Wednesday, July 28, 2010

உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!


அன்புள்ள உடன்பிறப்பே…

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, வருமானம் கோபாலபுரத்திற்கு.. !!

தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை திருக்குவளையாரின் குடும்பம் செழிக்க, வலுக்க, பெருக்க அல்லும் பகலும், காலையிலும் மாலையிலும், பகலிலும் இரவிலும், தூணிலும் துரும்பிலும் தள்ளாத வயதிலும் பாடுபடும் தானைத் தலைவர், தமிழினம் இனி காணமுடியாத தவப்புதல்வன் செய்திருக்கும் ஈடு இணையற்ற, அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எடுத்துக்காட்டிற்கு கூட எடுத்தியம்ப முடியாத அந்த வெற்றிச் செய்தினை பகிர்ந்து கொள்கிறோம். படித்ததும் கொலை வாளினை எடுத்து கொடியோர் சங்கை அறுத்திட புறப்படு!

இலங்கைத் தீவில் ஆழி சூழ் விதியில் சிக்கித் தவிக்கும், மானாட மயிலாடாவைக் கூட பார்த்துக் களிக்க இயலாமல் நமதருமை தொப்புள் கொடி மக்காள் படும் துன்பத்தினைக் கண்டு வாடி சினிமா வசனம் எழுதும் சிரமமான பணிக்கிடையிலும் தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் என்பது நீ அறிந்ததே.

எழுத்தும் ஓர் ஆயுதமென்று அரிஸ்டாட்டில் முதல் அண்ணாவரை செய்து காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கலைஞரும் ஜூலை 17ஆம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “கடந்த 9ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் இயன்ற வரையில் தாங்கள் மேற்கொள்வதாக தாங்கள் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி. இத்தருணத்தில் இந்திய அரசாங்கம், இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூதரக தொடர்புகள் மூலமாக ஒருவரையோ அல்லது ஒரு சிறப்பு பிரதிநிதியையோ அனுப்பி அங்கு நிலவும் உண்மையான சூழலை மதிப்பிட்டு அறிந்து வரச் செய்யலாம்.” என்று குறளோவியம் போல கலைஞர் தனது வேதனையையும் தீர்வையும் நச்சென்று நாலு வரியில் வடித்திருந்தார்.

டெல்லிக்கு பல பல கடிதங்கள் வகை தொகையின்றி ஏனோ தானோவென்று குவிந்தாலும் கலைஞரின் கடிதமென்றால் அண்டமே நடுநடுங்கும். அய்யாவின் கடிதம் கண்ட கொய்யா மன்மோகன் சிங் உடனே சாப்பிடக்கூட செய்யாமல் அன்னை சோனியாவை தரிசித்து ஆலோசனை பெற்று பதில் எழுதியிருக்கிறார்.

அதில், “தாங்கள் 17 ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நன்றி. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டிவரும் ஆர்வத்தின் காரணமாகவும்இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்.” என்று கூறப்பட்டிருக்கிறது.

தமிழக வரலாற்றுக் களஞ்சியத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வெற்றிச்செய்தியினை உனக்கு விம்மிய நெஞ்சுடன் அளிக்கிறேன். இமயத்திலே புலிக்கொடி பறக்க விட்ட தமிழனுக்கு பிறகு இப்போதுதான் வடக்கில் நமது கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. வருமானம்தான்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இரசியா, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு முழங்கிய தம்பி சீமான், காலியாகிவரும் கட்சித் தலைவன் அண்ணன் வைகோ போன்றவர்கள் பேச்சிலே காட்டும் காகித வீரத்தை நமதருமைத் தலைவர் செயலிலே காட்டியிருக்கிறார் என்றால் உன் மகிழ்வுக்காக நீ டாஸ்மாக் சென்றாலும் கொண்டாடமுடியாத கூத்து அது.

சுப.வீரபாண்டியன் போன்ற வேலையில்லாத முன்னாள் பேராசிரியர்கள் ஒரு ஐம்பது பேர் கொண்ட மாபெரும் அரங்கக்கூட்டங்களில் இந்த வெற்றிச் செய்தியினை உலகமே வியப்புறும் வண்ணம் ஆய்வு செய்து வீர உரையாற்றி வருகிறார்கள். அந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து பிரம்மாஸ்திர ஏவுகணையாக கொழும்புவுக்கு பறக்க இருக்கும் அந்த வெளியுறவு அதிகாரி பெருமானின் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே உனக்கு தருகிறேன்.

சிறப்பு விமானத்தில் அந்த அதிகாரி இந்தியாவின் பலத்தைக் காட்டும் வண்ணம் சுற்றம், கொற்றம், முற்றம், மற்றும் குடும்ப பரிவார சகிதம் கொழும்பில் தரையிறங்குகிறார். ஹைபுவான் சொல்லி சிங்கள தேசத்தின் அழகுத் தாரகைகள் அவரை வரவேற்க, கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றிலை மடித்து தரும் மாபெரும் அதிகாரி ஒருவர் நம்மவரை அழைத்துச் செல்கிறார்.

கொழும்பு கடற்கரையில் இருக்கும் ஷெர்ட்டன் எனும் அழகிய நட்சத்திர விடுதியின் பிரசிடண்சியல் சூட்டில் நம்மவர் தங்குகிறார். இந்த அறைக்கு வாடகை மிக அதிகம் என்பது தமிழனின் கௌரவத்திற்கு ஒரு சான்று. நன்று மேலே போவோம்.

முதலில் மகிந்த ராஜபக்சேவை காலை சிற்றுண்டியுடன் சந்திக்கிறார். முள்ளிவாய்க்கால் வெற்றிக்காக சிங்கள மக்கள் இராணுவ வீரர்களுக்கு ஊட்டிய பால்சோறு இங்கே தமிழினின் தன்மானத்திற்காக கிண்ணத்தில் இறைஞ்சுவது நிச்சயம். தலைவர் கலைஞரின் விருப்பத்திற்கேற்ப வந்துள்ள நம்மவரை புன்முறுவலுடன் மறித்த இலங்கை அதிபர் ஒரு புவியியல் சிறப்புள்ள அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வன்னி முகாமில் உள்ள மக்களுக்கு தினசரி தலா 1 லிட்டர் நீர் வழங்கிய அரசு இனி ஒன்றேகால் லிட்டர் வழங்கும் என்பதாகும். குவார்ட்டரில் மூழ்கும் உனக்கு இந்த குவார்ட்டர் வெற்றியின் மகத்துவத்தை விரித்துரைக்கத் தேவையில்லை.

பின்னர் இலங்கை அதிகாரிகளை நம்மவர் சந்திப்பார். தமிழனின் மானம் காக்க அங்கே செல்போன் டவர்களை எழுப்பி வரும் ஏர்டெல் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசித்தீர்ப்பார். ஏர்டெல்லும் இனி தமிழ் மக்கள் அவர்களுக்கிடையில் குமுறி அழுதவற்கு நிமிடத்திற்கு 50 காசு என்ற எவரெஸ்ட் சலுகையை அறிவிக்க இருக்கிறது. எதிர்காலத்தில் கலைஞர் சீரியல்களும் மலிவான விலையில் செல்பேசிச் சேவையில் இடம்பெறும் என்று பேச்சு அடிபடாமல் இல்லை.

பின்னர் தனி ஹெலிகாப்டரில் நம்மவர் வன்னிக்கு செல்கிறார். பறக்கும் போதே முகாம் மக்களுக்கு கனிந்த இதயத்துடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு உணர்வுடன் அவர் டாடா காண்பிப்பார். முகாமில் சாமி கும்பிடுவதற்காக புதிதாக கட்டப்பட்ட கோவிலையும், இறந்தோர் புதைக்க கட்டப்பட்டுள்ள மாபெரும் மயானத்தையும் திறக்கிறார். இந்த மயானம்தான் ஆசியாவிலேயே பெரியது என்பது நமது தமிழனித்தின் வலிமையினைக் காட்டிடும் என்றால் நீ என்ன சொல்வாய்?

இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார். நம்மவரை பக்சேவின் அமைச்சர் டக்ளஸ் வரவேற்று விருந்தளிக்கிறார். கலைஞர் எழுதிட்ட எல்லா புத்தகங்களும் தலா 1000 பிரதிகள் யாழ் நூலகத்திற்கு அளிக்கும் திட்டத்தினை நம் தூதர் அறிவிப்பார். யாழ்ப்பாணத்தில் சன்.டி.வி தெளிவாக தெரியவில்லை எனும் மக்கள் கோரிக்கையைத் தீர்ப்பதாக அறிவிப்பார். எந்திரன் படம் அங்கேயும் ரிலீசாவதற்கு உத்திரவாதத்தையும் அளிப்பார்.

இப்படியாக தமிழனின் குரலை உயர்த்திட்ட பணி முடித்த பின் கொழும்பில் டூடி ஃபிரி அங்காடிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு இந்தியா திரும்புகிறார். வழியில் சென்னையில் இறங்கி கலைஞருடன் சந்தித்து விட்டு சிங்கள தேசத்தில் தமிழன் பெற்ற வெற்றியினை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவார். அதை சன், கலைஞர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. அன்று மட்டும் நீ டாஸ்மாக் போகும் நேரத்தை சற்று மாற்றிக் கொண்டு அந்த வரலாற்று வெற்றியினை பகிரும் காட்சியினை ஆசை தீர பருகிட வேண்டும் என்று கலைஞர் கேட்பதாக இருக்கிறார்.

ஒரு கடிதம் என்னவெல்லாம் சாதித்திருக்கிறது என்பது குறித்து உடன்பிறப்பே நீ மறவாதிரு! வாங்கும் கட்டிங்கில் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கினை அனுப்ப மறுக்காதிரு!!

தமிழ் வாழ்க! தமிழனின் தன்மானம் ஒழிக! உடன்பிறப்பின் அம்மணம் ஓங்குக!

வினவு

--

No comments: