Friday, August 13, 2010

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா

“இலங்கைக் கடற்படைக்குள் எல்லை மீறிப் போகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் இலங்கை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஒரு நாட்டுக்குப் போய் அங்க குடிமகன்களாகவே ஆகிப் போன சீக்கியர்கள் டர்பன் கட்டுவதற்கு ஃப்ரான்ஸ் நாடு போட்ட சட்டம் தடை போட்டுவிடுமோ என்று இந்தியப் பிரதமரே போய் ஃப்ரான்ஸ் பிரதமரைப் பார்த்து பேசி விட்டு வருவாராம். இங்கே கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றுகொண்டிருக்கிறான் சிங்களன். அவனைக் கேள்வி இல்லை, ஒரு கோரிக்கை கூட விடுக்காமல் கை கழுவி விடுவதுதான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பணியா? இவரெல்லாம் பதவியிலிருப்பதற்கு அழகிரி சும்மா இருப்பதே பரவாயில்லை போல.

இவருக்கு மேல் ஒருவர், இந்திய உள்துறை அமைச்சர். இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல. இன்று பேசியிருக்கிறார், யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் காரணமாம். யாரெல்லாம் அப்போது அமைச்சர்களாக இருந்தார்கள், அதில் யாரெல்லாம் இப்போது உயிரோடு இல்லை என்று உளவுத்துறையிடம் (இதுக்குத்தான இருக்கு) கணக்குக் கேட்டிருப்பார்கள் போல. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என்று பதில் வந்திருக்கும். ராஜீவின் மீது புகார் சொல்ல முடியுமா (அதிலும் சிதம்பரம் தமிழர்)? அதனால் நரசிம்மராவின் மீது விடிந்து விட்டது.

இதில் பெரிய காமெடி அப்போதைய பிரதமருக்கே தெரியாதாம், ஆண்டர்சன் வெளியேறியது. முழுப் பொறுப்பும் நரசிம்மராவினுடையதாம்.

மேலும் போபால் வழக்கு தீவிரப்படுத்தப் படாததற்கு 1984-இல் இருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளின் மெத்தனமே காரணமாம். 26 வருடங்களில் காங்கிரஸ் மட்டும் 16 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மறந்து விட்டார் போல. சரி மற்றவர்கள் செய்திருக்க வேண்டாம், இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே. இவர் என்ன கிழித்து விட்டார். பேசாமல் இவர் கலைஞரிடம் முழுசாக ட்ரெயினிங் எடுத்திருக்கலாம். செர்னோபில்லில் விபத்து நடந்த போது இத்தனை பேர் உயிரிழந்தார்கள், கைஷ்டிமில் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் கொடுத்திருக்கலாம்.

பேசுவது என்றதும் நேற்றைய வீடியோவில் என் குரலைக் கேட்டுவிட்டு நண்பர் பின்னோக்கி எனக்கு கமாண்டிங் வாய்ஸ் என்று பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது (நாங்க மட்டும் வாசகர் கடிதம் மாதிரி சொல்ல மாட்டோமா?). எனக்கு மேடையில் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஜூனியர்களுக்குக் கொடுத்த வரவேற்பு விழாவில் “மதங்கள் - தோற்றமும் மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசினேன். பல புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தகவல்தொகுத்து வழங்கினேன். மூட நம்பிக்கைகளில் சாமியார்களை அல்லது கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைப் பற்றிப் பேசும்போது இந்து மத சாமியார்கள் இருவரையும், கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவரையும் உதாரணம் காட்டிப் பேசினேன்.

நான் பேசி முடித்து கீழே இறங்கியதும் என்னுடைய தோழிகளில் இருவர் என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார்கள் - “உனக்கு பைபிளையும் கிறிஸ்டியானிட்டியையும் பற்றி என்ன தெரியும்? நீ எப்படி அவரை பற்றி அப்படியெல்லாம் பேசலாம்”. நான் சொன்னேன். “என் தலையெழுத்து பிறப்பால் இந்துவாகிப் போனேன். என் அப்பா அம்மா மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் நீங்கள் என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.”

நல்ல வேளை பெரியார் பிறந்த தமிழகத்தில் நானும் பிறந்தேன். இல்லையென்றால் அன்றைக்கு நான் மேடையிலிருந்து இறங்கியிருக்கவே முடியாது.

மேடைப் பேச்சு என்றது நினைவுக்கு வரும் இன்னொரு விசயம். நான் எஸ்.எஃப்.ஐயில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது அருப்புக்கோட்டை கோமதி தியேட்டர் முன்பு நான் வீர உரை(ம்க்கும்)யாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் தந்தையின் நண்பர் அவரிடம் போய் “உங்க பையன் நல்லா பேசறான் சார்” என்று சொல்லிவிட்டார். அதிலிருந்து என் தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை. நல்ல அப்பா.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய செட்டிநாடு ஓட்டலும் ஆயாக்கடை இட்டிலியும், பொதுவாகப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு எதிரானதாகத் தெரிந்திருக்கும். ரஜினி/ஷங்கரின் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தெரிந்திருக்கும். நான் இரண்டாவதான ஒரு பார்வையிலிருந்தே எழுதினேன். எழுதி வாசித்ததும் என்னுள் இருந்த முதலாமவன் விழித்துக்கொண்டான். தவறாகப் பட்டுவிடுமே என்று அந்த இடுகையை நீக்கிவிட்டேன். வானம்பாடி பாலா சார் சும்மா போடுங்க என்று சொன்னதால் போட்டேன். நான் பயந்த மாதிரியே ராஜசுந்தரராஜன் ஐயாவும், கார்த்திகைப் பாண்டியனும் இன்னும் பலரும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இதுதான் - ஷங்கர் படம் - செட்டிநாடு ஓட்டலின் மட்டன் பிரியாணி. சத்யஜித் ரேயின் படம் ஆயா கடை இட்டிலி. எல்லோராலும் ஆயா கடை இட்டிலியைச் சாப்பிட்டு விட முடியாது. எல்லோருக்கும் மட்டன் பிரியாணி செரித்து விடாது. அதே போல செட்டி நாட்டு ஓட்டல் குக்கிற்கு ஆயாவைப்போல் மல்லிகைப்பூ இட்டிலி சுடத் தெரியாது. ஆயாவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பாணி. அதில் இதைச் செய்யாதவன் முட்டாள் அதைச் செய்பவன் மேதை என்று சொல்வது ஹி ஹி ஹி..

அதே போல சேட்டு வீட்டில் வந்து பிறந்ததைத் தவிர அந்த குதிரை மீது வரும் மாப்பிள்ளை செய்த தவறென்ன? இல்லை அந்த நாய் குலைத்ததால் தான் அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடப் போகிறானா? இது யாரைச் சொல்கிறேன் என்று புரியாவிட்டால் நீங்கள் இதுவரை என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். முதல் எழுத்து ர கடைசி எழுத்து னி. என்னது நடு எழுத்தா? என்னஜி இதுக்கு மேலயும் க்ளூ கேக்குறீங்க?

என்னவோ போடா மாதவா (நன்றி விதூஷ்).
--

No comments: