Sunday, August 8, 2010

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்தபடி உரைத்தார்,

மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண
உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!

வியந்து போனேன் நான்,

என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்
இலவசம் நின்று போனால் உன் நிலை!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!

-இதனை எழுதியவர் எவர் என்று எவரேனும் கூறினால் பெரும் உதவியாக இருக்கும்.

No comments: