங்களை பரிசளித்து வாழ்த்துங்கள்” என்று சொல்லும் உயர்ந்த பண்பாடு மிகுந்த பெற்றோர்கள் இவர்கள்.

விழாவின் முக்கிய கவர்ந்த அம்சம் மேடையில் பலரும் பேசிய பேச்சுகளே! மேலும், குழுமியிருந்த மக்களும் மிக நாகரிகமாக பொறுமையாக அமர்ந்து பேசுவதை அமைதியாகக் கேட்டு ரசித்தனர். ஒரு சலசலப்போ கவனச்சிதறலோ இல்லை. சம்பிரதாயத் திருமணங்களில், மேடையில் மும்முரமாக மணமக்களை ”சொல்றதை பின்னாடியேச் சொல்லுங்கோ” என்று பின்னி பெடலெடுத்துக்கொண்டிருக்கும் ஐயர் ஒரு புறம்; வேர்த்து விறுவிறுத்தபடி மணமக்களும் அவர்களுக்குப் பின்னால் அதைவிட பரபரப்புடன் காணப்படும் நெருங்கிய சொந்தங்கள் ஒருபுறம்; யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக கல்யாணம் முடியவேண்டுமே என்ற கவலையுடன் வெளியே சிரித்துக்கொண்டிருக்கும் மணமகளின் பெற்றோர் ஒரு புறம் என்ற திருமணக் காட்சிகளிலிருந்து இது முற்றிலும் வேறாக இருந்தது. மேடைப் பேச்சுகளால் விழா களைக் கட்டியது என்பதே உண்மை.

ம க இ கவின் ‌திருச்சிப் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நிர்மலா பேசும்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி இது. காவல்துறையில் ஏட்டாக பணிபுரியும் ஒருவர் தனது மகளுக்கு சொந்த சாதியில் ஒரு வரனை தரகர் மூலமாக‌ப் பார்த்து மணமுடிக்கிறார். அவன் சரியானவனில்லை, ஒரு பொறுக்கி என்று விரைவில் தெரிய வருகிறது. ஆறுமாதத்திற்குள்ளாக அந்த பெண்ணை அவளது த‌ந்தை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுகிறான். இன்னொரு தரகரைப் பார்த்து தனது புகைப்படத்தைக் கொடுத்து வேறு மணமகளைத் தேடுகிறான். முதல் தரகரின் நண்பரான இவர் இவனது அயோக்கியத்தனத்தை ஏட்டுவிற்கு தெரியப்படுத்துகிறார். தக்க நேரத்தில் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனாலும், ஏட்டுவினால் அதைத் தாண்டி அவனை ஒன்றும் செய்யஇயலவில்லை.இதுதான் யதார்த்தம். திருச்சியைச் சேர்ந்த ஸ்மாலின் ஜெனிட்டாவின் கதையை நாம் அறிவோம். பல பெண்கள் தாங்கள் ஐடி மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படவேண்டுமென்று விரும்புகிறார்களே தவிர எந்த மாதிரியான வாழ்க்கை வாழவேண்டுமென்று கொள்கைகள் கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டில்பூச்சிகளைப் போல அற்ப வாழ்வு வாழ்ந்து இரைகளாகிப் மடிகிறார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் வாஞ்சிநாதன் பேசும்போது சொன்னார் – பெண்கள் பலருக்கு கிருஷ்ண ஜெயந்தி என்றைக்கு என்பது நினைவிலிருக்கும். விநாயகர் சதுர்த்தி நினைவிலிருக்கும்.ஆனால், பெண்களின் விடுதலைக்கு பெரிதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளை மறந்துவிடுகிறார்கள் என்று. இன்றும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அவரே முக்கியக் காரணம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சேரில் கூட அமர முடியாது. கல்யாணத்தில் ஆண்களுக்கு மட்டுமே சேர் இருக்கும். பெண்கள் கீழே தரையிலோ அல்லது ஜமக்காளத்திலோதான் அமர வேண்டும் அல்லது நின்றுக்கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்த சமூகம்தான் நமது தமிழ்ச்சமூகம். இங்கு ஓரளவு முன்னேறியிருந்தாலும் இன்னும் முழுமையாக விடுதலை கிடைக்கவில்லை.

மகாபாரத்ததில் அர்ஜூனன் பிச்சைபெற்று மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். தாயிடம் விஷயத்தைச் சொன்னதும், “எதுவாக இருந்தாலும் உனது சகோதரர்களுடன் பங்குப் போட்டுகொள்” என்கிறாள் தாய்.உடனே அர்ஜுனன் என்ன சொல்லி இருக்க வேண்டும்? “அம்மா, நான் அழைத்து வந்திருப்பது பொருளல்ல, ஒரு பெண்” என்று சொல்லி இருக்க வேண்டும்.

அந்த மணப்பெண்ணுக்காவது கோபம் வந்திருக்க வேண்டும்.அது இயல்பு. அல்லது ஐவரில் முதல்வனான தருமத்திற்கு பெயர் போன தருமர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? எந்தக் கேள்வியுமில்லாமல், அவள், ஐவருக்கும் மனைவியாகிறாள். இது ஒரு புனையப்பட்டக் கதையாகவே இருந்தாலும் என்ன சொல்ல வருகிறது?

பெண் என்பவள் ஒரு சொத்து. கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் சொந்தம். அவர்கள் சொல்வதை மறுப்பேச்சின்றி கேட்க வேண்டும், அவளே பத்தினி. இதுவா முன்னுதாரணம்?

ஏகபத்தினி விரதன் ராமனின் கதை என்ன? சீதையை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்புவதும், பிறர் தவறாக பேசிக்கொண்டதைக் கேட்டு சந்தேகப்பட்டு சீதையை தீக்குளிக்க வைத்ததும்….ராமன் என்பவன் ஆணாதிக்க வெறி பிடித்த சந்தேகப்பேயே அவன். இவனா ஆண்களுக்கு முன்னுதாரணம் அல்லது தன்னை நிரூபிக்க தீக்குளித்த சீதைதான் பெண்களுக்கு முன்னுதாரணமா?

அடுத்த பிம்பம் கற்புக்கரசி கண்ணகி ‍; மணமேடையிலிருந்து நேராக தாசி வீட்டுக்கு சென்ற கணவன் வரும்வரை பிடிவாதமாக அவனுக்காக காத்திருந்து அவனுடன் வாழவே தலைப்படுகிறாள். அவளைத்தான் நமது இலக்கியவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பத்தினிக்கு அடையாளம் என்கிறார்கள்.

நியாயமாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?

தாசி வீட்டுக்குச் சென்ற கணவனை தூக்கியெறிந்திருக்க வேண்டும்.

பெண்ணுக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் பிம்பங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தோழர்.அஜிதாவைத்தான் நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

மேலும் பழைய திருமண முறைக்கும் இந்தத் திருமண வடிவத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? பழைய திருமண முறையின் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி என்ன? பெண்ணை தானமாகக் கொடுத்து தாலியை கட்டுகிறார்கள். இதன் பொருள் பெண் தந்தையிடமிருந்து வேறு ஒருவருக்குச் சொந்தமாகிறார். இதற்குத்தான் தாலி. இதை ஒரு சிலர் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள். பெண்களும்,ஆண்களுமேதான். தாலயின் மகிமை பற்றியெல்லாம் தமிழ்சினிமா பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

சென்ற வாரத்தில் ஒரு இடுகைக் கூட தமிழ்மணத்தில் இருந்தது. நேற்றும் ஒரு குலக்கொழுந்து அதைத் திருக்குறள் வடிவத்தில் விளக்கி இருந்தார்.

ஏன், பாதுகாப்பு வேண்டுமென்றால் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டியதுதானே?

அல்லது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதுதானே? பெண்களின் பாதுகாப்பு தாலியில் இருப்பதாகவும் ஆண்களின் உயிருக்கு உத்திரவாதம் பெண்களின் தாலியிலும் பொட்டிலும் இருப்பதாகவும் ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்?

பொட்டு என்பது இந்து முறைப்படி கணவனின் உரிமை. அவன் இறந்துபோனால் ஒரு பெண்ணின் பொட்டு வைக்கும் உரிமையும் பறி போகிறது. அதோடு பூவும்.

அது போல காலில் மெட்டி. “பசங்க ஒரு பொண்ண பாக்கறாங்கன்னா அதுவும் கொஞ்சம் நல்லாருந்துச்சுன்னா உடனே காலைத்தான் பார்ப்பாங்க..மெட்டி போட்டிருக்கான்னு..கல்யாணம் ஆய்டுச்னான்னு தெரிஞ்சுடும் இல்லே” ‍‍; வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான நண்பரொருவர் சொன்னது இது.

இல்லையென்றாலும் பார்க்காமலா விடப் போகிறார்கள்? அல்லது அப்பெண்ணை அணுகி அடி வாங்குவதை தடுக்க இந்த மெட்டி உதவுகிறதா?

இவை அனைத்தும் இந்தப் பெண் இன்னொருவனது உடமை என்று அறிவிக்கும் அதிகாரபூர்வ சின்னங்கள். காலங்காலமாக பெண்கள் அணிந்து வந்ததை மாறுதலுக்கு ஆண்கள்தான் அணியட்டுமே?தாலியும், மெட்டியும் பூவும் பொட்டும் ஆண்களும் கொஞ்ச நாட்கள் உரிமை கொண்டாடட்டுமே!

இவை எல்லாம் பெண்ணடிமை வடிவங்களே என்றாலும் அவை பெண்களுக்கு அழகூட்டத்தானே செய்கிறது என்று வாதாடும் ஆண்களையும் பெண்களையும் அறிவேன். ஏன், பதிவுலகில் புர்க்காவைப் பற்றி பேசியபோது ஒருவர் எழுதியிருந்தார் ‍; எவ்வளவு அழகழகான விதவிதமான சம்க்கிகளை வைத்து தைத்த புர்க்காக்கள் இருக்கின்றனவே,அதை அணிந்துக்கொள்ள என்ன கசக்கிறதா என்பது போல! ஏன், அவ்வளவு கண்கவரும் அழகெனின் ஆண்களும் அதை வாங்கி அணிந்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்த திருமண வழிமுறைகள் யாவும் மதங்கள் காட்டுபவையே. பெண்ணை மதிக்கும், பெண்ணை கண்ண்ணீயமாக நடத்தும் எவரும் இதை விரும்புவதில்லை. உண்மையில் பெண்களுக்கு எங்குச் சென்றாலும் என்ன வேலைக்குச் சென்றாலும் அந்தந்த படி நிலைக்கு ஏற்றவாறு தொல்லைகள் ஆணாதிக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. பதிவுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் ஆணாதிக்கவெறிகளுக்கெராகவும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு பெண்களும் சிந்திக்க வேண்டும்.

எனது எத்தனையோ தோழிகள், அலுவலகத்தில் மேனேஜரையும், மேனேஜருக்கு மேனேஜரையும் ஏன் சீஇஓ வைக்கூட பெயரிட்டு அழைக்கும்போது, வீட்டில் தன் கணவரை “வாங்க போங்க” என்று மரியாதைக்கொடுத்து அழைக்க வேண்டியிருப்பது ஏன்? பதிலுக்கு அவர்களும் இவ்வாறு அழைக்கிறார்களா என்ன? இதைப் பற்றிக் கேட்டால் உடனே பஜாரி வேடமும், அடங்காப்பிடாரி பட்ட்டமும் கொடுக்க காத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்?

நாள் பார்த்து நேரம் குறித்து ஒரு சம்பிரதாயங்கள்/ அடையாளங்கள் விடாமல் நடத்திய எத்தனை கல்யாணங்கள் ஒரு வருடம் கூட முழுமையடையாமல் உயிரை விட்டிருக்கின்றன?

ஐயரின் ஒன்றும் புரியாத மந்திர உச்சாடனங்களுக்கிடையில் குறித்த வேளைக்குள் தாலியை கட்டிவிட்டால் வம்சம் தழைக்கும்என்ற வெத்து கல்யாணங்களுக்கிடையில் “வாழ்க்கையில் ஒருபோதும் ஆணாதிக்கத்தை பெண்ணடிமையை கடைபிடிக்காமல் ஒருவர் தேவையை ஒருவர் புரிந்துக் கொண்டு இணையாக வாழ்வோம்” என்று உறுதி எடுத்துக்கொண்ட இத்திருமணம்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது!


மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுடன்

தோழர் மருதையன் சிறப்பு வாழ்த்துரை வழங்கும் போது சொன்னதாவது:

தோழர் அஜிதா மக்களின் பணிக்காக தனது சிறுவயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.தான் சிறுமியாக இருந்தபோது கருவறை நுழைவு போராட்டத்தில் ஆரம்பித்து கிராமம் கிராமமாக ஊர் ஊராக சென்று அரசியல் பிராச்சாரங்களை மேற்கொண்டவர்.

தோழர் பாண்டியன், சென்னையில் கல்லூரி மாணவர் போராட்டத்தில் பங்கேற்று சிறைவைக்கப்பட்டவர். போராட்டங்களைக் கண்டு அஞ்சி விலகி ஓடியவரல்லர். அதுமுதல் பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

இருவரும் ம.க.இ.கவின் முழுநேர அரசியல் ஊழியர்கள். தங்கள் வாழ்க்கையை இப்படி மக்கள் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எவ்வவளவு பேர் இருக்கிறார்கள்? இவ்விருவரின் திருமணம் அமைப்புத் தோழர்களால் பரிந்துரைச் செய்யப்பட்டு அமைப்பே முன்னின்று நிறைவேற்றிய திருமணம்.கணவன் கிழித்தக் கோட்டை தாண்டாத அடங்கிப் போகும் பெண் கணவனோடு இறுதிவரை வாழ்வது பெரிய விஷயம் இல்லை.வேறுபட்ட ஆளுமைகளை கொண்டவர்கள் அவரவர் நியாயங்களை அங்கீகரித்து இணைந்து வாழ்வது, குறைகளை சரி செய்து இருவருமாக புதியதாக உருமாறுவது.இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்துக் கொண்டு வாழ்வது.

இருவரும் தங்கள் வாழ்க்கையை ஜனநாயகப்பூர்வமாகவும் அமைத்துக் கொள்வதோடு, மக்கள் நலனுக்காக குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டபின் மாலைகளை மாற்றிக்கொள்ள விழா முடிவடைந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. கலைநிகழ்ச்சிகளில் மணப்பெண்ணும் பாடல்கள் பாடும் போது சேர்ந்துக்கொண்டார். எந்த எளிமை என்னை நிச்சயமாக எனக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.

சாதி இல்லை என்று சொல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நாமொன்றும் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதியெல்லாம் “நாட் அ பிக் டீல் யார்” என்று சொல்பவர்கள் எத்தனை பேர் சாதி விட்டு திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் படிப்பறிவு பெற்றிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் செய்வது என்ன? சிந்தித்துப் பார்ப்போம்.

திருமண வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

தாங்கள் கொண்ட அரசியல் ஈடுபாடு காரணமாகவும்,சமூக அக்கறையின் காரணமாகவும் வாழ்க்கையை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தைத் தொடங்கிய தோழர் அஜிதா நீங்கள்தான் உலகின் அழகிய பெண் – தோழர் பாண்டியன் நீங்கள்தான் உலகின் அழகிய ஆண்!
________________

- சந்தனமுல்லை
______________

No comments: