Sunday, June 13, 2010

இந்திய அரசுக்கு வெட்கம் கிடையாது-எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவிப்பு

இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது என இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'ஆனந்தவிகடன்' வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு:

கேள்வி :-இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?"

பதில் :-உங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றமையால் அரசு வெட்கப்பட்டு பிரச்சினையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்.இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது. இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப்பவர்களை இராணுவம், பொலிஸ், என கூலிப் படைகளை வைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றமையால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்.

கேள்வி: ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுகின்ற்மையை பற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?"

பதில்:- எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர மரபணுவில் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லாவகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்? உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான்.

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர். இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!"

1 comment:

அன்புடன் நான் said...

சரியான சாட்டையடி!
பகிர்வுக்கு நன்றி.