Thursday, July 29, 2010

முத்துக்குமாரன் தீயில் வெந்தான் சீமான் சிறையில் வாடுகிறான் நாங்களோ பதவிக்காக..

இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை.

மாறாக, குலுங்கிக் குலுங்கி அழுதாராம். அவரின் அழுகைக்கான காரணம் என்ன என்பதை இப்போது தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். எத்தனை துன்ப துயரங்கள். இதற்கு மேலாக எல்லாவற்றையும் இழந்து போன பரிதாபங்கள்.

இது தமிழரின் நிலையாக இருக்கும்போது தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எங்கள் எதிர்காலமும் ஆரோக்கியமானதாக அமையா தென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளது.தமிழர்களுக்காக பாடுபட்டவர்களை துரோகி களாகக் காட்டி அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை தாங்கள் கைப்பற்றி தமிழ் இனத்தை படுபாதாளத்தில் வீழ்த்துவதற்கு கெடு கூட்டமொன்று புறப்பட்டு விட்டது.

இதற்காக சில குழப்பசக்திகள் பிரசாரம் செய்ய வும் தலைப்பட்டுள்ளன.இதிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாது காப்பதாக இருந்தால் முதலில் உண்மையை கண்டறிய வேண்டும். அன்புக்குரிய தமிழ் மக்களே! தமிழகத்தில் சீமான் சிறையில் வாடுகின்றான். இலங்கையில் நடந்த ‘ஐபா’ இந்தியத்திரைப்பட விழாவுக்கு வந்து போன நடிகர் நடிகைகளின் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கும் தண்டனையை உலகத் தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். நடக்கப் போகும் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு நவதானியம் விதைக்கப் புறப்பட்டுவிட்டோம். எப்படி இருக்கிறது எங்கள் மனநிலை! ஈழத்தமிழர்களுக்காக எதையும் செய்வேன் எனச் சீமான் முழங்க, தமிழினத்தை அழிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாதென சகோதரன் முத்துக்குமாரன் தனக்குத்தானே தீ மூட்டி எரிக்க, இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளோ தங்கள் சொந்த நலனைக் கவனிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். என்ன செய்வது! தமிழ் மக்கள் நிதானமாகச் செயற்படாதவரை இந்தத் துயரம் தொடரவே போகிறது.

நன்றி: வலம்புரி தலையங்கம்

}

No comments: