Wednesday, September 29, 2010

தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டுவோம்! – பெரியார் திராவிடர் கழகம்



சட்டப்படி தீண்டாமை குற்றம்; ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தேனீர்க் கடைகளில், சுடுகாடுகளில் முடிதிருத்தும் நிலையங்களில், ரேஷன் கடைகளில், பல இடங்களில் பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கின்றன.

பெரியார் திராவிடர் கழகம், தீண்டாமையைப் பின்பற்றும் கடைகள், அமைப்புகளை முகவரிகளோடு பட்டி யல்களாக தயாரித்துள்ளது. தீண்டாமை நிலவும் கிராமங்கள் இருப்பதாக அரசாங்கமும் ஒப்புக் கொள்கிறது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் பெரியார் இயக்கம் தொடங்கினார். ஆனால், பெரியார் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியவில்லை.

பெரியார் திராவிடர் கழகம் மூன்று கட்டங்களாக பல மாதங்களாக, பல நூறு கிராமங்களில் தொடர்ந்து மக்களை சந்தித்து சாதி, தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம் நடத்தியது. அடுத்தக்கட்டமாக இப்போது போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறையில் தனிப் பிரிவே இருக்கிறது.

மனித உரிமைப் பிரிவு என்று பெயரில் உள்ள இந்தத் துறை என்ன செய்கிறது? தீண்டாமையைத் தடுக்க வேண்டாமா? குற்றம் புரிந்தோர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா? செயல்படாமல் இருப்பதற்கு ஒரு துறையா?

இந்தக் கேள்விகளோடு – கழகம் களமிறங்குகிறது! திருச்சியில் – அக்.2 இல் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அக்.2; ‘தேசியத் தந்தை’ பிறந்த நாளில் தேசிய அவமானமாக நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளை சுட்டிக் காட்டுகிறோம்.

இது மக்கள் போராட்டம்; மனித உரிமைப் போராட்டம்; சுயமரியாதைப் போராட்டம்.

தமிழர்களே! உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறது, பெரியார் திராவிடர் கழகம்! களப்பணிகளுக்கு, நிதி வழங்கி உதவிடுவீர்!

- பெரியார் திராவிடர் கழகம்

No comments: